தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபரிடமிருந்து, சற்றும் எதிர்பார்க்காத வார்த்தைகள் வந்து விழ, மூளை ஸ்தம்பித்து, வாயடைத்து போனாள் சந்த்ரிகா.
ஆம்… வாயடைத்து தான் போனாள்.
அரவிந்தனின் வார்த்தைகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது எனப்புரியாமல், வாயடைத்துப் போய் மௌனமாக அந்த இடத்திலிருந்து சந்த்ரிகா நகர்ந்தாள்.
“பதில் சொல்லிட்டு போ சந்த்ரி” என்றான் அரவிந்தன்.
அங்கிருந்து நகர்ந்தவள், இப்போது நின்று அவனைத் திரும்பி பார்த்தாள். அந்த கண்களில் தெரிந்த அடிபட்ட பாவனை, அரவிந்தனைக் கூட அசைத்துப் பார்த்தது.
‘அதற்காகவெல்லாம் பார்த்தால், அண்ணன் லிங்கத்திற்கு, அவன் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியுமா, என்ன?’ எனவே, அசராமல் பதிலுக்காக சந்த்ரிகாவை பார்த்தபடி நின்றான்.
பதிலேதும் சொல்லாமல், அங்கிருந்து நகர்ந்து விட்டாள் சந்த்ரிகா. அவர்கள் சந்தித்து கொண்டது மாலை நேர காஃபி டைம் என்பதால், அதற்கு மேல் தனியாக சந்த்ரிகாவை அவனால் சந்திக்க முடியவில்லை.
‘கழுதை கெட்டால் குட்டிச் சுவர். எங்கே போய்விடுவாள்? அங்கே சுற்றி, இங்கே சுற்றி கடைசியில் என்னிடம் தான் வந்து நிற்பாள்’ என்று ஆணித்தரமாக நம்பினான் அரவிந்தன். இல்லையில்லை… அந்த குட்டிச் சுவர்.
அந்தளவிற்கு சந்த்ரிகாவை கணித்து வைத்திருந்தான் அரவிந்தன். அத்தனைக்கும் காரணம் அவள் அன்றி வேறு யாராக இருக்க முடியும்?
மாலையில் வீடு வந்து சேர்ந்த சந்த்ரிகாவின் முகம், தன் ஜீவகளையை இழந்திருந்தது. இவள் வரவும், சோனம் கிளம்பி சென்றாள்.
வீட்டுக்கு வந்ததும், எப்போதும் போல தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடம், அடைக்கலம் தேடி ஓடினாள் சந்த்ரிகா.
மௌனமாக ஒரு நிமிடம் தன் குழந்தைகளைப் பார்த்து கொண்டு நின்றிருந்தவள், அவர்களுக்கு பக்கத்தில் படுத்து, தன் கையால் இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டு, “உங்க அம்மாகிட்ட அப்படி கேக்குறதுக்கு, அந்த அரவிந்தனுக்கு எப்படி டா தைரியம் வந்தது?” என்று வாய்விட்டு அரற்றினாள். இத்தனை நேரமும் அவள் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர், இப்போது கரகரவென்று வழிந்தது.
இன்னமும் அரவிந்தன் தன்னிடம் அப்படி நடந்து கொண்டதை நம்ப மறுத்தது சந்த்ரிகாவின் மனது. அந்த அளவிற்கு அவனை மனதில் உயர்ந்த இடத்தில் வைத்திருந்தாள் சந்த்ரிகா.
யோசித்து பார்த்தால், ஆரம்பம் முதலே தன்னிடம் இப்படி ஒரு எண்ணத்தோடு தான் அரவிந்தன் பழகி இருக்கிறான் என்று, அவன் பேச்சுக்களை ஒன்றோடொன்று பொருத்திப் பார்க்கும் போது புரிந்தது சந்த்ரிகாவிற்கு.
‘எந்த இடத்திலும் நட்புக்குரிய எல்லைக் கோட்டைத் தாண்டி, என்றுமே அவனிடம் நான் பழகவில்லையே? பின்னர், எப்படி என்னிடம், இப்படி ஒரு கேள்வியைக் கேட்கும் தைரியம் வந்தது அரவிந்தனுக்கு?’
தன் கணவனுக்கும் தனக்குமான கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள், வீட்டுப் பிரச்சினைகள் என்று எல்லாவற்றையும் அரவிந்தனிடம் கொண்டு வந்து கொட்டி, அந்த தைரியத்தை அவனுக்கு வளர்த்து விட்டதே தான் என்பது புரியாமல், அந்த அளவிற்கா என்னுடைய நடத்தைகள் மோசமாக இருந்திருக்கிறது? என்று சுய அலசலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் சந்த்ரிகா.
எதிர்பார்ப்பிலாத அன்பைத் தேடும் இடத்தில், ஏமாற்றம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தாள் சந்த்ரிகா.
இதே ஏமாற்றத்தை, கணவன் உட்பட பலபேருக்கு தானும் பல நேரங்களில் கொடுத்திருக்கும் உண்மையை, முகத்தில் அறைந்தாற்போல தெரிய வைத்திருந்தது அரவிந்தனின் நடவடிக்கை.
கணவனுக்கும் அவளுக்கும் ஒருசில விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலுமே, அவனை விட்டு பிரிந்து சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே சந்த்ரிகாவிற்கு கிடையாது.
அப்படி இருக்கும் போது, அரவிந்தன் தன்னிடம் இவ்வாறு கேட்டதை, அவமானமாக உணர்ந்தாள் சந்த்ரிகா.
‘எத்தனையோ பேர்கிட்ட சுயநலமா பழகியிருக்கிறேன். ஆனா உங்கிட்ட என்னைக்குமே நான் போலியா நடிச்சதில்லையே அர்விந்த்? உன்னை என்னோட வெல்விஷரா பார்த்தேனே! அது எல்லாத்துக்கும் மேல, உன்னை என்னுடைய குருவா பாத்தேனே! ஆனா நீ?… ச்சே… இவ்வளவு மட்டமா எங்கிட்ட நடந்துகிட்டியே?’
மனக்கண்ணின் முன் அரவிந்தனை நிறுத்தி கேள்விகேட்டுக் கொண்டிருந்தவளுக்கு, ‘நேரடியாக அவனிடம் இத்தனையையும் கேட்டு, அவன் மூக்கை உடைக்காமல் வந்தது தவறு’ என்று தாமதமாக தோன்றியது.
‘நாளைக்கு ஆஃபீஸ் போகும் போது கண்டிப்பா கேக்கணும்’ என்று முடிவெடுத்து கொண்டாள்.
ஆமாம்… கண்டிப்பாக நாளை ஆஃபீஸ் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் சந்த்ரிகா.
பெண்கள் வேலைக்கு என்று வெளியே வந்து விட்டால், இப்படி எத்தனையோ அரவிந்தன்களை சமாளித்து தான் ஆகவேண்டும். அவர்களுக்கு பயந்து கூட்டுப்புழுக்களாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தால், பட்டாம்பூச்சிகளாக சிறகடித்து சுதந்திர வானில் பறக்க முடியாது என்ற உண்மையை எளிதாக அவள் மனம் ஏற்றுக்கொள்ள, அதே கம்பெனியில் தொடர்ந்து வேலை செய்வதில் அவளுக்கு பயம் ஒன்றுமில்லை…
ஒரு வகையில் பார்த்தால், சந்த்ரிகாவின் இந்த மனதைரியத்தை பாராட்ட தான் வேண்டும்.
முடிவெடுத்து கொண்டவள், ஒரு குளியல் போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்து எழும்ப முயல, வேலை விட்டு வந்த சசிதரன் அறைக்குள் நுழைந்தான்.
எழும்பும் தன் முயற்சியை ஒத்தி வைத்து சந்த்ரிகா மறுபடியும் படுத்துக்கொள்ள, குழந்தைகளுக்கு அருகில் வந்து அவர்களை உற்றுப் பார்த்தவன், மனைவியிடம்,
“சந்த்ரி… கோவிட்… இங்க, இந்தியாவிலும் வேகமா பரவ ஆரம்பிச்சிடிச்சின்னு, நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டி இருக்காதுன்னு நினைக்கிறேன். ஹைதராபாத்ல இருக்கிற எங்க ப்ராஞ் ஆஃபீஸ்ல, மூனு பேருக்கு கொரனாவாம். ஆஃபீஸையே ஷட்டவுண் பண்ணிட்டாங்களாம். நீயும் வேலைக்கு போற இடத்தில் கொஞ்சம் கவனமா இரு” என்றான்.
கொரனா வைரஸ்… அது நம்மை மாதிரி வெப்ப நாட்டுக்குள் எல்லாம் தலைவச்சி கூட படுக்க முடியாது என்று, ஜம்பமாக சொல்லித் திரிந்த நம்மவர்களின் வார்த்தைகளை, சுக்கல் சுக்கலாக உடைத்து வேகமாக பரவிக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டம் அது.
கணவனின் அக்கறையில் கண்களை கரித்து கொண்டு வந்தது சந்த்ரிகாவிற்கு. கண்களிலிருந்து பொங்கி வந்த கண்ணீருக்கு, இமைகள் என்னும் தடுப்பணை போட்டு தடுத்தவளின் தலை, சரி என்பதாக ஆடியது.
கணவன் மனைவியாக ஒரே வீட்டில் இருப்பவர்கள் தான். ஆனால், சந்த்ரிகாவின் அன்றைய அலட்ச்சியமான பேச்சு, இருவருக்குள்ளும் இருந்த இடைவெளியை இன்னும் அதிகமாக்கி இருந்தது.
ஆனால், மனைவியின் பாதுகாப்பு என்று வரும்போது, அந்த இடைவெளியை அனாயசமாக தாண்டி வந்துவிட முடிகிறது சசிதரனால்.
மனைவியின் தலையாட்டலைப் பதிலாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர ஆரம்பித்த சசிதரன், சட்டென்று நின்று, “என்னாச்சு சந்த்ரி? ஏன் முகம் வாடிப்போய் இருக்கு?” என்றான் மனைவியின் முகம் பார்த்து.
கணவனின் அக்கறையில், தங்களுக்கிடையே இருந்த இடைவெளியைத் தாண்டிச் சென்று, அரவிந்தன் தன்னிடத்தில் நடந்து கொண்டதை கணவனிடம் சொல்லிவிட வேண்டும் என்ற வேகம் எழுந்தது சந்த்ரிகாவுக்கு.
ஆனால் நினைத்ததை செயலாற்ற விடாமல் ஒரு தயக்கம் அவளிடம் வந்து குடியேறியது. அனைத்து அனர்த்தங்களின் ஆரம்ப புள்ளி இந்த தயக்கம் தான் என்பது தெரியாமல், “ஒண்ணுமில்ல சசி” என்றாள் சந்த்ரிகா.
மறுநாள் கண்டிப்பாக அரவிந்தனிடம் நேருக்கு நேராக சந்தித்து, ‘என்னைப்பற்றி என்ன எண்ணம் உன் மனசுல இருக்கு அரவிந்த்? நீ எப்படி, எங்கிட்ட அப்படி கேட்க்கலாம்?’ என்று கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே சந்த்ரிகா வேலைக்கு சென்றாள்.
ஆனால் அரவிந்தன் வேலைக்கு அன்று வராததால், அவள் நினைத்தபடி எதுவும் அவனிடம் கேட்க முடியலவில்லை.
‘இன்று இல்லாவிட்டால் என்ன? நாளையாவது முகத்துக்கு நேராகவே இந்த கேள்வியை கேட்டுவிட வேண்டும்’ என்று நினைத்து, சந்த்ரிகா மறுநாளும் அலுவலகம் வர, அன்றும் அரவிந்தன் விடுமுறை.
‘தன்னை நேரடியாக சந்திப்பதை தவிர்ப்பதற்காகவே அலுவலகம் வராமல் இருக்கிறானோ அரவிந்தன்?’ என்ற சந்தேகம் உண்டானது சந்த்ரிகாவிற்கு. அப்படி ஒரு எண்ணம் வந்தபிறகு காத்திருக்கும் பொறுமை, அவசரகுடுக்கை சந்த்ரிகாவிற்கு இல்லாமல் போனது.
இதற்கு மேலும் கேள்வி கேட்காமல் விட்டால், ஆறின சோறு பழஞ்சோறு ஆகிப்போவது போல, இந்த விஷயமும் ஆகிப்போகும் என்று நினைத்தவள், அலுவலகத்தில் பெர்மிஷனை போட்டுவிட்டு, வாடகைக்கார் ஒன்றில் அரவிந்தன் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்து விட்டாள்.