தன் தேவதையாக சிவரஞ்சனியை உருவகப்படுத்திக் கொண்டு, இவன் பாடிக்கரைய, “நேர்ல, நீ வேண்டாம்… போடீ ன்னு அடிச்சு விரட்டிட்டு, இப்போ ரொம்பத் தான் உருகி கரையுற…”
இந்த இரண்டு வாரகாலமாக எப்போதும் அவனை கழுவி ஊற்றுவது போல, இப்போதும் தன் பணியைச் செவ்வனே செய்தது அவன் மனசாட்சி.
‘அடேய்… அடிச்சி விரட்டுனனா?… நீ ஒருத்தன் போதும் டா, என்னை குற்றவாளியா நிக்க வைக்க… ஏதோ அன்னைக்கு கோபம்.., நம்மளை நம்பலையேன்னு, அதான் வீம்புல சொல்லிட்டேன்… அதுக்கு போய் இப்படியா சொல்லுவ?’
அருண் தன் மனதோடு மல்லுக்கு நிற்கும் போதே, அவனின் கைபேசி சிணுங்கியது. அழைத்தது சசிதரன்.
“அருண்… நீ சித்தப்பா ஆகப்போற டா” என்றான் சசிதரன் உற்சாகமாக.
“என்னடா அண்ணா சொல்லுற? இப்போ தானே ஹஸ்பன்ட் போஸ்ட்டிங் எடுத்த! அதுக்கிடையில் எனக்கு சித்தப்பா ப்ரமோஷன் குடுத்திட்டியே, எப்படி டா?!” சசிதரனிடமிருந்த உற்சாகம் தனக்கும் தொற்றிக் கொண்டவனாக கேட்டான் அருண்.
“அது… சீக்கிரம் நீயும் கல்யாணம் செய்து, எனக்கு பெரியப்பா ப்ரமோஷன் குடு. அப்போ தெரியும் உனக்கு” என்று வெட்கச்சிரிப்பு சிரித்தவனிடம்,
“தாங்கலைடா சாமி…, பக்கத்துல இருந்து அண்ணி உன்னைப் பாத்துட்டு இருந்தா பயந்துடப் போறாங்க, அதனால தயவு செய்து உன் வெட்கச்சிரிப்புக்கு ஒரு என்ட் கார்டு போடு” என்று சகோதரனை கலாய்த்த அருண்,
“ம்ம்… இப்போ தான் சொன்னேன். நீ வெளியே கிளம்பியிருக்குறதா அம்மா சொன்னாங்க. அதான் உனக்கும் ஃபோன் செய்தேன்” என்றவனிடம், மேலும் சிறிது நேரம் பேசி, தன் வாழ்த்துகளையும் சொல்லிவிட்டு போனை வைத்தான் அருண்.
தங்கள் வீட்டுக்கு சசிதரனின் வாரிசு வரப்போகிறது என்ற தகவல் உற்சாகத்தை தந்தது அருணுக்கு.
கூடவே, அண்ணன் சொன்ன, “நீயும் கல்யாணம் செய்” என்ற வார்த்தைகள், தனக்கருகில் ஜோடியாக சிவரஞ்சனியை நிற்க வைத்து மனக்கண்ணில் ரசிக்க வைத்தது.
‘இப்படியே கனவு கண்டுகிட்டு இருந்தா போதுமா? சீக்கிரம் அவகிட்ட நேர்லயும் எம்மனசை சொல்லி கல்யாணம் பண்ணிக்கணும்’ எண்ணிக் கொண்டவன்,
‘அன்று கிடைத்த அழகான வாய்ப்பை, கையாளத் தெரியாமல் தவறவிட்டு விட்டோமே’ என்று எப்போதும் போல இப்போதும் வருந்தினான்.
‘மாமன் மனைவி ஏதோ ஏடாகூடமாக பேசி, சிவரஞ்சனியை குழப்பி விட்டதால் தான், அவள் தன்னை மறுக்கிறாள்’ என்பதுவரை சரியாக யூகம் செய்தவன், ‘சிவரஞ்சனியின் குழப்பம் நீக்கி தன் மனதையும் அவளுக்கு புரிய வைத்துவிட வேண்டும்’ என்ற எண்ணத்தில் தான் அன்று சிவரஞ்சனியை வரச்சொன்னது.
ஆனால், திரும்ப திரும்ப அவள் தன்னை மறுத்து மாலதியையே மணக்கச் சொல்ல, ‘தன்னைக் காதலிக்கச் சொல்லி அவளைக் கட்டாயப்படுத்துகிறோமோ?’ என்ற எண்ணம் நொடிப் பொழுதில் தோன்றவிடவே, சட்டென்று யோசிக்காமல் வார்த்தைகளை விட்டுவிட்டான்.
வீட்டிற்கு வந்து அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து யோசித்த பிறகு தான், தன் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து போன சிவரஞ்சனியின் முகமும், தன்னை மறந்து அவள் ‘அத்தான்’ என்று தன்னை அழைத்த வார்த்தைகளும் நினைவுக்கு வந்து அவனை குளிர்வித்தது.
இருந்தாலும், அடுத்த வாரமே, “அம்மா, அச்சு முறுக்கும், முந்திரி கொத்தும் செய்தாங்க அத்தை. வேலைக்கு போற வழியில உங்களுக்கு எல்லாம் குடுத்துட்டு போன்னு சொன்னாங்க, அதான் வந்தேன்” என்று தன் வீட்டிற்கு வந்து நின்ற சிவரஞ்சனியிடம், நேசக்கரம் ஒன்றும் இவன் நீட்டி விடவில்லை.
பலகார டப்பாவை இராஜேஸ்வரியிடம் கொடுத்தபடியே சாப்பாட்டு அறையில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த தன்னிடம் புன்னகை முகம் காட்டியவளை, வெறும் கல்லையும் மண்ணையும் பார்ப்பது போலத் தான் பார்த்து வைத்தான் அருண்.
தான் அன்று அப்படி சொல்லியும், தன்னை நோக்கி சமாதானக் கொடியைப் பறக்க விட்டபடி, தங்கள் வீட்டுக்கே வந்து நின்ற ரஞ்சனியை எப்போதையும் விட, இப்போது ரொம்பவே பிடித்தது அருணுக்கு.
ஆனாலும், எந்த உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் நடப்பவற்றை ஒரு பார்வையாளனாக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஓ… அப்படியா? ரொம்ப சந்தோஷம் ம்மா” என்ற இராஜேஸ்வரி டப்பாவைத் திறந்து அருணிடம், “எடுத்துக்கோ அருண்” என்க, “வேண்டாம் பெரியம்மா” என்றவனின் செயலில் ரஞ்சனியின் முகம் சுருங்கித் தான் போனது.
“உனக்கு தான் முந்திரிகொத்து ரொம்ப பிடிக்குமே, அப்புறம் ஏன் ப்பா வேண்டாம்னு சொல்லுற?” என்றவர், “ஓ… கடைக்கு போக நேரமாகுதுன்னு சொன்னல்ல? வந்து சாப்பிடு, சரியா?” என்றபடியே சிவரஞ்சனியிடம் திரும்பி,
“ரஞ்சனி, அம்மாவோட ஃபோன் நம்பர் மட்டும் தான் எங்கிட்ட இருக்குது ம்மா. ஏதாவது அவசரத்துக்கு பேசணும்னா கூட, உன் நம்பர் எங்கிட்ட இல்லை. உன் நம்பரை இதுல பதிஞ்சு குடு” என்றபடியே தனது கைபேசியை எடுத்து நீட்டினார்.
இராஜேஸ்வரியிடமிருந்து ஃபோனை வாங்கி ஒவ்வொரு எண்ணாக வாய்விட்டு சொல்லியபடியே தனது நம்பரை அதில் பதிந்த சிவரஞ்சனி, இடை இடையே அருணையும் நிமிர்ந்து பார்த்துக் கொள்ள தவறவில்லை.
அவளைக் கண்டுகொள்ளாதவன் போன்ற பாவனையில் உட்கார்ந்து அவள் நம்பரை மனனம் செய்தவனோ, ‘நம்மாளு, நான் நினைச்சது போல அப்பாவி இல்ல, படு விபரம் தான்’ என்று கேலியாக நினைத்து கொண்டான்.
தன் நம்பரை பதிவு செய்து முடித்தவள், அப்போது தான் ஞாபகம் வந்தது போல, “ஹாங்… அத்த, அம்மாகிட்டயும் அருண் அத்தான் நம்பர் இல்லையாம், எதுவும் அர்ஜண்ட் ன்னா ஃபோன் பண்ண வேணும், வாங்கிட்டு வான்னு சொன்னாங்க” என்று அருணைப் பார்த்தபடியே சொன்னாள்.
அவளின் தில்லாலங்கடி தனத்தை நம்பி ராஜேஸ்வரியும் அருணின் நம்பரைக் கொடுத்தார். அதை, தனது மொபைலில் அக்கறையாக பதிந்து கொண்டவளின் செயலில் சிரிப்பு பீறிட்டு வர, சட்டென்று எழும்பி கைகழுவ சென்று நின்று கொண்டான் அருண்.
தன் கைபேசி எண்ணை ரஞ்சனி வாங்கிய வேகத்திற்கு அன்றே அழைப்பு வரும் என்று அருண் காத்திருக்க, இன்றுவரை அங்கிருந்து அழைப்பு ஏதும் வரவேயில்லை. இவனும், ரஞ்சனிக்கு அழைக்கவில்லை.
‘சரியான கேடி’ செல்லமாக முணுமுணுத்து கொண்டே, ஒரு ஸ்கூட்டியை முந்திச் சென்றவனின் கண்கள், வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த பெண்ணைக் கண்டு ஆச்சர்யத்தில் விரிந்தது. உதடுகளோ, “சிவா…” என்று முணுமுணுத்தது.
வேகமாக காரை ஓட்டிச் சென்று, சற்று தூரத்தில் ஒரு மரத்துக்கு கீழே ஒதுக்கி நிறுத்தியவன், அவசர அவசரமாக இறங்கி, காரின் பானட்டை திறந்து வைத்துக் கொண்டு, ரோட்டில் ஒரு கண்ணும், கார் இன்ஜின் மீது மறு கண்ணுமாக நின்றான்.
அடுத்த மூன்றாவது நிமிடத்திற்கெல்லாம் அருண் பக்கத்தில் வந்திருந்த ரஞ்சனியின் வாகனம், அன்றொரு நாள் சிலிர்த்துக் கொண்டு போனது போலல்லாமல் அவன் அருகில் வந்து நின்றது.
வண்டிச் சத்தம் கேட்டதும், நிமிர்ந்து சிவரஞ்சனியின் முகம் பார்த்தவன், மறுபடியும் கார் இன்ஜினுக்குள் தலையைக் கொடுத்துக்கொண்டு நிற்க,
“என்னாச்சு அத்தான்?” என்றாள் சிவரஞ்சனி.
“இன்ஜின்ல ஏதோ ப்ராப்ளம் நினைக்கிறேன்” என்றவன், “நீ எங்க போற?” என்றான் அக்கறையாக.
“தென்காசி வரைக்கும் போறேன், கொஞ்சம் திங்ஸ் வாங்கணும்.”
“அப்போ என்னை ரெயில்வே ஸ்டேஷன்ல இறக்கி விட்டுடு.”
காரின் கதவை பூட்டி, சாவியை எடுத்துக்கொண்ட அருண், சட்டென்று ரஞ்சனியின் பின் அமர்ந்து கொண்டான். அவனின் செயலில் பதைபதைத்து போனவள், “காரை சரி பண்ணிட்டு அதுலயே போலாமே அத்தான்” என்றாள் வேகமாக.
“ஹ்ம்ம்… கீழ விழாம இருக்க பிடிச்சுக்கறேன் ம்மா” என்றவன், “இந்த லேடீஸ் வண்டியில இது ஒரு பிரச்சினை, பிடிக்கிறதுக்கு கூட ஒழுங்கா ஒரு இடமும் கிடையாது” என்று தன் போக்கில் முணுமுணுக்கவும் செய்தான்.