“இரெண்டு நாளா ஃபீவர் சந்த்ரி… பாத்துக்க யாருமில்லாம அனாதையா இருக்கேன்” குரலில் சோர்வை கொண்டு வந்து பேசியவன், பேச்சின் முடிவில் லேசாக இருமியும் வைத்தான்.
“ஓ…” என்றவள், வேறெதுவும் சொல்லாமல் ஃபோனை கட் செய்து, வந்த வாடகைக் காரை, தான் திரும்ப வரும்வரை காத்திருக்க பணித்துவிட்டு, அரவிந்தன் வீடு இருக்கும் மூன்றாவது தளத்துக்கு செல்வதற்காக அங்கே உபயோகத்தில் இருந்த மின்தூக்கியில் ஏறிக்கொண்டாள்.
மனம் ‘இவன் உண்மையாகத் தான் உடம்புக்கு சரியில்லை என்று சொல்கிறானா?’ என்று குழப்பத்திலேயே ஆழ்ந்திருந்தது.
லிஃப்டிலிருந்து வெளியே வந்தவள், அரவிந்தனின் வீட்டை நோக்கி வராண்டாவில் நடக்க ஆரம்பிக்க, சற்று தூரத்திலேயே சந்த்ரிகா தேடிவந்தவனின் அட்டகாச சிரிப்பு, இவள் காதில் வந்து மோதியது.
“அண்ணா… லிங்க ண்ணா… நீங்க பேசுறது எதுவுமே எனக்கு தெளிவா கேக்கமாட்டேங்குது. இருங்க நான் வாட்ஸ்அப் கால்ல வர்றேன்” என்று அரவிந்தனின் குரல் சத்தமாக கேட்க, சற்றே நிதானித்தாள் சந்த்ரிகா.
கூடவே, அரவிந்தனின் ‘லிங்கம் அண்ணா” என்ற அழைப்பு தன் வீட்டு நபர்களின் பேச்சில் அடிக்கடி அடிபடும் லிங்கம் என்பவனை நினைவுக்கு கொண்டுவர, ஒருவித எச்சரிக்கை உணர்வோடு அரவிந்தனின் வீடு நோக்கி முன்னேறினாள் சந்த்ரிகா.
அரவிந்தன் இருக்கும் மூன்றாவது மாடியில், சுற்றியிருக்கும் ஃப்ளாட் வாசிகள் அனைவரும் பிறமொழியினர் என்பதால், தான் பேசுவது அடுத்தவருக்கு கேட்டுவிடும் என்ற பயம் இல்லாமல் கொஞ்சம் சத்தமாகவே பேசினான் அரவிந்தன்.
சில வினாடிகள் இடைவெளிக்குப் பிறகு, “ஹ்ம்ம்… இப்போ உங்க வாய்ஸ்ஸை கேட்கவும் முடியுது, உங்களைப் பார்க்கவும் முடியுது ண்ணா…”
மறுபடியும் உற்சாகக் குரலில் பேசத்தொடங்கிய அரவிந்தன், “அண்ணா… உங்க ஊரு சந்த்ரிகா சோப்பு, நாம நினைக்கிற மாதிரி இல்ல ண்ணா, படுவிவரம். நான் காலுக்கு பொருந்தாத செருப்பை கழற்றி போடுற மாதிரி, உம்புருஷனையும் கழற்றி விட்டுட்டு, எங்கூட வந்துருன்னு சொல்லுறேன்…, பதிலே சொல்லாமல் அந்த திமிரு பிடிச்சவ எழும்பி போய்ட்டா ண்ணா!”
அரவிந்தனின் ‘உங்க ஊரு சந்த்ரிகா சோப்பு’ என்ற வார்த்தைகளே, ‘தான் நினைத்த லிங்கத்தோடு, தன்னைப் பற்றித்தான் அரவிந்தன் பேசுகிறான்’ என்று சந்தேகமின்றி சந்த்ரிகாவுக்கு புரிந்து விட்டது.
சத்தமெழுப்பாமல் அரவிந்தனின் வீட்டுக்கு முன்பாக வந்த சந்த்ரிகா, அங்கு லேசாக திறந்திருந்த ஜன்னல் வழியாக அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
அங்கே… சுவரிலிருந்த ஒரு ஸ்டாண்டில் தன் கைபேசியை வைத்து விட்டு, சட்டைக்கு பட்டன் போட்டுக் கொண்டே பேசிக்கொண்டிருந்தான் அரவிந்தன். அந்த கைபேசி சந்த்ரிகா பார்த்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சாய்வாகவே பார்க்க கிடைத்ததோடு, அது வீடியோ அழைப்பாக இருந்ததால், கைபேசியின் திரையில் லிங்கத்தின் உருவமும் காணக்கிடைத்தது.
இதுநாள் வரையிலும் லிங்கத்தை சந்த்ரிகா பார்த்ததில்லை. ஆதலால் அவளுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை.
“அடப் போடா… இத்தனை மாசமாகியும் ஒரு பொட்டச்சியை மயக்கி உங்கூட இழுத்துட்டு போக முடியலைங்குறதை, வெக்கமில்லாமல் எங்கிட்ட சொல்லுறியே, நீயெல்லாம் ஆம்பிள்ளைன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு அலையாதடா… இதே, நான் உன் இடத்தில் இருந்திருந்தா, இந்நேரத்துக்கு அவ…”
ஸ்பீக்கர் மோடில் ஃபோன் இருக்க, ஏடாகூடமாக லிங்கம் பேசியதை ஓரளவிற்கு மேல் கேட்க முடியாமல், தன் காதுகள் இரண்டையும் அழுந்த மூடிக் கொண்டாள் சந்த்ரிகா.
“அந்த அளவுக்கு என்னை மட்டமா எடை போடாதீங்க ண்ணா… நான் சொன்னா சொன்னது தான். கண்டிப்பா நீங்க சொன்னதை நடத்திக்காட்டுவேன்” வீராவேசம் பேசினான் அரவிந்தன்.
“கிழிச்ச… அந்த கேவிஎஸ் குடும்பத்துகாரனுங்களை எழும்பமுடியாத அளவுக்கு அடிக்கணும்… உங்கூட வேலைப் பாக்குற, அவனுங்க வீட்டு மருமகளை அட்லீஸ்ட் ஒருவாரமாவது உங்கூட எங்கயாவது தள்ளிட்டு போயிடு, நான் இவனுங்க மானத்தை சந்தி சிரிக்க வச்சிடுறேன்னு உங்கிட்ட சொல்லி ஆறு மாசத்துக்கு மேல ஆவுது. அதைச் செய்ய உனக்கு துப்பில்ல… ஆனா, இந்த வாய்ச் சவடாலுக்கு மட்டும் குறையில்ல” ஸ்பீக்கர் வழியே மறுபடியும் கரகரத்தான் லிங்கம்.
அரவிந்தனோடு வேலை பார்ப்பது கேவிஎஸ் குடும்பத்து மருமகள் என்பது தெரியவும், தன் பழிவாங்கும் படலத்திற்கு அவளை உபயோகப்படுத்திக் கொள்ள முடிவு செய்து கொண்டான் லிங்கம்.
காலங்காலமாக பெண்களின் ஒழுக்கமே, ஒரு குடும்பத்தின் கௌரவமாக இருக்க, தன் தம்பி மூலம் அந்த கௌரவத்தில் கை வைக்கப் பார்த்தான் லிங்கம்.
கிராமத்தில், ஒரு திருமணம் ஆகாத பெண், தான் விரும்பியவனுடன், விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வீட்டைவிட்டு போனாலே, காலங்காலமாக அந்த குடும்பத்துக்கு அவப்பெயர் நின்று போகும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், வீட்டு மருமகள் கணவனையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு இன்னொருவனோடு சென்றுவிட்டால் ஏற்படும் அவமானம், காலங்காலமாக அந்த குடும்பத்தை தலை நிமிர விடாது என்று கணக்குப் போட்டே, இந்த திட்டத்திற்கு உதவி செய்யுமாறு சித்தி மகன் அரவிந்தனிடம் லிங்கம் கேட்டது.
ஆனால், இன்றுவரை அது நிறைவேறாமல் இருக்கவே, சித்தி மகனிடம் கோபத்தில் பொரிந்து தள்ளி விட்டான் லிங்கம்.
“சும்மா டென்ஷன் ஆகாதீங்க ண்ணா… எனக்கு உடம்பு சரியில்லைன்னு உங்க ஊர்காரிகிட்ட சொல்லியிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில என்னைப் பார்க்க அந்த சந்த்ரி, முந்திரி அடிச்சு பிடிச்சு இங்க வந்து நிக்குறாளா, இல்லையான்னு பாருங்க. அப்போ, மயிலே மயிலே இறகு போடுன்னு கெஞ்சாம, நானே நைசா அதோட இறக்கையை புடுங்கிக்கிறேன்.”
“அதுக்கப்புறம், அதச்சொல்லிச் சொல்லியே எங்கூட அவ வர்றதுக்கு ப்ரஷர் குடுப்பேன். வேற ஆப்ஷனே இல்லாம, அவளும் எங்கூட வந்து தானே ஆகணும். அப்புறம், நீங்க நினைச்ச மாதிரி அந்த குடும்பத்தை என்ன வேணும்னாலும் செய்துக்குங்க. நானும் ஒரு மாசமோ இரண்டு மாசமோ என் தேவைக்கு அவளை யூஸ் பண்ணிட்டு, உதறி போட்டுட்டு போய்டே இருப்பேன்” ஏதோ யூஸ் அண்ட் த்ரோ கப்பை உபயோகிப்பது போல, ஒரு பெண்ணின் வாழ்க்கையை இல்லாமல் ஆக்குவது பற்றி, மிகச் சாதாரணமாக அரவிந்தன் பேசினான்.
“திட்டம் என்னவோ, கேக்குறதுக்கு நல்லா தான் இருக்கு… ஆனா, அவ இப்போ இங்க வரணுமே?” என்று கிண்டலடித்தான் லிங்கம்.
“அந்த சந்த்ரியைப் பத்தி உங்களுக்கு தெரியாது ண்ணே… வேலை பாக்கணும் ங்குறதுக்காக பைத்தியம் மாதிரி, என்ன வேணும்னாலும் அவ செய்வா. வேலை பாக்குற இடத்துலயும், போட்டியும் பொறாமையும், உங்களோட நான் பெரிய ஆளுன்னு எல்லார்கிட்டயும் பந்தா காட்டுறதும் தான் அவ குணம். சோ… ஆஃபீஸ்ல வெட்டி பந்தா காட்டணும்னா என்னோட ஃப்ரெண்ட்ஷிப் அவளுக்கு கண்டிப்பா தேவை. அதனால எந்த சூழ்நிலையிலும் என்னை மட்டும் கட்பண்ணி விடவே மாட்டா. கண்டிப்பா என்னைத் தேடி அவ வருவா பாருங்களேன்” சர்வநிச்சயமாகச் சொன்னான் அரவிந்தன்.
தாங்கள் போட்ட திட்டத்தை தங்கள் வாய்மொழியாகவே இருவரும் சொல்லிக்கொண்டிருக்க, வீட்டுக்கு வெளியே நின்று, லேசாக திறந்திருந்த ஜன்னலின் சிறு இடைவெளி வழியே நடந்து கொண்டிருப்பதை, அப்படியே தன் கைபேசியில் வீடியோவாக பதிந்து கொண்டிருந்த சந்த்ரிகா ஆடிப்போனாள்.
‘தன் பழி உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ள இப்படி எல்லாமா திட்டம் தீட்டுவார்கள்?’ நினைக்கும் போதே பயத்தால் உடல் நடுங்கியது சந்த்ரிகாவிற்கு.