“அதெல்லாம் நான் பாத்துக்குறேன், நீ போ. நைட் டியூட்டி பாத்துட்டு வந்துருக்குறவ கொஞ்சம் தூங்கி எழுந்தா தானே சாயங்காலம் மறுபடியும் வேலைக்கு போக நல்லாயிருக்கும்.”
மருமகளின் கையிலிருந்த துடைப்பத்தை வாங்கியபடியே ரத்னா சொல்ல, எப்போதும் போல ஆச்சர்யப் பார்வையை ரத்னா மீது வீசியபடியே தங்கள் அறையை நோக்கிச் சென்றாள் சிவரஞ்சனி.
அருண், சிவரஞ்சனி திருமணம் முடிந்து ஒருமாதம் நிறைவடைந்திருந்தது. இந்த ஒரு மாதத்தில், குடும்பத்தில் இருந்த மற்றவர்களைப் போல ரத்னாவின் நடவடிக்கை சிவரஞ்சனியையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது.
அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்தவளுக்கு, கல்யாணத்திற்காக எடுத்திருந்த பத்துநாள் விடுமுறை முடிந்து, தான் வேலைக்கு செல்லப்போவதாக அத்தை ரத்னாவிடம் சொல்லிய நாள் ஞாபகம் வந்தது.
விடுமுறை முடிந்து வேலைக்கு போகப்போவதாக முதலில் கணவனிடம் சிவரஞ்சனி சொல்ல, “அம்மாகிட்டயும் சொல்லிடு சிவா. ஒருவேளை அவங்க உன்னை வேலைக்குபோக வேண்டாம்னு சொல்லுறதுக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கு. அப்படி அவங்க சொன்னா, நீ பயந்துடாத. நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன், சரியா?” என்றான், தாய் திருமணத்திற்கு முன் போட்ட கண்டிஷனை மனைவியிடம் மறைத்து.
கணவனின் வார்த்தைகள் உள்ளுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தினாலும், “நாளையிலயிருந்து வேலைக்கு போகலாம்னு இருக்கேன் அத்த” என்றிருந்தாள் ரத்னாவிடம் சிவரஞ்சனி.
இரவு உணவு முடிந்த பின், நாயகி, ரத்னா, சிவரஞ்சனி மூவரும் சேர்ந்து ஆளுக்கொரு வேலையாக செய்து கிச்சனை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் ரத்னாவிடம் சொன்னாள் சிவரஞ்சனி.
தம்பியின் திருமணம் முடிந்த ஒருவாரத்தில் பெங்களூருக்கு கிளம்பியிருந்த சசிதரனுடனேயே சந்த்ரிகாவும், ராஜேஸ்வரியும் குழந்தைகளோடு சென்றிருந்ததால் அவர்கள் இங்கே இல்லை.
‘ரத்னா இப்போது ஆடித்தீர்க்கப் போகிறாள். பாவம் சிவரஞ்சனி’, என்ற ரீதியில், பெரிய நாயகி பார்க்க, ரத்னாவோ, “காலைல எத்தனை மணிக்கு வேலைக்கு கிளம்புவ?” என்றார் அமைதியாக.
இப்படி ஒரு கேள்வி, ரத்னாவிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்காத நாயகி, வியப்பாக ரத்னாவைப் பார்க்க, சிவரஞ்சனிக்கோ மயக்கம் வராத குறைதான்.
“மத்தியான சாப்பாடை கையிலயே கொண்டு போவியா, இல்ல மத்தியானம் குடுத்து விடணுமா?”
ரத்னாவின் கேள்வியில் ‘பேசுவது தங்கள் ரத்னா தானா? அட… முதலில் இது தங்கள் வீடுதானா?’ என்ற சந்தேகமே வந்துவிட்டது நாயகிக்கு.
கேள்வியோடு நிறுத்தாமல், மறுநாள் காலை மருமகளை டிஃபன் உண்ண வைத்து, மதிய சாப்பாடையும் கையில் கொடுத்து, “வண்டியில் கவனமா போகணும்” என்று பத்திரம் கூறி அனுப்பி வைத்த ரத்னா, வீடு முழுமைக்குமே
புதிராகவும், புதியவராகவும் தெரிந்தார்.
போதாததற்கு, வீட்டு நபர்களிடமும் இணக்கத்தோடும், அக்கறையோடும் ரத்னா நடந்து கொள்ள, ‘எப்படி இந்த மாற்றம் சாத்தியமாகியது?’ என்று வீடே குழம்பிப்போய் நிற்கிறது.
கண்களை மூடிக்கொண்டு அத்தனையையும் யோசித்தபடி படுத்திருந்தவளின் அருகே தொப்பென்று வந்து விழுந்த அருண், “நேத்து என்னை நைட்டியூட்டி பாக்கவிடாமல் நீ டியூட்டிக்கு போய்ட்டு வந்துட்டு, இப்போ என்ன தூக்கம்?” என்றான், பூரித்திருந்த மனைவியின் கன்னங்களில் பொய்க்கடி கடித்தபடி. (www.eyesolutions.in)
“இங்க பாருங்க… என்னோட அத்தை தான், நீ போய் தூங்கு மா ன்னு, என்னை தூங்கச் சொல்லி அனுப்பியிருக்காங்க. நீங்க என்னை தூங்கவிடாமல் தொந்தரவு பண்ணுனா, எங்க அத்தைகிட்ட சொல்லிக் குடுத்துடுவேன் பாத்துக்கோங்க” விளையாட்டாய் கணவனை மிரட்டினாள் சிவரஞ்சனி.
“ஐயையோ… பயமாயிருக்கே! அப்படி எதுவும் சொல்லிடாத ம்மா…, அப்புறம் உங்க அத்தை என்னை அடிச்சிடப் போறாங்க” பயந்தவன் போல நடித்தவன், மனைவியை தன் மார்பு மீது அள்ளிப் போட்டுக்கொண்டு, அவள் முகமெங்கும் தன் முத்தத்தால் முத்திரையைப் பதித்தான்.
“எப்போ பார்த்தாலும் சிடுசிடுன்னு கோபப்படுற அம்மா இப்போல்லாம் சிரிச்சு பேசுறாங்க. நம்ம கல்யாணம் முடிஞ்ச நேரம் எல்லாம் நல்லதாவே நடக்குது. அதை கொண்டாட வேண்டாமா நாம? அதான் நான் இன்னைக்கு கடைக்கு லீவு” மனைவியோடு இழைந்து கொள்ள ஒரு காரணத்தை கண்டுபிடித்து அருண் சொன்னான்.
“ஐயையோ! அப்படி ஏதாவது செய்து எங்க ரெண்டு பேருக்குமிடையில் இருக்குற பாண்டிங்கை கட் பண்ணி விட்டுடாதீங்க மச்சான்…” உண்மையாகவே பயந்து போனவளாக பதறினாள் சிவரஞ்சனி.
“ஹ்ம்ம்… அப்படி வா வழிக்கு” வாய்விட்டு சிரித்த அருண்,
“நான் எங்கம்மாகிட்ட உன்னை போட்டுக் குடுக்காம இருக்கணும்னா, நீ என்னை மாமான்னு கூப்பிடு…” மனைவியின் நெற்றியோடு நெற்றி முட்டிச் சொல்லியவன், கிடைத்த சந்தர்ப்பத்தில் தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முயன்றான்
“ம்ஹூம்… மாட்டேன்…”
“அப்பிடியா?… அப்போ, நீ சொன்னதை எங்கம்மா கிட்ட சொல்லிட்டு வந்துடறேன்டி எம்பொண்டாட்டி” சொல்லியபடியே விளையாட்டாக எழுந்த கணவனை, எழவிடாமல் அணைத்துக் கொண்ட சிவரஞ்சனி, “வேண்டாம் மாமா…” என்றாள் வேகமாக.
“என் சமத்து சக்கரைக்குட்டி” என்றபடி மனைவியை இறுக கட்டி அணைத்து, தன்னை ‘மாமா’ என்றழைத்த அவள் பட்டிதழ்களுக்கு பரிசுகளை வாரி வாரி வழங்கத் தொடங்கினான் அருண்.
ரத்னாவின் இந்த மாற்றம் நாயகி மூலமாக பெங்களூருவில் இருக்கும் ராஜேஸ்வரிக்கும் ஃபோன் மூலம் தெரியவந்திருந்தது.
அவராலுமே நம்பமுடியவில்லை. “உண்மையாவா சொல்லுறீங்க அக்கா?!” என்று திரும்பத் திரும்ப ஆச்சர்யத்தோடு கேட்டிருந்தார்.
“ஐயோ, இந்த நேரம் பாத்து நான் அங்க இல்லாமல் போனனே” என்று ஆதங்கமும்பட்டார்.
எல்லோருடைய பேச்சுப் பொருளாக இருந்த ரத்னாவின் மாற்றம், அவரது கணவர் சுப்பிரமணியனின் கண்களிலும் கருத்திலும் படத்தான் செய்தது. என்றாலும் ‘இது எத்தனை நாள்களுக்கோ’ என்ற எண்ணத்தில் இருந்தவர், அன்று தங்கள் அறையில் மனைவியின் கைப்பிடித்து நிறுத்தி,
“ரொம்ப வருஷத்துக்கு பிறகு நான் காதலிச்ச காலத்து ரத்னாவை இப்போ கொஞ்ச காலமா பாக்குறேன். மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்ல, உடைந்தே போனார் ரத்னா.
தயக்கமின்றி கணவனின் தோள்களில் சாய்ந்தவர், “கண்மூடித்தனமா ஒருத்தங்க வார்த்தையை மட்டும் நம்பி, இத்தனை நாளும் எவ்ளோ பெரிய முட்டாளா இருந்துருக்கேன்னு, இப்போ தான் புரியுதுங்க” என்றார் தழுதழுத்த குரலில்.
“என்ன சொல்லுற ரத்னா!…”
ஆச்சர்யமாக கணவர் கேட்க, மகன் திருமணத்தன்று நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தார் ரத்னா…
அருண், சிவரஞ்சனி திருமணத்தன்று மணமக்களை வாழ்த்திவிட்டு அனைவரும் சாப்பாட்டு கூடம் நோக்கி நகர, தனது அண்ணி பாக்யாவை சாப்பிட அழைத்துச்செல்ல தேடினார் ரத்னா.
‘தான் ஒப்புக்கொண்டபடி அண்ணன் மகளை, தனது மருமகளாக்க முடியவில்லையே’ என்ற குற்ற உணர்ச்சி, மகனின் திருமணத்தில் கூட அவரை சந்தோஷமாக ஒன்ற விடவில்லை.
திருமணம் முடியவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக சந்தித்துக் கொண்ட சொந்தங்கள் ஆங்காங்கே நாற்காலிகளில் வட்டமாக அமர்ந்து கொண்டு அரட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, திருமண ஹால் முழுவதும் பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் நிறைந்திருந்தது.
பாக்யாவும், அவரின் அத்தை ஒருவரோடு, மண்டபத்தின் தூண் ஒன்றுக்கு பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது ரத்னாவின் கண்களில் விழ, அவர்களை நோக்கி நடந்தார்.
“உம்பொண்ணு மாலதிக்கும் அருணுக்கும் தான் கல்யாணம் நடக்கும்னு நம்ம சொந்தத்துல எல்லாரும் ரொம்ப ஆவலா எதிர்பார்த்தோம் பாக்யா. ஆனா, நீ ஏன் வெளி சம்மந்தத்துக்கு உம் பொண்ணைக் கட்டிகுடுத்த? எனக்கு இந்த கேள்வியை உம்பொண்ணு கல்யாணத்தன்னைக்கே கேட்கணும்னு தோணிச்சு. ஆனா, நீ அன்னைக்கு ரொம்ப பிஸியா இருந்த, அதான் கேக்கலை” என்று அந்த அத்தை பாக்யாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
‘இப்போது அவர்களின் முன்னால் போய் நின்றால், தானும் பதில் சொல்லவேண்டி வருமோ?’ என்ற அச்சத்தில் தூண் மறைவில் ஒதுங்கினார் ரத்னா.
அருணுக்கும் சிவரஞ்சனிக்கும் ஒப்புத்தாம்பூலம் மாற்றப்படவும், இனிமேல் தான் நினைத்தது நடக்காது என்று புரிந்து போனது ரத்னாவுக்கு.
மகள் ஒத்துழைத்தாலாவது ஏதாவது முயன்று பார்க்கலாம். அவளும் அருணின் வார்த்தைகளைப் புரிந்து கொண்டு ஒதுங்கிவிடவே, வேறுவழியில்லாமல் மகளுக்கு வேறு வரன்கள் பார்க்கவும் தொடங்கிவிட்டார் பாக்யா.
அப்படி வந்த வரன் ஒன்றுக்கு மாலதியை ரொம்பவும் பிடித்துப் போனது. பையன் அரசாங்க உத்யோகத்தில் உயர்ந்த பதவியில் இருந்ததால் பாக்யாவுக்குமே பிடித்துப் போனது.
எனவே, அருணின் திருமணத்திற்கு முன்பே அந்த வரனோடு தன் மகளின் திருமணத்தை, நாத்தனாரின் குடும்பம் தந்த பணஉதவி மூலம் நடத்திக் கொண்டார் பாக்யா.
ஆமாம்… மறுபடியும் ரத்னாவிடம், பாக்யா முதலைக் கண்ணீர் விட, திருமணத்தின் பெரும்பகுதிச் செலவை, தன் கணவரையே ஏற்றுக்கொள்ள வைத்திருந்தார் ரத்னா.
‘பாவம் அண்ணி.. இந்த அம்மாவை எப்படி சமாளிக்கப் போறாங்களோ?’ என்று கவலையோடு ரத்னா தூண் மறைவில் நிற்க, அவள் அண்ணியோ, ரத்னாவின் அடைபட்டு கிடந்த அகக்கண்களைத் திறந்து விடும் வேலையில் மும்முரமாக இறங்க ஆரம்பித்திருந்தார்.
“எனக்கு ஆரம்பத்துலயிருந்தே அருணுக்கு மாலதியை கல்யாணம் பண்ணி குடுக்குறதுல பெரிய இஷ்டம் கிடையாது அத்தை. இந்த ரத்னா தான் எம் பையனுக்கு பெரிய படிப்பும் இல்லை, மரியாதையான வேலையும் இல்லை. இந்த லட்சணத்துல நல்ல படிச்ச பொண்ணு அவனுக்கு கிடைக்குறது கஷ்டம் அண்ணி. அதனால, நீங்க பெரிய மனசு வச்சு நம்ம மாலதியை அருணுக்கு கல்யாணம் பண்ணி தரணும்னு என் கால்ல விழாத குறையா கெஞ்சி கேட்டா. அதான், ஐயோ பாவம்னு எனக்கு பிடிக்காட்டா கூட எம்பொண்ணை அவ பையனுக்கு கல்யாணம் பண்ணித்தரேன்னு வாக்குக் குடுத்துருந்தேன்.” கால்மேல் கால்போட்டு அமர்ந்தபடி ஜம்பமாக பொய்யை அவிழ்த்து விட்டார் பாக்யா.
கேட்டுக்கொண்டு நின்றிருந்த ரத்னாவுக்கு, தான் கேட்பது உண்மைதானா? தன் அண்ணியா இப்படி தலைகீழாக மாற்றிப் பேசுவது?’ என்று நம்பவே முடியவில்லை.
ஆனால், அவரே நேரடியாக பார்த்தும், கேட்டும் கொண்டு நிற்கிறாரே. பின்னர் எப்படி நம்பாமல் இருப்பது?
“என்ன பாக்யா சொல்லுற?”
தான் கேள்விப்பட்டது எல்லாம் இதற்கு நேர்மாறானதாக இருக்க, இன்னும் பாக்யாவின் வாயைப் பிடுங்கி வம்பளக்க வசதியாக கேள்வி கேட்டார் அந்த அத்தை.
“ஆமா அத்த… உண்மையைச் சொன்னா, மாலதிக்கு இந்த அருணை சுத்தமா பிடிக்கவே பிடிக்காது. நான் தான் அவளை அதையும் இதையும் சொல்லி சமாதானபடுத்தி வச்சிருந்தேன். ஆனா இந்த காலத்து பிள்ளைங்களை எத்தனை நாள் தான் கட்டுப்படுத்த முடியும் சொல்லுங்க.”
“கடைசியில, மாலதி அருணை கல்யாணம் பண்ண மாட்டேன்னு ஒத்த கால்ல நின்னுட்டா. அதான் அவங்க காதும் காதும் வச்ச மாதிரி மூத்த மருமகளோட தங்கச்சியையே நிச்சயம் பண்ணிக்கிட்டாங்க. இப்போ கல்யாணம் நடக்குது” திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று எல்லாவற்றிலும் ஒற்றை ஆளாக புகுந்து கலக்கினார் பாக்யா.
“ஆனா, எம்மக எடுத்த முடிவு எவ்வளவு சரின்னு இப்போதான் எனக்கே புரியுது அத்த. என்னயிருந்தாலும், கவர்மெண்ட் உத்யோகம் பாக்குறவங்களுக்கு இருக்குற மதிப்பே தனி தான். மாசம் பொறந்தா கையில சம்பளம், மதிப்பு, மரியாதைன்னு, என் மருமகனோட ரேன்ஜ்ஜே தனி. இந்த அருண் அவர் கிட்டகூட வர முடியாது.”
வாய் நிறையச் சிரிப்போடு சொல்லிய பாக்யா, தூணுக்கருகில் எதுவோ அசைவு தெரிகிறதே என்று பார்க்க, அதன் பின்னாலிருந்து வெளியே வந்தார் ரத்னா.