சசிதரன் குடும்பம் வசிக்கும் அடுக்குமாடி வீடு, சமீபகாலமாக தான் தொலைத்திருந்த சிரிப்பு சத்தத்தால் நிறைந்திருந்தது.
குழந்தைகள், அபிநந்தன் மற்றும் நந்தனாவின் முதல் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, நேற்றே பாவூர்சத்திரத்தில் இருந்து சசிதரனின் உறவுகள் வந்து இறங்கியிருந்தார்கள். சந்த்ரிகாவின் அம்மா ராதாவும் அவர்களோடு வந்திருந்தார்.
கடையை பார்த்துக் கொள்வதாக சொல்லி அருணின் அப்பா மட்டும் வரவில்லை.
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தன் குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக கண்ட இராஜேஸ்வரி தலைகால் புரியாத சந்தோஷத்தில் நடமாடிக் கொண்டிருந்தார்.
அதுவும் மனம் மாறிய ரத்னாவுக்கும் அவருக்குமான முதல் நேரடி சந்திப்பு. தயக்கங்களை உதறி இருவருமே ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டார்கள்.
இப்போது வரை தனது அண்ணியின் போலியான பாசத்தில் ஏமாந்துவிட்டேன் என்று, தன் கணவர் தவிர வேறு யாரிடமும் ரத்னா சொல்லவில்லை.
ஆனால் பாக்யாவின் வருகை தங்கள் வீட்டில் இல்லை என்றானதுமே, ரத்னாவுக்கும் அவருக்குமிடையே ஏதோ மனகசப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மற்றவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.
வந்த நேரத்திலிருந்து அக்காவின் குழந்தைகள் சிவரஞ்சனியின் இடுப்பைத் தான் நிறைத்து கொண்டிருக்கிறார்கள்.
மூன்று மாதம் வரை வளர்த்த இரத்தபாசமோ என்னவோ குழந்தைகள் இருவருமே சிவரஞ்சனியிடம் சட்டென்று ஒட்டிக்கொண்டார்கள். ஏற்கனவே குழந்தை ஏக்கத்தில் இருப்பவளுக்கு, அந்த பிஞ்சுகளின் செயல் மயிலிறகால் மனதை மென்மையாக வருடி விட்டது போல இருந்தது.
காலையிலேயே அனைவரும் குழந்தைகளோடு கோவிலுக்கு சென்று விட்டு, ஹோட்டலில் காலை உணவையும் முடித்து விட்டு வீடு திரும்பியிருந்தார்கள்.
நாயகி, இராஜேஸ்வரி, ரத்னா என்ற முப்பெருந் தேவியரும் டைனிங் செயரில் உட்கார்ந்து சுவாரஸ்யமாக கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஹால் தரையில் அமர்ந்து கோவிலுக்கு செல்வதற்காக குழந்தைகளுக்கு அணிவித்திருந்த உடைகளை களைந்து, இலகு உடைகளை அணிவிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் சிவரஞ்சனி.
குழந்தைகளோ கிளுகிளுவென்று சிரித்தபடி, வளைந்து நெளிந்து உடைபோட மறுத்து அவளிடம் ஒரு சர்க்கஸ்ஸே நடத்திக் கொண்டிருந்தார்கள்.
பலூன்களாலும், அலங்கார பேப்பர்களாலும் ஹாலை அண்ணனோடு சேர்ந்து அலங்கரித்து கொண்டிருந்த அருணுக்கு, குழந்தைகளோடு குழந்தையாக மாறிப்போயிருந்த மனைவியைப் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.
செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு மனைவிக்கு அருகே வந்து அமர்ந்தவன், தன் கைகளுக்குள் இரண்டு சிட்டுக்களையும் சிறை வைத்துக் கொண்டு,
“ஏன்டா எம்பொண்டாட்டியை போட்டு பாடாபடுத்துறீங்க? ஒழுங்கா ட்ரெஸ் போட்டுக்கிட்டா என்னவாம் உங்களுக்கு?” என்று பொய்யாக அதட்டியபடி அந்த பிஞ்சுகளின் பால்கோவா கன்னத்தில் முத்தமாரி பொழிந்தான்.
“ஐயே… ரொம்ப தான் ஐயாவுக்கு எம்மேல அக்கறை பொங்கி வழியுது” சிரித்தபடியே கணவனின் கைகளுக்குள் இருந்த குழந்தைகளுக்கு எளிதாக உடையை அணிவித்து விட்டாள் சிவரஞ்சனி.
“எங்களுக்கெல்லாம் அக்கறை இருக்கு மா. நீ தான், ஹனிமூனுக்குன்னு நாம எங்கேயும் போகலை, இங்கயாவது எங்கூட வாங்க மாமான்னு சொல்லி என்னைக் கூட்டிட்டு வந்துட்டு, வந்த நேரத்திலிருந்து எம்பக்கத்திலேயே வர மாட்டேங்குற” மனைவியிடம் குற்றப் பத்திரிகை வாசித்தான் அருண்.
அப்பா மட்டும் தனியாக கடையை பார்த்துக் கொள்ளுவது கடினம் என்பதால், தானும் அவரோடு ஊரிலேயே இருந்து கொள்வதாக சொன்னான் அருண்.
கணவன் வரவில்லை என்றவுடன் சிவரஞ்சனியும் பின்வாங்கினாள். “நீ போய்ட்டு வா சிவா” என்று சொன்ன கணவனிடம் மேலே உள்ள டயலாக்கை சிவரஞ்சனி சொல்ல, அருணவன் மறுபேச்சில்லாமல் கிளம்பியிருந்தான்.
“எல்லாம் உங்களை எங்கூட வரவைக்கிறதுக்காக பேசுன டயலாக், உண்மைன்னு நம்பிட்டீங்களா மாமா?” ஆட்காட்டி விரலை தன் முகவாயில் வைத்து வேண்டுமென்றே ஆச்சர்யமாக சிவரஞ்சனி கேட்க,
“சரியான கேடி டி நீ” கண்களை உருட்டியபடி மனைவியின் காதை பிடித்து முறுக்க அருணின் கை நீண்டது.
சட்டென்று அந்த கையில் தன் பிஞ்சுக் கரம் கொண்டு அடித்த அபிநந்தன், தன் சித்தப்பனின் முகத்தைப் பற்றி, கன்னத்தில் தன் பச்சரிசி பால் பற்கள் கொண்டு கடித்தும் வைத்தான்.
“ஷ்ஷ்… ஆ… ஏன்டா… ஏன் இந்த கொலவெறி?” அண்ணன் மகனின் முகத்தோடு முகம் வைத்து கேட்ட அருண், “வந்த அன்னைக்கே உன்னோட பழக்கத்தை இவனுக்கும் சொல்லி குடுத்தாச்சா?” என்று மனைவியை கிண்டலடித்தான்.
“யாரு?… நான் உங்களைக் கடிக்கிறனா?…”
“இல்லையா பின்ன?”
“பொய்யைச் சொன்னாலும் கொஞ்சம் பொறுந்த சொல்லுங்க மாமா.”
கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் வழக்கடித்துக் கொண்டிருக்க, “பேசி முடிச்சி பைசல் பண்ணிட்டு சீக்கிரம் வாங்கடா, கேக் கட் பண்ணனும்” குறும்பு சிரிப்போடு அவர்களை கடந்தான் சசிதரன்.
“ஏன்?… மூனு பேபீஸ் ஒரே நேரத்தில் பொறந்தா வேண்டாம்னு சொல்லிடுவியா என்ன?”
“ஆத்தாடி …ஆத்தா… இது என்ன புது புரளியா இருக்கு மாமோய்?…” வெட்கச்சிரிப்பை சிந்தியபடி அங்கிருந்து கொலுசு சப்திக்க எழுந்து ஓடினாள் சிவரஞ்சனி. முகமோ சந்தோஷத்தில் மின்னியது.
ஆனால் இதற்கு எதிர்மாறான மனநிலையில் இருந்தாள் சந்த்ரிகா.
குழந்தைகளின் பிறந்தநாளை கணவன், மாமியார் மற்றும் உயிர்த்தோழன் அரவிந்தனுடன் ஆடம்பரமாக ஒரு ஸ்டார் ஹோட்டலில் கொண்டாட வேண்டும் என்று நினைத்திருந்தாள் சந்த்ரிகா..
ஆனால் ஊரிலிருந்த உறவுகள், இவர்கள் சொல்லாமலேயே குழந்தைகளின் பிறந்தநாளை ஞாபகம் வைத்து விசாரித்ததோடு, மொத்தமாக வந்து குதித்து சந்த்ரிகாவின் திட்டத்துக்கு மூடுவிழா நடத்திவிட்டார்கள்.
அப்படியிருந்தும் அரவிந்தனை தங்கள் வீட்டுக்கு அழைத்தாள் தான் சந்த்ரிகா. ஆனால் அவனோ, “நிறைய நாளுக்கு அப்புறமா ஃபேமிலி மெம்பர்ஸ் ஒண்ணா கூடும் போது, நான் எதுக்கு சந்த்ரி?” என்று வர மறுத்திருந்தான்.
அவனின் மறுப்பு, உறவுகள் மீது வெறுப்பாக மாற, தன் வீட்டுக்கு, தன் குழந்தைகளுக்காக வந்திருக்கும் உறவுகளுக்கு செய்ய வேண்டிய விருந்துபசரணைகளைக் கூட முழுமனதாக செய்யமுடியவில்லை அவளால்.
இதில் நாயகியும், ரத்னாவும், ஏன்?.. தன் மாமியார் கூட எதற்கெடுத்தாலும், சிவா… என்று தங்கையையே அழைக்க, கூடவே பிறந்த பொறாமை உணர்வில் பொசுங்கினாள் சந்த்ரிகா.
இந்த பொறாமை உணர்வும், ‘தான்’ என்ற அகம்பாவமும் பணிபுரியும் இடத்தில் கூட அரவிந்தனை தவிர வேறு நட்புகளை பெற்றுத் தரவில்லை என்பதையும் உணரவில்லை சந்த்ரிகா.
“சிவா… எல்லாம் ரெடியாச்சு, பிள்ளைங்களை கூட்டிட்டு வா, கேக் கட் பண்ணலாம்” ஹாலில் இருந்து சசிதரனும் சிவரஞ்சனியையே அழைக்க, தங்கையின் கைகளிலிருந்த குழந்தைகளை தன் கைகளில் பற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்த சந்த்ரிகாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
ஆனால் அது எதுவுமே சசிதரனை பாதிக்கவில்லை. எதுவும் அளவோடு இருந்தால் தானே அதற்கும் மதிப்பு.
குழந்தைகளை கேக் கட் பண்ண வைத்து, அவர்கள் மகிழும் வண்ணம் பரிசுகள் கொடுத்து என்று அந்த நிகழ்வை கலகலப்பாகவே முடித்தார்கள்.
அடுத்து மதியத்திற்கு என்ன சாப்பாடு செய்யலாம் என்ற பேச்சு வர, “சிவா, என்ன செய்யலாம்னு சொல்லு” என்றார் பழக்கதோஷத்தில் நாயகி.
“தினம் கூடவே வச்சி அவளுக்கு செய்து தானே போடுறீங்க, இப்பவும் அவகிட்டயே கேட்டா எப்படி அத்த?”
சந்த்ரிகாவின் பொறாமையின் வெளிப்பாடு தான் இந்த கேள்வி. ஆனால் அது எதையும் கண்டு கொள்ளாமல், “உனக்கு எதுவும் செய்து தரணுமா சந்த்ரி? சொல்லு செய்துடலாம்” என்றார் நாயகி.
“எப்பவும் வீட்ல தானே சாப்புடுறோம். இன்னைக்கு ஒருநாள் வெளிய போய் சாப்பிட்டா என்ன? நமக்கு வேலையும் மிச்சம்” என்றாள் சந்த்ரிகா பதிலாக.
“ஐயையோ… வெளியவா? நீங்க மட்டன் பிரியாணி செய்து தருவீங்கன்னு ஆசையா இருந்தேன் நாயகி ம்மா” பட்டென்று தன் ஆசையை சசிதரன் சொல்ல, அதற்கு மேல் சந்த்ரிகாவின் ஆசை அங்கே செல்லுபடியாகுமா என்ன?
சந்த்ரிகாவின் குணம் குடும்பம் முழுக்கவே பிரபலம் தான். இருந்தாலும் தங்களுக்கு முன்பே சசிதரனை மட்டம் தட்டி அவள் பேச, அனைவரின் முகமும் வாடிவிட்டது.
சசிதரனோ மனைவியின் வார்த்தைகளை கண்டு கொள்ளாமல், ” சமைக்க என்னெல்லாம் வேணும்னு சொல்லுங்க நாயகி ம்மா, ஒரு அரைமணி நேரத்துக்குள்ள வாங்கிட்டு வந்துடுறேன்” என்றான்.
சசிதரனை பின்பற்றி, சந்த்ரிகாவின் வார்த்தைகளை மற்றவர்களும் ஒதுக்கினார்களே தவிர, அவளை எந்த இடத்திலும் ஒதுக்கவில்லை.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ராதா மனம் கேளாமல் தனிமையில் மகளை கண்டித்தார்.
ஆனால், இனி நீங்க சொல்லுறதை நான் கேட்க மாட்டேன். நான் சொல்லுறதை தான் நீங்க கேட்க வேண்டும் என்ற ரீதியில் சந்த்ரிகாவின் பேச்சிருந்தது.
இது திருமணத்துக்கு முன், அல்லி குளத்தில் தான் சொன்னவற்றை கேட்டுக்கொண்டிருந்த சந்த்ரிகா அல்ல என்று மகளிடம் பேசத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புரிந்து போனது ராதாவுக்கு.
குதிரையை தண்ணீர் தொட்டிக்கு பக்கத்தில் கொண்டுவந்து, தண்ணீரை குடி என்று விடத்தான் முடியும். குதிரைக்கு பதில் தண்ணீரை நாம் குடிக்க முடியாதே.
அப்படித்தான், உன் செயல்கள் சரியில்லை, திருத்திக்கொள் என்று சொல்லத்தான் முடியும். அதை புரிந்து கொண்டு நடப்பது எதிராளியின் கையில் தானே இருக்கிறது.
இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகிப்போன தன் பெண்ணை, அவளின் புகுந்த வீட்டாரையும் வைத்துக் கொண்டு ஓரளவுக்கு மேல் கண்டிக்கவும் முடியவில்லை ராதாவால்.
‘ஆண்டவா, இந்த அழகான வாழ்க்கையையும், அருமையான குடும்பத்தையும் தக்க வச்சிக்கிற புத்திசாலித்தனத்தை என் மகளுக்கு குடுப்பா” என்று எப்போதும் போல அந்த இறைவனேயே சரணடைந்தார் ராதா.
மட்டன் பிரியாணி, மட்டன் கிரேவி, மட்டன் சுக்கா என்று சமையலை அதகளபடுத்தியிருந்தார் நாயகி.
“பிரியாணியை பார்த்ததே இல்லையா?” என்று கணவனிடம் கேட்ட சந்த்ரிகா முதல் ஆளாக உட்கார்ந்து, அங்கும் இங்கும் அசையாமல் பிரியாணியை ஃபுல்கட்டு கட்டிக் கொண்டிருந்தாள்.
சந்த்ரிகாவின் செயல் அனைவரின் இதழ்களிலும் புன்முறுவலைப் பூக்கச் செய்தாலும், அதைப்பற்றி யாரும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.
சாப்பாட்டு நேரத்தில் ஒவ்வொரு கதையாக வெளியே வர, கிராமத்து பஞ்சாயத்து தேர்தலைப் பற்றிய கதைகளும், அதில் அருண் பிரச்சாரம் செய்து அவன் தோழன் ஜெயித்த கதையும், லிங்கம் தோற்ற கதையும் கூட வந்தது.
“அந்த லிங்கம் ரொம்ப கன்னிங் ஃபெல்லோ அருண். அவங்கிட்ட கொஞ்சம் கவனமாவே இரு.”
லிங்கத்தைப் பற்றிய கதை வந்ததும், தான் எப்போதும் தம்பியிடம் சொல்லும் வார்த்தைகளைச் சொன்னான் சசிதரன்.
அன்று கோவிலுக்கு சென்றபோது அக்காவிடம் லிங்கம் நடந்து கொண்ட முறையை அண்ணனிடம் மட்டும் சொல்லியிருந்தான் அருண்.
‘இத்தனை வருடங்கள் கழித்து இப்படி ஒரு செயலைச் செய்த லிங்கம், தம்பி அடித்ததை மனதில் வைத்துக் கொண்டு என்ன வேண்டுமென்றாலும் செய்வான்’ என்ற எண்ணத்திலேயே அடிக்கடி அருணிடம் அவன் சொல்லுவது.
ஆனால், அருணின் அப்பா அடித்ததையே இன்னும் அந்த லிங்கம் மறக்கவில்லை என்பது தெரியாமல்தான் போனது அவனுக்கு.
சசிதரனைப் போலவே மீனாட்சியும் தம்பியுடன் பேசும் போதெல்லாம், தம்பிக்கு கவனம் சொல்ல தவறுவதில்லை.