“உங்க அப்பா தான் கொஞ்சம் கூட அறிவில்லாமல் கம்ப்யூட்டர் இன்ஞ்சினியரிங் படிச்ச பையனை மளிகை கடையில பொட்டலம் போட கூப்பிடுறார்னா, உங்களுக்கு அறிவு எங்க போச்சு.. நீங்களும் வரேன்னு சொல்லுறீங்க சசி?”
நான் இத்தனை நேரம் பொறுத்திருந்ததே பெரிது என்பது போல, இரவு படுக்கைக்கு வந்த கணவனிடம் சண்டைக்கு கொடிபிடித்தாள் சந்த்ரிகா.
“கவனமா பேசு சந்த்ரி… நீ மரியாதையா பேசினா தான், உனக்கும் மரியாதை கிடைக்கும். எல்லாம் உங்கையில தான் இருக்கு” மனைவியை எச்சரித்தான் சசிதரன்.
கணவனின் எச்சரிக்கையை காற்றோடு விட்டபடி, “சொல்லுங்க சசி…, நீங்க எப்படி வேலையை விட்டுட்டு கடையில போய் உக்கார சம்மதிக்கலாம்?” மறுபடியும் கேள்விக்கணையை வீசியபடி நின்றாள் சந்த்ரிகா.
குழந்தைகளை பிடிவாதமாக இரவு நேரமும் தன்னோடு சிவரஞ்சனி வைத்துக் கொள்வதால், கணவன் மனைவி மட்டும் தான் அறையில்.
“அது நம்ம வீட்டு தொழில், அதை நாம செய்யாமல் வேற யாரு செய்வா சந்த்ரி?”
“ஏதோ வைர வியாபாரம் செய்யுறது மாதிரி, ரொம்பத் தான் ஸீனப் போடுறீங்க. ஆஃப்டர் ஆல் அரிசி, பருப்பு வியாபாரம் தானே? அந்த அரிசியையும் பருப்பையும் யார் வேணும்னாலும் விக்கலாம், நீங்க தான் செய்யணும்னு அவசியம் கிடையாது.”
மனைவியின் வார்த்தைகளில் முகம் சுழித்த சசிதரன், “நான் என்ன சொன்னாலும் நீ புரிஞ்சிக்க போறது இல்லை சந்த்ரி. ஆனாலும் சொல்லுறது எங்கடமை. அதனால சொல்லுறேன் கேட்டுக்கோ” என்றவன்,
“நீ நினைக்கிற மாதிரி அது சாதாரண வியாபாரம் இல்ல, அதை மொதல்ல புரிஞ்சிக்கோ” என்று கடையில் நடக்கும் வியாபாரம், அதனால் கிடைக்கும் வருமானம் எல்லாவற்றையும் மனைவிக்கு எடுத்து சொன்னான்.
மாத லாபமாக கணவன் சொன்ன தொகையை கேட்டு சந்த்ரிகே மயக்கம் வராத குறை தான். ஆனாலும் வேலை, அதனால் வரும் மரியாதை, சிட்டி லைஃப் இவை அனைத்திற்கும் முன், கணவன் சொன்னவை எல்லாம் வலுவிழந்து தான் போனது.
“அதுக்காக, இங்க விட்டுட்டு கடைல போய் உக்காருவேன்னு நீங்க சொன்னா எப்படி சசி? மாமாவுக்கு பதிலா இரண்டு மூனு ஆட்களைப் போட்டு சமாளிச்சுக்க சொல்லுங்க” என்றாள் நைச்சியமாக.
“மாமாவுக்கு பதில்னு நீயே சொல்லுற… எங்கப்பாவுக்கு சப்ஸ்டிடூட் நான் இல்லாமல் வேற யாரா இருக்க முடியும், சொல்லு?” மனைவியின் வார்த்தையைக் கொண்டே அவளை சசிதரன் மடக்க நினைக்க,
“இந்த வார்த்தை விளையாட்டெல்லாம் எங்கிட்ட நடக்காது சசி… நீங்க வேலையை விட்டுட்டு ஊருக்கு போகக் கூடாதுன்னா, போகக்கூடாது தான். ஒருக்காலும் நான் அதுக்கு சம்மதிக்க மாட்டேன்” என்று தீர்மானமாகச் சொன்னவள்,
“வேணும்னா வியாபாரத்துல உங்க பங்கை, உங்க சித்தப்பா கிட்ட வித்துடுங்க. அதுல வர்ற பணத்துல ஒரு கம்பெனியை நாம இங்க தொடங்கிடலாம்” என்றாள் அழகாக திட்டம் தீட்டியபடி.
“எங்க தாத்தா, அப்பா எல்லாரும் காலங்காலமா கட்டித் காத்த, எங்களுக்குன்னு தனி அடையாளத்தை தந்த தொழிலை விட்டு, எவ்வளவு ஈசியா என்னை விலகச் சொல்லுற நீ?… ஹ்ம்ம்…” இதழில் மெல்லிய இளநகையுடன் பேசிய சசிதரன்,
“ஒருவேளை என்னால வியாபாரத்துல இறங்க முடியலைன்னா கூட, என் பங்கை தம்பிக்கு விட்டுக் கொடுப்பனேயொழிய, அதுக்காக அரைக்காசு கூட அவன்கிட்ட இருந்து கைநீட்டி வாங்க மாட்டேன்..”
“நான் மட்டுமில்ல, என் அக்கா இரண்டு பேரும் கூட இதையேதான் சொல்லுவாங்க. வேணும்னா இப்பவே இரண்டு பேருக்கும் ஃபோனை போட்டு, நான் சொல்லுறது சரிதானான்னு செக் பண்ணிக்கோ” என்றான் சசிதரன் முகம் பளபளக்க.
அது ‘தன்னோடு ஒன்றாக வளர்ந்தவர்களைப் பற்றி, நான் நன்றாக அறிந்து வைத்திருக்கேன்’ என்ற கர்வத்தில் வந்த பளபளப்பு.
கடையின் வருமானத்திலேயே, அதன் மதிப்பு சந்த்ரிகாவுக்கு புரிந்தது. அத்தனைப் பெரிய சொத்தை அப்படியே தம்பிக்கு தூக்கி குடுத்து விடுவேன் என்ற கணவனின் வார்த்தைகளில், மிரண்டு போய் அவனையே விழி அகல பார்த்து கொண்டிருந்தவளிடம்,
“ப்ச்ச்… எதுக்கு சும்மா வளவளன்னு பேசிகிட்டு சந்த்ரி… தேவைப்படும் போது நம்ம தொழிலுக்குள்ள வரணும்னு சொல்லித் தான் என்னை வெளியே வேலை பார்க்கவே அனுப்பினாங்க. இப்போ நான் எங்க தொழிலுக்குள்ள போகவேண்டிய நேரம் வந்திடிச்சின்னு எனக்கு தோணுது. அதனால கண்டிப்பா இந்த ஜாப்பை ரிசைன் பண்ணிட்டு, ஊருக்கு, நீ சொன்ன மாதிரி பொட்டலம் மடிக்க போகத்தான் போறேன்.” தன் முடிவை ஆணித்தரமாக சசிதரன் சொல்ல, வெகுண்டெழுந்து விட்டாள் சந்த்ரிகா.
“அப்போ… நீங்க கடையில பொட்டலம் மடிக்கத்தான் போவீங்க ங்குறது ஏற்கனவே முடிவான ஒண்ணு, அப்பிடிதான?… அதை, பொண்ணு பாக்க வந்த அன்னைக்கே, என்னை சிரிச்சு மயக்காமல் நீங்க சொல்லியிருந்தா, உங்களை திரும்பி கூட நான் பாத்துருக்க மாட்டனே. திட்டம் போட்டு என்னை ஏமாத்திட்டு, இப்போ பெரிய நியாயஸ்தன் போல பேசுறீங்க?!” என்றாள் கோபமாக.
“நான் உனக்காக உன்னை திருமணம் செய்யவில்லை, உன்னோடு ஒட்டிக் கொண்டிருக்கும் உன் பதவிக்காகத் தான் திருமணம் செய்தேன்…”
மனைவி சொல்லிய வார்த்தைகளுக்கு பின், சொல்லப்படாமல் மறைந்திருந்த இந்த பொருளில், ஒரு கணவனாக மனதளவில் அடிவாங்கிய சசிதரனின் மனதில், ஒரு வீம்பு சட்டென்று எழுந்தது.
“ஆஃபீஸ்ஸ இப்போ போய்ட்டு இருக்கிற ப்ராஜெக்ட் முடிஞ்சதும் கண்டிப்பா நான் ஊருக்கு போய்டுவேன் சந்த்ரி. உனக்கு இஷ்டம் இருந்தா எங்கூட ஊருக்கு வா. இல்ல, எனக்கு வேலை தான் முக்கியம்ன்னு நீ நினைச்சா, இங்கயே இருந்துக்கோ” என்றவன், இதற்கு மேல் உன்னிடம் எனக்கு பேச விருப்பம் இல்லை என்பது போல காலிலிருந்து தலை வரை போர்வையால் மூடிக்கொண்டான்.
சந்த்ரிகாவோ, தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் புரியாமல், ‘தன்னுடைய கட்டாயத்தின் பெயரில் கணவன் வேலையில் தொடர்ந்தாலும், தன்னால் தொழிலில் ஈடுபட முடியவில்லை என்று சொல்லி, அப்படியே கடையைத் தூக்கி அருணிடம் கொடுத்து விடுவானோ?’ என்ற பயத்தில் உழன்று கொண்டிருந்தாள்.
அத்தனை பெரிய சொத்தை, எந்த லாபமும் இல்லாமல் இழக்க மனம் வரவில்லை அவளுக்கு. அதுவும் தன் தங்கை கணவனிடம் இழக்க சத்தியமாக அவளால் முடியாது.
தன்னுடைய பயத்தை மறைக்காமல், அலுவலகத்தில் சந்தித்த அரவிந்தனிடம் சந்த்ரிகா பகிர்ந்து கொள்ள, “இதெல்லாம் தன்னோட முடிவை, உன்னை ஒத்துக்க வைக்குறதுக்காக அவர் செய்யுற ட்ரிக்ஸ் சந்த்ரி” என்றான் அலட்டிக் கொள்ளாமல் அரவிந்தன்.
“இல்ல அர்விந்த்… பைத்தியம் போல அவர் சொன்னதை செய்தாலும் செய்திடுவார்.”
“இதோ… உன் மனசுல ஒரு குழப்பத்தை வரவச்சிட்டார் பாத்தியா? அதுதான் அவருக்கு கிடைச்ச வெற்றி. சொத்தை தம்பி பேர்ல எழுதிடுவாரோ ங்குற பயத்துலயே, அவர் சொல்லுறதுக்கெல்லாம் நீ ஆடுவன்னு நினைக்கிறார்.”
“ஆனா… இப்போ தான் நீ தெளிவா யோசிக்கணும் சந்த்ரி. இந்த காலத்துல பொண்ணுங்க செல்ஃப் ரெஸ்பெக்டோட இருக்கணும்னா அவங்களுக்கு வேலை தேவை. எந்த சூழ்நிலையிலும் உன் சுயத்தை நீ யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத.”
சந்த்ரிகாவின் மனம் என்னும் குட்டையை குழப்பி விடுவதற்கு எப்போதடா நேரம் கிடைக்கும் என்று தவம் இருப்பவனுக்கு, இவளே அல்வா போல விஷயங்கள் அள்ளிக் கொடுக்க, அழகாக குழப்பி விட்டதோடு,
“உன்னோட ஹஸ்பன்ட் சரியான மேல் சாவனிஸ்ட்டா இருக்கார்.. அவர் ப்ராஜெக்ட் பத்தி கவலைப்படுற மனுஷன், உன்னோட வொர்க் பத்தியும் கவலைப்படணுமா வேண்டாமா?” என்று சந்த்ரிகாவை தூண்டிவிட்டான்.
“நானெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு என் வைஃப் வோட உணர்வுகளுக்கு மதிப்பு குடுப்பேன் ப்பா. உன் ஹஸ்பன்ட் மாதிரி இவ்வளவு செல்ஃபிஷ்ஷா கேம் ப்ளே பண்ணமாட்டேன்” என்று சொல்லி, ‘இவனைப் போல குணத்தோடு என் கணவன் ஏன் இல்லை?’ என்று சந்த்ரிகாவை ஏங்க விட்டான்.
ஆகமொத்தம், அரவிந்தன் அணிந்திருந்த முகமூடியை, அவனுடைய உண்மையான முகம் என்று எண்ணி, அவனை தோள்கொடுக்கும் தோழனாக நம்பி, தன் வருத்தங்களை அவனிடம் சந்திரிகா இறக்கி வைக்க,
அரவிந்தன் என்னும் காந்தமோ, சந்த்ரிகா என்னும் இரும்பை தன்னை நோக்கி இழுக்கும் முயற்சியில் முழு மூச்சாக ஈடுபட தொடங்கியது.
****************
பெங்களூர் விமான நிலையத்திலிருந்து சசிதரனின் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த வாடகைக் காரில் அமர்ந்திருந்தான் அருண்.