இந்த ஐம்பது நாட்களில், இப்போது இரண்டாவது முறையாக பெங்களூருக்கு வருகிறான் அருண்.
முதன்முறை தனது தந்தையோடும், தங்கையோடும் வந்திருந்தான் அருண். மதுரையில் ஒரு கல்லூரியில் தன்னுடைய போஸ்ட் கிராஜூவேஷனை விடுதியில் தங்கி படிக்கும் தங்கை ராகினி, செமஸ்டர் எக்ஸாம் இருந்ததால் குழந்தைகளின் பிறந்தநாளின் போது பெங்களூருக்கு வர இயலவில்லை.
அதனாலேயே அண்ணனைப் பார்க்க வேண்டும் என்று விரும்பிய தந்தையோடு, தங்கையையும் விமானத்தில் அழைத்து வந்தவன், அன்று இரவே அவர்களை அழைத்துக் கொண்டு மறுபடியும் விமானத்தில் வீடு திரும்பியிருந்தான்.
அடுத்ததாக, கொள்முதலுக்காக ஒரு பத்து நாட்கள் பயணம் என்று, அருணுடைய பொழுதுகள் படு சுறுசுறுப்பாகவே நகர்ந்தது.
அதுவும், தலைமைப் பொறுப்பிலிருந்து கடை நிர்வாகத்தை கவனித்து கொண்ட நபரில் ஒருவர் குறையவும், கூடுதல் பணிச்சுமை தான் அருணுக்கு.
இருந்தாலும் சுணக்கமின்றி தன் தோள்களில் பொறுப்பை சுமந்து கொண்டவனுக்கு, இரவு நேரத்தின் தனிமைப் பொழுதுகளில் மனைவியின் ஞாபகங்கள் வந்து பாடாக படுத்த,
இதோ… மனைவிக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவளுக்கு கூட சொல்லாமல் கிளம்பி வந்து விட்டான்.
பெரியப்பா இப்போது நன்றாக இருப்பதால் வீட்டுக்கு திரும்பி போகும் போது, மனைவியையும் கையோடு அழைத்து சென்றுவிட வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கிருந்தது.
சசிதரனின் அடுக்கு மாடி குடியிருப்புக்கு வந்து, அன்று தவிர்த்த மின்தூக்கியில் பயணித்து, அண்ணனின் வீடு இருக்கும் ஐந்தாவது மாடியில் இறங்கியவனின் உள்ளம், மனைவியை காணப்போவதை எண்ணி சிறுகுழந்தையாக குதூகலித்தது, அவனுக்கே சிரிப்பை உண்டாக்கியது.
அதை மறைக்காமல் உதடுகளில் நெளியவிட்டபடியே, வேகமான எட்டுக்களால் வீட்டு வாசலை சமீபித்தவனின் காதுகளில் குழந்தைகளின் அழுகுரல் கேட்டது.
கூடவே, “என்னவோ இவளுக்கு பெரிய டாக்டர்னு நினைப்பு… இவ பேச்சைக் கேட்டு வீட்ல உள்ள எல்லாரும் ஆடுறாங்கன்னு, நானும் ஆடுனேன் பாருங்க… என்னை எதால அடிக்கலாம்?” என்ற அண்ணியின் கோபக்குரலும் பின்பாட்டாக கேட்டது.
என்னவென்று புரியாமல், திறந்திருந்த மரக்கதவுக்கு முன், மூடியிருந்த வீட்டின் இரும்பு கேட்டுக்கு அருகில் நின்று, அழைப்பு மணியை அருண் அழுத்தினான்.
ஹாலில் நின்றிருந்த இராஜேஸ்வரி, சந்த்ரிகா, சிவரஞ்சனி மூன்று பேருமே ஒரே நேரத்தில் வாசலை திரும்பி பார்த்தார்கள்.
அனைவரையும் முந்திக்கொண்டு, அழுது கொண்டிருந்த குழந்தை, நந்தனாவை இடுப்பில் வைத்துக் கொண்டே ஓடிவந்து கதவைத் திறந்த சிவரஞ்சனி, கணவனின் மார்பில் சாய்ந்து லேசாக விம்ம, உருகி விட்டது அருணுக்கு.
“ஏன்டா?… என்னாச்சு?…” ஆதரவாக மனைவியின் தோளணைத்து அருண் கேட்க, அவன் மார்பில் சாய்ந்தது பொய்யோ என்று எண்ணும்படி கண்ணிமைக்கும் நேரத்தில் விலகி இருந்தாள் சிவரஞ்சனி.
“இல்ல மாமா… பிள்ளைங்களுக்கு வேக்ஷின் போட்டோம். அதனால காய்ச்சல் வந்து அழுறாங்க, அதான்…” முடிக்காமல் சிவரஞ்சனி இழுத்தாள்.
“ஏய்… நான் இரண்டு பிள்ளைங்களுக்கும் சேர்ந்தாப்ல ஊசி போடவேண்டாம்னு சொன்னதையும், நீ இல்லக்கா, இந்த வேக்ஷினுக்கு காய்ச்சல் ஒண்ணும் வராதுன்னு சொன்னதையும் சேர்த்து சொல்லுடி…” அலட்சியமாக சொன்னாள் சந்த்ரிகா.
ஆமாம்… சில விஷயங்களில், சில விதிவிலக்குகள் இருப்பது இயற்கை தானே. அப்படித்தான் இந்த தடுப்பூசி விஷயத்தில் குழந்தைகளுக்கு ஆகிப்போனது. உடல் வருத்தம் வந்ததும் இயல்பாகவே குழந்தைகள் அன்னையைத் தேடுவது போல, இங்கும், இரண்டு பிள்ளைகளும் அன்னையின் மடியையே அழுதுகொண்டு சரணடைய முயன்றார்கள். அவர்களைச் சமாளிக்க முடியாத சந்த்ரிகா, தன் வார்த்தைகளால் சிவரஞ்சனியை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டாள்.
அதனால் தான் எதிர்பாராமல் கணவனைக் கண்டதும் கண்ணீர் வந்து விட்டது அவளுக்கு.
“ஓ… இதுக்கு தானா இவ்வளவு பேச்சும்?” என்றவன் சந்த்ரிகாவின் கைகளிலிருந்த அபிநந்தனுக்காக தன் கையைநீட்ட, இத்தனை நேரமும் தாயிடம் அழுது கரைந்து கொண்டிருந்த பொடியன், அருணிடம் தாவினான்.
குழந்தைகளின் உலகமும் உணர்வுகளும் எப்போதுமே விசித்திரமானவை தானே. அபிநந்தன் சித்தப்பனின் கைகளுக்கு போகவும், சிவரஞ்சனியின் கைகளிலிருந்த நந்தனாவும் அருணின் தோள்களில் தாவினாள்.
இரண்டு சிட்டுகளின் கன்னங்களிலும் மென்மையாக முத்தம் வைத்த அருண், “அவசியம் இல்லாமல் எம்பொண்டாட்டியை திட்டக்கூடாதுன்னு உங்க அம்மாகிட்ட சொல்லி வைங்க டா” என்றபடி அங்கிருந்த இருக்கையில் அமர, பூனைக்குட்டியாய் கணவனுக்கருகில் போய் அமர்ந்து கொண்டாள் சிவரஞ்சனி.
இத்தனை நேரம் தன்னை பாடாய்படுத்தி விட்டு, அருணிடம் சமத்தாக போய் உட்கார்ந்திருந்த குழந்தைகளை பார்த்த சந்த்ரிகாவுக்கு, குழந்தைகளின் தகப்பனுக்கும் அருண் மீது இருக்கும் பாசம் நினைவுக்கு வர, எக்கச்சக்கமாக கோபம் எகிறியது.
“யாரோ, எங்க கல்யாணம் முடிஞ்ச புதுசுல, எம் புருஷன் சட்டையை போட்டுகிட்டு, என் அண்ணன் சட்டை, நான் போடுவேன்னு சொன்னதா எனக்கு நியாபகம். அதையேத் தான், இப்போ நானும் சொல்லுறேன்… அவ என் தங்கச்சி, நான் என்ன வேணும்னாலும் சொல்லுவேன், அதை கேட்க இங்க யாருக்கும் ரைட்ஸ் கிடையாது” என்றாள் தெனாவெட்டாக.
சந்த்ரிகாவின் பேச்சுக்கு அருண் ஏதோ பதில் பேச முயல, “விடு… அருண்… இதை பேசிக்கிட்டே போனா இப்போதைக்கெல்லாம் முடியாது” அலுத்தபடியே அருணிடம் சொன்ன இராஜேஸ்வரி, “நீயும் கொஞ்சம் வாயை குறைக்கணும் சந்த்ரி” என்றார் தைரியமாக.
பின், எத்தனை நாட்கள் தான், அசட்டு பிசட்டு என்று பேசும் இந்த பெண்ணின் பேச்சைப் பொறுத்துக் கொள்வது.
‘சீக்கிரம், தங்கள் குடும்பத்தோடு ஒன்றிவிடுவாள் என்ற எண்ணத்தில், அன்பும் அனுசரணையுமாக, தான் மருமகளிடம் நடந்தால், அவளிடம் இன்றுவரை எள்ளளவு மாற்றம் கூட இல்லாது போகவே, பொறுக்கமுடியாமல் அதட்டி விட்டார் இராஜேஸ்வரி.
“எல்லாரும் இப்படியே இவரை தலையில தூக்கி வச்சி ஆடுங்க. கண்டிப்பா… ஒருநாள், உங்க எல்லாருக்கும் குல்லா போட்டுட்டு, எல்லா சொத்தையும் மொத்தமா சுருட்டிக்கப் போறார்.”
மாமியார் தன்னை அதட்டவும், தைரியமாக முணுமுணுத்த சந்த்ரிகாவின் வார்த்தை, அங்கிருந்த எல்லோர் காதுகளிலும் தெளிவாக விழ, அதிர்ந்து போய் பெரியம்மாவை அருண் பார்த்தானென்றால்,
நல்லவேளை…, ‘குழந்தைகளின் அழுகை, சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கும் கணவரை எந்த வகையிலும் தொந்தரவு செய்து விடக்கூடாது’ என்று, அவரின் அறைக்கதவை இராஜேஸ்வரி அழுந்த மூடியிருந்ததால், இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் களேபரங்கள் எதுவும் வேலுச்சாமியின் காதை எட்டவில்லை.
“பின்ன என்ன அத்த?… இப்போ தான், கொஞ்சம் நிம்மதியா நாங்க ரெண்டு பேரும், எங்க வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்குறோம். இந்த நேரத்தில போய் மாமா, எனக்கு முடியலை, அதனால கடைக்கு நீ வான்னு இவங்களை கூப்பிடுறாங்க. அப்படி கடையில தான் உங்கபிள்ளை வேலை பார்கணும்னு நெனைப்பு இருந்திருந்தா, எதுக்கு அவங்களை படிக்க வச்சீங்க? என்னைப்போல படிச்ச பொண்ணை எதுக்கு உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க?”
“நான் இதை உங்க பிள்ளைகிட்ட கேட்டா, கடையைத் தூக்கி அப்படியே தம்பிகிட்ட குடுத்துருவேன்னு சொல்லுறாங்க. எந்த வகையில் இது நியாயம்ன்னு நீங்களே சொல்லுங்க.”
‘சொத்தை விட்டுக் கொடுத்து விடுவேன் என்று, தன் கணவன் சொன்னதை, அவன் தாயார் அறிந்தால் கொதித்து போய் விடுவார்’ என்று நினைத்து சந்த்ரிகா சொன்னாள்.
ஆனால் அவரோ, “எம்புள்ள சரியாத்தானே ம்மா சொல்லியிருக்கான்… வியாபரத்துல இஷ்டம் இல்லாதவங்க, அதை விருப்பம் இருக்குறவங்க கையில குடுக்குறது தானே நியாயம்” என்றார் நிதானமாக.
“சல்லிக்காசு கூட வாங்காம குடுப்பேன்னு சொல்லுறாங்க அத்த…” தன் வார்த்தைகளை கணவனின் தாயார் சரியாக விளங்கிக் கொள்ளவில்லையோ என்று நினைத்து, தன் பேச்சுக்கு, உடனடி கோனார் உரை ஒன்று சந்த்ரிகா கொடுக்க,