கீழே விழுந்து கிடந்த உடைகளை பார்த்த சசிதரனோ, ‘அன்று அத்தனை சொல்லியும் புரிந்து கொள்ளாமல், இப்படி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாளே மனைவி’ என்ற எண்ணத்தில், “என்ன சந்த்ரி இதெல்லாம்?” என்றான் ஆற்றாமையோடு.
“ம்ம்… ட்ரெஸ் சசி” கூலாக வந்தது பதில்.
“அது தெரியுது. ஆனா இந்த மாதிரி வேண்டாம்னு அன்னைக்கே சொன்னேனே, நியாபகம் இல்லையா உனக்கு?” கோபத்தை அடக்கிய குரலில் கேட்டான் சசிதரன்.
“நான் என்னைக்காவது இதைப்போடாதீங்க அதைப் போடாதீங்கன்னு உங்ககிட்ட சொல்லியிருக்கனா சசி? அப்புறம் நீங்க மட்டும் ஏன், என் விஷயத்துல தலையிடுறீங்க?”
மதியம் அரவிந்தன் என்ற சாத்தான் ஓதியிருந்த வேதம் நன்றாக வேலை செய்ய, கணவனின் அன்னை இருப்பதையும் மறந்து எடுத்தெறிந்து பேசிய சந்த்ரிகா,
“அன்னைக்கு பில் பே பண்ணுற சிச்சுவேஷன்ல நான் இல்லை, அதனால நீங்க சொன்னதை கேட்டுட்டு சும்மா வந்தேன். ஆனா, இன்னைக்கு சூழ்நிலை அப்படி இல்லை. அதனால எனக்கு பிடிச்சதை நான் எடுத்துட்டு வந்துருக்கேன். கண்டிப்பா வேலைக்கு போகும் போது இதையெல்லாம் போட்டுட்டும் போவேன்” என்றாள் வீராவேசமாக.
“இப்படி ட்ரெஸ் போட்டுட்டு தான் நீ வேலைக்கு போகணும்னா, அப்படியொரு வேலைக்கு கண்டிப்பா நீ போகவேண்டாம்” அழுத்தமாக சொன்னான் சசிதரன்.
அவ்வளவு தான்… நொடியில் கோபத்தில் சிவந்து போன முகத்தோடு, “என்னை வேலைக்கு போக வேண்டாம்னு சொல்ல நீங்க யாரு சார்? அட் எனி காஸ்ட், நான் வேலைக்கு போயே ஆவேன். இனி யாராலும் என்னை தடுக்க முடியாது” என்றாள் சந்த்ரிகா ஆங்காரமாக.
மகனுக்கும் மருமகளுக்குமிடையே எல்லாம் சரியாகிவிட்டது என்று இராஜேஸ்வரி நினைத்திருக்க, அவர்களுக்குள் எதுவுமே சரியாகவில்லை என்பதை இருவரின் வாக்குவாதமும் அவருக்கு சொல்லியது. அதிர்ச்சியோடு அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றார்.
அதுவும் இல்லாமல், அத்தனை துணிகளுக்கிடையிலும், தன் மகனுக்கென்று அவன் மனைவி ஒன்று கூட வாங்கி வராதது அவர் கண்களில் தவறாது விழ, பெற்ற மனம் தன் மகனை நினைத்து மருகியது.
அந்த காட்சிகள், சசிதரனை நிதானம் கொள்ளச் செய்ய, தாயைத் தோளோடு அணைத்து விடுவித்த சசிதரன், “ஒண்ணுமில்லடா…” என்று சொல்லியபடியே குழந்தைகள் இருவரையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
மறுநாள் காலை வீம்புக்கென்றே தான் எடுத்திருந்த நவநாகரீக உடையில் ஒன்றை அணிந்து கொண்டு வீட்டுக்குள் அங்குமிங்கும் சந்த்ரிகா நடைபயில, குழந்தைகளோ, “நீ யார்?” என்பது போல அவளை பார்த்து வைத்தார்கள். கொண்டவனோ, உனக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்பதைப் போல பார்த்தான்.
இதில் இராஜேஸ்வரியின் நிலமை தான் மிகவும் கவலைக்கிடமாக ஆகிப்போனது. மருமகள் நேற்று நடந்து கொண்ட முறையிலிருந்து அவளிடம் எதுவும் சொல்லவும் தயக்கமாக இருந்தது. ஆனால், வீட்டுக்கு பெரியவராக இருந்து கொண்டு சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
‘என்ன நடந்தாலும் பரவாயில்லை, தான் சொல்லுவதை சொல்லியே ஆகவேண்டும்’ என்ற எண்ணத்தில், “இதென்ன கோலம் சந்த்ரி? இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவா பொறுப்பா இருக்க வேண்டியவ, சின்னபிள்ளை மாதிரி நடக்கலாமா?” என்று அமைதியாக கேட்டார்.
“ஏன்?… அம்மான்னா அவளுக்குன்னு தனியா விருப்பங்கள் இருக்கக்கூடாதா? இல்லை, இப்படி உடுத்துனா பொறுப்பு கிடையாதுன்னு அர்த்தமாகிடுமா?” கோபத்தோடு கேட்டவள்,
“அப்படி உடுத்துனா பட்டிக்காடுன்னு ஆஃபீஸ்ல சொல்லுறாங்க, இப்படி உடுத்துனா பொறுப்பில்லைன்னு நீங்க சொல்லுறீங்க. அப்போ எப்பிடி தான் நான் உடுத்துறது? மண்டைய பிச்சிக்கலாம் போல இருக்கு எனக்கு” என்று சிடுசிடுத்தாள்.
“யாரு என்ன சொன்னா என்ன ம்மா? நம்ம மனசுக்கு எது சரின்னு படுதோ, அதைதான் நாம செய்யணும். எல்லாரையும் திருப்தி படுத்த நினைச்சா, நம்ம சுயம் தான் தொலைஞ்சு போகும்”
எளிய கிராமத்து பெண்மணி தான் இராஜேஸ்வரி. ஆனால் அவர் வாயிலிருந்து முத்தாக வார்த்தைகள் உதிர, மனதில் பதிய வேண்டியவளுக்கோ கோபம் தான் முந்திக்கொண்டு வந்தது.
விசுக்விசுக் என்று அறைக்குள் சென்றவள், வெளியே வரும்போது ஜெக்கிங்ஸ் ஜீன்ஸ்ஸூம், காட்டன் சர்ட்டும் அணிந்து வந்தாள். முன்பு உடுத்தியிருந்ததற்கு இது எவ்வளோ பரவாயில்லை என்று தான் இராஜேஸ்வரிக்கு எண்ணத் தோன்றியது.
***********
குளித்து முடித்திருந்த அருண், தங்கள் அறையில் நின்று தலையைத் துவட்டிக் கொண்டிருந்தான்.
கணவனுக்கும் தனக்குமாக காஃபி கப்புகளை கையில் கொண்டு வந்த சிவரஞ்சனி, கணவனின் கைகளில் ஒன்றை கொடுத்துவிட்டு கட்டிலில் அமர்ந்து அமைதியாக தன்னுடைய காஃபியை குடிக்க ஆரம்பித்தாள்.
பொதுவாக கணவன் தலை துவட்டும் நேரத்தில் உடனிருந்தால், அவனுடைய அடர்ந்த மீசையை தன் கைகளால் நீவி, முறுக்கி விடுவது சிவரஞ்சனியின் வழங்கம்.
ஆனால், இன்று அப்படி எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து சிவரஞ்சனி காஃபி குடிக்க, யோசனையோடு அவள் அருகில் தோளுரச அமர்ந்த அருண், “இந்த குட்டி தலைக்குள்ள, அப்பிடி என்ன யோசனை ஓடுது, ம்ம்…?’ என்றான் மனைவியின் தலையை லேசாக ஆட்டியபடி.
“நாம இன்னைக்கு சங்கரன் கோவில், சங்கரநாராயணர் கோவிலுக்கு போய்ட்டு வருவோமா மாமா?” தன் அமைதியை கலைத்துக் கொண்ட சிவரஞ்சனி கணவனிடம் கேட்டாள்.
“என்ன திடீர்னு?” என்றான் அருண் யோசனையாக.
“இல்ல… அந்த கோவில்ல தொட்டில் கட்டி சாமி கும்பிட்டா, சீக்கிரம் குழந்தை பிறக்கும்னு எனக்கு தெரிஞ்ச பாட்டி ஒருத்தங்க சொன்னாங்க. அதான்… போலாமா மாமா?” கண்களில் ஆர்வத்தோடு கேட்டாள் சிவரஞ்சனி.
“ஹேய்… என்னடி இது?… நமக்கு கல்யாணம் ஆகி வெறும் ஐந்து மாசம் தான் ஆகுது. நீ என்னவோ அஞ்சுவருஷம் ஆனமாதிரி பேசுற?” சிரித்தவன், மனைவியின் சுழித்த முகத்தைப் பார்த்து,
“உனக்கு கோவிலுக்கு போகணும்னு தோணிச்சுன்னா போகலாம் சிவா. ஆனா சந்தோஷமா லைஃபை என்ஜாய் பண்ணுங்கடா ன்னு கடவுளா பாத்து நமக்கு தந்திருக்கிற நாட்கள் இதெல்லாம். நம்ம வாழ்க்கையை நாம கொண்டாடுவோம். நடக்க வேண்டியது தானா நடக்கும்.”
மனைவியின் மனகிலேசத்தை விரட்டி விடும் வேகத்தில் சொல்லியவன், “ஆமா என்ன திடீர்னு இப்படி எல்லாம் பேசுற?… யாராவது உன்னை ஏதாவது சொன்னாங்களா, என்ன?” என்றான் அறிந்து கொள்ளும் பொருட்டு.
“ஐயையோ… அப்படி எதுவும் இல்லீங்க மாமா.”
“அப்போ ஏன் திடீர்னு இப்படி எல்லாம் பேசுற?”
“இல்ல… எங்க அக்காவுக்கு எல்லாம் கல்யாணம் ஆன உடனே குழந்தை கிடைச்சாச்சு. ஆனா, எனக்கு அப்படி எதுவும் நடக்கலையே அதான்…” வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தாள் சிவரஞ்சனி.
மனைவியின் பதிலில் வாய்விட்டு சிரித்த அருண், “ஒருவேளை அவங்களுக்கு இருக்கிற சாமார்த்தியம் நமக்கு இல்லையோ என்னவோ?” வா… அதையும் டெஸ்ட் பண்ணி பாத்துடலாம்” என்று கண்ணடித்தபடி மனைவியை அணைக்க முயன்றான்.
அவன் கையில் லேசாக அடித்த சிவரஞ்சனி, “சிங்கிள் கேப் கிடைச்சிடக் கூடாதே. அதுல கூட சிக்ஸர் அடிக்க பாப்பீங்களே நீங்க…” என்று சிரித்தவள், “வாங்க மாமா கோவிலுக்கு போய்ட்டு வந்துடலாம்…” என்றாள் காரியத்தில் கண்ணாக.
“நீ மாமான்னு கூப்பிடுற அழகுக்காகவே, எங்க கூப்பிட்டாலும் வரலாம் போலவே” என்றவன், மனைவியோடு கோவிலுக்கு செல்ல தயாராகி அறையை விட்டு வெளியே வந்தான்.
கோவிலுக்கு போகும் விபரத்தை சிவரஞ்சனி, ரத்னாவிடம் சொல்ல, “சாப்பிட்டுட்டு கிளம்புங்க” என்றார் அவர்.
அந்த நேரம், “உள்ள வரலாமா தம்பி?” என்ற சத்தம் கேட்க, எல்லாருடைய பார்வையும் வாசலுக்கு சென்றது.
அங்கே ஒரு பத்து பேர் புடைசூழ நின்றிருந்தார் நடராஜன். அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்.
“என்னங்க ஐயா… நீங்க போய் இப்படி அனுமதி கேட்டுட்டு வெளியே நிக்கலாமா?” பதறிப்போனவனாக வாசலுக்கு சென்று அவரை வரவேற்றான் அருண்.
இது அந்த நடராஜன் என்ற மனிதரின் வயதுக்கும், நேர்மைக்கும் கிடைத்த வரவேற்பே அன்றி, பதவிக்கானது அல்ல.
“தம்பி, குடும்பத்தோடு வெளியே போக கிளம்பியிருக்கீங்க போல, எங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுமா?” கேட்டபடியே அமர்ந்தார் அந்த மனிதர்.
“கண்டிப்பா…” என்றபடி அவருக்கு எதிரில் கிடந்த இருக்கையில் அமர்ந்தான் அருண்.
“பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு நாள் அறிவிச்சிட்டாங்க, அது உங்களுக்கே தெரியும். ஆனா, இந்த தடவை நான் தேர்தல்ல போட்டியிடப் போறதில்லை. எனக்கு பதில் நீங்க தான் நிக்கப்போறீங்க” என்றார் நடராஜன்.
அவர் தேர்தலைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததும், ‘தன்னிடம் ஆதரவு கேட்டு வந்திருக்கிறாரோ? ஆனால், தொடர்ந்து பஞ்சாயத்து தலைவராக இருந்து ஊர்மக்களுக்கு அவர் செய்திருக்கும் நல்லவைகளுக்காகவே அவருக்கு வாக்குகள் விழுமே’ என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு, அவர் சொல்லிய தகவல் எதிர்பாராததாக இருந்தது.
“இல்ல ய்யா… எனக்கு அதுல எல்லாம் விரும்பம் இல்ல” என்றான் அருண் உடனடியாக.
“என்னத் தம்பி?… உங்களை மாதிரி இளைஞர்கள் எல்லாம் அரசியல் வேண்டாம்னு சொன்னா, நல்ல தலைவர்கள் உருவாகுறது தான் எப்படி?” அலுத்துக் கொண்டார் நடராஜன்.
“எனக்கு அரசியல் மீது விருப்பம் இல்லைன்னு சொல்லுறதை விட, நேரமில்லைன்னு தான் சொல்லணும் ஐயா. அதுதான் உண்மையும் கூட. எந்த துறையில் இறங்குனாலும் முழு ஈடுபாடோட செய்யணும்னு நினைக்கிறவன் நான். கடை வேலையே எனக்கு சரியா இருக்கும் போது, பஞ்சாயத்து தலைவரா பெருசா என்ன செய்துட முடியும் என்னால? அது தெரிஞ்ச பிறகும் நான் தேர்தல்ல நின்னா, அந்த பதவிக்கு நான் நியாயம் செய்யாத மாதிரி ஆகிடாதா?”
அருணின் வார்த்தைகளில் உள்ள உண்மை நடராஜனுக்கு புரிய, “எனக்கு மக்களுக்கு நல்லது செய்யணும்னு மனசுல ஆசை இருந்தாலும், முன்னமாதிரி உடம்புல தெம்பு இல்லை தம்பி. அதான் உங்களைப் போல ஆளுங்க கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிடலாம்னு பாத்தேன்” என்றவர்,
“அந்த வக்கீல் லிங்கம் தேர்தல்ல நிக்கப்போறான்னு தெரிஞ்ச பிறகு, என்னால அப்படியே இந்த விஷயத்தை விடவும் முடியலை” என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்.
” என்னோட நண்பர்கள் நிறைய பேர் இருக்காங்க ஐயா. அதுல விருப்பம் இருக்குற யாரையாவது தேர்தல்ல நிக்க வைப்போமா? என்னை எந்த அளவுக்கு நம்புறீங்களோ, அதே அளவுக்கு அவங்களையும் நம்பலாம்.”
அந்த பெரியவரின் கவலை புரிந்தவனாக அருண் சொல்ல, அனைவராலும் அந்த முடிவு ஏகமனதாக ஒத்துக் கொள்ளப்பட்டு, கோகுல் என்னும் அருணின் தோழன் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் நிறுத்தப்பட்டான்.
கோகுலுக்காக, அனைவரும் களம் இறங்கி வேலை செய்ய, அருணும் அவர்களோடு கை கோர்த்துக் கொண்டான்.
அதைக் காணும்போது லிங்கத்துக்கு தான் வயிறு எரிந்தது. அதுவும் மாலை நேரத்தில் கால்நடையாகவே ஊர்முழுவதும் சென்று அருண் கோஷ்டியினர் வாக்கு சேகரிக்கும் போது, அவர்கள் பின்னால் செல்லும் மக்கள் கூட்டத்தை பார்த்து, ‘தன்னைவிட வயதில் சிறியவனுக்கு மக்கள் மத்தியில் இத்தனை செல்வாக்கா?’ என்று புகைந்தான் லிங்கம்.
இருந்தாலும், விலை கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் மிதப்பாக அவன் இருக்க, லிங்கத்தின் கற்பனைக்கோட்டை இடிந்து தரைமட்டமாகப் போனது தான் மிச்சம்.
ஆம்… அனேக வாக்கு வித்தியாசத்தில் கோகுல் தேர்தலில் ஜெயிக்க, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடத்தில், கோகுலோடு நின்ற அருணை பார்த்த லிங்கத்தின் கண்கள் நெருப்பை கக்கியது.
ஆனால் அதையும் தாண்டி, அவன் வஞ்சக உதடுகளில் நெளிந்த ஏளனச் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் குழம்பிப் போனான் அருண்…