தனது திருமணத்தில் தம்பி நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டது போல, சசிதரன் இப்போது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டான்.
தம்பதியரோடு மணமேடையில் நின்றிருந்த கயல்விழியும், மீனாட்சியும் உறவினர்கள் வருகை மேடைக்கு வருவது சற்றே குறையவும், அருணையும் சிவரஞ்சனியையும் இருக்கையில் அமர சொன்னார்கள். அவர்களும் இரண்டு நாற்காலிகளை எடுத்து போட்டு மேடையிலேயே அமர்ந்து கொண்டார்கள்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நின்றிருந்ததால் கொஞ்சம் சோர்ந்து தெரிந்தாள் சிவரஞ்சனி.
“கால் வலிக்குதா சிவா?”
இயல்பாக மனைவியின் முன்நெற்றியில் விழுந்து புரண்ட முடிக்கற்றையை காதுக்கு பின்னால் சொருகி, அவள் நெற்றி வியர்வையை தன் கைக்குட்டைக் கொண்டு துடைத்தபடி அருண் கேட்க, “இல்லை” என்று தலையசைத்து மறுத்தாள் சிவரஞ்சனி.
“ம்ம்… இப்படி ஒண்ணுக்கும் யூஸ் ஆகாத அக்காமார் இருந்தா, எல்லாம் நான் தான் செய்யணும். இங்க பாருங்க எம்பொண்டாட்டிக்கு டயர்ட்டா இருக்கு. யாருக்காவது ஒரு ஜுஸ் கொண்டு வந்து குடுக்கணும்னு தோணிச்சா?” என்றான் விளையாட்டாய்.
“கொஞ்சம் பொறுடா, அத்தான் இந்த பக்கமா வரட்டும் வாங்கிட்டு வரச்சொல்லுவோம்.”
“ஏன்?.. நீ போய் வாங்கிட்டு வரமாட்டீயாக்கும்?”
“எங்களை இங்க இருந்து விரட்ட நீ செய்யும் ராஜதந்திரம் பலிக்காது மகனே… இப்போல்லாம் உங்களை தனியா விட்டுட்டு போற எண்ணம் எங்களுக்கு இல்லவேயில்லை. வேணும்னா இப்பிடி ஓரமா கொஞ்சம் தள்ளி உக்காந்துக்குறோம். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றபடி சகோதரிகள் இருவரும் தங்கள் நாற்காலிகளை தள்ளிப் போட்டுக் கொண்டு அமர்ந்தார்கள்.
அதற்கிடையில் மனைவி ஃபோன் செய்து சொன்னதன் பலனாக கயல்விழியின் கணவர் மணமக்களுக்கு ஜுஸ் கொண்டு வந்து கொடுத்திருந்தார்.
அருணின் தங்கை ராகினியையும், தங்கள் குழந்தைகளையும் மணமக்களோடு கோர்த்து விட்டுவிட்டு நடப்பதை வேடிக்கை பார்த்தபடியே சகோதரிகள் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.
ஆனால் எல்லாவற்றையும் மீறி, அடிக்கடி மீனாட்சியின் முகம் ஏதோ யோசனையைக் காட்டவும், “மீனாட்சி அக்கா… நேற்று சாயங்காலம் கோவிலுக்கு போயிட்டு வந்ததிலயிருந்தே நீ சரியில்லை. என்னாச்சு க்கா? எங்கிட்ட சொல்லு” என்று கயல்விழி கேட்க, யாரிடம் சொல்லலாம் என்று தவித்து கொண்டிருந்தாரோ என்னவோ, உடனே சொல்ல ஆரம்பித்து விட்டார் மீனாட்சி.
“ஹ்ம்ம்… நேற்று கோயிலுக்குள்ள போகுறதுக்கு முன்ன என்னோட சாரியில் பறவை எச்சம் போட்டிடுச்சுன்னு கழுவப் போனேன்ல கயல், அங்க…” சுற்றுப்புறத்தை லேசாக கவனித்தபடி மெல்லிய குரலில் சொல்ல ஆரம்பித்தார் மீனாட்சி…
எப்போதுமே திருமணத்திற்கு முந்தைய நாள் சாயங்காலம், திருமாங்கல்யம், முகூர்த்த பட்டு இவை இரண்டையும் கோவிலில் வைத்து பூஜை செய்து வாங்குவது அவர்கள் வீட்டு வழக்கம்.
அதற்காக கோவிலுக்கு வந்த இடத்தில், மரத்திலிருந்த பறவை மீனாட்சியின் மீது எச்சம் போட்டுவிடவே, தன் கையிலிருந்த பூஜைப் பொருட்களை கயல்விழியிடம் கொடுத்து, “கோவிலுக்குள்ள போய் பூஜைக்கு ரெடி பண்ணுங்க, நான் இதை கழுவிட்டு வந்துடறேன்” என்றுபடி கோயிலின் பின்பக்கம் இருக்கும் கிணற்றை நோக்கி வேகமாக போனார் மீனாட்சி.
பழகிய இடம், கூடவே, பூஜைக்கும் நேரமாகிவிட்டதால் கயல்விழியும் அக்காவுடன் செல்ல முயலவில்லை. மீனாட்சியும் வேறு யாருடைய கவனத்தையும் கவரவில்லை.
கிணற்றில் கிடந்த வாளி கொண்டு நீரை இறைத்த மீனாட்சி, தன் கைகுட்டையை நனைத்து, தன் தோள் பக்கத்தில் இருந்த எச்சத்தை கவனமாக துடைத்தார்.
கடந்த திருமண நாளுக்கு கணவர் வாங்கித் தந்திருந்த பட்டுசாரி. எனவே, அதன் மீதான அக்கறையும் அந்த பேரிளம் பெண்ணிற்கு அதிகமாகவே இருந்தது.
நன்றாக துடைத்தவர், ‘கைக்குட்டையையும் வாளியில் இருந்த நீரில் அலசி பிழிந்தபடி, இதை எங்கே காயப்போடலாம் என்ற எண்ணத்தில் சுற்றும் முற்றும் பார்க்க, அவர் முன்னால் நின்றான் லிங்கம்.
தன்னருகே லிங்கத்தைக் காணவும் ஏதோ அசிங்கத்தில் மிதித்தது போல முகத்தைச் சுருக்கிய மீனாட்சி, அங்கிருந்து நகர முயல, “நான் கேட்டப்போ உன் வாழ்க்கையைத் தான் குடுக்க மாட்டேனுட்ட, இப்போ இந்த கர்சீஃப்பையாவது எங்கிட்ட குடு மீனாட்சி, பொக்கிஷமா வச்சிக்குறேன்” என்றான் லிங்கம் பைத்தியம் போல.
கணவனோடான மனமொத்த மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, அமெரிக்க சீதோஷ்ணநிலை எல்லாம் சேர்ந்து பேரழகியாக மீனாட்சியைக் காட்ட, ‘இத்தனை அழகும் எனக்கே சொந்தமாக இருந்திருக்க வேண்டியது’ என்ற முட்டாள்தனமான எண்ணத்தில் வார்த்தைகளை தவறவிட்டான் லிங்கம்.
அவ்வளவு தான்… உச்சஞ்தலைக்கு கோபம் சுர்ரென்று ஏற, “ஏய்… என்ன நினைச்சுட்டு இருக்குற உம்மனசுல?… மரியாதையா பேசலைன்னா, பல்லை உடைச்சிடுவேன் ராஸ்கல்” என்றபடி மீனாட்சி கையை ஓங்க, ஓங்கிய கையைப் பற்ற முயன்றான் லிங்கம்.
முயன்றான்… அவ்வளவு தான் தெரியும் அவனுக்கு. அடுத்த நொடியே இடி ஒன்று தாக்கியது போல அவன் கன்னத்தில் வைரம் பாய்ந்த கைகள் தன்னுடைய தடத்தை பதித்திருந்தது.
கூடவே, “அடிக்கிறதுக்கு கூட உன்கை அவன் மேல படக்கூடாது க்கா” என்ற அருணின் ஆங்காரமான சத்தமும் லிங்கத்தின் காதுகளில் விழுந்தது.
லிங்கம் சுதாரிப்பதற்குள் மேலும் சிலப்பல அடிகள் அவனுக்கு விழுந்ததோடு, “என்னைக்கோ இதை நீ எங்கிட்ட வாங்கியிருக்கணும் டா. அப்படி வாங்கியிருந்தா இந்த தைரியம் உனக்கு வந்துருக்காது” என்றவனை நிமிர்ந்து பார்த்த லிங்கம், அவமானத்தால் உயிரோடு மரித்தான்.
அருணோடு வந்திருந்த மீனாட்சியின் கணவர், தன் மனைவியை ஆதரவாக அணைத்தபடி நிற்க, கூனிக்குறுகிப் போனான் அந்த லிங்கம்.
யாரைத் தன் வாழ்க்கையைத் தட்டிப்பறித்ததாக முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்கிறானோ, அவர் முன்னாலே அடிபட்டு நிற்பதை தன் வாழ்க்கையின் ஆகப்பெரிய அவமானமாக நினைத்தான் லிங்கம்.
பல் பிடுங்கப்பட்ட பாம்பாக அடங்கி ஒடுங்கி நின்றவனின் மனதில் வன்மம் தலைவிரித்தாடியது. அவனை எச்சரிக்கை செய்ததோடு, அத்தான் அக்காவுடன் அங்கிருந்து நகர்ந்திருந்தான் அருண்.
எல்லாவற்றையும் தங்கையிடம் பகிர்ந்து கொண்ட மீனாட்சி, “எனக்கு அந்த லிங்கத்தோட பார்வையே சரியில்லைன்னு தோணுது கயல். அருணுக்கு எதுவும் பிரச்சினை கொடுப்பானோன்னு பயமாயிருக்கு” என்றும் சொன்னார்.
“அவனால, அருணோட கால் தூசியைக் கூட தொட முடியாது க்கா. நீ வீணா மனசைப் போட்டு குழப்புறதை விட்டு, சிவா கிட்ட உன் தம்பி அடிக்கிற கூத்தை பாரு. உன் பயம் எல்லாம் தானா பறந்துடும்” என்றார் தம்பியைக் கைகாட்டியபடி கயல்.
ஏதோ சொல்லி மனைவியை சிரிக்கவும், சிவக்கவும் வைத்துக்கொண்டிருந்த அருணைப் பார்த்த மீனாட்சியின் உதடுகளில் பூத்த புன்னகைப் பூ, அதன்பிறகு வாடவே இல்லை.
திருமணத்தின் அனைத்து சம்பிரதாயங்களும் எந்த குறையுமின்றி அழகாகவே முடிவடைந்திருந்தது.
“ஏனுங்க அம்மணி, எங்க தம்பியைப் பாத்தா பூச்சாண்டி மாதிரியா தெரியுது? உங்க அம்மா கிளம்பும் போது அப்படி அழுதீங்க?”
சிவரஞ்சனியை கிண்டலடித்தபடியே அன்றைய இரவுக்காக அவளை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள் கயல்விழியும் மீனாட்சியும்.
“ஐயையோ… அப்படி எதுவும் இல்லை ண்ணி…” பதறியபடி பதில் வந்தது சிவரஞ்சனியிடமிருந்து.
“அப்போ எங்களைப் பாத்தா பூச்சாண்டி மாதிரி இருக்குதா?”
“ஐயையோ… அப்படில்லாம் இல்ல ண்ணி, அவ்வளவு பெரிய வீட்ல அம்மா தனியா இருப்பாங்களேன்னு நினைச்சு அழுகை வந்திடிச்சி” முதல் தடவையை விட வேகமாக சிவரஞ்சனியிடமிருந்து வந்தது பதில்.
“எங்களுக்கு தெரியும் சிவா. சும்மா உன்னை பேச வைக்கிறதுக்காக கிண்டல் பண்ணுனோம். இதோ இருக்குற அம்மா வீட்டுக்கு நினைச்சா போய்ட்டு வரலாம், அதுக்கு போட்டு கவலப்படக்கூடாது” என்று அழகாக ஆறுதல் சொன்னார்கள்.
ஒரே வீட்டில் அக்கா இருந்தும், அவள் சொல்லாத ஆறுதல் வார்த்தைகள். கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது சிவரஞ்சனிக்கு.
குழந்தைகளைக் காரணம் காட்டி ஏற்கனவே அங்கிருந்து நகர்ந்திருந்தாள் சந்த்ரிகா.
“சரி… இப்போ போலாமா?” என்று கேட்டபடி அருணின் அறை இருக்கும் முதல் மாடிக்கு சிவரஞ்சனியை அழைத்து வந்திருந்தார்கள் இருவரும்.
அருணின் அறைக்கு முன் வந்து கதவை கயல்விழி உள் நோக்கி தள்ள, கதவுக்கு முன் தன் முப்பத்திரெண்டு பற்களையும் காட்டிக்கொண்டு நின்றிருந்தான் அவர்களின் அருமைத் தம்பி.
“இதுக்கு மேல உள்ள வர உங்களுக்கு பெர்மிஷன் இல்ல. என் ஆளை எங்கிட்ட ஒப்படைச்சிட்டு நீங்க போகலாம்னு நாசூக்கா சொல்லுறேன்” என்றான் மனைவியின் கையைப்பற்றி உள்ளே இழுத்தபடி.
“இந்த அசிங்கம் நமக்கு தேவையா? வா க்கா நாம போலாம்” என்று திரும்பிய கயலிடம், “எக்ஸ்கியூஸ்மி கயல்விழி மேடம்… ஒரு ரெண்டு நாளைக்கு எங்களை தொந்தரவு பண்ணாதீங்க” என்று அருண் உரக்கச்சொல்ல, சகோதரிகள் இருவரும் வாய்கொள்ளா சிரிப்போடு மொட்டை மாடிக்கு வந்திருந்தனர்.
“சிவா ரொம்ப நல்ல டைப் இல்ல?” மீனாட்சி தான் ஆரம்பித்தார்.
“ம்ம்… நம்ம அருணுக்கேத்த ஜோடி. ஓப்பனா சொல்லப்போனா சந்த்ரியை விட தௌசண்ட் டைம் பெட்டர் இந்த பொண்ணு.”
“ம்ம்...” என்று தலையாட்டிய மீனாட்சி, “கயல், இன்னைக்கு நம்ம ரத்னா சித்தி ரொம்ப அமைதியா இருந்தாங்க கவனிச்சியா? அவங்க கண்ணு கூட சாயங்காலம் நான் பாக்கும் போது ரொம்ப சிவந்திருந்தது” என்றார் திடீரென்று ஞாபகம் வந்தது போல.
“ம்ம்… நானும் கவனிச்சேன் க்கா. இவ்வளவு நல்ல பிள்ளையை மருமகளா எடுத்ததுக்காக, இப்படி சோக கீதம் வாசிக்க வேண்டாம் இந்த சித்தி” சகோதரிகளின் உரையாடல் இப்படியே தொடர்ந்து போய் கொண்டிருக்க…
அறைக்குள் வந்திருந்த சிவரஞ்சனியோ கணவனின் வார்த்தைகளைத் தடுப்பதற்காக பாய்ந்து அவன் வாயை தன் கைகளால் பொத்தியிருந்தாள்.
“என்னடி இது? மாமா மேல இவ்வளவு ஆசையா?” கிண்டலில் இறங்கிய அருண், அலேக்காக மனைவியை கைகளில் அள்ளிக் கொண்டு, “வாயை அடைக்கிறவ இப்பிடி அடைக்கணும்” என்று மனைவியின் வாயோடு வாய் வைத்து அதிரடியாக டெமோ ஒன்றை செய்து காட்டினான்.
“ம்ம்… தமிழில் இன்னைக்கு எனக்கு பிடிக்காத வார்த்தையே இந்த வெட்கம் தான்” டயலாக் பேசியவன், “அது என்ன மச்சான்?… நான் உன்னை மாமா ன்னு கூப்பிட சொன்னதா ஞாபகம்” என்றபடியே மனைவியோடு கட்டிலில் சரிந்தான்.
“எனக்கு மச்சான்னு கூப்பிடத் தான் பிடிச்சிருக்கு மச்சான், நான் அப்படி தான் கூப்பிடுவேன் மச்சான்…” சிணுங்கினாள் சிவரஞ்சனி.
“எனக்கு மாமா தான் பிடிச்சிருக்கு, அப்படியேத் தான் நீ கூப்பிடுற” மிஞ்சினான் அருணவன்.
“இல்ல…, மச்சான்னு தான் கூப்பிடுவேன்…”
“இல்ல…, மாமான்னு தான் கூப்பிடணும்..”
சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லியவர்களின் வார்த்தை யுத்தம், விரைவிலேயே காதல் யுத்தமாக களைகட்ட ஆரம்பித்தது…