காலம் என்னும் நல்லாசிரியர், தன் குடும்ப விஷயங்களை தேவையில்லாமல் அடுத்தவர்களிடம் பகிரக்கூடாது, அதிலும், அடுத்த ஆண்களிடம் கூடவேக் கூடாது என்ற பாடத்தை சந்த்ரிகாவிற்கு வலிக்க வலிக்க கற்றுக் கொடுத்திருக்க, தான் காத்திருக்க சொல்லியிருந்த வாகனத்தில், மௌனமாக வந்து ஏறிக்கொண்டாள் சந்த்ரிகா.
இதற்கு மேலும் அலுவலகத்திற்கு செல்லும் மனநிலை இல்லாததால், கார் ட்ரைவரிடம் வீட்டு விலாசம் சொல்லி, அங்கு செல்ல பணித்தாள்.
“அக்கா, ஒண்ணும் பிரச்சினை இல்லை ல்ல… பத்திரமா வீட்டுக்கு போய்டுவ ல்ல?”
அலைபேசியில் இன்னமும் அழைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க, கணவனுடனே அமர்ந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சிவரஞ்சனி ஒருவித பதட்டத்தோடு கேட்டாள்.
“ம்ம்… போய்டுவேன் சிவா, நீ டென்ஷன் ஆகாத” அமைதியாக சொன்னாள் சந்த்ரிகா.
சந்த்ரிகாவின் வழக்கத்திற்கு மாறான இந்த அமைதியும், அவள் கண்களில் தெரிந்த அதீத வலியும், அப்போதே ஓடிச்சென்று அக்காவை அணைத்து ஆறுதல்படுத்த வேண்டும் என்ற துடிப்பை தங்கைக்கு கொடுக்க,
சற்று நேரத்திற்கு முன் பழுது பார்க்கப்பட்ட இதயத்துக்கு சொந்தக்காரியான சந்த்ரிகாவிற்கு, தங்கையின் பரிவு இப்போது நன்றாகவே புரிந்தது.
தங்கையின் கேள்விக்கு, கண்ணை எட்டாத சிரிப்பொன்றை உதிர்த்தபடியே, “இல்ல… நான் மேனேஜ் பண்ணிப்பேன் சிவா” என்றவள், “தப்பா நினைச்சுக்காத… நான் வீட்டுக்கு போய் உனக்கு ஃபோன் பண்ணட்டுமா?” என்றாள் தயங்கியபடியே.
தங்கையை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் சந்த்ரிகாவிற்கு இல்லை. ஆனால், ‘இத்தனை பாசத்திற்கும் தான் தகுதியானவளா?’ என்ற எண்ணம் தோன்றி அவளை அலைக்கழிக்க, ‘எங்கே, காருக்குள் வைத்து வெடித்து அழுது விடுவோமோ?’ என்ற பயத்திலேயே, அப்படி சொன்னது.
அக்காவின் மனநிலை சிவரஞ்சனிக்கு புரிந்ததோ என்னவோ தெரியவில்லை, உடனே சரியென்று தலையாட்டியவள், “அக்கா, நீ எடுத்த வீடியோஸை அனுப்பி வைப்பியாம், இவங்க சொல்லுறாங்க. அப்படியே, வீட்டுக்கு போய் சேர்ந்ததும் மறக்காமல் ஃபோன் பண்ணு, சரியா க்கா” என்றாள்.
அருண், சோர்ந்து போயிருந்த சந்த்ரிகாவின் முகத்தைப் பார்த்து, “என்ன ஆனாலும் பாத்துக்கலாம் அண்ணி… நீங்க போட்டு மனசை குழப்பிக்காம வீடு போய் சேருங்க” எனவும், தலையாட்டியவள், கைபேசி அழைப்பை துண்டித்து விட்டு, கார் சீட்டில் சாய்ந்து கண்களை மூடினாள்.
மூடிய கண்களுக்குள் “நீதான் என்னை இப்படி நடந்துக்க டெம்ப்ட் பண்ணுன” என்று குற்றம் சாட்டியபடியே, திரும்பத் திரும்ப வந்து போனான் அரவிந்தன்.
அரவிந்தனின் முகத்துக்கு நேரே, “நீ எப்படி என்னிடம் இப்படி கேட்க்கலாம்?” என்று கேட்டுவிட வந்தவளுக்கு, அவன் முகமூடி கழன்று உண்மையான முகம் தெரிய வரவும், முதலில் ஆடிப்போனதென்னவோ நிஜம்.
ஆனால் நிமிடத்துக்குள் தெளிந்து, அங்கு நடப்பவற்றை வீடியோவாக எடுத்தவளுக்கு, அவனை அப்படியே விட்டுச் செல்ல மனமே இல்லை.
உன் உண்மை முகம் எனக்கு தெரிந்து விட்டது என்று அவன் முகத்துக்கு நேரே சொல்லி, அவன் தனக்கு செய்ய நினைத்த செயலுக்கு, தன் கையால் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் என்று மனம் அடம்பிடிக்க, அரவிந்தனின் அறைக்குள் நுழைய முடிவெடுத்தாள் சந்த்ரிகா.
ஆனால், அவன் பேசியதைக் கேட்ட பிறகு தன்னந்தனியாக உள்ளே நுழையவும் யோசனையாக இருக்க, வீடியோ காலில் கணவனை அழைத்து உடன் வைத்துக் கொள்ள முடிவெடுத்தே சசிதரனுக்கு மெசேஜ் அனுப்பியது.
யாருமில்லை என்ற தைரியத்தில் தவறு செய்ய துணிபவர்களில் பலர், தனது தவறுக்கு சாட்சியாக மற்றொருவர் இருக்கிறார் என்று தெரிந்தாலே தவறு செய்ய துணிவதில்லை. அந்த எண்ணத்தில் தான் சந்த்ரிகா கணவனுக்கு அழைத்து, அவனை உடன்வைத்துக் கொள்ள நினைத்தது.
ஆனால், கணவனால் அந்த நொடியில் தனக்கு உதவமுடியாது என்று தெரிந்ததும், சற்றும் தயங்காமல், தன்னைப்பற்றி தன் கணவனின் தம்பி என்ன நினைப்பான், என்ற எண்ணம் சிறிதுமின்றி அருணுக்கு அழைத்து விட்டாள் சந்த்ரிகா.
தன் ஈகோவை சந்த்ரிகா உதறி எறிந்த நேரமது.
தான் நினைத்ததை போல் எல்லாவற்றையும் நடத்தி முடித்து வந்திருந்தவளின், மனமும் உடலும் சோர்ந்து போயிருக்க, “இவனால் நெருங்க முடியாதவளாக நான் இருந்திருந்தால், இன்று, இப்படி ஒரு வார்த்தையை இவனிடமிருந்து கேட்டிருக்க வேண்டாமே…” என்று ரணப்பட்டு போயிருந்த மனம் எண்ணியது.
என்னதான் அந்த குள்ளநரிகளுக்கு முன் தைரியமாக தன்னைக் காட்டிக்கொண்டாலும், கானல் நீரில் தாகம் தீர்க்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து, நினைத்து மனதெல்லாம் வலித்தது சந்த்ரிகாவிற்கு.
‘இனிக்க இனிக்க சர்க்கரையாக பேசி, தன்னுடைய சொல்லுக்கு தாளம் போடும் எல்லோரும் நல்லவர்களும் அல்ல, கண்டிப்பான பேச்சோடு, தன் கருத்துகளுக்கு எதிர் கருத்து கூறும் நபர்கள் அனைவரும் கெட்டவர்களும் அல்ல’ என்ற பேருண்மை இப்போது புரிந்தது அவளுக்கு.
என்ன, புரிந்து என்ன? என் வாழ்வில் மறக்கமுடியாத, கசப்பான நிகழ்வு நடந்து விட்டதே!’ நடந்து முடிந்த நிகழ்விற்குள்ளிருந்து வெளியே வரமுடியாமல் அதிலேயே சந்த்ரிகாவின் மனம் உழன்று கொண்டிருக்க, அவள் கையிலிருந்த அலைபேசி அழைத்தது.
அழைத்தது கணவன் எனவும், அழைப்புக்கு அனுமதி கொடுத்து, காதுக்கு ஃபோனைக் கொடுத்தாள் சந்த்ரிகா.
“என்னாச்சு சந்த்ரி? எதுக்கு அப்படி மெசேஜ் பண்ணியிருந்த? நீ இப்போ எங்கயிருக்கிற? சேஃபா தானே இருக்கிற? அந்த அட்ரஸூக்கு ஏன் போன?” என்று பதட்டத்தோடு கேள்வி மீது கேள்வி கேட்டான் சசிதரன்.
‘கணவனின் இந்த பரபரப்பும், பதட்டமும் எனக்காக அல்லவா?’ அத்தனை துக்கத்திலும் சந்த்ரிகாவின் மனம் லேசாகியது.
“ஒரு சின்ன பிரச்சினை சசி. நான் நல்லா இருக்கேன். இப்போ நம்ம வீட்டுக்கு தான் போய்ட்டு இருக்கிறேன். உங்களுக்கு இப்போ வீட்டுக்கு வர முடிஞ்சா வர்றீங்களா? என்ன நடந்ததுன்னு சொல்லுறேன்” எந்த தயக்கமும் இன்றி கணவனிடம் சொன்னாள்.
“இதோ, வர்றேன் சந்த்ரி… டேக் கேர்” என்றபடி அழைப்பை துண்டித்தான் சசிதரன்.
‘ஐயோ… கணவனிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்லப் போகிறோம்?’ என்ற பதட்டம் எதுவும், இப்போது இல்லை சந்த்ரிகாவிடம்.
மாறாக, நடந்தது அத்தனையையும் உள்ளது, உள்ளபடி அவனிடம் ஒப்பித்து விடவேண்டும் என்ற எண்ணத்தில், ‘எப்போது கணவன் வருவான்?’ என்று எதிர்பார்த்து ஏங்கத் தொடங்கியது சந்த்ரிகாவின் மனது.
கூடவே, கணவன் கண்டிப்பாக தன்னை புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கை, மலையளவு இருந்தது அவளுக்கு.
சந்த்ரிகா தன் அப்பார்ட்மெண்ட் முன் காரிலிருந்து இறங்கும் போது, நேரம் மதியம் ஒன்றைத் தாண்டியிருந்தது.
வண்டிக்கான வாடகையை கொடுத்தவளின் மனநிலை, ஏதோ மலையையே புரட்டி போட்டு விட்டு வந்தது போல இருக்க, சாவகாசமாக லிப்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
லிஃப்ட் க்கான பட்டனை அழுத்தி விட்டு சோம்பலாக சுற்றுவட்டாரத்தை அலசியவளின் கண்களில், தான் நின்றிருந்த இடத்திற்கு அடுத்தாற்போல இருந்த வீட்டுக்குள் இருந்து, கைகளில் அட்டைப் பெட்டிகளோடு வெளியே வந்து கொண்டிருந்த சோனம் விழுந்தாள்.
ஒரு நொடி ஏனோதானோ என்று கண்டகாட்சியை உள்வாங்கிய சந்த்ரிகாவின் மூளை, மறுவினாடியே சுறுசுறுப்பாக மாறியது. அந்த வீட்டை விட்டு வெளியே ஒரு எட்டு வைத்திருந்த சோனத்திடம், “ஏய்… நீ சோனம் ல்ல?… பிள்ளைங்களை விட்டுட்டு நீ, இங்க, எங்க?…” என்று அதிர்ந்து போய் கேட்டாள் சந்த்ரிகா.
இந்த மத்தியான வேளையில் சந்த்ரிகாவை எதிர்பார்க்காத சோனமும் அதிர்ந்து போனவளாக, கைகளில் இருந்த அட்டைப் பெட்டிகளோடு மறுபடியும் வீட்டுக்குள் பின்வாங்கி, கதவை வேகமாக மூட முயற்சி செய்தாள்.
சந்த்ரிகா அதற்கிடையில் ஓட்டமாக ஓடி, அந்த வீட்டிற்கு முன் வந்திருந்தாள்.
அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருந்த பெண்மணி ஒருவர், “அட்டை பெட்டியை கச்சடா பாக்ஸ்ல போட்டுட்டு வராம, திரும்பவும் எதுக்கு உள்ள கொண்டுட்டு வர்ற சோனம்? போ… போய் போட்டுட்டு வா…” கட்டளையாக சோனத்திடம் சொல்ல, அந்த பெண்மணிக்கும், சந்த்ரிகாவிற்குமிடையே மாட்டிக்கொண்டு முழித்தாள் சோனம்.
“சோனம்… நீ… நீ… இங்க எங்க?” சோனத்திடமிருந்து பதில் வாங்கிடும் வேகத்தில் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டாள் சந்த்ரிகா.
“இந்த பொண்ணு உனக்கு தெரிஞ்சவங்களா ம்மா? இப்போ ஒரு மாசமா, மதியம் ஒரு மணியில இருந்து நாலு மணி வரைக்கும், எனக்கு பாத்திரம் கழுவ, வீடு பெருக்கன்னு வேலை செய்து தர வர்றா.
தன் மகனும் மருமகளும் வேலைக்கு சென்றிருக்க, வீட்டிலிருந்த அந்த மூத்த பெண்மணி, சந்த்ரிகாவின் கேள்விக்கு பதில் சொன்னார்.
“என்ன சொல்லுறீங்க ம்மா?! நாள் முழுசும் எம்பிள்ளைங்களை பாத்துக்க நான் இவங்களுக்கு சம்பளம் குடுத்து வீட்டோட வச்சிருக்கும் போது, உங்க வீட்ல எப்படி இவங்க வேலை பாக்கமுடியும்?”
அதிர்ச்சியோடு கேட்ட சந்த்ரிகா, அட்டைப் பெட்டிகளை அப்படியே போட்டுவிட்டு நகர ஆரம்பித்த சோனத்தின் கையை, அப்படியே முதுகுக்கு பின்புறம் வளைத்து பிடித்து,
“ஏய்…இது என்ன பித்தலாட்டம்? எம்பிள்ளைங்க எங்க? அவங்களை என்ன பண்ணுன சொல்லு?” என்று ஆங்காரமாக கேட்க, “அவங்க மேல, உங்க வீட்டுல தான் தூங்குறாங்க” என்றாள் வசமாக மாட்டிக் கொண்ட சோனம்.
“தூங்குறாங்களா?… திடீர்னு முழிச்சாங்கன்னா…” என்று ஆரம்பித்த சந்த்ரிகாவிற்கு, அப்படியெல்லாம் திடீரென்று விழிக்காத தன் பிள்ளைகள், சட்டென்று நியாபகத்திற்கு வந்தார்கள்.
“பாவி… எம்புள்ளைகளை தூங்க வைக்க என்னடி பண்ணுன?” என்றவள் பிடித்திருந்த சோனத்தின் கையை முறுக்கி, “சொல்லுடி…” என்று அதட்டினாள்.
அலுவலகம் விட்டு வரும் சந்த்ரிகாவிற்கும், சில நேரங்களில், ‘என்ன இப்படி தூங்குகிறார்கள்?’ என்று குழந்தைகளைப் பார்த்து தோன்றியிருக்கிறது.
ஆனால், அதற்கு மேல் அதைப்பற்றி யோசிக்காமல், ‘அவர்கள் முழிக்கும் முன் அடுத்த வேலைகளை முடித்து விடலாம்’ என்று அவள் நகர்ந்திருக்கிறாள்.
சொல்லப்போனால், தான் வீட்டுக்கு வரும்போது குழந்தைகள் தூக்கிக் கொண்டிருந்தது அவளுக்கு வசதியாகவே இருந்தது.
அதேபோல, தனக்கு விடுமுறை நாட்களில், “வழக்கமான நேரத்தில் ஏன் குழந்தைகள் தூங்க மாட்டேங்குறாங்க?” என்ற கேள்வியையும் சந்த்ரிகா சோனத்திடம் கேட்டிருக்கிறாள்.
அதற்கு, “பிள்ளைங்க உங்களைக் கண்ட உற்சாகத்துல தூங்க மாட்டேங்குறாங்க சிஸ்டர்” என்று பதிலும் சொல்லியிருக்கிறாள் சோனம்.
சட்டென்று அது சந்த்ரிகாவுக்கு ஞாபகத்திற்கு வர, தன் குழந்தைகளின் தூக்கம் இயல்பான ஒன்றல்ல என்று இப்போது தோன்றிவிடவே, சோனத்திடம் கேட்டுவிட்டாள்.
“ம்ம்… சொல்லு…” என்றபடியே சோனத்தை லிப்ட்டுக்குள் தள்ளிக் கொண்டு சென்ற சந்த்ரிகாவோடு, அந்த கீழ் வீட்டு பெண்மணியும் தனது வீட்டைப் பூட்டிக்கொண்டு இணைந்து கொண்டார்.
அந்த சோனம் சந்த்ரிகாவை மட்டும் ஏமாற்றவில்லையே, அவர்களையும் சேர்த்தல்லவா ஏமாற்றியிருக்கிறாள். எனவே, அதிர்ச்சியோடு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த மூத்த பெண்மணியும், “பதில் சொல்லு…’ என்று சோனத்தை அதட்டினார்.
“அது… கொஞ்சமா பிள்ளைங்க இரண்டு பேருக்கும் ஸ்லீப்பிங் டோஸ் குடுப்பேன்” மிகச் சாதாரணமாக சோனம் சொல்லவும், அதிர்ந்து போனார்கள் இருவரும்.
“உன்னை நம்பி, எம்பிள்ளைங்களை உங்கிட்ட விட்டுட்டு போனனே… அதுக்கு நீ செய்யுற மரியாதையா இது?” தழுதழுத்துப் போய் வந்தது சந்த்ரிகாவின் குரல்.