கூடவே, ‘ஒரு அந்நிய ஆடவன், என்னை இப்படி எடை போடுமளவிற்கா என் நடத்தை இருந்திருக்கிறது?’ என்று வெட்கித் தலைகுனிந்த சந்த்ரிகாவின் மனது, தன் குணத்தைப் பற்றி சுய அலசலில் இறங்க முற்பட,
அதற்கான இடமும் நேரமும் இதுவல்ல என்று நிமிடத்திற்குள், நிமிர்ந்து நின்றவள், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தெளிவாக முடிவெடுத்து கொண்டு, கணவனின் கைபேசிக்கு, தான் இப்போது நிற்கும் இடத்தின் அட்ரஸை டைப் செய்து வாட்ஸப் மூலமாக அனுப்பினாள்.
பின்னர், “நான் இந்த அட்ரஸில் சேஃப்பாக இருக்குறேன் சசி. இப்போ வீடியோ கால் பண்ணுவேன், ஹலோ சொல்லாமல் அட்டண் செய்யுங்க”, என்று தகவலை வேகமாக டைப் செய்து கணவனுக்கு அனுப்பி விட்டு பார்த்தால், மெசேஜ் சிங்கிள் டிக் காட்டியது.
‘தன் மெசேஜ் கணவன் ஃபோனையே சென்றடையவில்லை என்றால், தன்னுடைய திட்டத்திற்கு உடனடியாக கணவனின் உதவி கிடைக்காதே… என்ன செய்வது?’
யோசித்தவளின் விரல்கள், இப்போது எந்த தயக்கமும் இன்றி, கணவனுக்கு அனுப்பிய அதே குறுஞ்செய்திகளை அருணின் கைபேசிக்கு அனுப்பியது.
கல்யாணம் முடிந்த புதிதில் தன் வீட்டு நபர்கள் எல்லாருடைய கைபேசி எண்களையும் சசிதரன் மனைவி ஃபோனில் பதிந்து வைத்தது, இப்போது சந்த்ரிகாவுக்கு உதவியாக இருந்தது.
சந்த்ரிகாவின் மெசேஜ் அருணின் அலைபேசியை வந்தடையும் போது, அருணும், சிவரஞ்சனியும் தங்கள் அறையில் அமர்ந்து, குழந்தைகள் அபிநந்தன், அபிநயா பற்றி தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.
கேவிஎஸ் பலசரக்கு கடை, சமீப நாட்களாக வார விடுமுறையாக ஒரு நாளை எடுத்துக் கொள்கிறது. அந்த நாளில் சிவரஞ்சனியும் விடுமுறை எடுத்துக்கொண்டு கணவனோடு இருந்து கொள்கிறாள்.
“சொந்தம் ன்னு சொல்லிக்க, நாம இத்தனை பேர் இருந்தும், நம்ம வீட்டு பிள்ளைங்க நாள் முழுசும் யார்கிட்டயோ இருக்குறதைப் பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்கு மாமா. பேசாம பிள்ளைங்களை தூக்கிட்டு வந்து நாம வளத்தா என்னன்னு கூட சமயத்துக்கு தோணுது” என்று கணவனிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள் சிவரஞ்சனி.
“உங்க அக்காவா?… ஏன்?… அண்ணின்னு சொல்லமாட்டீங்களோ?…” என்று சிவரஞ்சனி கணவனிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கும் போது தான், சந்த்ரிகா அனுப்பிய முதல் மெசேஜ் அருணின் ஃபோனுக்கு வந்த சத்தம் கேட்டது.
அருணுக்கு அதுவரை தெரியாத எண் தான். ஆனால், “அருண்… நான் அண்ணி” என்ற அறிமுகப்படலத்தோடு மெசேஜ் வந்திருந்ததால், யார் என்ற குழப்பம் இன்றி, ‘அண்ணி ஏன் இப்போது தனக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறார்?’ என்ற குழப்பமே அருணின் மனதில்.
வந்த செய்தியை மனைவிக்கு அருண் காட்டினான். அக்கா நம்பர் என்று அதிசயப்பட்ட சிவரஞ்சனி, அடுத்தடுத்த செய்திகளில் கலவரப்பட்டு போனாள். அவளை அமைதிபடுத்திய அருண், “ஓகே” என்று சொல்லுவது போல கட்டை விரலை உயர்த்தி காட்டும் இமோஜியை தட்டிவிட்டான்.
உடனே அருணின் எண்ணிற்கு வீடியோ கால் ஒன்றை தட்டிவிட்டு, நடக்கும் யாவையும் வீடியோவாக பதிவு செய்வதற்கான செயல்முறைகளையும் செய்துமுடித்த சந்த்ரிகா, ஃபோன் திரையில் தெரிந்த அருணிடம் கண்களால் சமாதானம் சொன்னாள்.
அரிதிலும் அரிதாக அன்று தான் உடுத்தியிருந்த சேலையால், லேசாக வெளியே தெரிந்த இடது பக்க இடுப்பில் கேமரா வெளியே தெரியும்படி ஃபோனை சொருகிக்கொண்டு, தைரியமாக அரவிந்தனின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள்.
லிங்கத்திடம் பேசிக்கொண்டு நின்றிருந்த அரவிந்தன், “யார்னு பாத்துட்டு வந்துடுறேன் ண்ணே…” என்று சொல்லிவிட்டு அசட்டையாக வந்து கதவைத்திறக்க, சந்த்ரிகா நின்றிருந்தாள்.
அங்கே அவ்வளவு சீக்கிரம் சந்த்ரிகாவை, அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அதிர்ந்து போன அவன் முகமே சொன்னது.
நொடியில் தன் அதிர்ச்சியை மறைத்து கொண்டவன், விழிகளை விரித்து, புடவை கட்டியிருந்த சந்த்ரிகாவை மேலிருந்து கீழ் வரை பார்த்து, “வாவ்… ப்ப்யூயூட்ட்டிஃபுல்…” என்று வாயைப் பிளந்தபடி, சுவாதீனமாக அவள் தோள் மீது கையை வைக்க முயன்றான்.
அவன் கையைத் தட்டிவிட்ட சந்த்ரிகா, “ராஸ்கல்… எவ்வளவு திமிர் இருந்திருந்தா, நீ கூப்பிட்டதும், உன் பின்னாடி நான் வாலை ஆட்டிட்டு வந்துடுவேன்னு நினைச்சிருப்ப?” என்று கேட்டுக் கொண்டே, தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி, பளாரென்று அவன் கன்னத்தில் அரை ஒன்று வைத்திருந்தாள்.
இப்படி ஒன்றை அவளிடமிருந்து கிஞ்சித்தும் எதிர்பாராத அரவிந்தனுக்கு, சந்த்ரிகாவின் பேச்சு, தான் பேசியது அத்தனையையும் அவள் கேட்டுவிட்டாள் என்பதை உணர்த்த,
“அப்படி நினைக்குற மாதிரி நீ தான் என்னை டெம்ப்ட் பண்ணுன ங்குதை மறந்துடாத?” என்றான் ஆணவமாக.
“எப்படி?… எப்படி?… நான் உன்னை டெம்ப்ட் பண்ணுணனா? ஒரு பொண்ணு முட்டாள்தனமா உங்களை நம்பி, கொஞ்சம் சிரிச்சி பேசி, தன்னோட பிரச்சினைகளை உங்ககிட்ட சொல்லிட்டா… அப்படியே டெம்ட் ஆகிடுவீங்களா நீங்க? உங்க காவாலித்தனத்துக்கு மொக்கையா காரணம் சொல்லாதீங்க” என்றவள்,
“உன்னைச் சொல்லி தப்பில்லை டா… உன்னை தூண்டிவிட்டானே ஒருத்தன் அவனச் சொல்லணும், என்றவள், இன்னமும் அழைப்பை துண்டிக்காததால் இணைப்பிலேயே இருந்த லிங்கத்தைப் பார்த்து,
“உன் வீராவேசத்தை தில்லிருந்தா நேருக்கு நேரா எங்க வீட்டு ஆம்பிள்ளைங்க கிட்ட காட்டுடா பாப்போம். பொட்டப்பய மாதிரி பொண்ணுங்க கிட்ட காட்டாத” என்று சீறினாள்.
தன்னை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி, தன் பழிமுடிக்க நினைத்த லிங்கத்தின் மீது அடங்காத கோபம் வந்தது சந்த்ரிகாவுக்கு. எதிரில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவனுக்கும் அறை கிடைத்திருக்கும்.
“டேய் அரவிந்தா… ஏதோ இறக்கையை புடுங்குவேன்னு டயலாக் எல்லாம் விட்டுட்டு, இப்போ பேச விட்டு வேடிக்கை பாக்குற? கழுதையை, கழுத்தை நெரிச்சு சோலியை முடி டா… என்ன ஆனாலும் நான் பாத்துக்குறேன்” அடங்க மறுத்து குதித்தான் லிங்கம்.
“ஆமா… நீ மாமியார் வீட்ல உக்கார்ந்து களி திங்கும் போது, உன்களி உருண்டை பெருசா, இல்ல, அவன் களிஉருண்டை பெருசான்னு, உம்பக்கத்துல உட்கார்ந்து பார்ப்பான்.” அரவிந்தனிடம் ஏளனமாகச் சொல்லிய சந்த்ரிகா,
“வாழ்க்கையில ஒருதடவை முட்டாளா இருந்ததுனால, எல்லா நேரமும் நான் முட்டாளா இருக்கணும்னு கட்டாயம் கிடையாது. நீங்க ரெண்டு பேரும் பேசுனதை ஏற்கனவே வீடியோ எடுத்து என் வீட்டாளுங்களுக்கு அனுப்பியாச்சு. இப்போ நான் உங்கிட்ட பேசுறதை லைவ்வா எங்கொழுந்தன் பாத்துட்டு தான் இருக்காப்ல. உன் அண்ணன் சொன்ன மாதிரி எம்மேல கையை வச்சிப்பாரு டா…, அப்புறம் தெரியும் உன் நிலமை” நெஞ்சை நிமிர்த்தி தைரியமாகச் சொன்னாள்.
பின்னர், தன் இடுப்பிலிருந்த ஃபோனை எடுத்து, அரவிந்தனின் போனுக்கு நேராக காட்டி, “அருண்… இது மாமா கையால அரை வாங்குன லிங்கம் தானே? நீங்க என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது. இதுக்கு மேல அவன் நம்ம வீட்டு ஆளுங்க கிட்ட வாலை ஆட்டக்கூடாது. அவ்வளவு தான் எனக்கு வேணும்” என்றவள்,
அரவிந்தனைப் பார்த்து, “வா… உனக்கு ஆஃபீஸ்ல வச்சிருக்கேன் கச்சேரி” என்று விட்டு அந்த அறையை விட்டு வெளியேற முயன்றாள்.
அடுத்த நொடி, “அப்படி எதுவும் செய்து, என் லைஃபை ஸ்பாயில் பண்ணிடாத சந்த்ரி” என்று பதறினான் அரவிந்தன்.
“என்னதான் எனக்கு நீ கெடுதல் நினைச்சாலும், தகுதி இல்லாதவங்க மேல வைக்கிற நம்பிக்கை, ஆலகால விஷத்துக்கு சமம் ங்குற வாழ்நாள் லெசனை எனக்கு சொல்லிக் குடுத்துருக்க. அதுக்கு ரொம்ப தேங்ஸ்… ” என்றபடியே அரவிந்தனின் அறையை விட்டு வெளியேறினாள் சந்த்ரிகா.
அண்ணியின் வார்த்தைகளையும், அங்கு நடந்தவற்றையும் கொண்டு, லிங்கம் பின்னிய சதிவலை அருணுக்கு புரிந்தது. அங்கே தான் பேசுவதற்கு எதுவுமே இல்லாமல், வார்த்தைகளால் அடித்து துவம்சம் செய்த அண்ணன் மனைவியை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்த அருண், அடுத்து தான் செய்யவேண்டியது என்ன என்பதை தெளிவாக திட்டமிட்டு கொண்டான்.
ஆனால் காலமோ, இன்றைய அதிர்ச்சி இத்தோடு உனக்கு முடியவில்லை என்று சந்த்ரிகாவைப் பார்த்து சிரித்தது…