ரத்னாவின் பார்வை மாற்றத்திலிருந்தே தான் பேசிய அத்தனையையும் கேட்டுவிட்டார் என்று பாக்யாவுக்கு புரிந்தது. இருந்தாலும் அசந்து போனால் அது பாக்யா அல்லவே. எனவே துணிவுடனே ரத்னாவை சந்திக்க தயாரானார்.
ஆனால், பாக்யா உடனிருந்த உறவோ அதற்கு மேல் அங்கிருக்க பயந்து மெதுவாக நழுவிக்கொண்டது.
“என்ன ரத்னா?… கல்யாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச்சு போல?”
‘எதுவாக இருந்தாலும் நாத்தனாரிடமிருந்தே முதலில் வரட்டும்’ என்று சாதாரணமாக பேச்சைத் தொடங்கினார் பாக்யா.
“எப்படி அண்ணி உங்களால இப்படி பேசமுடியுது?”
“என்ன பேசுனாங்க ரத்னா?”
“உங்க முகத்திரையை நீங்களே கிழிச்சிட்டீங்க. இதுக்கு மேலயும் நடிக்காதுங்க அண்ணி” கொஞ்சம் காட்டமாக சொல்லிய ரத்னா, “உங்களை எவ்வளவு நம்புனேன். ஆனா, நீங்க என்னை ஏமாளி ஆக்கிடீங்க இல்ல?” என்றார் தழுதழுத்தக் குரலில். ஏமாற்றத்தின் வேதனை குரலில் அப்பட்டமாக தெரிந்தது.
“என்னை ஏமாளி ஆக்கிட்டீங்க இல்ல…” இந்த ஒற்றைவரி இப்போது தான் பேசியதற்கு மட்டுமான குற்றச்சாட்டு மட்டுமல்ல, என்று பாக்யாவுக்கு புரிந்தது.
“உனக்கு அறிவில்ல, யாரு என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா நீ? கொஞ்சமாவது யோசிச்சு பாக்கணும்னு உனக்கா தோணாது? தப்பை எல்லாம் அவமேல வச்சிட்டு, வந்துட்டா பெருசா என்னைக் கேள்வி கேட்க.”
அலட்சியமான குரலில் சொல்லிய பாக்யா, விருட்டென்று உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பி, புடவை முந்தானையை ஒரு உதறு உதறி இடுப்பில் சொருக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்திருந்தார்.
ஆனால் நடந்த நிகழ்வுகளை ரத்னாவால் அத்தனை எளிதாக உதறித்தள்ள முடியவில்லை. “என் நம்பிக்கையே என்னை ஏமாற்றிவிட்டது” என்று மற்றவர்களிடம் சொல்வதையே அவமானமாக கருதினார்.
‘இவரின் பேச்சைக் கேட்டு ஆசைக் கணவர், பெற்ற மகன், உற்ற உறவுகள், என்று அத்தனை பேரிடமும் அலட்சியம் காட்டியிருக்கிறோமே’ என்று எண்ணி எண்ணி உள்ளம் குமைந்தார்.
‘இவ்வளவு ஏன்? இப்போது கூட என் ஒரே மகனின் திருமணத்தில் இதயப்பூர்வமாக கலந்து கொள்ள முடியாமல், அவருக்காக சிந்தித்தேனே?’ தன் செயலை நினைத்து அவமானமாக இருந்தது ரத்னாவுக்கு.
அது இல்லை என்றவுடன் இது, என்று தன் குடும்பத்தோடு உடனே ஒட்டவும் முடியவில்லை அவரால். எல்லோரிடமிருந்தும், எல்லாவற்றிலிருந்தும் முடிந்தவரை ஒதுங்கிப் போனார்.
எல்லாம் சிறிது நாட்கள் தான். மருமகள் வேலைக்கு போகப்போவதை தன்னிடம் வந்து சொல்லவும், அறைக்கு வெளியே நின்று தண்ணீர் குடிப்பது போல, தங்களையே பார்த்துக் கொண்டிருந்த மகனின் வேலை தான் இது என்று அவருக்கு புரிந்தது.
‘என் எதிர்ப்பை எதிர்பார்த்தே மனைவியை என்னிடம் சொல்ல வைத்திருக்கிறான். அப்படியென்றால், நான் எதிர்த்தாலும், என்னிடம் சொல்லிவிட்டு தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மகனுக்கு இருக்கிறது.
‘இப்படிப்பட்ட உறவுகளை யார் பேச்சையோ கேட்டு இத்தனை நாட்கள், உதாசீனம் செய்திருக்கிறேனே’ வருந்தியவர், அந்த நொடியிலிருந்து புது ரத்னாவாக பிறப்பொன்றை எடுத்துக் கொண்டார்.
எல்லாவற்றையும் கணவரிடம் சொல்லிவிட்டு விசும்பி அழுதார் ரத்னா.
“யார், யார் எப்படின்னு இப்போ புரிஞ்சிடிச்சில்ல ரத்னா. இப்போ எப்படி இருக்கிறியோ அப்படியே கடைசி வரைக்கும் மாறாமல் இரு ” என்றபடி மனைவியின் கண்ணீரை சுப்பிரமணியன் துடைத்துவிட, “கண்டிப்பாக இருப்பேன்” என்னும் விதமாக தலையசைத்தார் ரத்னா.
****************
அருணின் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் கிளம்பியிருந்த சசிதரன் குடும்பமும், பெங்களூருக்கு வந்து இரண்டு மாதகாலம் ஆகியிருந்தது.
தன் இத்தனை வருட திருமண வாழ்க்கையில் கணவனை விட்டு இத்தனை நாட்கள் இராஜேஸ்வரி பிரிந்திருப்பது இதுவே முதல்முறை.
அது அவரைக் கொஞ்சம் வாட்டினாலும், தன் மகனுடைய குடும்பத்தோடு இருப்பது அவருக்கு பிடித்திருக்கவே செய்தது.
அதுவும் பேரக்குழந்தைகளோடு நாள் முழுவதும் பொழுதைக் கழிக்க அவருக்கு கசக்குமா என்ன?
சசிதரன் ஊருக்கு கிளம்பும் முன், “எங்களோடு வருவதற்கு முழு சம்மதம் தானே ம்மா” என்று ஆயிரம் தடவையாவது தாயிடம் கேட்டிருப்பான்.
நாயகி, ரத்னா என்று எல்லோரும் ஒரே குடும்பமாக இருக்கும் போது, கண்டிப்பாக கணவருக்கு சாப்பாட்டு பிரச்சினை என்பது கிடையவே கிடையாது என்று அவருக்கு தெரியும். அதனால் தைரியமாக மகனோடு வருகிறேன் என்று சொல்லிவிட்டார்.
மருமகள் சந்த்ரிகாவும் அவரிடம் பாந்தமாக நடந்து கொள்ளவே, அந்த வித்தியாசமான அனுபவத்தை ரசிக்கவே செய்தது ராஜேஸ்வரியின் மனது.
குழந்தைகளுக்கும் இப்போது ஆறுமாதம் ஆகவே, தாய், தகப்பன், கூடவேயிருக்கும் பாட்டி, என்று எல்லோரையும் நன்றாக அடையாளம் தெரிகிறது. அவர்களின் பொக்கை வாய் சிரிப்பில் உலகமே மறந்து தான் போகிறது இவர்களுக்கு.
இப்போது ஒருமாத காலமாக தாய்ப்பால் தவிர துணை உணவுகளையும் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தி இருந்தார்கள்.
என்ன தான் இருந்தாலும், இரவுகளில் இரண்டு குழந்தைகளையுமே தங்களுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மட்டும், உறுதியாக இருந்தான் சசிதரன்.
“ஏன்டா நான் பாத்துக்க மாட்டேனா?” என்ற தாயிடம் “பிள்ளைங்களுக்கு எங்கமேலயும் ஒரு பிடிப்பு வரணும்ல ம்மா” என்றிருந்தான்.
பிள்ளைகள் மேல் இருந்த பிடிப்பு, தங்கள் துணைகளின் மீது அந்த தம்பதியருக்கு இல்லாமல் போயிருந்தது.
திருமணம் முடிந்து ஒரு மாதகால தெவிட்டாத வாழ்க்கை, அதன்பின் குழந்தைகளைக் கொண்டு ஒரு நீண்ட பிரிவு என்று அவர்கள் வாழ்க்கை கடந்து போயிருந்தாலும், இதோ இப்போது சேர்ந்திருக்கும் இந்த வாழ்க்கை என்னவோ தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டாமலேயே தான் இருக்கிறது அவர்களுக்கு.
அன்று, சந்த்ரிகா விண்ணப்பித்திருந்த கம்பெனியிலிருந்து, அவளை நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தார்கள்.
மாமியாரிடம் ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு சென்றிருந்தவள், வேலைக்கான ஆர்டரோடு தான் திரும்பி வந்திருந்தாள்.
வீட்டுக்கு வரவும், “பிள்ளைகள் உன்னைத் தேடி ரொம்ப அழுதாங்க சந்த்ரி” என்று இராஜேஸ்வரி சொல்ல கேட்ட அந்த தாய் மனது கலங்கிவிட்டது.
வெளியே சென்று வந்த நேரத்தை ஈடுகட்டுவது போல, அன்று முழுவதும் குழந்தைகளோடே இருந்து கொண்டவளுக்கு, அவர்களை நினைத்து கவலையாகவும் இருந்தது.
அதே நேரம், ‘குழந்தைகள் தன் கணவனின் தாயாரிடம் தான் இருக்கப் போகிறார்கள்’ என்ற எண்ணம் கொஞ்சம் நிம்மதியையும் தந்தது.
‘தான் வேலைக்கு சென்ற சிறிது நாட்களிலேயே என்னைப் பிரிந்திருக்கும் சூழ்நிலைக்கும் அவர்கள் பழகிவிடுவார்கள்’ என்று மனதை திடப்படுத்தி கொண்டாள்.
நீண்ட நெடுங்காலமாக சந்த்ரிகா தவமிருந்த அந்த நாளும் வந்தது. காலையிலேயே பரபரப்பாக எழுப்பி கிளம்பியவள், குழந்தைகளை முத்தமிட்டு, கணவர், மாமியாரிடம் விடைபெற்று கொண்டு கிளம்பினாள்.
“என்ன அவசரம் என்றாலும், கணவனுக்கும் தனக்கும் அழைத்துவிட வேண்டும்” என்றும் ராஜேஸ்வரியிடம் சொல்லியிருந்தாள்.
அவர்கள் அபார்ட்மெண்ட் முன்னால் இருந்து அலுவலக கேப்பில் பணியிடத்துக்கு செல்வதாக ஏற்பாடு.
முதல்நாள் என்பதால் மனைவியோடு வந்த சசிதரன், வாழ்த்துகளைச் சொல்லி அலுவலக பேருந்தில் அவளை அனுப்பி வைத்து விட்டே தன் அலுவலகம் சென்றிருந்தான்.
அந்த பிரம்மாண்டமான அலுவலகத்தில் நுழைந்து பணியில் சேர்வதற்கான அத்தனை நடைமுறைகளை முடித்த பின்னரும் கூட, அவள் வேலையில் சேர்ந்துவிட்டாள் என்பதை நம்பவே முடிவில்லை சந்த்ரிகாவால். மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள்.
முதல் இரண்டு மாதங்கள் வேலைக்கான ட்ரெயின் அவளுக்கு அளிக்கப்படுவதாக சொன்னதோடு, அரவிந்தன் என்ற பயிற்சியாளரையும் சந்த்ரிகாவிற்கு அறிமுகப்படுத்தினார்கள்.
படிப்பு முடித்து கிட்டதட்ட நான்கு வருடங்கள் கழித்து வேலை அனுபவம். கொஞ்சம் பதட்டமாகத் தான் இருந்தது சந்த்ரிகாவிற்கு.
ஆனால், “டென்ஷனாகாதீங்க எல்லாம் உங்களால ஈசியா கேட்ச் பண்ணமுடியும்” என்று அவளை உற்சாகப்படுத்திய அரவிந்தனின் தலைக்குள் மட்டும், ‘இந்த பெண்ணை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறோம், எங்கே? எங்கே?’ என்று ஓயாது மணி அடித்துக் கொண்டிருந்தது.
யோசனையின் முடிவில் சட்டென்று அவனுக்கு எங்கே பார்த்தோம் என்பது ஞாபகத்திற்கு வர, அவசரமாக ஒரு எண்ணிற்கு அழைத்தான்.