அப்போது, அறைக்குள் தூங்குவதற்காக சென்றிருந்த சசிதரனின் அப்பா வேலுச்சாமி, “இராஜி… வாயு குத்து மாதிரி இருக்குது. கொஞ்சம் வெந்தயத் தண்ணி வச்சி தர்றியா ம்மா” என்று கேட்டுக்கொண்டு வந்து நின்றார்.
வேலுச்சாமியின் குரலில் பதறியடித்து எழும்பிய பெண்கள் மூவருக்கும், வியர்த்து விறுவிறுத்து போய் வந்து நின்றவரின் தோற்றம் பதட்டத்தை தருவதாக இருக்க, “என்ன செய்யுது?” என்று ஒருசேர கேட்டார்கள்.
“நெஞ்சு… வலிக்…குது…” வாயு குத்து என்ற வார்த்தை, இப்போது நெஞ்சுவலியாக வேலுச்சாமியின் வாயில் மாறியிருந்தது. முகமோ வேதனையை தாங்க முடியாமல் அஷ்டகோணலாக மாற, “சசிதரா… அப்பாவை பாருடா…” என்ற சத்தம் இராஜேஸ்வரியிடமிருந்து உச்சஸ்தாயியில் வந்தது.
இராஜியின் சத்தத்தில் வாசலுக்கு வெளியே வராண்டாவில் நின்று பேசிக்கொண்டிருந்த, சசிதரனும் அருணும் அடித்து பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.
அதற்கு முன் தரையில் சாய ஆரம்பித்திருந்த வேலுச்சாமியை பெண்கள் மூவரும் தாங்கிக் கொள்ள, வீட்டுக்குள் வந்திருந்த அருண் அவரைத் தூக்கி, அங்கிருந்த நீளமான சோஃபாவில் படுக்க வைத்தான்.
நடந்த களேபரத்தில் அறைக்குள் இருந்தவர்களும் இப்போது இங்கே தான்.
பதறிப்போனவர்களாக அனைவரும் அவர் அருகில் நின்று கொண்டு, “என்ன செய்யுது உங்களுக்கு?” என்று திரும்பத் திரும்ப கேட்க, இராஜேஸ்வரியோ பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார்.
எல்லோரும் படித்தவர்கள் தான். ஆனால் திடீரென்று தங்களுக்குள் ஒருவர் சாயவும், மூளை ஸ்தம்பித்து போனவர்களாக என்ன செய்வது என்று தெரியாமல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
“எல்லாரும் மாமாவை அமுக்காதீங்க, கொஞ்சம் தள்ளி நில்லுங்க… அவங்களுக்கு காத்து வரட்டும்.” சத்தமான குரலில், கொஞ்சம் அதட்டலாகச் சொன்னாள் அங்கு நின்ற சிவரஞ்சனி.
அவளின் செவிலியப் பயிற்சி, மனதின் உணர்வுகளை தள்ளிவைத்து அறிவு வழியே செல்ல வழிகாட்டியது.
கூடவே, மாமனாருக்கு வந்திருப்பது மாரடைப்பு என்றும், எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனை போக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக போய்விட வேண்டும் என்றும், அவளது மருத்துவ அறிவு சொல்லியது.
அது எதையும் வெளிப்படையாக இப்போது சொல்லி, ஒரு குழப்பத்தை ஏற்படுத்த விரும்பாமல், சோஃபாவிற்கு மேலிருந்த ஃபைனை சுழலவிட்டுக் கொண்டே,
“அத்தான், நீங்க கீழப் போய் ஹாஸ்பிடல் போக வண்டி ரெடி பண்ணுங்க. அத்த, நீங்க குளுந்த தண்ணி கொண்டு வாங்க. அம்மா, நீங்க என் பர்ஸை எடுத்துட்டு வாங்க.”
ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டளையைப் போட்ட சிவரஞ்சனி, மாமனாரின் அருகே மண்டியிட்டு அமர்ந்து, அவரின் சட்டை பட்டன்களை அவிழ்த்து, சட்டையை தளர்த்தி விட்டாள்.
அம்மா கொண்டுவந்து தந்த தன் பர்ஸ்ஸிருந்து, தான் எப்போதும் கையோடு வைத்திருக்கும் அஸ்பிரின் டேப்லட் ஒன்றை குளிர்ந்த நீரோடு வேலுச்சாமியை உட்கொள்ள வைத்தவள், ஒரு துணியை நனைத்து அவரின் முகத்தை துடைத்தும் விட்டாள்.
அப்போது சரியாக, “வண்டி ரெடி..” என்று சொல்லி சசிதரன் வந்து நிற்க, மறுபடியும் தன் பெரியப்பாவை கைகளில் அள்ளிக் கொண்டான் அருண்.
சசிதரன் லிஃப்ட் க்கு வழிகாட்ட, அதை மறுத்து, அந்த ஐந்து மாடியையும் படிகளின் வழியாகவே கடந்தான் அருண்.
அவனுக்கு சர்ரென்று அதிவேகமாக இறங்கும் அந்த மின்தூக்கியின் வழியே பெரிய தகப்பனை கொண்டு செல்ல பயமாக இருந்தது. அதனாலேயே கடினம் என்றாலும் படிவழியே இறங்கினான் அருண்.
கீழே ஆம்புலன்ஸ் தயாராக நின்றது. அதில் வேலுச்சாமியை ஏற்றி உடனடியாக முதலுதவியும் தொடங்கப்பட்டது. சிவரஞ்சனியோடு ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்ட சசிதரன், மற்றவர்களை அங்கிருந்த இன்னொரு காரில் அழைத்துவருமாறு அருணிடம் சொன்னான்.
அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பு நகரின் முக்கியமான பகுதியில் இருந்ததால், ஆம்புலன்ஸிலிருந்து நல்ல தரமான மருத்துவமனை வரை கைக்கெட்டும் தூரத்திலேயே இருந்தது.
அருணும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சென்ற காரின் ட்ரைவருக்கு, சசிதரன் மருத்துவமனை பற்றிய விபரம் சொல்லியிருக்கவே, எந்த குழப்பமும் இன்றி மருத்துவமனையில் கொண்டு விட்டார் அந்த மனிதர்.
குழந்தைகள் இருப்பதால் சந்த்ரிகா மருத்துவமனைக்கு செல்லவில்லை. ஒரு ஆளாக குழந்தைகளை சமாளிப்பது கடினம் என்பதால் ராதாவும் மகளுடனே இருந்தார்.
கீழே வந்திருந்த ராதாவும், சந்த்ரிகாவும் குழந்தைகளோடு தங்கள் வீட்டுக்கு செல்ல லிஃப்ட் டில் நுழைந்தார்கள்.
அப்போது, “ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு உங்க சின்ன மகளும், அவ புருஷனும் ரொம்ப தான் ஸீனப் போடுறாங்க” என்று சந்த்ரிகா சொல்ல,
இந்த நேரத்தில் கூட இப்படி பேசும் மகளை வெறுப்போடு பார்த்த ராதா, “தயவு செய்து உன் வாயை மூடிட்டு வா சந்த்ரி… இல்லைன்னா ஏதாவது சொல்லிடப் போறேன்” என்றார் கோபத்தோடு.
சரியான நேரத்தில் வேலுச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மிகத்துரிதமாகவே சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
பரிசோதனைகளின் முடிவில் உடனடி அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் சொல்லிவிட, அயர்ந்து போனார்கள் எல்லோரும்.
சிவரஞ்சனிக்கு மருத்துவர்கள் சொன்ன விஷயங்கள் தெளிவாக புரிந்தது. அவளுமே உடனடியாக அறுவைசிகிச்சை செய்வது தற்போது எவ்வளவு அவசியம் என்று தெளிவாக குடும்ப உறுப்பினர்களிடம் எடுத்து சொல்ல, முழுமனதாக சம்மதித்தார்கள் அனைவரும்.
பலமணிநேர சிகிச்சைக்கு பிறகு வெளியே வந்த மருத்துவர்கள், “வேலுச்சாமியின் உடல்நிலை கவலைப்படும் கட்டத்தை தாண்டிவிட்டது” என்று சொன்னபிறகு தான், நிம்மதியாக இருந்தது அனைவருக்கும்.
மருத்துவமனையில் எல்லோரும் தங்க அனுமதி இல்லாததால், வேலுச்சாமி மருத்துவமனையில் இருந்த பத்து நாட்களும் இராஜேஸ்வரியோடு சசிதரனும், அருணும் மட்டுமே தங்கிக் கொண்டார்கள்.
மற்றவர்கள் வீட்டிலிருந்து அவ்வப்போது மருத்துவமனைக்கு வந்து பார்த்து சென்றார்கள்.
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு கவலை என்றால் சந்த்ரிகாவுக்கு வேறு கவலை.
ஆம்… எல்லோரும் சோகத்தில் மூழ்கியிருக்க, ஒன்றுமில்லை என்று உதறிப் போட்டுவிட்டு அவளால் வேலைக்கு செல்ல முடியவில்லை.
மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு, அரவிந்தன் ஃபோன் செய்து, “இப்பிடி மாமாவுக்கு உடம்புக்கு சரியில்லை மச்சானுக்கு உடம்புக்கு சரியில்லைன்னு சொல்லுறவங்க எல்லாம், எதுக்கு வேலைக்கு வந்து எங்க உயிரை வாங்குறீங்க? பேசாம சோத்தை பொங்கி போட்டுட்டு, வீட்ல சொகுசா இருக்க வேண்டியது தானே?” என்று குறிபார்த்து அடித்தான்.
மறுநாளே, “இதுக்கு மேல என்னால லீவ் போடமுடியாது. பிள்ளைகளை பாத்துக்கோங்க, நான் வேலைக்கு போய்ட்டு வரேன்” என்று தாயிடம் வந்து நின்றாள் சந்த்ரிகா.
‘ஊரிலிருந்து ஒன்றாக வந்தவர்கள், அதுவும் மகளின் மாமனார் மருத்துவமனையில் இருக்கும் போது, தான் மட்டும் ஊருக்கு திரும்புவது நன்றாக இருக்காது’ என்று அங்கேயே இருந்த ராதாவுக்கு, மகளின் பேச்சு உவப்பாக இல்லை.
ஆனால் எத்தனை சொல்லியும், “நான் வீட்ல இருந்து என்ன செய்யப் போறேன்? சும்மா இருக்குறதுக்கு வேலைக்கு போய்ட்டு வந்தா என்ன?” என்று தன்பிடியிலேயே நின்றவள், வேலைக்கு போகவும் ஆரம்பித்து விட்டாள்.
சரியாக பத்தாவது நாள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வேலுச்சாமி. இப்போது உடனடியாக ஊருக்கு திரும்ப முடியாததாலும், தொடர்சிகிச்சை அங்கேயே எடுக்க வேண்டும் என்பதாலும், வேலுச்சாமி மகனின் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும் இரண்டு நாட்கள் அங்கே இருந்துவிட்டு, எல்லாரும் ஊருக்கு திரும்ப ஆயத்தமானார்கள்.
“இல்ல… நான் உங்க கூட இருக்கிறேன் அத்த” என்று சிவரஞ்சனி சொல்லிவிட வேண்டும்” என்ற எதிர்பார்ப்பு இருந்தது அந்த குரலில்.
இத்தனை நாட்களும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தன்னோடு இருக்கும் போது தைரியமாக இருந்த இராஜேஸ்வரிக்கு, அனைவரும் கிளம்புவதாக சொன்னதும் மனதில் பயம் ஒன்று தோன்றியது.
‘நர்ஸ்ஸாக பணிபுரியும் சிவரஞ்சனி தன்னோடு இருந்தால், நன்றாக இருக்கும்’ என்று தோன்றவே வாய்விட்டு கேட்டுவிட்டார்.
அவருக்கு இப்படி சூழ்நிலையிலும் பிள்ளைகளை விட்டு விட்டு வேலைக்கு செல்லும் சந்த்ரிகாவின் செயலில் வெறுப்பிருந்தது. அதனாலேயே பளிச்சென்று சொல்லிவிட்டார்.
நல்ல காலம், இந்த பேச்சு நடந்தது மத்தியான நேரம். அதனால் சந்த்ரிகா அங்கில்லை. இல்லையென்றால் ஒரு சண்டை நிச்சயமாக நடந்திருக்கும்.
“உதவிக்கு ன்னா நீ நினைக்கிற மாதிரி இல்லை ரத்னா. சிவா க்கு நிறைய விஷயம் தெரியுது. அவ கூட இருந்தா இராஜிக்கு தைரியமா இருக்கும்னு நினைக்கிறா போல…”
இராஜேஸ்வரியின் மனதை படித்தது போல நாயகி சொல்ல, “ஆமால்ல… நானும் தப்பா புரிஞ்சுகிட்டேன் க்கா… இராஜி அக்காவுக்கு சிவா இருந்தா தைரியமா இருக்கும்னா, தாராளமா சிவா அவங்க கூட இருக்கட்டும்” என்ற ரத்னா, “உனக்கும் இங்க இருக்குறதுல்ல சம்மதம் தானே சிவா?” என்றார் மருமகளிடம்.
சிவரஞ்சனி சந்தோஷமாக தலையாட்ட, மீதம் உள்ள நபர்கள் ஊருக்கு கிளம்பிச் சென்றார்கள். அருணும் கூட இந்த விஷயத்தில் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காமல் கிளம்பி சென்றிருந்தான்.
அறுவை சிகிச்சை முடிந்து மாதம் ஒன்று முடிந்திருந்தது. வேலுச்சாமியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது.
ஒன்றுக்கு இரண்டாக அடிமைகள் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், சந்த்ரிகா வேலைக்கு சென்று வந்தாள்.
அன்று, அனைவரும் வீட்டிலிருந்த நேரத்தில், “இனிமே எந்த அளவுக்கு என்னால கடை வேலை செய்யமுடியும்னு தெரியலை சசி. மூனு குடும்பத்து பாரத்தை, ஒரு குடும்பத்து மேலயே சுமத்துறது ரொம்ப தப்பு. அதனால நாங்க ஊருக்கு போகும் போது, நீயும் எங்க கூடவே ஊருக்கு வந்து, நம்ம கடை வியாபாரத்துல இறங்கணும்னு அப்பா ஆசைப்படுறேன் ப்பா” என்றார் வேலுச்சாமி.
“கண்டிப்பா வர்றேன் ப்பா” கொஞ்சமும் யோசிக்காமல் பளிச்சென்று பதில் சொன்னான் சசிதரன்.
கணவனின் பதிலில் அதிர்ந்து போன சந்த்ரிகா கோபத்தோடு சசிதரனைப் பார்த்தாள். அந்த பார்வையில் ஒரு யுத்தத்துக்கான அழைப்பு தெரிந்தது சசிதரனுக்கு…