“வாழ்க்கை பயணத்துல உங்கூட வாழ்நாள் முழுவதும் பிரயாணம் செய்யணும்னு ஆசைப்படுற என்னை, இப்படி தென்காசி வரைக்கும் கூட, வண்டியில கூட்டிட்டு போகமாட்டேன்னு சொல்லுறியே சிவா, உனக்கே இது நியாயமா தெரியுதா?”
வண்டியிலிருந்து இறங்கி அவள் முன்னே வந்து நின்று, முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு கேட்டவன், “அம்மணிக்கு எங்கூட லைஃப் லாங் ட்ராவல் பண்ண சம்மதம் தானே” என்று அவள் கண்களைப் பார்த்து கேட்க, “சரி…” என்னும் விதமாக வெகு இயல்பாக தலையை அசைத்தாள் சிவரஞ்சனி.
ஏற்கனவே ஒருவர் மீது ஒருவருக்கு குறையாத காதல் இருப்பதை அறிந்தவர்கள் தானே. இடையில் பாக்யா மட்டும் வந்து குளறுபடிகள் செய்யாமல் இருந்திருந்தால், இந்நேரத்திற்கு சிலபல டூயட்டுகள் இருவரும் பாடியிருக்க வாய்ப்புகள் இருந்தது தானே.
இப்போது பாக்யா என்னும் தடையும் விலகியிருக்க, அருண் கேட்கவும் தயக்கமில்லாமல் தலையசைத்து விட்டாள் சிவரஞ்சனி.
“தலையாட்டுனா மட்டும் எனக்கு போதாது. வாயைத் தொறந்து சொல்லு சிவா” பெண்ணவளின் செயலில் திருப்தியடையாதவனாக அருண் கேட்க, “எனக்கு சம்மதம் அத்தான்” என்றாள் சிவரஞ்சனி.
கேலியாக புலம்பியபடியே வண்டியில் அமர்ந்தவன், தன் பின்னால் அமர்ந்த சிவரஞ்சனியிடம், “சும்மா இடுப்புல கைபோட்டுக்க செல்லம், மாமன் உன்னை மாதிரி எல்லாம் கோபப்பட மாட்டேன்.”
கண்ணடித்தபடி சொல்லியவன், தன் இடுப்பைச் சுற்றி சிவரஞ்சனியின் கைகளை எடுத்து விட, முறைத்தபடியே அருணின் இடுப்பில் நறுக்கென்று கிள்ளினாள் சிவரஞ்சனி.
“ஆண்டவா… இனி இந்த அருணை நீ தான் காப்பாத்தணும்” விளையாட்டாக கத்தியபடியே வண்டியை அங்கேயிருந்து அருண் கிளம்ப, அவர்களின் காதல் பயணம், அந்த நொடியிலிருந்து அழகாகவே தொடங்கியது.
கடந்திருந்த ஒருவாரம், கண்களுக்கு கீழ் கருவளையம், உடல் மெலிவு என, அவள் உடம்பில் பெருத்த மாற்றங்களைச் செய்திருந்தது.
அன்று ப்ரெக்னன்ஸி கிட் டில் தெறிந்த இரட்டைக் கோடுகளைக் கண்டு முகம் வெளிறி, தலைசுற்றி கீழே விழும் நிலைக்கே சென்று விட்டாள் சந்த்ரிகா.
பாத்ரூம் சுவரைப் பற்றி, தன் தடுமாற்றை தவிர்த்து கொண்டவள், அடுத்த நொடியே ‘இந்த குழந்தை இப்போது எனக்கு வேண்டாம்’ என்று முடிவெடுத்து கொண்டாள்.
சிறிது நேரம் அங்கேயே நின்று, எப்படி தன் முடிவை கணவனுக்கு சொல்வது என்று ஒத்திகை பார்த்து கொண்டவள், “சந்த்ரி… என்னாச்சு?..” என்று பரபரப்பாக கேட்ட கணவனின் குரலில், பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள்.
“என்னாச்சு சந்த்ரி?” ஆர்வமாக கேட்டவனுக்கு முன்னே தன் கையிலிருந்த பரிசோதனை செய்த கிட்டை தூக்கிக் காட்ட, “ஹை… பேபி தான்!” என்று சந்தோஷ கூச்சலிட்டபடியே, மனைவியை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து, அவள் முகமெங்கும் முத்தமாரிப் பொழிய ஆரம்பித்தான் சசிதரன்.
அவனின் எதிர்பாராத இந்த செயலில் திகைத்துப் போன சந்த்ரிகாவிற்கு சொல்லவந்த வார்த்தைகளை சொல்லமுடியாமல் வாயடைத்து போனது என்னவோ நிஜம்.
மனைவியை பூவைப் போல மென்மையாக கைகளில் ஏந்தியவன், படுக்கையில் கொண்டு இருத்தி, அவள் மணிவயிற்றில் முத்தம் ஒன்றை பதித்து,
“தேங்ஸ் சந்த்ரி…” என்று கரகரத்த குரலில் சொல்ல, தன் முடிவைச் சொல்லும் நேரத்தை சற்றே தள்ளி வைத்தாள் சந்த்ரிகா.
“இப்போ உனக்கு குடிக்க, என்ன வேணும் சொல்லு” சோர்ந்திருந்த மனைவியின் முகவடிவை அளந்தவன், ஆர்வமாக கேட்க, “ஒண்ணும் வேண்டாம் சசி” என்றவாரே சுருண்டு படுத்துக் கொண்டாள் சந்த்ரிகா.
“ரொம்ப டயர்டா தெரியுற, முதல்ல ஃப்ரெஷ்ஷா ஜுஸ் போட்டுட்டு வரேன், அப்புறம் பால் பாயாசம் வச்சு நம்ம சந்தோஷத்தை செலிபரேட் பண்ணலாம்” என்று சொல்லியபடியே கிச்சனுக்கு சென்றவன்,
அங்கிருந்த மாம்பழத்தை கொண்டு மேங்கோ மில்க்ஷேக் செய்து, ஆர்வமாக மனைவியை குடிக்க வைக்க, அடுத்த நொடியே அந்த மில்க்ஷேக்கால் அவனை குளிப்பாட்டி இருந்தாள் மனைவி.
ம்ம்… வயிற்றுக்குள் சென்றிருந்த பானம் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் வாந்தியாக வெளியே வந்திருந்தது.
மொத்த வாந்தியையும் தன்மீதே வாங்கியிருந்தவனின் முகம், கொஞ்சம் கூட அருவருப்பை காட்டவில்லை. மாறாக மனைவியின் நிலைக்காக உருகி தவித்தது.
தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, எப்படியாவது அவள் வயிற்றை நிரப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மறுபடி மறுபடி அவன் முயல, எதுவுமே அவள் குடல் தங்கவில்லை. மனைவியோடு சேர்ந்து அவனுமே சோர்ந்து போனான்.
‘என்ன செய்தால் தன் மனைவியின் சோர்வை போக்க முடியும்?’ என்று யோசித்து கொண்டிருந்தவனுக்கு, சட்டென்று வீட்டு நியாபகம் வந்தது. எல்லோருக்கும் அழைத்து சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து கொண்டவன், மனைவியின் நிலையை தன் அன்னையரிடம் சொன்னான்.
அவர்களோ “முதல் மூன்று மாதங்களுக்கெல்லாம் ஒருசிலருக்கு இப்படித்தான் ப்பா இருக்கும். மொதல்ல சந்த்ரியை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போ” என்று அறிவுரை சொன்னார்கள்.
சந்த்ரிகாவின் தாயாரும் கூட அதையேத் தான் சொன்னார்.
வேலைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு, பிரபல மகப்பேறு மருத்துவமனையில் முன்பதிவும் செய்து கொண்ட சசிதரன், ஏனோ அமைதியாகிப் போன மனைவியோடு குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தான்.
சந்த்ரிகாவை பரிசோதித்தது ஐம்பதுகளில் இருந்த ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் மருத்துவர். குழந்தை தான் என்று பரிசோதனையின் முடிவில் உறுதி செய்தவரிடம், மனைவியின் உடல்நிலையைப் பற்றி சசிதரன் கூறினான்.
“ஒரு சிலருக்கு இப்படித்தான் அதிகப்படியான வாந்தியா இருக்கும். அதுக்காக எல்லாம் சாப்பிடாமல் இருக்கக்கூடாது. அப்பப்போ லிக்விட் ஆகவோ, சாலிட் ஆகவோ ஃபுட் எடுத்துக்கணும். ரொம்பவும் முடியலைன்னா, சாப்பிடுறதுக்கு முன்னாடி இந்த டேப்லட் போட்டுக்கோங்க. ஆனா முடிஞ்சவரைக்கும் டேப்லட் போடுறதை தவிர்க்க பாருங்க” என்று அறிவுரை செய்தார்.
“டாக்டர்… எங்களுக்கு கல்யாணம் ஆகி முப்பது நாள் தான் ஆகுது. அப்புறம் எப்படி பேபின்னு கன்ஃபர்ம் ஆகும்?”
‘இது குழந்தை இல்லை என்று சொல்லிவிட மாட்டார்களா?’ என்ற நப்பாசையில், முதன்முதலாக சந்தேகம் கேட்டு மருத்துவரிடம் வாயைத் திறந்தாள் சந்த்ரிகா.
சந்திரிகாவின் கேள்வியில் லேசாக புன்முறுவலை தன் இதழ்களில் தவழவிட்ட மருத்துவர், “உங்கல்யாணத்தோட உனக்கு பீரியர்ட்ஸ் ஆகி பன்னிரண்டு பதிமூனு நாள் ஆகியிருக்குமா?” என்று கேட்க, “ஆமாம்” என்று தலையசைத்தாள் சந்த்ரிகா.
“உங்களுக்கு கல்யாணம் ஆன நாளை கவுண்ட் பண்ணுறதை விட்டுட்டு, லாஸ்ட் பீரியட் ஆன நாள்லயிருந்து கவுண்ட் பண்ணுங்க, சரியா இருக்கும்.”
தெளிவாக சொல்லியவர், “இதை எங்க ஊரு திருநெல்வேலி பக்கத்துல, ‘மணவறைச் சூல்’ ன்னு பெரியவங்க சொல்லுவாங்க” என்று கூடுதல் தகவல் சொன்னார்.
சசிதரனும் தங்களுக்கு சொந்த ஊர் தென்காசி பக்கம் என்று சொல்ல, சொந்த ஊர்காரர்கள் என்று ஆன உரிமையில், “இப்போ உள்ள பொண்ணுங்க ஜீரோ சைஸ் வேணுங்குறதுக்காக, டயட் அது இதுன்னு ஒழுங்கா சாப்பிடாம, ஒரு டெலிவரிக்கே ஓய்ஞ்சு போறாங்க. உங்க மனைவிக்கு கொஞ்சம் ஹெல்தியா ஆகாரம் கொடுத்து நல்லபடியா பாத்துக்கோங்க மிஸ்டர் சசிதரன்” என்று தனது இயல்பு மீறி அதிகமாகவே அவர்களிடம் பேசினார் அந்த பெண் மருத்துவர்.
‘அங்கே வைத்து தன் முடிவை கணவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்த சந்த்ரிகா , இன்றைய தலைமுறைப் பெண்களைப் பற்றிய மருத்துவரின் வார்த்தைகளில், தன் முடிவை இப்போது சொல்லுவது சரியாகாது’ என்று அப்போதும் தன் முடிவைத் தள்ளிப்போட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்திருந்தாள்.
வாரம் ஒன்று கழிந்திருக்க, இதுவரை தன் முடிவைப் பற்றி கணவனிடம் வாயைத்திறக்காத மனைவியின் அருகே வந்து உட்கார்ந்த சசிதரன், அவள் கூந்தல் தடவி, “நல்லா புளி உரைப்பா வச்சி கருவாட்டு குழம்பு வச்சிருக்கேன். கொஞ்சம் சாப்பிட்டுட்டு படுடா” என்றான் ஆதூரமாக.
இங்கே வந்த நாட்களில், சிலமுறை மனைவிக்காக சசிதரன் சமைத்தவற்றில் கருவாட்டு குழம்பை அவள் விரும்பி சாப்பிட்டதை கண்டிருந்ததால் ‘இதையாவது வயிறு நிறைய மனைவி சாப்பிட்டு விட மாட்டாளா?’ என்ற ஆசையில் சமைத்திருந்தான் சசிதரன்.
இந்த ஒருவாரமாக வீட்டிலிருந்து ஆஃபீஸ் வேலைகளை பார்ப்பதற்கான அனுமதியை வாங்கியிருந்தான் சசிதரன்.
மகளின் உடல்நிலைப் பற்றி கேள்விப்பட்டதும் இன்னும் இரண்டு நாட்களில் அங்கே வருவதாக சொல்லியிருக்கிறார் ராதா. அதன் பிறகே அலுவலகம் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறான் சசிதரன்.
“எனக்கு வேண்டாம் சசி” மெதுவாக எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி சொன்னாள் சந்த்ரிகா.
“அப்படி சொல்லக்கூடாது, கொஞ்சமாவது சாப்பிடு சந்த்ரி” ஒரு கவளம் சோறை உருட்டி மனைவியின் வாயருகே கொண்டு சென்றபடியே சசிதரன் கூறினான்.
அவன் கையை ஒதுக்கியபடியே, “எனக்கு இப்போ இந்த குழந்தை வேண்டாம் ன்னு சொன்னேன் சசி” என்றாள் கணவனின் கண்களைப் பார்த்து தெளிவாக.
மனைவியின் வார்த்தைகளில் உச்சபட்ச அதிர்ச்சி அலை ஒன்று சசிதரனை தாக்க, “என்ன சொன்ன?…” என்றான் வேகமாக.
கையிலிருந்த சோறை பாத்திரத்தில் போட்டு, பக்கத்திலிருந்து சின்ன டேபிளில் சாப்பாட்டு பாத்திரத்தை அவசரமாக வைத்தவன், கேள்வியாக மனைவியைப் பார்த்தான்.
“இந்த பேபி இப்போ எனக்கு வேண்டாம், அபார்ட் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன் சசி” என்றாள் சந்த்ரிகா உறுதியான குரலில்.
எப்போதுமே தொடக்கம் தானே இங்கு பலருக்கு பிரச்சினை. தொடங்கிவிட்டால் ஜெட் வேகத்தில் பறக்குமே. அதுதான் சந்த்ரிகாவின் விஷயத்திலும் நடந்தது.
“என்ன பேசுற சந்த்ரி?… உனக்கு பைத்தியம் எதுவும் பிடிச்சிடிச்சா என்ன?” அதிர்ந்து போன குரலில் கேட்டான் சசிதரன்.
“இதை சுமந்துகிட்டே இருந்தா, அது தான் நடக்கப் போகுது” சட்டென்று தன் வயிற்றில் அறைந்து கொண்டவள், ஒரு வெறுப்பான குரலில் சொல்ல, அரண்டு விட்டான் அந்த ஆண்மகன்.
வேகமாக மனைவியின் கைகளைப் பற்றிக்கொண்டு, “ஹேய்… என்னடி பண்ணுற நீ” அதிர்ச்சியோடு கேட்டவன், மனைவி இந்த கர்ப்பகால தொந்தரவுகளால் சோர்ந்து போய் இப்படி பேசுகிறாள் என்ற எண்ணத்தில்,
“இந்த கஷ்டம், எல்லாம் நம்ம புள்ளையைக் காணும் போது, ஒண்ணுமே இல்லைன்னு ஆகிடும் சந்த்ரி. அதுக்காக நீ இவ்வளவு பெரிய முடிவெடுக்காத” என்றான் கெஞ்சலாக.
“இன்னைக்கு நான் வேலைக்கு போய் ஒருவாரம் ஆகியிருக்கணும், ஆனா நடக்கலை… எல்லாம் வயித்துல இருக்குற இந்த சனியனால.”
சந்த்ரிகா சொல்லி முடிக்கவில்லை, சசிதரனின் கைகள் அவள் கன்னத்தில் பளாரென்று இறங்கியிருந்தது.
“வேண்டாம்… இது வேண்டவே வேண்டாம் எனக்கு. இதால என் வேலைக் கனவு தான் பறிபோச்சுன்னு நினைச்சேன், இப்போ நீங்க கை நீட்டி என்னை அடிக்கவே செய்தாச்சு. வேண்டாம்… இப்படி ஒரு பிள்ளை எனக்கு வேண்டவே வேண்டாம்…” உச்சஸ்தாயியில் கத்த தொடங்கினாள் சந்த்ரிகா…