“அபிக்குட்டி… யார் வந்துருக்கா பாருங்க… அப்பா… அபியோட அப்பா வந்துருக்காங்க…”
தன் இரட்டை குழந்தைகளுக்கருகே கட்டிலில் அமர்ந்து, இருவரின் தலையையும் மென்மையாக தடவிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து சந்த்ரிகா சொல்ல,
அபி என்ற அபிநந்தனின் அருகில் படுத்திருந்த அவர்கள் பெண்ணரசி ‘நந்தனா’ தன் குட்டிக் கைகளையும், கால்களையும் உதைத்துக் கொண்டு மெல்லியக் குரலில் சிணுங்கினாள்.
“அச்சோ… அப்பா வந்துருக்காங்கன்னு குட்டிக்கிட்டயும், அம்மா சொல்லலைன்னு கோபம் வந்துடிச்சா?” என்றபடி மகளை அள்ளியெடுத்து தன் மடியில் வைத்துக் கொண்ட சசிதரன், “இப்போ பாப்பாவுக்கு கோபம் போச்சா?” என்று கேட்க, என்ன புரிந்ததோ தெரியாது, சிரித்தது அந்த முல்லை.
குழந்தைகள் பிறந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தன. ‘அபி நந்தன்’ என்று ஆண் குழந்தைக்கும், ‘நந்தனா’ என்று பெண் குழந்தைக்கும் பெயரிட்டிருந்தார்கள். இன்னமும் சந்த்ரிகா அல்லிக்குளத்தில், தன் தாய் வீட்டில் தான் இருக்கிறாள்.
இந்த மூன்று மாதங்களில் மனைவியைப் பார்க்கும் போதெல்லாம் ‘குழந்தைகளை மடிதாங்க மறுத்த தன் மனைவி சந்த்ரிகாவா இது?!’ என்று ஆச்சர்யமாகிப் போனான் சசிதரன்.
அந்த அளவிற்கு ஒரு தாயாக தனக்குள் ஏகப்பட்ட மாற்றங்களை சுமந்துகொண்டு நிற்கிறாள் சந்த்ரிகா. ஆனால் சந்த்ரிகாவாக, அவளுடைய பழைய குணங்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது என்று சசிதரனுக்கு புரியாமல் இல்லை.
சசிதரனும் முன்போல் அல்லாமல், கிடைக்கும் பொழுதுகளில் எல்லாம் பெங்களூருவுக்கும் அல்லிகுளத்திற்கும் இடையே பயணம் செய்து கொண்டிருக்கிறான். அந்த அளவிற்கு அவனை கட்டியிழுக்கிறார்கள் அவன் குழந்தைகள்.
‘மன்னித்தல் என்பது ஒரு விசித்திரமான மருந்து. அதை அடுத்தவர்களுக்கு நாம் கொடுக்கும் போது, நம் மனதில் இருக்கும் காயங்களும் ஆறிவிடும்’ என்று, எங்கோ தான் வாசித்த வரிகள் உண்மை என்பதை இடைப்பட்ட இந்த நாட்களில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டான் சசிதரன்.
“சீக்கிரமே ஓடி வந்துடுறோம்னு அப்பாகிட்ட சொல்லுங்க செல்லம்ஸ்” குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தது போல பதில் சொல்லிய சந்த்ரிகா,
“அடுத்த வாரம் நல்ல நாள் பார்த்து கூப்பிட வர்றோம்னு அத்தை சொல்லியிருக்காங்க சசி” என்றாள்.
ஆம்… இராஜேஸ்வரியைத் தான் அத்தை என்று சொல்கிறாள் சந்த்ரிகா.
பேறுகாலத்திற்கு முன் மருமகளைப் பார்க்க வரும் போதெல்லாம், “நீ கவலப்படாத சந்த்ரி. பிள்ளைங்களைப் பாத்துக்க நான் உங்ககூட பெங்களூருக்கு கண்டிப்பா வருவேன். நீ ஆசைப்பட்டபடி வேலைக்கு போலாம்” என்று சொல்லிச் சொல்லியே மருமகளிடம் நெருங்கியிருந்தார் இராஜேஸ்வரி.
குழந்தைகள் பிறந்த பிறகும் கூட, “அத்த… நீங்க சொன்னதுல்ல எந்த மாற்றமும் இல்லயே” என்று இராஜேஸ்வரியிடம் கேட்டு, தன்னுடன் அவர் வருகையை மீண்டும் உறுதிபடுத்தியிருந்தாள் சந்த்ரிகா.
“இன்னும் பத்து நாளுல, பெரியக்கா மகளுக்கு ஃபங்ஷன் வச்சிருக்கு. தாய்மாமன் மனைவியா நீ தான் எல்லாம் முன்ன நின்னு செய்யணும். உன்னால முடியும்ல சந்த்ரி?” சசிதரன் தான் மனைவியிடம் கேட்டது.
நாயகியின் மூத்தமகள் மீனாட்சியின் பெண்குழந்தை, இரண்டு மாதங்களுக்கு முன் பருவமெய்தி இருந்தாள். அவர்கள் வசிப்பது அமெரிக்காவில் என்பதால் ஊருக்கு வரும் போது ஃபங்ஷன் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார்கள்.
இப்போது அங்கே பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால், ஊருக்கு வருகிறது மீனாட்சியின் குடும்பம் . அப்படியே மகளுக்கும் சின்னதாக விழா ஒன்றை எடுத்துவிட்டு, தம்பி அருணின் திருமணத்தையும் முடித்துவிட்டு, அமெரிக்கா திரும்புவதாக இருந்தார்கள்.
‘கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு, மனைவியால் அக்கா வீட்டு விழாவிற்கு வரமுடியுமா?’ என்ற சந்தேகத்தில் தான் சசிதரன் மனைவியிடம் கேட்டது.
ஆனால் அவன் மனமோ, மனைவியின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தது. அந்த எதிர்பார்ப்பையும் மீறி மனைவியிடமிருந்து என்ன பதில் வரும் என்ற யூகமும் அவனுக்கு இருந்தது.
ஏற்கனவே சசிதரனின் அம்மா, ” மீனாட்சி மகளின் சடங்கு, அருண் கல்யாணம் எல்லாம் முடிஞ்ச பிறகு நாம பெங்களூருக்கு போனா போதும்ல சந்த்ரி” என்று மருமகளிடம் கேட்டிருந்தார்.
சந்த்ரிகாவும் ‘குழந்தைகளுக்கு ஆறுமாதம் முடிந்து, தாய்ப்பால் தவிர்த்து பிற உணவுகளை நன்கு பழக்கப்படுத்திய பிறகு வேலைக்கு போனால் போதும்’ என்ற மனநிலையில் இருந்ததால், அவர் சொல்லிய இரண்டு நிகழ்விலும் தனக்கு ஈடுபாடு இல்லாவிட்டாலும் கூட, சரி என்று சம்மதம் சொல்லியிருந்தாள்.
ஆனால் இப்போதோ கணவனின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி, “இந்த பொடிசுங்களை வச்சிட்டு என்னால வர முடியாது சசி” என்றாள்.
திருமணம் என்பது ஒரு ஆணையும் பெண்ணையும் இணைக்கும் நிகழ்வு மட்டுமல்ல. இரு குடும்ப உறவுகளையும் இணைக்கும் பாலம் என்பதை உணராமல், நான், எனது, என்ற சுயநல வட்டத்துக்குள் அடைபட்டு கொண்டு கணவனின் உறவுகளிடம் நட்புக்கரம் நீட்ட மறுத்தாள் சந்த்ரிகா.
‘மீனாட்சி என்ன இவங்க கூடப் பொறந்தவங்களா?’ என்ற அலட்சியமும் இருந்தது அவளிடம்.
‘அதே நேரம் தன் மனதின் எண்ணங்களை கணவனிடம் சொன்னால், இத்தனை நாட்களாக தங்களுக்குள் இருக்கும் இணக்கம் குறைந்துவிடும்’ என்றும் அவளுக்கு தெரியும். அதனால், போலி முகம் காட்டினாள் கணவனுக்கு.
இப்படி கணவனிடம் போலிமுகம் காட்டுவதற்கு பதிலாக, அவன் உறவுகளிடம் கொஞ்சம் நகைமுகம் காட்டினால் போதும் என்று அந்த படித்த முட்டாளுக்கு தெரியவில்லை.
சுருங்கச்சொன்னால் உறவுகளின் பலம் அவளுக்கு தெரியவில்லை.
மனைவியிடமிருந்து இப்படித்தான் ஒரு பதில் வரும் என்ற யூகம் இருந்ததாலோ என்னவோ, சசிதரன் அவளை வற்புறுத்தவில்லை.
“உன்னால முடியலைன்னா பரவாயில்லை சந்த்ரி. உனக்கு பதில் சிவரஞ்சனியை வச்சி எல்லாம் செய்துடலாம்” என்றான் தெளிவாக.
‘என் இடத்தில் தங்கையா?’ பதறிப்போனவள், “என்ன சொல்லுறீங்க சசி?” என்றாள் வேகமாக.
“ஹ்ம்ம்… சிவா, இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் முடிஞ்சு அருணுக்கு மனைவியா வரப்போறவ தானே. அதுக்கான உரிமையை இப்பவே கொடுத்துட்டா போச்சு” என்றான் இலகுவாக.
‘நீங்க கொடுப்பீங்க, ஆனா, நான் அதுக்கு தயாரா இல்லையே’ என்று மனதுக்குள் நினைத்த சந்த்ரிகா,
“ம்ப்ச்… எதுக்கு போட்டு கல்யாணத்துக்கு முன்னாலயே அவளைக் கஷ்டப்படுத்தணும். அதுக்கு நானே வந்துடுவேன் சசி” என்றாள் அலுத்துக் கொண்டது போல.
“வீட்டுல தான் இத்தனை பேர் இருக்காங்களே…, அதுல யாராவது இரண்டு பேர், பிள்ளைங்களை வச்சிக்க மாட்டாங்களா என்ன?”
“வச்சிக்குவாங்க…, நீ வர்றதுக்கு தயாராக இருந்தால் வச்சிக்குவாங்க…” மெல்லிய சிரிப்போடு பதில் சொன்னவனிடம், தன் குட்டு உடைபட்டு விட்டதோ எந்த சந்தேகம் எழுந்தது சந்த்ரிகாவிற்கு.
மேலும் ஐந்து நாட்கள் கழிந்திருந்தன. ஊருக்கு வந்திருந்த மீனாட்சி, குடும்பத்தோடு தன் தம்பி பிள்ளைகளையும், மனைவியையும் வந்து பார்த்து, குழந்தைகளுக்கு செய்யவேண்டிய அத்தனை முறைகளையும் செய்து, சந்த்ரிகாவை முறைப்படி தன் மகளின் சடங்குக்கு அழைக்கவும் செய்தார்.
பின்னர் அருணுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த சிவரஞ்சனியை கட்டிக்கொண்ட மீனாட்சி, அவள் கன்னத்தில் முத்தமிட்டு, அவளையும் தங்கள் வீட்டுக்கு அழைக்க, சந்த்ரிகாவிற்கு தான் எரிந்தது.
‘ஆனால், சபை என்று வரும் போது மூத்தமாமனுக்கும், அவன் மனைவிக்கும் தானே முதலிடம், இளையவர்களுக்கு இரண்டாமிடம் தானே’ என்று அவள் மனம் அமைதிபட்டுக் கொண்டது.
மீனாட்சி மகளின் விழாவிற்கு போவதற்கு முன் சந்த்ரிகாவையும் குழந்தைகளையும் தங்கள் வீட்டுக்கு முறைப்படி அழைத்துக் கொண்டார்கள் சசிதரன் குடும்பத்தினர்.
பகல் பொழுதுகளில் சந்த்ரிகாவுக்கு குழந்தைகளை கவனிப்பதில் இராஜேஸ்வரி உதவி செய்தார் என்றால், இரவுகளில் சசிதரன் உதவி செய்தான்.
மீனாட்சியின் வீட்டுக்கு செல்லும் நாளும் வந்தது. தாய்மாமன்களாக, தன் அக்கா மகளுக்கு சீர் செய்ய, சசிதரனும், அருணும் தங்கள் குடும்பத்தோடு மீனாட்சியின் வீட்டில் வந்து இறங்கினார்கள்.
ராதாவும் சிவரஞ்சனியோடு வந்திருந்தார். எங்கே விட்டால் தங்கையை முன்னிலைப்படுத்தி விடுவார்களோ என்ற பயத்திலேயே எல்லா சடங்குகளையும் ஓடி ஓடி செய்தாள் சந்த்ரிகா.
அதைக்காணும் போது வீட்டிலுள்ள எல்லோருக்குமே ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஆனால் அவள் கணவனுக்கு மட்டுமே தெரியும், அது எதனால் என்று.
‘எப்படியோ, தமக்கை வீட்டு நிகழ்ச்சி எந்த குறையுமின்றி சிறப்பாக நடந்ததே’ என்று சசிதரன் சந்தோஷப்பட்டாலும், ‘எந்த இடத்திலும், எல்லா சூழ்நிலைகளிலும் தானே கொண்டாடப்பட வேண்டும் என்ற மனைவியின் மனநிலை, எல்லா நேரங்களிலும் ஏற்புடையதாக அமையாதே’ என்ற கவலை ஒரு கணவனாக சசிதரனின் மனதில் எழுந்தது.
*****************
தென்காசியின் பிரபலமான அந்த திருமண மண்டபம் ஜனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
சசிதரனுக்கு திருமணம் நடந்த அதே திருமண மண்டபம் தான். ஆனால், அன்று சந்தித்த போக்குவரத்து நெரிசலை விட, இன்று அதிகமான நெரிசலை சந்தித்துக் கொண்டிருந்தது மண்டபத்திற்கு அருகே இருந்த நெடுஞ்சாலை.
அத்தனைக்கும் காரணம் உள்ளே மாப்பிள்ளை கோலத்தில் இருந்த ‘அருண்’ என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு அருணின் நட்புவட்டம் பெரியதாக இருந்தது.
நட்பு என்றால் அவன் வயதையொத்தவர்கள் மட்டும் கிடையாது. அவனோடு வியாபாரத் தொடர்புடையவர்கள், அவன் கிராமம் மட்டுமன்றி சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், ஆண்கள், பெண்கள் என்று எல்லா வகையினரும் அதில் அடங்கிப்போவார்கள்.
அந்த அக்மார்க் நல்லவனை, பழகுவதற்கு எளியவனை, எல்லோருக்கும் பிடித்திருக்க, ஏதோ தங்கள் வீட்டு பிள்ளை ஒருவனுக்கு திருமணம் என்ற மனநிலையில் கூடியிருந்தனர் அனைவரும்.
அந்த அக்மார்க் நல்லவனோ மணமகன் கோலத்தில் மணமேடையில் அமர்ந்து, சற்று நேரத்தில் தன் காதல் மனையாட்டியாகப் போகும் சிவரஞ்சனியின் வரவுக்காக வழிமேல் விழிவைத்து தவமிருந்தான்.
அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், முற்று முழுதாக மணமகளாக மாற்றப்பட்டிருந்த சிவரஞ்சனியை, அழைத்து வந்து அவனருகில் அமரவைத்தார்கள் அவன் சகோதரிகள் இருவரும்.
நீண்ட நாட்களாக இந்த தருணத்திற்காக காத்திருந்த இரு இள உள்ளங்களும் சந்தோஷ மிகுதியில் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.
அதன்பின் கருமமே கண்ணாக ஐயர் சொல்லியபடி திருமணச் சடங்கில் ஈடுபட்டார்கள். சற்றுநேரத்தில் அங்கு கூடியிருந்த அத்தனை நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதங்களையும் தாங்கிக்கொண்டு வந்த மங்கலநாணை, அருணின் அப்பா மகனின் கையில் எடுத்துக் கொடுக்க, அதை சிவரஞ்சனியின் கழுத்தில் அணிவித்து, அவளை தன்னில் சரிபாதி ஆக்கிக்கொண்டான் அருண்.
குங்குமத்தை எடுத்து சிவரஞ்சனியின் நெற்றிவகிட்டிலும் திருமாங்கல்யத்திலும் வைத்துவிடுமாறு அருணிடம் ஐயர் சொல்ல, தன் பெருவிரலையும் நடுவிரலையும் சேர்த்து குங்குமத்தை அள்ளியவன், ஐயர் சொல்லியது போலச் செய்து, அவர் சொல்லாத ஒன்றையும் செய்தான்.
ம்ம்… தன்னிரு கைகளால் மனைவியின் கன்னம் பற்றி அவள் முன்நெற்றியில் முத்தம் ஒன்றையும் பதித்தான் அருண். தன் கண்கள் இரண்டையும் மூடி, உள்ளப் பூர்வமாக அவன் அன்பை உள்வாங்கிக் கொண்டாள் சிவரஞ்சனி.
அருணின் இந்த அதிரடியில் ஐயர் உட்பட, திருமண நிகழ்வுகளை கண்டுகளித்துக் கொண்டிருந்த அனைவரும் வாய்விட்டுச் சிரிக்க, கணவனின் கையிலிருந்த குங்குமம் கன்னத்தில் பட்டதனால் உண்டான சிவப்பை விட, வெட்கத்தினால் அதிகமாகச் சிவந்தது போனது சிவரஞ்சனியின் கன்னங்கள்.
மணமேடையில் நின்று திருமணத்தை பார்த்துக் கொண்டிருந்த சந்த்ரிகா கூட, ‘பாரேன்… இந்த பட்டிக்காட்டானுக்கு இருக்கிற தைரியம் கூட, எங்க கல்யாணத்தப்போ இந்த மனுஷனுக்கு வரலையே!’ என்ற எண்ணத்தில் பக்கத்தில் நின்ற கணவனைப் பார்த்து வைத்தாள்.
“என்னடா?…, நம்ம காதல் மன்னன் இப்படி பம்முறானேன்னு நினைச்சேன்! எல்லாம் இதுக்குத்தானா ராசா?”
கயல்விழியின் கணவர் எப்போதும் போல அருணை கிண்டலடிக்க, “இதெல்லாம் ப்ப்ளான் பண்ணி வர்றதில்லை அத்தான்… அப்படியே உள்ளயிருந்து வரும்” என்றான் அவருக்கு சளைக்காமல் அருண்.
இப்படி, கேலியும் கிண்டலுக்கும் நடுவே மீதமுள்ள திருமணச் சடங்குகளையும் செய்து முடித்த புதுமணத் தம்பதியினர், தங்களைப் பெற்றவர்கள், குடும்பத்தின் பெரியவர்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் தம்பதி சமேதர்களாப் பெற்றுக் கொண்டார்கள். வந்திருக்கும் மற்ற உற்றார், உறவினர்களின் ஆசீர்வாதங்களையும் பெற, அங்கிருந்த அலங்கரிக்கப்பட்ட மேடையேறினர்.
அதற்கு காத்திருந்தாற் போல தங்களுடைய ஆசீர்வாதத்தையும், அன்பளிப்புகளையும் கொடுத்து, தம்பதியரோடு புகைப்படங்கள் எடுத்துவிட்டு அனைவரும் விருந்து உண்ணச் சென்றார்கள்.