“உங்க ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் கிடைக்கலைன்னா நான் என்ன ஆகியிருப்பேன்னு எனக்கேத் தெரியலை அர்விந்த். எம்மேல கேர் எடுத்துட்டு என்னை கைட் பண்ணுறதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.”
அலுவலகத்தின் ஃபுட் கோட் இல், தன் எதிரே அமர்ந்திருந்த அரவிந்தனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் சந்த்ரிகா.
“இட்ஸ் மை ப்ளஷர் சந்த்ரி” அலட்டிக்கொள்ளாமல் புன்னகையோடு பதில் சொல்லிய அரவிந்தன், தன் எதிரே இருந்த உணவு வகைகளை உண்ண ஆரம்பித்தான்.
இரண்டுமாத பயிற்ச்சி காலத்தை சந்த்ரிகா வெற்றிகரமாக முடித்து, புது ப்ராஜட்டில் இணைந்து வேலை செய்ய ஆரம்பித்து இன்றோடு ஒருமாத காலம் நிறைவடைந்திருக்கிறது.
அதைக் கொண்டாடும் விதமாக அரவிந்தனோடு ஒரு லஞ்ச் ஏற்பாடு செய்திருந்தாள் சந்த்ரிகா.
தன் பயிற்சி காலத்தை வெற்றிகரமாக கடப்பதற்கு பெரிய அளவில் உதவியாக இருந்தது அரவிந்தன் என்ற எண்ணம் சந்த்ரிகாவுக்கு இருந்ததால், அரவிந்தன் நீட்டியிருந்த நட்புக்கரத்தை விலக்காமல் பற்றிக் கொண்டாள் சந்த்ரிகா.
போதாததற்கு இப்போது சந்த்ரிகா பணிபுரியும் ப்ராஜெக்ட் டீம் லீடரும் அரவிந்தன் தான்.
“நீங்க தான் என்னோட டீம் லீடர்னு தெரியும் போது எனக்கு எவ்ளோ ஹேப்பியா இருந்தது தெரியுமா அர்விந்த்? உங்க கூட வேலை பாக்கும் போது எனக்கு கம்ஃபர்டபிளா ஃபீல் ஆகுது தெரியுமா?” தன் சந்தோஷத்தை மறைக்காமல் அரவிந்தனிடம் பகிர்ந்து கொண்டாள் சந்த்ரிகா.
“என்னைக் கேட்டா, நீங்க தேவையில்லாமல் டென்ஷன் ஆகுறீங்கன்னு தான் நான் சொல்லுவேன் சந்த்ரி. யூ ஆர் சோ டேலண்டர்ட். உங்க பயத்தை மட்டும் ஒதுக்கி வச்சிட்டு வேலை பாத்தீங்கன்னா, கொஞ்சநாள்ல என்னையே தூக்கி சாப்பிட்டுடுவீங்க” உதடுபிரியா புன்னகையோடு சொன்னான் அரவிந்தன்.
“உண்மையாவா?” கண்கள் இரண்டும் காதுவரை நீள, சந்தோஷத்தில் வாயைப்பிளந்தாள் சந்த்ரிகா.
“காட் ப்ராமிஸ்” சத்தியம் செய்வது போல சந்த்ரிகாவின் உச்சஞ்தலையை தன் இடது கையால் அழுத்திய அரவிந்தன்,
“உண்மையைச் சொல்லப்போனா நீங்க மட்டும் படிச்ச உடனே வேலையில் ஜாயின் பண்ணியிருந்தா இந்நேரத்துக்கு ஆன்சைட்டுக்கெல்லாம் போயிட்டு வந்திருப்பீங்க” கொஞ்சம் அதிகப்படியாகவே புகழ்ந்தான் சந்த்ரிகாவை.
அரவிந்தனின் வார்த்தைகள், தன்னுடைய இழப்பு பெரிதென சந்த்ரிகாவுக்குள் ஒரு எண்ணத்தை தூண்டிவிட, “எல்லாம் என்னோட தாய்கிழவி செய்த சதி அர்விந்த். இல்லைன்னா நான் எப்பவோ வேலைல சேர்ந்திருப்பேன் தெரியுமா?”
சோர்ந்து போன குரலில் சொல்லிய சந்த்ரிகா, அப்பா இல்லாததால், அம்மா தன்னை வெளியூருக்கு வேலைக்கு அனுப்ப மறுத்தது, திருமணத்திற்கு பிறகு வேலைக்கு வரலாம் என்றால், உடனே குழந்தைகள் பிறந்தது, அதனால் கணவனுக்கும் தனக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம், என்று எல்லா கதையையும் யோசனையின்றி அரவிந்தனிடம் சொல்லியிருந்தாள்.
அவனோ எல்லாவற்றையும் விட்டுவிட்டு, “சந்த்ரி நீ இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா?! என்னால நம்பவே முடியலையே!” ஏதோ இந்த விஷயத்தை இதற்கு முன் அறியாதவன் போல ஆச்சர்யப்பட்டான் அரவிந்தன்.
ஆம்… இந்த அரவிந்தன், லிங்கத்தின் சித்தி மகன். சென்னைக்காரன். இன்னும் திருமணம் ஆகவில்லை. விடுமுறை தினங்களில் அவ்வப்போது பாவூர்சத்திரத்தில் இருக்கும் லிங்கத்தின் வீட்டுக்கு அவன் வருவது உண்டு.
சசிதரன் சந்த்ரிகா திருமணம் நடைபெற்ற அன்றும் பாவூர்சத்திரத்திற்கு வந்திருந்தான் அரவிந்தன்.
சசிதரன் சந்த்ரிகா திருமணம் நடைபெற்று கொண்டிருந்த தென்காசி கல்யாண மண்டபத்தை கடந்து ஊருக்கு செல்லும் போது, சாலையில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக இவன் வந்த பேருந்து மெதுவாக ஊர்ந்து செல்ல, மண்டபத்தின் முன் இருந்த ப்ளக்ஸ் பேனரில் சிரித்தபடியே நின்றிருந்த மணமக்கள் தாராளமாகவே இவன் கண்களில் விழுந்திருந்தனர்.
அதே மணமக்களின் பேனர்கள் அண்ணனின் ஊரில் அவன் வீட்டுக்கு செல்லும் வழியிலும் ஆங்காங்கே காணக்கிடைக்க, மணமக்களின் முகங்கள் நன்றாகவே மனதில் பதிந்து போயிருந்தது அரவிந்தனுக்கு.
சசிதரன், லிங்கம் குடும்பத்திற்கும் இடையே இருக்கும் பகையும் அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே, அந்த பெண் தானா இது என்று உறுதிபடுத்திக் கொள்ள லிங்கத்திற்கு அழைத்தான்.
அரவிந்தன் சொல்லிய விபரங்களை வைத்து அது சசிதரனின் மனைவிதான் என்று லிங்கத்துக்கு தோன்றினாலும், அதை உறுதிபடுத்திக் கொள்ள சந்த்ரிகாவின் புகைப்படம் கேட்டான்.
சில நாட்களிலேயே அதையும் அனுப்பி வைத்தான் அரவிந்தன். புகைப்படம் மூலம் அரவிந்தனுக்கு கீழ் பணிபுரிவது சசிதரனின் மனைவி தான் என்று லிங்கத்துக்கு உறுதியானவுடனே, அவனுடைய அழுக்கு பிடித்த மனது கண்ணிமைக்கும் நேரத்தில் சில கணக்குகளைப் போட்டது.
முதலில் லிங்கம் சொல்லியவற்றை செய்ய அரவிந்தன் தயங்கினான். “இந்த அண்ணனுக்காக இதைக்கூட செய்யமாட்டியா?” என்று கேட்டு அரவிந்தனை சம்மதிக்க வைத்திருந்தான் லிங்கம்.
சந்த்ரிகாவும் ஆரம்பத்தில் வேலையில் தடுமாற, கூடுதல் கவனம் எடுத்து, அவளுக்கு சொல்லிக் கொடுத்து, உதவிகள் செய்து என்று வெகுவிரைவிலேயே அவன் நீட்டிய நட்புக்கரத்தை விலக்காமல் சந்த்ரிகாவை பற்றிக்கொள்ள வைத்திருந்தான் அரவிந்தன்.
ஆரம்பத்தில் அரவிந்தனை சார் என்று தான் அழைத்தாள் சந்த்ரிகா. ஆனால் அவன் தான், “இந்த கார்ப்பரேட் உலகத்தில் பெயர் சொல்லி அழைத்தால் போதும்” என்று பெயரைச் சொல்லி அழைக்கவும் வைத்திருந்தான். இப்போது சந்தடி சாக்கில் அவளை ‘நீ’ என்று ஒருமையிலும் அழைத்தாயிற்று.
அரவிந்தனின் வார்த்தைகளில் லேசாக வெட்கச் சிரிப்பு ஒன்றை சிரித்த சந்த்ரிகா, “ம்ம்…இரண்டு பேரும் ட்வின்ஸ், நைன் மந்த்ஸ் பேபீஸ்” என்றாள் மெல்லிய குரலில்.
“இரண்டு பேபீஸ்க்கு அம்மான்னு நீயா சொன்னா கூட நம்ப முடியலை சந்த்ரி. எனக்கென்னவோ உன்னைப் பாத்தா, ட்வெல்த் முடிச்சுட்டு அப்படியே ஸ்கூல்லயிருந்து இறங்கி வேலைக்கு வந்துட்டியோன்னு தான் தோணுது.”
காலங்காலமாக பெண்களை முட்டாளாக்க ஆண்கள் பயன்படுத்தும் தந்திரத்தை கையிலெடுத்து அரவிந்தன் பேச, முட்டாள் சந்த்ரியோ மந்திரித்து விட்ட கோழியாக மதிமயங்கி நின்றாள்.
“ம்ப்ச்… சும்மா கலாய்க்காதீங்க பாஸ்” என்று சிணுங்கியவள்,
“உங்களை மாதிரி ஜென்ட்ஸ் க்கு நம்ம நாட்டுல இருக்குற சுதந்திரம், எங்களை மாதிரி லேடீஸுக்கு இல்லாமப் போச்சு. எதையெல்லாம் தாண்டி அவங்க ஆசையை நிறைவேற்ற வெளியே இறங்க வேண்டி இருக்கு பாத்தீங்களா அர்விந்த்” என்றாள் தன் விட்ட பேச்சைத் தொடர்ந்தபடி.
“உனக்கு தைரியமில்லைன்னு சொல்லு, அதை விட்டுட்டு தடை , அது இதுன்னு சப்ப கட்டு கட்டாத” சந்த்ரிகாவின் மன உணர்வுகளை கொம்புசீவும் பணியில் கனகச்சிதமாக ஈடுபடத் தொடங்கினான் அரவிந்தன்.
“பேசுறது ரொம்ப ஈஸி அர்விந்த், என்னோட சூழ்நிலையில் நீங்க இருந்து பாத்தா தான் உங்களுக்கு புரியும்” கோபமாக வார்த்தைகள் வந்தது சந்த்ரிகாவிடமிருந்து.
அவளின் கோபம் தன்னைப் பாதிக்காதவனாக சாப்பிட்டு முடித்த அரவிந்தன், கைகளைக் கழுவ எழுந்து சென்றான். உண்டு முடித்துவிட்டதால் சந்த்ரிகாவும் அவனோடு சென்றாள்.
கை கழுவுமிடத்தில் ஏற்கனவே இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். தோற்றத்தில் நாகரீகத்தின் உச்சியில் இருந்த இருவரும் அரவிந்தனோடு எந்த தயக்கமும் இன்றி கலகலவென்று பேசினார்கள். விடைபெறும் போது அவனிடம் சிறு கைகுலுக்கலோடும், தோளணைப்போடும் விடைபெற்றுக் கொண்டார்கள்.
“இவங்களும் உன்னை மாதிரி பொண்ணுங்க தான். ஆனா, நீ சொன்ன சில்லி ரீசன்ஸ் ஒண்ணு கூட அவங்க கேரியர் லைஃபை ஸ்பாயில் பண்ணமுடியாது.” அங்கிருந்த டிஸ்யூவால் கழுவிய கையைத் துடைத்தபடி சொன்னான் அரவிந்தன்.
“அதெப்படி இவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்லுறீங்க அர்விந்த்?” அடுத்த பெண்களை தன்னோடு ஒப்பிட்டு உயர்வாக அரவிந்தன் சொல்லவும், அவள் உள்ளிருந்த பிறவிக் குணம் தலைதூக்க, கொஞ்சம் கோபத்தோடு கேட்டாள் சந்த்ரிகா.
“இத்தனை வருஷமா…” என்று தொடங்கியவன் நிறுத்தி நிதானமாக, “ஏன்… இப்போ வரைக்கும் நீ கட்டுப்பட்டியா தான் இருக்குற. ஆனா அந்த பொண்ணுங்களை மாதிரி உனக்கு தைரியம் இல்லைன்னு சொன்னா மட்டும் கோபம் பொத்துகிட்டு வருது” போலியாக அலுத்துக் கொண்டான்.
‘தான் எத்தனை பேரையோ பட்டிக்காடு என்று சொல்லியிருக்க, தன்னை ஒருவன் அதே அர்த்தத்தில் பேசுவதா?’ என்ற எண்ணத்தில், “கட்டுப்பட்டியா? யாரு?… நானா?…” என்றாள் சந்த்ரிகா சீறியபடி.
“பின்ன நானா?.. உன் ட்ரெஸ்ஸிங் சென்ஸ்ஸே சொல்லலையா, நீ ஒரு பட்டிகாடுன்னு.”
அலட்சியமாக வந்த அரவிந்தனின் பதில் அவளை உசுப்பேற்றி விட, “நானும் விதவிதமா உடுத்த, ஆசைப்பட்டேன் தான். ஆனா, என்னோட ஹப்பி அலவ் பண்ணல” சொன்னவள், சட்டென்று தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.
அவளின் செயலில் வாய்விட்டு சிரித்த அரவிந்தன், “உன்னைக் கட்டுப்பட்டின்னு நான் சொன்னனா இல்லையா? நீ கட்டுப்பட்டின்னா உம் புருஷன் சரியான பட்டிக்காடு போல. உடம்புல வளைவு நெளிவு இல்லாததுங்க எல்லாம் அட்டகாசமா ட்ரெஸ் பண்ணுங்க. ஆனா நீ…” என்றவன், சந்த்ரிகா தன்னை முறைத்து பார்க்கவும்,
“இதுக்கு மேல நான் எதுவும் சொல்லமாட்டேன் சாமி… தப்பிச்சு ஓடிடுடா அரவிந்தா…” என்று தனக்குத்தானே முணுமுணுக்கிறேன் பேர்வழி என்று சத்தமாக சொல்லியபடி அங்கிருந்து நகர்ந்தான். யோசனையோடு அவனைத் தொடர்ந்தாள் சந்த்ரிகா.
சந்த்ரிகாவின் யோசனை கவிழ்ந்த முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தவன், ‘அண்ணன் சொன்ன ஐடியாவை செயல்படுத்த ரொம்ப நாளாகாது போலவே!’ என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
பிற பெண்களோடு தன்னை ஒப்பிட்டு ‘கட்டுப்பட்டி’ என்று சொன்ன அரவிந்தனின் வார்த்தைகள், அன்று முழுவதும் சந்த்ரிகாவை மனதளவில் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.
மாலையில், வேலை முடிந்து வெளியே வந்தவள், முதல் வேலையாக ஒரு பெரிய டெக்ஸ்டைல் ஷோரூமுக்கு வந்தாள். அதற்கு முன், தான் வருவதற்கு கொஞ்சம் தாமதமாகும் என்று இராஜேஸ்வரிக்கு ஃபோன் செய்து தகவல் சொன்னவள், அவர் அடுத்து பேசும் முன் ஃபோனை அணைத்திருந்தாள்.
கணவனின் அன்னை மட்டும் இல்லையென்றால், குழந்தைகளை விட்டுவிட்டு தன்னால் இத்தனை தைரியமாக வேலைக்கு சென்று வரமுடியாது என்ற உண்மை அவளுக்கும் புரிந்திருந்தது.
அதனால் அவரிடம் எப்போதுமே மரியாதையாகவே நடந்திருக்கிறாள் சந்த்ரிகா. ஆனால் அந்த மரியாதையின் ஆயுள், அவர் தன்னிடம் எதிர்கேள்வி கேட்கும் வரை தான் என்ற உண்மை அவளுக்கே புரிந்திருந்தது. அதனாலேயே அடுத்து பேச அவரை விடவில்லை அவள்.
கடைக்குள் நுழைந்தவள் மாமியாருக்கு முதலில் நல்லதாக ஒரு புடவை எடுத்துக் கொண்டாள். பின் குழந்தைகளுக்கு எடுத்தவள், அன்று கணவன் மறுத்ததால் தான் எடுக்காமல் சென்ற உடைகளைப் போன்று மனம் விரும்பியபடி வாங்கிக் கொண்டாள்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அங்கு செலவழித்தவள், ஒரு கேப் புக் செய்து வீட்டுக்கு வந்தாள். அவளுக்கு பிறகு வீட்டுக்கு வரும் சசிதரன் கூட அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்திருந்தான்.
அவளைக் காணவும், சோஃபாவை பிடித்துக்கொண்டு நிற்க முயற்சி செய்து கொண்டிருந்த அபிநந்தன், சட்டென்று தரையில் அமர்ந்து விறுவிறுவென்று தவழ்ந்து வந்து தாயின் கால்களை பிடித்து எழுந்து நின்று, தன்னை தூக்குமாறு ஓங்கி அழ ஆரம்பித்தான்.
தகப்பனின் கைகளில் இருந்தால் பெரும்பாலும் தாயைக் கண்டுகொள்ளாத நந்தனா கூட, சசிதரனிடமிருந்து தாயை நோக்கி கைகளை நீட்டி தன்னையும் தூக்கிக்கொள்ளச் சொல்லி உரிமைக்குரல் எழுப்பியது.
அந்த பிஞ்சுகளின் பாசப்போராட்டம் சந்த்ரிகாவை என்னவோ செய்ய, தன் மழலைகள் இரண்டையும் ஒருசேர கைகளில் அள்ளி முத்தமிட்டபடி சோஃபாவில் அமர்ந்தாள்.
“எப்பவும் வர்ற டைம்முக்கு நீ வரலைன்னதும், பிள்ளைங்க தவிச்சு போய்ட்டாங்க சந்த்ரி. இனிமே இப்படி லேட்டாக்காம சரியான நேரத்துக்கு வந்துடு ம்மா.”
இரண்டு பிள்ளைகளின் பரிதவிப்பை ஒற்றை ஆளாக சமாளித்திருந்த இராஜேஸ்வரி மனது கேளாமல் மருமகளிடம் சொல்ல, “மணி அடிச்சதும் டாண்ணு வீட்டுக்கு வர்றதுக்கு, ஊர்காட்டுல நான் டீச்சர் வேல பாக்கலை அத்த” வெடுக்கென்று பதில் சொல்லியிருந்தாள் சந்த்ரிகா.
தன்னை மறந்து தன் சுயத்தை மருமகள், மாமியாரிடம் காட்ட, கொஞ்சம் வெலவெலத்து தான் போனது இராஜேஸ்வரிக்கு.
“யார்கிட்ட பேசுறோம் ங்குறதை ஞாபகம் வச்சிட்டு பேசு சந்த்ரி” அடுத்த நொடி சசிதரன் மனைவியை கண்டிக்க, ‘தன்னைக் கொண்டு கணவன் மனைவிக்கிடையே ஏதும் பிரச்சினை வந்துவிடுமோ?’ என்று பயந்து போன இராஜேஸ்வரி,
“அவ உண்மையைத் தானே டா சொன்னா, அதுக்கு ஏன் நீ கோபப்படுற?” என்று மகனை சாந்தப்படுத்த முயன்றார். ஆனால் என்ன முயன்றும் தன் முகத்தில் வந்து போன வலியை அவரால் மறைக்க முடியவில்லை.
சந்த்ரிகாவுக்குமே தான் பேசியது அதிகப்படி என்று தோன்ற, “சாரி அத்த… வொர்க் ப்ரஷர்… ஏதோ டென்ஷன்ல சொல்லிட்டேன், மனசுல வச்சிங்காதீங்க” வேலையின் மீது பழியைத் தூக்கி போட்டு, தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
“பாத்தா அப்படி தெரியலையே?… ஜாலியா ஷாப்பிங் போய்ட்டு வந்த மாதிரில்ல இருக்கு.” அங்கு பரப்பி வைத்திருந்த துணிக்கடை பைகளைப் பார்த்தபடியே சொன்னான் சசிதரன்.
“ஜாலி பண்ணுறதுக்காக போகலை சசி, பர்சேஸ் பண்ணனும்னு தோணிச்சு, போனேன்” என்றபடி, தன் மடியில் உட்கார்ந்து மலங்க மலங்க தங்களைப் பார்த்துக் கொண்டிருந்த மழலைகளை முத்தமிட்டு கீழே இறக்கி விட்டவள், இராஜேஸ்வரிக்கு எடுத்த புடவையை முதலில் அவரிடம் நீட்டினாள். அவருக்கோ, இத்தனை நாள் இல்லாத தயக்கம் ஒன்று முதன்முதலாக மருமகளிடம் வந்தது.
“ம்ப்ச்… எதையும் மனசுல வச்சிக்காம வாங்குங்க அத்த” என்றபடி அவரின் கையைப்பிடித்து புடவையை வைத்தவள், சரசரவென்ற சத்தத்தில் திரும்பி பார்த்தாள். அவளின் புத்திர செல்வங்கள் போட்டி போட்டுக்கொண்டு, பைகளில் இருந்த அத்தனைத் துணிகளையும் தரையில் கடைபரப்பிக் கொண்டிருந்தார்கள்.