மனைவியின் எல்லைமீறிய வார்த்தைகளில் தன்னை மறந்து கை நீட்டியிருந்த சசிதரனுக்கு, தன்னுடைய செயலை தன்னாலேயே ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை.
தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டவன், எதிர்பாராமல் விழுந்த அடியில் திகைத்துப் போய், முகம் வெளிற, சொன்னதையேத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்த மனைவியை, தாவி அணைத்துக் கொண்டு,
“அப்படி சொல்லாத சந்த்ரி… அது நம்ம இரண்டு பேரையும் மட்டுமே நம்பி வந்த உயிரு, நீ இப்படி சொல்லும் போது எனக்கு மனசு வலிக்குது” என்றான் வலி நிறைந்த குரலில்.
“எனக்குந்தான் வலிக்குது. கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு போகலாம்னு எவ்வளவு நம்பிக்கையா இருந்தேன். அந்த நம்பிக்கை தரைமட்டமா போகும் போது, எனக்கும் தான் மனசு வலிக்குது.”
கணவனின் அணைப்பிலிருந்து வெளியே வந்துவிட முயற்சி செய்துகொண்டே சொல்லியவள், அது முடியவில்லை என்றதும், “என்னை அடிச்சிகிட்டு, இப்படி கட்டிப்பிடிக்க உங்களுக்கு வெட்கமா இல்ல?… விடுங்க என்னை” என்றாள் ஆங்காரமாக.
மனைவியிடமிருந்து இப்படியொரு முகத்தை எதிர்பாராத சசிதரன் திகைத்துப் போனான்.
பெண்களென்றால் தாய்மை, கருணை, பேரன்பு என்ற புரிதலோடு இருந்தவனுக்கு, ஒரு வேலைக்காக, தன் வயிற்றில் குடிவந்திருக்கும் உயிரை சுமக்க மறுக்கும் மனைவியின் குணாதிசயத்தைக் கண்டு பேரதிர்ச்சியாக இருந்தது.
‘இல்லை… இது அவளாக பேசவில்லை, உடல் சோர்வும், பசியுமே சேர்ந்து அவளை அவ்வாறு பேசத் தூண்டுகிறது’ என்று நினைத்த சசிதரன், “மொதல்ல நீ சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு சந்த்ரி. அப்புறமா நாம இதப்பற்றி பேசலாம்” என்றான் மெதுவாக.
“ஆஹா… சாப்பிட்ட உடனே அப்படியே வயித்துல சோறு தங்கிடும் பாருங்க… இதுல, நான் சாப்பிட்டாலும் ஒண்ணு தான், சாப்பிடலைன்னாலும் ஒண்ணுதான், இப்பவே இதைப்பத்தி பேசிடலாம்” என்றாள் பிடிவாதமாக.
“சரி சொல்லு…”
‘மனைவி என்னதான் சொல்ல வருகிறாளென்று, முழுவதும் காது கொடுத்து கேட்டுவிடுவோமே’ என்ற எண்ணத்தில் சசிதரன் சொன்னான்.
“எனக்கு வேலைக்கு போயே ஆகணும் சசி. அதனால இப்போ இந்த குழந்தை வேண்டாம்” என்றாள் அழுத்தமாக சந்த்ரிகா.
“கண்டிப்பா நீ வேலைக்கு போகலாம் சந்த்ரி… டெலிவரிக்கு அப்புறமா, ஏதாவது ஏற்பாடு செய்து நானே உன்னை வேலைக்கு அனுப்பறேன்” என்றான் மனைவியை சாந்தப்படுத்தும் முயற்சியில் சசிதரன்.
“ம்ஹூம்… இந்த கதை தான், இங்க நடக்காது. எங்கம்மா கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு போன்னு சொன்னாங்க. கல்யாணம் ஆனா…, நீங்க டெலிவரிக்கப்புறம் போ ன்னு சொல்லுறீங்க. ஆஃப்டர் டெலிவரி, பிள்ளை வளந்தபிறகு போ ன்னு சொல்லுவீங்க. நான் என்ன, நீங்க எல்லாரும் இஷ்டத்துக்கு உருட்டி விளையாடுற தாயக்கட்டையா? ஹாங்…”
“இப்பவே அவனவன், இந்த இரண்டு வருஷம் வேலை பார்க்காம என்ன செய்தன்னு கேட்டு, எம்மண்டையை உருட்டுறானுங்க. இப்படியே இது நீண்டுகிட்டு போனா, நான் வேலை பாத்தாப்புல தான். அதனால எனக்கு ஒரு இரண்டு வருஷம் டைம் குடுங்க. இப்போ இந்த பேபியை அபார்ட் பண்ணிகிட்டு நான் வேலைக்கு போறேன். அப்புறமா ஒரு இரண்டு வருஷம் கழிச்சு குழந்தை பெத்துக்கலாம்.”
எந்தவித உறுத்தலும் இல்லாமல் தெளிவாக சந்த்ரிகா திட்டம் தீட்ட, வெறுத்துப் போனது சசிதரனுக்கு.
“ம்ஹூம்… குழந்தை ங்குறது, நீ நினைக்கிற மாதிரி ரொம்ப ஈசி இல்லை சந்த்ரி. நமக்கு கிடைக்கும் போது வாங்கிக்கிடணும். அப்படியில்லாமல் நம்ம இஷ்டத்துக்கு அதை புறக்கணிச்சோம்னா, ஒருகட்டத்துல நமக்கு குழந்தை கிடைக்காதான்னு கடவுள் நம்மை ஏங்க வச்சிடுவார்” இதழ்கடையோரம் வெறுமையான சிரிப்பொன்றை தவழவிட்டபடி சொன்னான் சசிதரன்.
“சும்மா கடவுள், அது இதுன்னு பூச்சாண்டி காட்டாதுங்க சசி. ஒரு ஆணும் பொண்ணும் ஆரோக்கியமா இருந்தா அவங்களுக்கு குழந்தை பிறக்கும். நீங்களும் நானும் குழந்தை பெத்துக்க தகுதியா இருக்கோம் ங்குறதை என்னோட இந்த ப்ரெக்னன்ஸி கன்ஃபர்மா சொல்லுது. அதனால, நாம நினைச்சா எப்போ வேண்டுமானாலும் குழந்தை பெத்துக்கலாம்” என்றாள் சந்த்ரிகா திமிராக.
‘ஆரோக்கியமான தம்பதியினர் ஏராளமானோர் இங்கு குழந்தைவரம் கிடைக்காமல் தவித்து நிற்கின்றனர் என்ற உண்மை தெரியாமல் பேசும் மனைவிக்கு, எப்படி புரிய வைப்பது?’ என்று தெரியாமல் அவளை விழித்து பார்த்தபடி திகைத்து நின்றான் சசிதரன்.
“நீ எதுக்காக வேலைக்கு போகணும்னு நினைக்கிற சந்த்ரி?” அடுத்தகட்ட சமாதான முயற்சியில் இறங்கினான் சசிதரன்.
“ம்ம்… எல்லாரையும் போல சம்பாதிக்க தான்” சந்த்ரிகாவிடமிருந்து அலட்சியமாக வந்தது பதில்.
“அப்போ பணம் தான் உனக்கு முக்கியம் இல்ல…” கண்மூடி சில நொடிகள் மௌனமாக இருந்த சசிதரன்,
“அந்த பணத்தை உனக்கு நான் தரேன், ஐ மீன்… என் சம்பளத்தை அப்படியே உங்கையில கொண்டு வந்து நான் தரேன்… நீ என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ. ஆனா, நம்ம குழந்தையை மட்டும் பெத்துக்கொடுத்துடு…” கெஞ்சலாக வந்தது சசிதரனின் வார்த்தைகள்.
“நான் குழந்தையே பெத்துக்க போறதில்லைன்னு சொல்லலை. எனக்கு இப்போ குழந்தை வேண்டாம்ன்னு தான் சொல்லுறேன். அதைப் புரிஞ்சுக்கோங்க முதல்ல. ஏன்?… பெத்துக்க போறவளுக்கு அதை எப்போ பெத்துக்கணும்னு டிசைட் பண்ணுற ரைட்ஸ் கூட கிடையாதா? வந்துட்டாங்க பணம் தர்றேன்னுட்டு…” என்றாள் பக்கத்தில் இருந்த தலையணையை கோபத்தில் தூக்கி எறிந்தபடி.
“கண்டிப்பா உனக்கு ரைட்ஸ் உண்டு… ஆனா, அதை பேபி வந்த பிறகு டிசைட் பண்ணுற அதிகாரம், கண்டிப்பா உனக்கு மட்டுமே கிடையாது” உன் கோபம் என்னை எதுவும் செய்யாது என்ற பாவனையில் சசிதரனின் பேச்சிருந்தது.
“இப்படி தொடும் முன்னே வந்து ஒட்டிக்கும்னு, நான் என்ன கனவா கண்டேன்?” வாய்க்குள் முணுமுணுத்தபடியே, “சொல்லுங்க… எப்போ ஹாஸ்பிடல் போகலாம்?” என்றாள் சந்த்ரிகா விடாப்பிடியாக.
“அப்போ, இவ்ளோ நேரம் நான் சொன்னது எதுவும் உங்க மண்டையில ஏறலை ல்ல. என்னோட ஆசை, கனவு எதுவும் உங்களுக்கு பெருசா தோணலை ல்ல” என்று சத்தமாக இரைந்தவள், “நீங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலைன்னா என்ன? நானே பாத்துக்கறேன்” என்றாள் ஆணவமாக.
“குழந்தை வேணுமா? வேண்டாமான்னு நீ மட்டும் தனியா முடிவெடுக்க முடியாது. அது என்னோட பேபியும் கூட. நீ என்ன செய்ய முடிவெடுத்தாலும், அதுக்கு என்னோட சம்மதமும் வேணும். எம்பேபியை பெத்து எங்கைல குடுத்துட்டு, நீ தாரளமா எங்க வேணும்னாலும் போ, என்ன வேணும்னாலும் செய். எனக்கு அதைப்பத்தி எந்த அப்ஜெக்ஷனும் கிடையவே கிடையாது.”
இது தான் என் முடிவு என்பதைப் போல சசிதரன் அங்கிருந்து எழும்பிச்செல்ல, ஆங்காரத்துடன் அருகிலிருந்த சாப்பாட்டு பாத்திரத்தை தூக்கி விசிறி அடித்தாள் சந்த்ரிகா.
ணங்… என்ற சத்தத்தோடு பக்கத்து சுவரில் மோதிய பாத்திரம் தரையில் விழுந்து உருள, சாப்பாடு நாலா பக்கமும் சிதறியது.
அவ்வளவு தான்... இவ்வளவு நேரமும் கைக்கொண்டிருந்த சசிதரனின் பொறுமை விடைபெற்று சென்றிருந்தது. அடக்கி வைத்திருந்த கோபம் சட்டென்று வெளியே வர, கைநீட்டி மனைவியின் முகவாயை அழுத்தமாக பற்றியவன்,
“இதே, சாதாரண சந்த்ரியா இருக்கும் போது நீ இதைச் செய்திருந்தா, நடக்குறதே வேறயா இருந்திருக்கும். ஆனா, இப்போ நீ ஒரு உயிரை தாங்கிட்டு இருக்கிற, அதுவும் என் உயிரை தாங்கிட்டு இருக்கிற. அதனால தப்பிச்ச, புரியுதா?”
கண்களை உருட்டி, அடிக்குரலில் அதட்டியபடிச் சொல்லியவன், அவள் முகவாயிலிருந்து கைகளை விலக்கி, தான் அழுத்தி பிடித்திருந்ததால் கன்றிச் சிவந்திருந்த இடத்தை தடவி விட்டபடியே,
“ஏற்கனவே, இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கும் போது, உன்னை அடிச்ச பாவத்தை எங்க போய் தொலைக்கப் போறேன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கறேன். இதுல இன்னும், இன்னும் என்னைப் பாவம் செய்ய தூண்டாத” என்றபடி அமைதியாக அறையை விட்டு சென்றுவிட்டான்.
சற்று நேரத்தில், துடைப்பம், மாப், சகிதம் வந்தவன், அந்த இடத்தை பெருக்கி, தண்ணீரால் துடைத்து சுத்தம் செய்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
செய்து வைத்திருந்த உணவு சீண்டப்படாமலே இருந்தது. கடந்த ஒரு வாரமாக மனதில் துளிர்த்திருந்த மகிழ்ச்சி துணி கொண்டு துடைத்தாற் போல காணாமல் போயிருந்தது சசிதரனுக்கு. ஒரே நாளில் வாழ்க்கையில் பிடிப்பற்றவனைப் போல காணப்பட்டான்.
அந்த இயற்கையே ஏதோ ஒரு விதத்தில் பெண்மையை உயர்வாக கருதியதால் தானே, தாய்மை என்னும் பெருமையை பெண்களுக்கே உரித்தானதாக வழங்கியிருக்கிறது.
அது புரியாமல் தங்களின் வாரிசை வேலையைக் காரணம் காட்டி மடிதாங்க மறுக்கும் மனைவியின் செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனால்.
‘கவலையேப்படாதீங்க செல்லம்… எப்படியாவது இந்த பூமியில் உங்க காலடியைப்பட வச்சிடுவேன். இல்லைன்னா, அப்பான்னு நான் இருந்து என்ன பிரயோஜனம்?’ கருவில் இன்னமும் உருக்காணாத தன் பிள்ளைக்காக உருகினான் அந்த தகப்பன்.
‘இந்த விஷயத்தை சந்த்ரிகா இத்தோடு விட்டுவிடுவாளா? இல்லை, இன்னும் இரண்டு நாளில் வர இருக்கும் தன் அம்மாவிடமும் இப்படித்தான் பேசுவாளா?’ என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு.
அதோடு, தன் வீட்டினருக்கும் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை சசிதரன். ‘கண்டிப்பாக எல்லாம் சுமுகமாக முடிந்து விடும். அப்படியிருக்கும் போது மனைவி இப்படி சொன்னாளென்று தெரியவந்தால் அவள் மதிப்பு, தன் குடும்பத்தினரிடையே சரிந்து விட வாய்ப்பு உண்டு’ என்று எண்ணினான் சசிதரன்.
அதனாலேயே அவன் வீட்டு மனிதர்களிடம் இதைப்பற்றி வாயைத் திறக்கவில்லை அவன்.
ஆனால், ராதாவோடு அம்மா இராஜேஸ்வரியையும் அழைத்துக் கொண்டு அருண் வருவதாக ஃபோன் செய்து தகவல் சொல்ல திகைத்து போனான் சசிதரன்.
வருகிறேன் என்று சொல்லும் தாயை, வரவேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும்?
அதனால் மனைவியிடம் சொன்னான். “அவளது தாயோடு, தன் தாயும் சகோதரனும் வருவதைச் சொன்னான். கூடவே, முட்டாள்தனமாக எதையும் சொல்லி அவர்களை நோகடித்து விடக்கூடாது” என்றும் சொன்னான்.
பதிலேதும் சொல்லாமல் கோணலாக சிரித்தாள் சந்த்ரிகா. அவளது சிரிப்பே சரியில்லை என்று சசிதரனுக்கு தோன்ற, “கண்டிப்பா, நீ நினைச்சதை நான் நடக்க விடப்போறதில்லை. அதனால வீணா வார்த்தைகளை விட்டு உன்மேல அவங்களுக்கு வருத்தம் வர்ற மாதிரி செஞ்சிடாத” என்றான் வேண்டுதலாக.
ஆனால் சித்தம் கலங்கிப் போய், நினைத்ததை சாதித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருப்பவளுக்கா கணவனின் அக்கறை புரிந்து விடப் போகிறது?
அவளுமே தாயாரின் வருகைக்காகத் தானே காத்துக் கொண்டிருக்கிறாள்.
குறிப்பிட்ட நாளில் மூவரும் வந்தார்கள். மகனைப் பார்த்ததுமே எதுவோ சரியில்லை என்று தோன்றியது இராஜேஸ்வரிக்கு.
அவரின் கணிப்பு சரிதான் என்பது போல இருந்தது சந்த்ரிகாவின் பேச்சு.
ஒரு பெண்ணிற்கு, தன் வயிற்றில் பிறந்த மகளும் தாயாகப் போகிறாள் என்ற செய்தி, ஆகப்பெரிய சந்தோஷத்தை தரும்.
“நான் சந்தோஷமா இல்லை…, எனக்கு இந்த பேபி வேண்டாம். அபார்ஷன் பண்ண ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்கன்னு சொன்னா அவங்க கூட்டிட்டு போகலை. நீங்க என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க.” என்றாள் வடிகட்டிய முட்டாளாக மாறிய சந்த்ரிகா.
யாருக்கு தெரிந்தால் தன் மனைவியின் மதிப்பு குறைந்து விடும் என்று சசிதரன் நினைத்தானோ, அவர்களுக்கு முன்பு, யோசனையின்றி விஷயத்தை போட்டுடைத்தாள் சந்த்ரிகா.
பெண்கள் இருவருக்கும் பின்னோடு தன் அண்ணனோடு வந்த அருண் நொடியில் விஷயத்தை கிரகித்துக் கொண்டு, சசிதரனின் தோளில் ஆதரவாக தட்டியபடி அறையை விட்டு வெளியே சென்றான்.
இராஜேஸ்வரி மகனின் கைகளைப் பற்றிக் கொண்டு, “சந்த்ரி என்னப்பா சொல்லுறா?” என்றார் குழப்பமாக. மகனைப் பிடித்திருந்த கைகளோ அவரையும் மீறி கிடுகிடுவென நடுங்கியது.
“ஒண்ணும் இல்லை ம்மா. அவளுக்கு சின்ன குழப்பம், சரி பண்ணிடலாம்” என்றவன், உட்சபட்ச அதிர்ச்சியில் மகளுக்கருகில் கட்டிலில் அமர்ந்திருந்த ராதாவை பார்த்தபடியே, தாயையும் அறையை விட்டு வெளியே அழைத்து சென்றான்.