“என்னடீ சொல்லுற?…” தான் இத்தனை நாட்களாக கொண்டிருந்த சந்தோஷத்தை ஒன்றுமேயில்லை என்று ஆக்கிய மகளை உறுத்துப் பார்த்தபடி கேட்டார் ராதா.
மகளுக்கு பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து அவர் செய்து கொண்டு வந்திருந்த பட்சணங்கள் கூட பரிதாபமாக அவரைப் பார்த்தன.
“ஏன்?… தமிழ்ல தானே சொன்னேன்? உங்களுக்கு புரியலையா?” தனக்கேத்த அடிமை சிக்கிவிட்ட மகிழ்ச்சியில், ராதாவிடம் அளவுக்கு அதிகமாகவே சிடுசிடுத்தாள் சந்த்ரிகா.
“இந்த வரம் கிடைக்கலையேன்னு எத்தனையோ பேர் ஏங்கிட்டு இருக்கும் போது, உனக்கு உடனே கிடைச்ச திமிர்ல தானே இப்படியெல்லாம் பேசுற?”
ஆரம்பகட்ட அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்திருந்த ராதா, மகளை அதட்ட, “நான் இப்படி நடந்துக்க காரணமே நீங்க தான்” என்று பழியை மொத்தமாக தூக்கி தாயின் தலைமீது வைத்தாள் சந்த்ரிகா.
“என்ன சொல்லுற?”
“நான் கேட்கும் போதே என்னை வேலை பார்க்க அனுமதிச்சிருந்தா, இன்னைக்கு எனக்கு வேலையில் இரண்டு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் ஆகியிருக்கும். நானும் இப்படி எல்லாம் பேசியிருக்க மாட்டேன்.”
“நீ, எப்பவும், யாரையுமே புரிஞ்சுக்க போறதே இல்லையா சந்த்ரி?” நொந்து போன குரலில் கேட்ட ராதா,
“உன்னை வெளியூர்ல தங்கி வேலை பார்க்க வேண்டாம்னு நான் சொன்னேனேயொழிய, வேலை பார்க்க வேண்டாம்னு நான் சொன்னதே இல்லை. அப்பா இல்லாத சூழ்நிலையில், எம்பொண்ணுங்க எங்கைக்குள்ளயே பாதுகாப்பா இருக்கணும்னு நினைச்சது, இப்போ வரைக்கும் எனக்கு தப்பா தோணலை.”
“வேலையில் சின்ன வேலை, பெரிய வேலைன்னு பாகுபாடு பாத்த உன்னோட மனோபாவம் தான் தப்பு. அப்படி மட்டும் நினைக்காமல், திருநெல்வேலியிலோ, தென்காசிலயோ வேலை பார்த்திருந்தாலும், நீ இப்போ சொல்லுற எக்ஸ்பீரியன்ஸ் உனக்கு கிடைச்சிருக்கும்.”
மண்டையில் ஏறும்படி ராதா தெளிவாக சொன்னாலும், எங்கே… புரிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சி கொஞ்சமாவது எடுத்தால் தானே புரியும் சந்த்ரிகாவிற்கு.
“சரி… நடந்து முடிஞ்சதை பற்றி பேசி நம்ம டைமை வேஸ்ட் பண்ண வேண்டாம். இனி நடக்குறதைப் பற்றி பேசலாம். எனக்கு இப்போ வேலைக்கு போகணும். பேபியை வச்சிட்டு வேலைக்கு போறது கஷ்டம். அதனால அபார்ஷன் பண்ண ஹெல்ப் பண்ணுங்க” என்று தாயிடம் உதவிக்கு அடிபோட்டாள் சந்த்ரிகா.
“நானும் உன்னைப் போலவே நினைச்சிருந்தா, இப்போ, இப்படி பேச நீயும் பிறந்திருக்க மாட்ட” நறுக்கென்று பேசினார் ராதா.
“அப்போ என்னை பெத்தது தப்புன்னு நினைக்கிறீங்களா ம்மா?”
“ஏன்?… நீ நினைக்கும் போது நான் நினைக்க கூடாதா?”
அதட்டலாக கேட்ட ராதா, இன்னும் கொஞ்சநாள் வேலைக்கு போகலைன்னு நினைச்சுட்டு நல்லபடியா இந்த குழந்தையை பெத்தெடுத்துக்கோ சந்த்ரி. நாங்க பெரியவங்கன்னு எத்தனை பேர் இருக்கிறோம் பிள்ளையை வளத்து தர்றதுக்கு. குழந்தை பிறந்த பிறகு நீ தாராளமா வேலைக்கு போகலாம்” என்றார் மென்மையான குரலில்.
அதையே, “நீ பெத்துமட்டும் குடுத்துடு ம்மா. நான் பிள்ளையை வளக்குறதுக்கு உதவி செய்யுறேன், நீ வேலைக்கு போகலாம்” என்று மறுநாள் வீட்டுக்கு கிளம்பிய இராஜேஸ்வரியும் மருமகளிடம் சொன்னார்.
ஆனால், யார் பேச்சையும் கேட்கமாட்டேன் என்று காதுகளை இறுக மூடிக்கொண்ட சந்த்ரிகா தன்பிடியிலேயே நின்றாள்.
இப்படி ஒரு சூழ்நிலையில் மகளை விட்டுவிட்டு செல்ல மனமின்றி, ராதா மகளுடனே தங்கி கொள்ள முடிவெடுத்ததால், அருணும், இராஜேஸ்வரியும் மட்டுமே ஊருக்கு திரும்பி சென்றார்கள்.
போகும் போது, “நீங்க வர்றவரைக்கும் சிவரஞ்சனியை எங்க வீட்ல வந்து தங்க சொல்லுங்க அண்ணி” என்று இராஜேஸ்வரி ராதாவிடம் சொல்ல, அவரின் பெருந்தன்மையான பேச்சில் உருகிப் போனார் ராதா.
“இல்ல … பக்கத்து வீட்ல ஒரு பாட்டி உண்டு. அவங்களை சிவா கூட தங்க சொன்னா தங்குவாங்க. இவளும் பாதி நேரம் வேலைக்கு போய்டுவா தானே” என்று மென்மையாக மறுத்துவிட்டார் ராதா.
ராதா மெடிக்கல் லீவ் போட்டுக் கொண்டார். சசிதரன் மனைவியோடு அவள் தாயிருக்கும் தைரியத்தில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான்.
ஆனால், பழையபடி மனைவியிடம் சாதாரணமாக பேசத்தான் முடியவில்லை அவனால்.
அதையெல்லாம் கவனித்து கொண்டு தான் இருந்தார் ராதா. மகளின் வாழ்க்கையைப் பற்றி ஒரு தாயாக கவலை வந்தது அவருக்கு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகளின் எண்ணம் எவ்வளவு தவறு என்பதை அவளுக்கு புரிய வைக்க முயன்று கொண்டே இருந்தார்.
ஆனால் எதுவும் என்னுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை, ஸ்கேன் பரிசோதனைக்காக அறுபது நாளில் மருத்துவமனைக்கு சென்ற சந்த்ரிகா நிரூபித்தாள்.
முதன்முதலில் பரிசோதனைக்காக வந்த மருத்துவரிடமே வந்திருந்தார்கள். அனைவரையும் முந்திக்கொண்ட சந்த்ரிகா, “நான் இப்போ இந்த பேபியை பெத்துக்க மென்டலி தயாரா இல்ல டாக்டர். அபார்ஷன் பண்ணிக்க விரும்புறேன்” என்று சொல்ல, மருத்துவரே கொஞ்சம் திகைத்து தான் போனார்.
“ஏம்மா?… இது உனக்கு ஃபர்ஸ்ட் பேபி தானே? அப்புறம் பெத்துகிட்டா என்ன?” என்று கேள்வி கேட்டவர், “மொதல்ல ஸ்கேன் எடுத்துட்டு வாங்க, அப்புறமா இதைப்பத்தி பேசலாம்” என்று அனுப்பி வைக்க, மனைவியின் செயலில் மனதளவில் பெருத்த அடிவாங்கினான் சசிதரன்.
ராதாவோ மகளை வார்த்தைகளால் வெளுத்து வாங்கிவிட்டார். அது எதையும் கருத்தில் கொள்ளவேயில்லை சந்த்ரிகா. அடுத்து மருத்துவர் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காகவே காத்திருந்தாள்.
மருத்துவர் பரிந்துரைப்படி ஸ்கேன் எடுத்துவிட்டு அவரிடம் வந்தார்கள். அவரோ சந்த்ரிகாவின் கர்ப்பத்தில் இருப்பது இரட்டை குழந்தைகள் என்றார் புன்னகையோடு.
கூடவே, “எல்லோருக்கும் இப்படி அமையாது ம்மா. என்னைக் கேட்டா, இந்த பேபீஸை பெத்துக்கோங்கன்னு தான், நான் சொல்லுவேன்” என்று முடித்துவிட, எப்படி எதிர்வினையாற்றுவது என்று மருத்துவருக்கு எதிரே இருந்த மூவருக்குமே தெரியவில்லை.
ஒரு குழந்தையையே சுமக்க மாட்டேன் என்பவளின் கர்ப்பத்தில், இரண்டு குழந்தைகள்.
குழந்தை விஷயத்தில் வேண்டாம், வேண்டாம் என்பவர்களுக்கு வள்ளலாக மாறி, இந்தா வைத்துக் கொள் என்று அள்ளி அள்ளி கொடுப்பதுவும், எனக்கு ஒன்றாவது கிடைத்து விடாதா என்று ஏங்கிப்போய் நிற்பவர்களுக்கு கஞ்சனாக மாறி அருள மறுப்பதுமாக, இந்த கடவுளின் திருவிளையாடலே கொஞ்சம் விசித்திரமானது தான்.
தன் கருவில் இருப்பது இரட்டை குழந்தைகள் என்று தெரியவும் சந்த்ரிகாவுமே கொஞ்சம் ஆடித்தான் போனாள்.
அமைதியாக வீடு வந்து சேர்ந்திருந்தவள், அந்த கடவுளும் சேர்ந்து தன்னை வஞ்சித்து விட்டதாக கருதி, அதன்பின் அபார்ஷன் பற்றி எதுவுமே பேசவில்லை. மொத்தத்தில் பேச்சையே குறைத்துக் கொண்டாள்.
மேலும் ஒருமாதம் மகளோடே இருந்தார் ராதா. சந்த்ரிகாவின் கர்ப்பகால தொந்தரவுகள் குறையவே இல்லை.
“சந்த்ரிகாவிடம் ஊருக்கு போய்ட்டு வருவோமா?” என்று ராதா கேட்க, அவளும் சம்மதம் சொல்லவே, சசிதரனிடம் அனுமதி கேட்டார் ராதா. சம்மதித்தவன், இருவரையும் ஊரில் கொண்டு வந்து விட்டுவிட்டு கிளம்பினான்.
கிளம்பும் முன் மனைவியிடம், “எப்போ வேண்டுமானாலும் எனக்கு ஃபோன் பண்ணு, சந்தோஷமா இரு, அப்போ தான் குழந்தைகள் வளர்ச்சி நல்லாயிருக்கும்” என்றபடி மனைவியின் கையில் தன் பேங்க் கார்டை வைத்தான்.
மனைவியிடம் நீண்ட நாட்களுக்கு பிறகான சசிதரனின் நேரடி பேச்சு இது. மனைவியின் மௌனம், வயிற்று குழந்தைகளை பாதித்து விடுமோ என்ற பயம், சசிதரனை மௌனம் கலைக்க வைத்திருந்தது
“பிள்ளையை சுமக்குறதுக்கு கூலி தர்றீங்களா?” ஒருமாதிரி குரலில் சந்த்ரி கேட்க, “ஒரு அப்பாவா எம்பிள்ளைங்களுக்கு நானே செலவு செய்ய ஆசைப்படுறேன், அவ்வளவு தான்” என்றவன் கிளம்பி சென்றிருந்தான்.
தன் பிறந்த வீட்டில் தான் இருந்தாள் சந்த்ரிகா. இராஜேஸ்வரியின் மூலம் நடந்த விஷயத்தை தெரிந்திருந்த சத்ந்திரிகாவின் புகுந்த வீட்டினரும், அவளை தங்களது வீட்டில் வந்து இருக்குமாறு தொந்தரவு செய்யவில்லை.
எங்கே இருந்தாலும் தங்கள் வீட்டு வாரிசு நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணமே, அவர்களிடம் பிராதானமாக இருந்தது.
அவ்வப்போது அல்லிக்குளம் சென்று சந்த்ரிகாவை பார்த்து விட்டு வருவார்கள்.
தன்னுடைய விருப்பம் நிறைவேறாத காரணத்தால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் என் எதிரிகள் என்ற மனோபாவத்தில் வளைய வந்த சந்த்ரிகா, யாரையும் தன் அருகிலேயே நெருங்க விடவில்லை.
ஆனாலும் சசிதரனின் வீட்டிலிருந்து யாராவது இங்கு வந்து கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் வரும்போதெல்லாம், விதவிதமான உணவு வகைகளும் வரும்.
அன்றும் அப்படித்தான், தங்களுக்கு மிகவும் நெருங்கிய இஸ்லாமிய நண்பரின் வீட்டிலிருந்து வந்திருந்த பிரியாணியை, சந்த்ரிகாவிற்கு குடுத்து விட்டு வரச்சொல்லி அருணை அனுப்பியிருந்தார் நாயகி.
அவ்வாறே செய்து விட்டு வீட்டுக்கு வந்தவனை, ஹாலில் நடைபெற்ற அவனின் திருமண பேச்சு வரவேற்றது.
மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்திருந்த அருணின் அப்பாவிடம், கல்யாண தரகர் ஒருவர் கல்யாண பெண்ணின் விபரம் சொல்லிக்கொண்டிருந்தார். நாயகியும் ராஜியும் கூட அங்கே நின்றிருந்தார்கள்.
‘வெளிநபர் ஒருவரோடு தன் வீட்டு பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது தலையிட வேண்டாம். அவர் சென்றதும் தன் மனதை இன்றே வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லிவிட வேண்டும்’ என்ற முடிவில் அருண் அமைதியாக உட்கார்ந்தான். அங்கு வந்த ரத்னாவுக்கு, மகன் அளவுக்கு பொறுமையில்லை.
அவருக்கு இன்னுமே தன் அண்ணன் மகள் மாலதி தான் தனக்கு மருமகளாக வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்க, யோசிக்காமல் படபடவென்று வார்த்தைகளை அவிழ்த்து விட தயாரானார்.
அன்னையின் உடல்மொழியிலேயே இப்போது அங்கே ஒரு விவாதம் நடைபெறப்போவதை அறிந்து கொண்ட அருண், அதை தடுக்கும் முயற்சியாக, “என்னோட கல்யாணத்துக்கு உங்களோட உதவி தேவைப்படாது அண்ணாச்சி. என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ண முடிவெடுத்த பிறகு உங்களுக்கு சொல்லிவிடுறோம், அப்போ வாங்க” என்று உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பி கைகளை குவித்து சொல்ல,
“முடிஞ்ச விஷயத்தை திரும்பத் திரும்ப பேசாதீங்க ம்மா” என்று சொல்லிய அருண், “அப்பா, நான் நம்ம சிவரஞ்சனியை கல்யாணம் பண்ண ஆசைப்படுறேன்” என்றான் தெளிவாக.
“யாரு?… அந்த நர்ஸா? விளங்கிரும்… ஏற்கனவே அவ அக்காவால இந்த வீடே கிடந்து ஆட்டம் காணுது. இதுல இவளும் வந்தா, வீடு உருப்பட்டாப்புல தான்” முகத்தை சுளித்தபடி எரிச்சலில் கூறினார் ரத்னா…