அம்மாவின் அலட்சியமான பேச்சில், முகம் சுழித்த அருண், “என்னைக்கு இருந்தாலும் சிவா தான் உங்க மருமகங்குறதை ஞாபகம் வச்சிட்டு பேசுங்க ம்மா” என்றான் கோபத்தோடு.
“ஊரு உலகத்துல வேற பொண்ணே கிடைக்கலையா டா உனக்கு? சொந்த பிள்ளையை சுமக்க மாட்டேன்னு ஒத்தகால்ல நின்னவளோட தங்கச்சியை கட்டுவேன்னு சொல்லுற? இவளும் அக்காகாரியை மாதிரியே இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?” என்றார் ரத்னா, அருணை மிஞ்சிய கோபத்தோடு.
தன் மகனை, போட்ட சட்டையை கழற்றச் சொல்லிய அன்றே, சந்த்ரிகாவை பிடிக்காமல் போயிருந்த ரத்னாவுக்கு, சந்த்ரியின் சமீபத்திய செயல் அவளை மட்டம் தட்டிப் பேசுவதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது.
அம்மாவின் பேச்சால் முகம் கசங்கி போய் நிற்கும் பெரிய அன்னை இராஜேஸ்வரியின் முன்னால், “அக்காவை வைத்து தங்கையை எடை போடாதீங்க” என்றோ, “ஒரே கையில் இருக்கும் ஐந்து விரல்களும் எப்படி ஒன்று போல இல்லையோ, அப்படித்தான் அக்காவைப் போலவே தங்கை இருக்க வேண்டும் என்று அவசியமே கிடையாது” என்றோ சொல்லி அன்னையை சமாதானப்படுத்தி விட முடியவில்லை அருணால்.
பொதுவாக இப்படிபட்ட பேச்சுகள் வந்தால், ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு பார்க்காதீர்கள் என்று சொல்லுவது சகஜம் தானே. ஆனால், ‘அப்படி, தான் பேசுவது கூட, பெரிய அன்னையை காயப்படுத்தி விடக்கூடாது’ என்று எண்ணினான் அருண்.
அதுவுமில்லாமல், “உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், நான் சிவரஞ்சனியைத் தான் கல்யாணம் செய்வேன்” என்று அவனால் சொல்லிவிட முடியும். ஆனால் திருமணத்திற்கு பின் சிவரஞ்சனி இங்கே, இந்த வீட்டில் தானே வாழ்ந்தாக வேண்டும்.
அப்போது, வேண்டாத மருமகள் கைபட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்பது போல ரத்னா நடந்து கொண்டால், அது சிவரஞ்சனிக்கு தானே கஷ்டம். அதனால், அவசரப்படாமல் நிதானமாக காயை நகர்த்த முடிவு செய்தான் அருண்.
அம்மாவின் இரு கைகளையும் பற்றி பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்த்தியவன், “எனக்கு சிவாவை ரொம்ப பிடிச்சிருக்கு ம்மா. கல்யாணம்னு ஒண்ணு பண்ணினா, அவளைத் தான் பண்ணுவேன். அதுக்காக, உங்க சம்மதம் இல்லாமலும் எங்க கல்யாணம் நடக்காது. ப்ளீஸ்… எனக்காக சரின்னு செல்லுங்க ம்மா.”
தாயின் பற்றிய கைகளை விடாமல், உட்கார்ந்திருந்தவர் முன் லேசாக குனிந்து நின்றபடி கெஞ்சல் குரலில் அருண் கேட்க, அப்படியே குளிர்ந்து விட்டது ரத்னாவிற்கு. ஆனாலும் உடனே இறங்கி வந்தால் அவர் ரத்னா அல்லவே!
மகனின் வார்த்தைகளில் அங்கே நின்றிருந்தவர்களை கெத்தாக சுற்றி வந்த ரத்னாவின் பார்வை, “பார்… எனது விருப்பத்திற்கு தான் என்மகன் முதலில் மரியாதை தருகிறான்” என்பது போல திமிராக பார்த்து வைத்தது.
சிவரஞ்சனியை திருமணம் செய்ய விரும்புவதாக அருண் சொல்லவும், அங்கிருந்த மற்றவர்களுக்கும் முதலில் லேசான அதிர்ச்சி தான். ஆனாலும் அவர்கள் அறிந்தவரை சிவரஞ்சனி அருமையான பெண். அதைவிட தங்கள் வீட்டு பையனுக்கு அவள் மீது விருப்பம் இருக்கிறது.
எனவே மறுத்து சொல்ல காரணம் ஏதுமின்றி, அன்னையை சமாதானபடுத்த முயலும் தனயனை அமைதியாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.
“ஏன்டா?…, அப்படி அந்த பொண்ணுகிட்ட என்ன இருக்குன்னு, அவளையே கல்யாணம் பண்ணனும்னு சொல்லுற? உம் மாமன் பொண்ணு மாலதி, இவளைவிட ஆயிரம் மடங்கு உசத்தி தெரியுமா?”
மறுபடியும் அண்ணன் மகள் புராணம் பாடத்தொடங்கிய ரத்னா, மகனின் முகத்திலிருந்த கண்டனப் பார்வையைக் கண்டதும், “எனக்கு மனமே இல்லைன்னா கூட, உனக்காக சம்மதிக்குறேன் அருண். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் அவ வேலைக்கு போக கூடாது” என்றார் கட்டளையாக.
‘இது என்னடா புதுக்கதை?’ என்பது போல அன்னையைப் பார்த்த அருண், “என்னம்மா சொல்லுறீங்க?” என்றான் அலுத்துக் கொண்ட குரலில்.
“ஆமா… வேலைக்கு போற ஆசையில தானே, அவ அக்காகாரி பிள்ளை வேண்டாம்னு சொன்னா. அது போல இவளும் சொல்லிடக் கூடாதுல்ல. அதுக்கு தான் முன்கூட்டியே வேலைக்கு போகக் கூடாதுன்னு நான் சொல்லுறேன். இந்த கண்டிஷனுக்கு அந்த பொண்ணு சம்மதிச்சா, நானும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்” என்றார் பெரிய மனது போல.
“ரத்னா, உனக்கு என்ன தேவையோ, அதைப் பற்றி மட்டும் பேசு. எதுக்கு தேவையில்லாமல் எல்லாரையும் பேச்சுல இழுக்குற?” மனைவி அடிக்கடி சந்த்ரிகாவின் செயலை தன் பேச்சில் விமர்சிக்கவே, பொறுக்கமுடியாமல் ரத்னாவின் கணவர் தான் அவரை அதட்டியது.
“எதுங்க தேவையில்லாதது? தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலைன்னு, பெரியவங்க போக்கத்து போய் சொல்லி வச்சிருக்காங்களா?”
“என்னைப் பொருத்தவரை, ஒவ்வொரு அக்காவும் அம்மாவுக்கு சமம். அதனாலத்தான் அக்காவைப் போல இந்த பொண்ணும் இருக்குமோன்னு எனக்கு பயமா இருக்கு. என்னோட பயம் உங்களுக்கு தேவையில்லாததா தெரியுதா?”
கணவரிடம் சண்டைக்கு தயாரான ரத்னா, அங்கு நின்று நடப்பவற்றை அமைதியாக பார்த்துக் கொண்டு நின்றிருந்த நாயகியிடம், “நான் சொல்லுறது சரிதானே அக்கா?” என்று வேண்டுமென்றே கேட்டு வைக்க, என்ன சொல்லுவார் நாயகி.
சந்த்ரிகாவின் செயலில் அவருக்கும் தான் வருத்தம் இருந்தது. அதற்காக, இப்போது நல்லபடியாக குழந்தையை, அதுவும் இரட்டை குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கும் பெண்ணை ஓயாது விமர்சிப்பதுவும், அவளைக் கொண்டு அவளின் தங்கையின் குணத்தை எடைபோடுவதுமாக, ரத்னாவின் பேச்சு அவருக்குமே ரசிக்கவில்லை.
அதற்காக அவர் அதை வாய்விட்டு ரத்னாவிடம் சொல்லிவிடவும் முடியாதே! அப்படி சொல்லிவிட்டால், “என்மகன் திருமண விஷயத்தில் எனக்கு பேசக்கூட உரிமையில்லையா?” என்று அடுத்த பிரச்சினையை ரத்னா தொடங்குவார் என்று அனுபவசாலியாக தெரிந்து வைத்திருந்ததால் தானே, அவர் அமைதியாக நிற்கிறார்.
ஆனால், இப்போது வேண்டுமென்றே ரத்னா தன்னை பேச்சுக்குள் இழுத்தபிறகு வாயை மூடிக்கொண்டு போக மனமின்றி, தான் நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டார் நாயகி.
“உங்களுக்கு என்னைக்கு தான் என் பேச்சு நியாயமா தெரிஞ்சிருக்கு க்கா? அதனால உங்க பதில் இப்படி தான் இருக்கும்னு நான் நினைச்சேன்.”
நாயகியிடம் எடுத்தெறிந்தார் போல் பேசிய அன்னையை, எப்படி கையாள்வது என்று தெரியாமல் தந்தையை ஆயாசமாக பார்த்தான் அருண்.
தன் கண்களை மூடித் திறந்து, “அமைதியாக இரு” என்று மகனை ஆற்றுப்படுத்திய தந்தை, “கல்யாண விஷயத்துல, நம்ம புள்ளையோட ஆசையை நிறைவேற்றி வைக்கலாம்னு நான் முடிவெடுத்துட்டேன். நீ என்ன சொல்லுற ரத்னா?” என்றார்.
“நானும் தான் என் முடிவை ஏற்கனவே சொல்லிட்டனே?”
“அப்படி கன்டிஷன் எல்லாம் போட்டு கல்யாணம் பேச முடியாது ரத்னா.”
“அப்போ, அப்பாவும் பிள்ளையும் கண்துடைப்புக்காக எங்கிட்ட ஏன் அனுமதி கேட்டுகிட்டு நிக்குறீங்க? உங்க இஷ்டம் போல செய்ய வேண்டியது தானே?” வெடுக்கென்று சொல்லியபடி அங்கிருந்து எழுந்த ரத்னா,
“என் அண்ணன்மக தான் எனக்கு மருமகளா வரணும்னு எவ்வளவோ ஆசைப்பட்டேன். அதுவே இல்லைன்னு ஆன பிறகு எந்த மகராசி வந்தா எனக்கென்ன? என்ன… என் சொல்பேச்சைக் கேட்டு மாலதியைக் கட்டிகிட்டா, உங்க புள்ள வாழ்க்கை தான் நல்லா இருக்கும். இல்லைன்னா நம்ம சசியை மாதிரி அங்கயும் இங்கயுமா சிங்கிதான் அடிக்கணும் இவனும்” என்று சத்தமாக முணுமுணுத்தபடியே சென்றார்.
அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்காமல் ரத்னா இப்படி பேசுவது அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பழகிப்போன ஒன்று தான்.
ஆனால் இன்று, தன் மகனின் வாழ்க்கை ரத்னாவிற்கு பேச்சுப் பொருளாகிப் போனதே என்ற எண்ணத்தில், இராஜேஸ்வரியின் முகம் கலங்கிப் போனது.
அன்று மாலை வரைக்கும் கூட இராஜேஸ்வரியின் மனநிலை மாறவில்லை என்பதை அவரது தெளிவில்லாத முகம் நாயகிக்கு காட்ட, “இதெல்லாம் நமக்கு புதுசா என்ன? விட்டுத் தள்ளு இராஜி” என்றார் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியாக.
“இல்லக்கா… ஒரு பலூன் கூட, அளவுக்கு மீறி காத்தை ஊதினா வெடிச்சிடுது. இப்பிடி ரத்னா தேவையில்லாமல் பேசிகிட்டே இருந்தா, நானும் ஒருநாள் வெடிச்சிடுவேன். அப்புறம் என்ன நடந்தாலும் அதுக்கு நான் பொறுப்பில்லை” என்றார் இராஜேஸ்வரி கோபமாக.
‘தான், பார்த்துப் பார்த்து கட்டிய குடும்பம் என்னும் கூடு, தன் கண் முன்னாலேயே சிதைந்து போகுமோ?’ என்ற பயம் வாழ்வில் முதன்முறையாக வந்தது நாயகிக்கு.
**************************
சந்த்ரிகாவை ஊருக்கு அழைத்து வந்து முழுதாக இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. சந்த்ரியின் ஐந்து மாத வயிறு, இரட்டை பிள்ளைகள் என்பதால் கொஞ்சம் பெரியதாகவே தெரிந்தது.
எப்படி எல்லாம் விடுமுறை எடுக்க முடியுமோ, அப்படி எல்லாம் விடுமுறை எடுத்துக் கொண்டு, கண்ணின் மணிபோல மகளைப் பார்த்து கொண்டார் ராதா.
கண்டிப்பாக அவர் வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற நாட்களில், சிவரஞ்சனி விடுமுறை எடுத்துக் கொண்டு அக்காவைப் பார்த்துக் கொண்டாள்.
சலங்கை இல்லாமலேயே தைதை என்று ஆடும் சந்த்ரிக்கு, இப்போது கர்ப்பம் என்னும் சலங்கை மாட்டியிருக்க, எப்போதையும் விட இப்போது நன்றாகவே ஆடினாள். கூடவே, தங்கையையும் தாயையும் ஆட்டி வைத்தாள்.
அடிமை சாசனம் ஒன்று தான் இருவரும் அவளுக்கு எழுதி கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு சந்த்ரிகாவின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது வீட்டில்.
இப்போது ஓரளவுக்கு கர்ப்பகால தொந்தரவுகள் குறைந்திருந்தன அவளுக்கு. அதனால் இந்த மாத பரிசோதனைக்கு பிறகு மகளை கணவனிடம் கொண்டு விட்டு விட்டு வரலாம் என்ற எண்ணம் ராதாவுக்கு.
அதற்கு முக்கிய காரணம், ‘மகளுக்கும் அவள் கணவனுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு இடைவெளி தோன்றிவிட்டதோ?’ என்ற பயம் ஏற்பட்டிருந்தது அந்த தாய்க்கு.
இந்த இரண்டுமாத காலத்தில், இரண்டு தடவை சசிதரன் மனைவியை வந்து பார்த்திருந்தான். தினமும் ஒருமுறையாவது மனைவியை அழைத்து பேசியிருந்தான். கூடுதலாக ராதாவையும் அடிக்கடி ஃபோனில் அழைத்து மனைவியின் உடல்நிலையைக் குறித்து விசாரித்திருக்கிறான்.
இருந்தாலும் கணவன் மனைவிக்கிடையே இருக்கும் ஒரு அன்யோன்யம் இருவருக்குள்ளும் குறைந்தது போல தோன்றியது ராதாவுக்கு.
திருமணமான உடனேயே குழந்தை, அதைக் கொண்டு ஒரு மனஸ்தாபம், சந்த்ரியின் உடல்நிலையைக் கொண்டு தம்பதியினரிடையே ஒரு பிரிவு என்ற ரீதியில், மகளின் திருமண வாழ்வின் துவக்கம் அமைந்துவிட, இனிவரும் நாட்களில் தம்பதியர் சேர்ந்திருந்தாலாவது இருவரிடையே இருக்கும் பிணக்கு மாறி, ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடாதா என்று ஏங்கினார் ராதா.
அதனாலேயே இந்த மாத பரிசோதனைக்கு பிறகு, மகளை கணவனிடம் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று எண்ணினார்.
மகளிடம் அதைப்பற்றி பேசினால், “இப்போ வேலைக்கும் போகமுடியாது. அங்க போய் சும்மாவே இருக்குறதுக்கு பதிலா, நான் இங்கேயே இருந்துட்டு போறனே” என்று முடித்து விட்டாள்.
சந்த்ரிகாவுக்குமே கணவன் தன்னிடம் பழகும் விதத்தில் வித்தியாசம் தெரிந்திருந்தது. அவனின் வருகையும், பேச்சும் தனக்கானதல்ல, அவன் குழந்தைகளுக்கானது என்றும் புரிந்து கொள்ள முடிந்தது.
அதனால், தானாக அவனைத் தேடிச் செல்லக்கூடாது என்ற பிடிவாதம் மனதில் எழ, அவளின் கனவு நகரத்தில் இருக்கும் கணவனிடம் செல்ல மறுத்தாள்.
இவர்கள் அவதானித்தது போல சசிதரனும், மனைவியிடம் ஒரு ஒதுக்கத்தை காண்பித்தது என்னவோ உண்மைதான்.