எவ்வளவு தான் அவன் மனைவியிடம் சாதாரணமாக பேசி பழக நினைத்தாலும், அவள் தன் வயிற்றில் அடித்துக் கொண்டு, குழந்தையை பேசிய வார்த்தைகளே அவன் ஞாபகத்திற்கு வர, தான் நினைப்பதை செயல்படுத்த முடியாமல் மனதளவில் மனைவியிடமிருந்து விலகித் தான் போகிறான்.
சிந்திய வார்த்தைகளை அள்ளமுடியாது, அதனால் நிதானமாக பேசவேண்டுமென்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் பெரியவர்கள்.
மருத்துவமனைக்கு சென்றால், சந்த்ரிகாவை பரிசோதித்த மருத்துவர், அவளின் கர்பப்பை இரண்டு குழந்தைகளை தாங்கும் அளவிற்கு பலமாக இல்லாத காரணத்தால், கர்ப்பப்பையின் வாசல் எந்நேரம் வேண்டுமென்றாலும் திறந்துவிடும் வாய்ப்பு இருப்பதாகவும், அவளை முழுநேர ஓய்வில் வைத்துக் கொள்வது அவசியம் என்றும், ஏதாவது வித்தியாசமாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்துவிட வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார்.
கணவனிடம் மகளை அனுப்பி வைத்துவிட வேண்டும் என்ற ஆவல் மாறி, மகள் நல்லபடியாக குழந்தைகளை பெற்றெடுத்து கரையேறிவிட வேண்டும் என்ற தவிப்பு இப்போது ராதாவின் மனதில் குடிகொண்டது.
உடமைப்பட்டவரிடம் இந்த விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், மருமகனுக்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டார் ராதா.
“அப்படி எதுவும் நடக்காது, தைரியமா இருங்க அத்த” என்று ஆறுதல் சொல்லிய சசிதரன், “டெலிவரி வரைக்கும் அவ அங்கயே இருக்கட்டும்” என்று பிரச்சினைக்கு தீர்வும் சொன்னான்.
அதையேத் தான் விஷயம் தெரிந்ததும் மருமகளைப் பார்க்க வந்திருந்த மொத்த குடும்பமும் சொன்னது. ரத்னாவும் அவர்களோடு வந்திருந்தார். அருண் கடையில் இருந்து கொண்டு தந்தையையும் பெரியப்பாவையும் வீட்டு பெண்களோடு அனுப்பி இருந்தான்.
வழக்கமான நலன் விசாரிப்பு, பேச்சுகள் எல்லாம் முடிந்ததும், அருண் சிவரஞ்சனி கல்யாணப் பேச்சை மெதுவாக எடுத்தார் நாயகி.
“நீங்களே பாத்துக்கோங்க, நான் இதில் எல்லாம் தலையிட மாட்டேன்” என்று மனைவி சொல்லிவிடவே, அண்ணியிடம் பேச்சை ஆரம்பிக்க சொல்லியிருந்தார் சுப்பிரமணியன்.
“இந்த சூழ்நிலையில் கேட்குறது சரியான்னு தெரியலை, ஆனாலும் விஷயத்தை உங்க காதுல போட்டு வைப்போமேன்னு தான் சொல்லுறேன் ராதா” என்ற பீடிகையோடு பேச்சைத் தொடங்கினார் நாயகி.
“என்ன விஷயம் அண்ணி? சும்மா கேளுங்க” இயல்பாக தோன்றும் ஆர்வம் மேலிட கேட்டார் ராதா.
“இல்ல… நம்ம அருண் சிவரஞ்சனியை பிடிச்சிருக்குன்னு சொல்லுறான். அவன் எப்படிபட்ட பையன்னு உங்களுக்கு நல்லாவேத் தெரியும். அதனால அருணுக்கு நம்ம சிவரஞ்சனியை கல்யாணம் பண்ணி தர உங்களுக்கு சம்மதமா ராதா?”
‘சிவரஞ்சனியும் தன்னை காதலிக்கிறாள் என்று சொன்னால், அவளை வார்த்தைகளாலேயே வதைத்து விடுவார் தன் அன்னை’ என்று தெரிந்தே தங்களுக்குள் காதல் இருப்பதை மறைத்து தனக்கு பிடித்திருக்கிறது என்று மட்டும் சொல்லியிருந்தான் அருண்.
நாயகியின் வார்த்தைகளைக் கேட்டதும் ராதா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அருணைப் போல ஒருவனை யாருக்குத் தான் பிடிக்காது?
வெளிப்படையாக தன் சந்தோஷத்தை காட்டிய ராதா, “சிவாகிட்ட ஒருவார்த்தை கேட்டுட்டு, உங்களுக்கு பதில் சொல்லுறேன் அண்ணி” என்றிருந்தார்.
மற்றவர்களுக்கும் அது சரி என்று படவே, சந்த்ரிகாவிற்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி விடைபெற்று சென்றிருந்தனர்.
அவர்கள் கிளம்பி சென்றதும், “ஏம்மா, ஒரு வேலை பாக்குற, நல்ல பையனா உங்களால உங்க சின்ன மகளுக்கு பார்க்க முடியாதா? எதுக்கு உங்களுக்கு சம்மதம் ங்குற மாதிரியே பதிலை சொல்லிவிட்டீங்க?” என்று குதித்தாள் சந்த்ரிகா.
அன்று, ஏட்டிக்கு போட்டியாக தன்னிடம் பேசிய அருணை, சந்த்ரிகாவுக்கு பிடிக்கவேயில்லை. கல்யாண விஷயத்தில் அவன் நினைத்தது நிறைவேறி விடக்கூடாது என்ற எண்ணத்தில் அன்னையை தூண்டிவிட்டாள்.
“உன்னோட குணத்தைப் பற்றி தெரிஞ்ச பிறகும், அவங்க பையனுக்கு பிடிச்சிருக்கு ங்குற ஒரே காரணத்துக்காக, மறுபடியும் தைரியமா எங்கிட்ட பொண்ணு கேட்டு வந்திருக்காங்களே… அவங்க நல்ல மனசுக்கே நான் சம்மதம் சொல்லலாம். இதெல்லாம் கண்டிப்பா உனக்கு புரியாது சந்த்ரி. அதனால பேசாம இரு.”
கண்டிப்பான குரலில் ராதா சொல்ல, அப்போது அமைதியாக இருந்துவிட்டு, வேலை விட்டு தங்கை வந்ததும் அவளிடம் ஆரம்பித்தாள் சந்த்ரிகா.
அருணின் குடும்பம் தன் வீட்டுக்கு வந்தது, தன்னைப் பெண் கேட்டது என்று எல்லாம் அருண் மூலமாகவே தெரிந்திருந்தது சிவரஞ்சனிக்கு.
ஃபோன் விடு தூது மூலம் தகவலைச் சொல்லியிருந்தவன், “மேடம் சம்மதிப்பீங்களோ, மாட்டீங்களோன்னு எனக்கு பக்குபக்குன்னு அடிச்சிக்கிது” என்று சொல்லி சிரிக்கவும் செய்திருந்தான்.
விஷயத்தை சொல்லவும், “எனக்கு சம்மதம் ம்மா” என்று சொன்ன மகளைப் பார்த்து ஆச்சர்யமாகத் தான் இருந்தது ராதாவுக்கு.
“ஏய்… அவங்க தான் சொல்லுறாங்கன்னா, யோசிக்காமல் அந்த பட்டிக்காட்டானை கட்டிக்கிறேன்னு சம்மதம் சொல்லுறியே… உனக்கு அறிவில்ல?” என்று கத்தியிருந்தாள் சந்த்ரிகா.
“பட்டிக்காடுன்னு எதைவச்சு க்கா சொல்லுற நீ? இருக்குற ஊரை வச்சா? படிப்பை வச்சா? தொழிலை வச்சா? இல்ல… பழக்கவழக்கத்தை வச்சா? எதைவச்சி சொல்லுறன்னு எனக்கு சொல்லு?”
பெரும்பாலும் தன் வார்த்தைகளுக்கு எதிர்வார்த்தை பேசாமல் பணிந்தே செல்லும் தங்கை, இன்று தன்னிடம் நிமிர்ந்து நின்று கேள்வி கேட்கவும் ஆச்சர்யத்தில் நெற்றி சுருங்கியது சந்த்ரிகாவுக்கு.
இருந்தாலும், “என்னடி கேள்வியெல்லாம் பலமா வருது? என்ன விஷயம்?” என்றாள் கோபத்தோடு.
“இல்ல… ஊரை வச்சு நீ அருண் மச்சானை பட்டிக்காடுன்னு சொல்லியிருந்தா, நீயும் நானுமே பட்டிக்காடு தான். படிப்பு… எனக்கு தெரிஞ்சு அனுபவப் பாடம் அவங்களுக்கு அதிகம். தொழிலை வச்சி சொன்னியான்னு யோசிச்சு பாத்தா, அவங்க யார்கிட்டயும் கைகட்டி நின்னு வேலை பாக்காம சுயமா சம்பாதிக்கிறாங்க. இப்படி எந்த கேட்டகிரில பாத்தாலும் நீ சொல்லுற பட்டிக்காடுங்குற வார்த்தைக்குள்ள அடங்க மாட்டேங்குறாங்களே இந்த அருண் மச்சான்.”
போலியாக சலித்துக் கொண்ட சிவரஞ்சனி, “ஓஹ்… ஒருவேளை, இந்த பழக்கவழக்கத்தை வச்சி அவங்களை நீ பட்டிக்காடுன்னு சொல்லுறியோ என்னவோ?!” என்று அதிகப்படியாக அதிசயித்த சிவரஞ்சனி,
“உண்மையிலேயே, இந்த நாகரீகம் ங்குற பெயர்ல கண்டபடி கூத்தடிக்காமல் பட்டிக்காட்டானா இருக்குற அருண் மச்சானைத் தான், எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குது க்கா” என்றாள் கூலாக. குரலில் பெருமை பொங்கி வழிந்தது.
ஆரம்பத்தில் மகள்கள் இருவரும் வழக்கடிக்க ஆரம்பிக்கவும், அவர்களை சமாதானப்படுத்த நினைத்த ராதா கூட, சின்னமகளின் பேச்சில் கட்டுண்டு போனவராக அவளையே பார்த்தபடி நின்றிருந்தார்.
இவ்வளவு தெளிவாக பேசும் தங்கையிடம் இதற்கு மேல் என்ன பேசிவிட முடியும் சந்த்ரிகாவால். இருந்தாலும் தான் தோல்வியடைந்து விட்டேன் என்பதை காட்டிக் கொள்ள மனமின்றி, “அவரவர் வாழ்க்கை அவரவர் இஷ்டம். இதுல இதுக்கு மேல நான் சொல்லுறதுக்கு ஒண்ணுமில்ல” என்று அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
சந்த்ரிகா அங்கிருந்து நகரவும் அம்மாவின் கைகளைப் பற்றி கொண்ட சிவரஞ்சனி, “நானும் அருண் மச்சானும் ஒருத்தொருக்கொருத்தர் விரும்புறோம் ம்மா. ஆனா, எதுக்காகவோ அவங்க வீட்டுல அதை மறைச்சிருக்காங்க. எனக்கு உங்க கிட்ட மறைக்க மனம் வரலை, அதான் உண்மையை சொல்லிட்டேன்” என்று சொல்ல, அருண் எதற்காக மறைத்திருப்பான் என்று கொஞ்சம் புரியத்தான் செய்தது ராதாவுக்கு.
அவராலுமே, இத்தனை நாட்களில் ரத்னாவின் குணத்தை ஓரளவிற்கு படிக்க முடிந்திருந்தது. அருணை ஒரு நல்ல வரனாக பார்க்க முடிந்த ராதாவுக்கு, பானகத் துரும்பாக ரத்னாவின் குணம் இருந்ததென்னவோ உண்மை.
ஆனால், அது எல்லாவற்றையும் தாண்டி மகளும் அருணும் அவர்கள் வாழ்க்கையை ஜெயித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை, அந்த நொடியில் ஏற்பட்டது அந்த அன்னைக்கு.
“அது… ஒரு பட்டிக்காடு, தன்னோட பட்டிக்காட்டு ஜோடியைக் கூப்பிற பாஷை ம்மா” கிளுக்கிச் சிரித்தபடியே ஓடும் மகளை புன்னகையோடு பார்த்த ராதா, மகளின் சம்மதத்தை உடனேயே அருண் வீட்டாரிடம் பகிர்ந்து கொண்டார்.
சந்த்ரிகாவின் பேறுகாலத்திற்கு பிறகு திருமணம் வைத்துக் கொள்ளலாமென்றும், இப்போது குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து ஒப்புதாம்பூலம் மட்டும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து, அவ்வாறே நடத்தியும் கொண்டார்கள்.
ஆரம்பத்திலேயே மைத்துனனின் மனதைக் கண்டு கொண்ட கயல்விழியின் கணவர் ராகவ், “மச்சான்.. இது அரேன்ஜ்டு மேரேஜ்?… அதை நாங்க நம்பணும்?…” என்று அருணை கலாய்த்ததெல்லாம் தனிக்கதை.
காலச்சக்கரம் சுழல, சந்த்ரிகாவின் வயிற்றுக் குழந்தைகளும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வந்தார்கள். அவர்களின் தகப்பனும் கடமை தவறாதவனாக எப்போதும் போல மனைவியை வந்து பார்ப்பதுவும் பேசுவதுமாக நாட்களை கடத்தி கொண்டிருந்தான்.
ஆரம்பத்தில் குழந்தைகள் மீது வெறுப்பாக இருந்தாலும், குழந்தைகளின் அசைவை உணர ஆரம்பித்த நாட்களிலிருந்து, ஒரு தாயாக சந்த்ரிகாவால் குழந்தைகளை வெறுக்க முடியவில்லை.
சில சமயங்களில், “டேய்… செல்லங்களா, அம்மாவுக்கு கஷ்டம் குடுக்காம வெளியே வந்துடுங்க டா, நான் வேலைக்கு போகணும்” என்று வயிற்றுப் பிள்ளைகளோடு பேசக் கூட செய்வாள்.
மாதாந்திர பரிசோதனைகளுக்காக மருத்துவமனை செல்லும் போது, குழந்தை வேண்டி சிகிச்சைக்காக வந்திருக்கும் தம்பதியரைக் காணும் போதெல்லாம், தான் எதிலிருந்தோ தப்பித்துக் கொண்டது போல இப்போதெல்லாம் தோன்றுகிறது அவளுக்கு.
முழுநேரமும் ஓய்வில் இருந்தவளின் மனது, பிறக்கப் போவது இரட்டை குழந்தைகள் என்பதால் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள் என்று யாராலும் தன்னிடம் சொல்லமுடியாது என்று கணக்கிட்டு அகமகிழ்ந்து போனது.
இது எல்லாவற்றிலும் உச்சபட்சமாக, வேலைக்கு சேர்ந்த பிறகு, இன்னொரு டெலிவரிக்காக தான் விடுமுறை எடுக்க வேண்டி வராது என்றெண்ணி சந்த்ரி சந்தோஷப்பட்டுக் கொள்வது தான் வேடிக்கை.
அந்த இரு குடும்பமும் பிறக்கப் போகும் குழந்தைகளை வரவேற்க ஆவலோடு காத்திருக்க, அவர்களை ஏமாற்றாமல், தென்காசியின் பிரபல மகப்பேறு மருத்துவமனையில் சசிதரன், சந்த்ரிகா தம்பதியரின் இரட்டை மகவுகள், ஆண் ஒன்று, பெண் ஒன்று எனப் பிறந்தார்கள்.
கொஞ்சம் சிக்கலான பிரசவம், அதனால், நாங்கள் சொல்லும் நாளில் மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆகிவிட வேண்டும் என்று மருத்துவர்கள் முன்கூட்டியே சொல்லியிருக்க, அப்படியே செய்திருந்தார்கள்.
சசிதரனுக்கும், மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பறந்தது. தன் மகவுகள் இந்த பூ உலகில் வந்து தடம் பதிக்கும் முன், மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தான்.
நார்மல் டெலிவரி என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் லேபர் வார்டிலிருந்து, சாதாரண அறைக்கு மாற்றப்பட்டாள் சந்த்ரிகா.
மனைவியையும் மக்களையும் பார்ப்பதற்காக அறைக்குள் வந்தவனின் கைகளில், அவன் குழந்தைகளை அள்ளி ராதா கொடுக்க, உணர்ச்சி வசப்பட்டவன் மென்மையாக தன் சின்ன உயிர்களுக்கு முத்தம் வைத்தான். கண்கள் தன்னைப்போல மனைவியைப் பார்த்தது.
அவளும் இவர்களைத் தான் விழிமலர்த்தி பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த கண்களின் தெரிந்த சோர்வில், சசிதரனுக்குள் ஏதோ ஒன்று உடைய, குழந்தைகளை ராதாவின் கையில் ஒப்படைத்தவன், நெகிழ்ந்து போனவனாக மனைவியின் முன்நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்தான்…