“இவ்வளவு தெளிவா நீ சொல்லணும்னு தேவையில்லை சந்த்ரி. ஏன்னா, எம்பையன் இப்படி சொல்லாட்டா தான், நான் ஆச்சர்யபட்டுருப்பேன்” என்று சொல்லி, மருமகளை அதிர்ச்சியடைய வைத்த இராஜேஸ்வரி,
“கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசைன்னு ஒரு பழமொழி உண்டு, உனக்கு தெரியும் தானே சந்த்ரி… அப்படி தான் இருக்கு உன் கதை” என்று நையாண்டியாக சொல்லியும் விட்டார்.
இதுவரையிலும் இராஜேஸ்வரி இப்படி பேசிக் கேட்டிராத சந்த்ரிகா திகைத்து போய் நின்றாள்.
அடுத்த சண்டைக்கு அவள் தயாராவதற்கு முன் இடையிட்ட அருண், “ம்ப்ச்… பெரியம்மா, சசி தான் ஏதோ பேசத் தெரியாமல் பேசி, பிரச்சினையை உண்டாக்கி வச்சிருக்கான்னா… நீங்களும், அதையே செய்யாதீங்க பெரியம்மா…” என்றவன் சந்த்ரிகாவிடம்,
“சொத்தைப் பற்றி பேச உங்களுக்கோ எனக்கோ அதிகாரம் கிடையாது. ஏன்னா, அதை சம்பாதிச்சவங்க நாம கிடையாது” என்றான் தெளிவாக.
அதன்பிறகு மனைவியோடும் குழந்தைகளோடும், மனைவி அங்கு தங்கியிருக்கும் அறைக்குள் நுழைந்து கொண்ட அருண், பெரியப்பாவையும், அலுவலகம் விட்டு வந்த சசிதரனையும், பார்த்து பேசிவிட்டு மறுநாள் காலை மனைவியோடு ஊருக்கு கிளம்பிவிட்டான்.
தம்பியோடு விமான நிலையம் வந்த சசிதரனுக்கு, நடந்தவை அனைத்தும் அன்னை மூலம் தெரிய வந்திருக்கவே, தம்பியின் கரத்தைப் பற்றி மன்னிப்பு கேட்டான்.
சசிதரனின் கரங்களை தட்டிக் கொடுத்த அருண், “அண்ணி வேலை பார்க்கணும் ங்குற ஆசையில தான், அர்த்தமே இல்லாமல் இப்படியெல்லாம் பேசுறாங்க சசி. அதனால, கொஞ்ச வருஷம் விட்டுப்பிடி… நாங்க அங்க பாத்துக்குறோம், நீ கவலப்படாத” என்று சொல்லிவிட்டு கிளம்பியிருந்தான்.
கணவனுக்கு ஆப்பரேஷன் முடிந்து மூன்று மாதங்களில், இராஜேஸ்வரியும், தாங்கள் ஊருக்கு போவதாக மருமகளிடம் சொல்ல பதறிப்போனாள் சந்த்ரிகா.
“நான் உங்கூடவே இருப்பேன், நீ வேலைக்கு போகலாம்னு சொல்லிட்டு, இப்போ இப்பிடி பாதியில விட்டுட்டு போறேன்னு சொல்லுறீங்களே த்த..” இராஜேஸ்வரியை குற்றவாளி கூண்டில் நிறுத்தப் பார்த்தாள்.
அவரோ, “நான் சொன்னப்போ இருந்த சூழ்நிலை இப்ப இல்ல சந்த்ரி.. அதுக்காக நான் உன்னை அம்போன்னு விட்டுட்டு போக மாட்டேன். வேற ஏற்பாடு செய்துருக்கேன்” என்று தான் செய்து வைத்திருந்த மாற்று ஏற்பாடையும் மருமகளிடம் சொன்னார்.
ஆமாம்… அவர்கள் வீட்டில் வேலை செய்யும் சாந்தாவின் தங்கை வடிவு, இங்கே குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக அழைத்து வரப்பட்டார்.
அந்த பெண்மணிக்கு, இருந்து எல்லாம் பழக்கிவிட்ட பிறகே, இராஜேஸ்வரி கணவரோடு பாவூர்சத்திரத்துக்கு கிளம்பியது.
ஆனால், கிராமத்தில் கட்டுப்பாடு இல்லாத காற்றாக வலம் வந்த அந்த வடிவுக்கு, இந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசம் மூச்சு முட்டவே, ஒரு மாதம் கூட அவரால் இங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.
சசிதரன் கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். முடியவே முடியாது, என்று, கிளம்பி போய்விட்டார் அந்த பெண்மணி.
உலகத்திலுள்ள அத்தனை பேரும் சேர்ந்துகொண்டு, தான் வேலைக்கு போவதை தடை செய்வதற்கு முயற்சி எடுப்பது போல, கோபம் கொண்ட சந்த்ரிகா, இப்போது பாய்ந்தது தனது அன்னையிடம்.
ராதாவுக்கு போனில் அழைத்து, “நீங்க வந்து எங்கூட இருந்து, பிள்ளைங்களை பாத்துக்கோங்க” என்று, அவர் செய்தே ஆகவேண்டும் என்ற தொனியில் அழைத்தாள்.
இப்படி ஒரு பிள்ளையைப் பெற்று, வளர்த்து விட்ட பாவத்திற்கு, அவள் ஆடச் சொன்ன கூத்துக்கெல்லாம் அவர் ஆடித்தானே ஆக வேண்டும்.
ஆனாலும் வேலையில் இருந்து பணி ஓய்வு பெறாத சூழ்நிலையில், முக்கியமான வேலையொன்று இருக்கவே, “இந்த ஒரு மாசம் எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சந்த்ரி… வந்துடுறேன்” என்றார் ராதா.
அந்த ஒரு மாதத்திற்கு குழந்தைகளை கவனித்துக் கொள்ள யாரை நியமிப்பது?
இந்த கேள்விக்கு கணவனும் மனைவியும் கலந்து பேசி முடிவெடுப்பதை விட்டு விட்டு, சசிதரன் அவன் தரப்பிலும், சந்த்ரிகா அவள் தரப்பிலும் ஆள் தேட… அரவிந்தனின் மூலம் அமைந்தது ஒரு பெண். பெயர் சோனம்.
“எங்க அபார்ட்மெண்ட்ல, முன்னாடி வேலை பாத்தாங்க சந்த்ரி… வீட்டுக்காரருக்கு உடம்புக்கு முடியாமல், இப்போ கொஞ்ச நாள் வேலைக்கு வரல. எதேச்சையா ஒருநாள் பாக்கும் போது, நல்ல சம்பளத்துல வேலை இருந்தா சொல்லுங்கன்னு, எங்கிட்ட கேட்டாங்க. அதான் உங்கிட்ட கூட்டிட்டு வந்தேன்” என்ற அறிமுகத்தோடு அந்த பெண்ணை அரவிந்தன் கொண்டு வந்து நிறுத்தினான்.
“என் கொலீக் வீட்டுல இந்த பொண்ணோட அக்கா வேலை பாக்குதாம். ரொம்ப நல்ல மாதிரின்னு சொன்னாங்க” என்று கணவனிடம் மாற்றி அறிமுகம் செய்தாள் சந்த்ரிகா.
அவளுக்கு அரவிந்தனின் வார்த்தைகளில் முழு நம்பிக்கை இருந்தது. ஆனால், அவள் கணவனுக்கும் இருக்க வேண்டும் என்றில்லையே.
எங்கே அந்த பெண்ணைப் பற்றி விசாரிக்கிறேன் பேர்வழி என்று கணவன் கிளம்பி விடுவானோ என்ற பயத்தில், மனதறிந்து பொய் சொன்னாள் சந்த்ரிகா.
மனைவியின் வார்த்தைகளை நம்பினான் சசிதரன். அதனால், எதுவும் விசாரணை என்று அவனும் கிளம்பவில்லை. ஆனைக்கே அடி சருக்கும் போது, சசிதரனுக்கு சருக்காதா என்ன?
காலையில் இவர்கள் வேலைக்கு கிளம்பும் முன், குழந்தைகளின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் சோனம், மாலையில் அலுவலகம் விட்டு முதலில் வருபவர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு செல்லுவார். பெரும்பாலும் முதலில் வருவது சந்த்ரிகாவாகத் தான் இருக்கும்.
எந்தவித குழப்பமும் இன்றி இந்த நடைமுறை அழகாகவே நடந்து கொண்டிருந்தது. அதுவும், சந்த்ரிகா அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போதெல்லாம், குழந்தைகள் நல்ல உறக்கத்திலேயே இருந்தார்கள்.
சோனத்திடம் அதைப்பற்றி கேட்கும் போது, “உங்க பிள்ளைங்க நல்ல சுறுசுறுப்பு சிஸ்டர். அவங்களுக்கு ஈடுகொடுத்து நானும் நல்லா விளையாடுவேன். அப்புறம் குளிக்க வச்சு, சாப்பாடு கொடுத்து தூங்கப்போட்டா, அடிச்சு போட்ட மாதிரி நல்லா தூங்கிடுறாங்க” என்று சொன்னார்.
அதைக்கேட்டு சந்த்ரிகாவிற்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. “இந்த பெண் இப்படியே குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள எனக்கு உதவியாக இருந்தால், என் அம்மா தயவு கூட எனக்கு வேண்டாம்’ என்ற எண்ணம் கூட அவளுக்கு வந்தது.
சோனம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளவென்று வந்து மாதம் ஒன்று முடிவடைய, அந்த பெண்ணே எதிர்பார்க்காத நல்ல சம்பளத்தைக் கொடுத்து, அவரை திக்குமுக்காட வைத்து விட்டாள் சந்த்ரிகா.
சசிதரனும் அதற்கு பிறகு வேலையை விட்டுவிடுவதைப் பற்றி எதுவும் பேசவில்லை. கணவன் என்ன முடிவில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தாலும், அவனாக அதைப்பற்றி பேசாமல், தானாகப் பேசுவதற்கும் பயமாக இருந்தது சந்த்ரிகாவுக்கு.
அவள் பயத்திற்கு முடிவு கட்டுவது போல, அன்று வேலை விட்டு வந்த சசிதரன், “இன்னும் ஒருவாரத்தில் தன்னுடைய ப்ராஜெக்ட் முடிவடைந்து விடும் என்றும், தன்னோடு வர இஷ்டம் இருந்தால், கிளம்புவதற்கு தயாராக இரு” என்றும் சொல்ல, கணவனின் சட்டையை பிடித்து உலுக்கும் வேகம் வந்தது அவளுக்கு.
‘அப்படியானால்…, இங்கே, கணவன் என்னும் ஆணின் விருப்பப்படி தான் எல்லாம் நடக்க வேண்டுமா? பெண்களின் ஆசை, கனவு, விருப்பங்களுக்கு, மதிப்பே இல்லையா? என்ன ஒரு பெண்பிறவி?’ என்று ஓங்கி கத்த வேண்டும் போல இருந்தது.
தான் நினைத்ததை கணவனிடமே செய்திருக்கலாம் சந்த்ரிகா. அப்படி செய்திருந்தால், அவள் மன குழப்பத்திற்கு விடையாவது கிடைத்திருக்கும்.
ஆனால், எல்லா குழப்பங்களையும், கோபங்களையும் சுமந்து கொண்டு போய், அவள் கொட்டிய இடம் அரவிந்தன். அவனோ, அவளை இன்னும் நன்றாக குழப்பினான்.
“அந்த பட்டிக்காட்டுல போய் மாட்டிகிட்டா, உன் காலத்துக்கும் சிட்டி லைஃபை நினச்சு கூட பார்க்க முடியாது சந்த்ரி” என்று பயங்காட்டினான்.
“அப்போ நான் என்ன தான் செய்யுறது அர்விந்த்?..” குழப்பத்தோடு சந்த்ரிகா கேட்டாள்.
“நான் சொல்லலாமா என்னன்னு தெரியலை? ஆனாலும், என் கண்ணு முன்னாடி திறமையான ஒரு பொண்ணோட வாழ்க்கை ஸ்பாயில் ஆகிட கூடாது ங்குறதுக்காக சொல்லுறேன்…” பீடிகையோடு தொடங்கியவன்,
“இந்த காலுக்கு பொருந்தாத செருப்பை, கழற்றி வீசுற மாதிரி, உன்னோட பொருந்தாத கல்யாண வாழ்க்கைலயிருந்து வெளிய வா சந்த்ரி” என்றான் அக்கறை போல.
“வெளிய வந்து?…”
“உன் லைஃப் ஸ்டையிலுக்கு ஏத்த மாதிரி ஒரு வாழ்க்கையை, அதாவது… என்னை மாதிரி ஒரு ஆளை செலக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ. நீ செலக்ட் பண்ணுற அந்த ஆள், நானா இருந்தா ரொம்ப… ரொம்ப சந்தோஷப்படுவேன். உன் அருமை தெரிஞ்ச எங்கூட வந்துடுறியா சந்த்ரி?…” மயக்கும் குரலில் கேட்டான் அரவிந்தன்.