“நீங்க மட்டும் தான், பிள்ளைகளைக் கூட அடுத்தவங்க கிட்ட விட்டுட்டு, பணம்… பணம்னு, அதுக்கு பின்னாடி ஓடுவீங்களா? ஏன்?… நாங்க ஓடக்கூடாதா? எனக்கும் பணம் தேவையிருந்தது. அதான் பிள்ளைங்களை தூங்க வச்சிட்டு, நான் அடுத்த வேலைக்கு போனேன்” எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி சொன்னாள், அந்த சோனம்.
சோனத்தின் பதிலில் தடுமாறிப் போனாள் சந்த்ரிகா. அது லிஃப்டாக இல்லாமல் வேறு இடமாக இருந்திருந்தால், அந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்டு, சோனம் தப்பித்து போயிருக்க கூடும்.
குழந்தைகளோடு சோனம் வீட்டில் இருப்பதால், வீட்டின் ஸ்பேர் கீயை சந்த்ரிகா கொண்டு செல்வதேயில்லை. இப்போது வீட்டுக் கதவை திறக்க வேண்டும் என்றால் கூட சோனம் கண்டிப்பாக வேண்டும் என்ற நிலை.
எனவே, சட்டென்று தன்னை உணர்ச்சியின் பிடியிலிருந்து மீட்டுக் கொண்ட சந்த்ரிகா, லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்து கைப்பிடியாக சோனத்தை தங்கள் வீட்டு கதவுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி, “ம்ம்… திற” என்று அதட்டினாள்.
கையை விலக்கிக் கொள்ள முடியாதபடி சந்த்ரிகாவின் பிடியிருக்க, வேறுவழியில்லாமல் தன் இடுப்பில் இருந்த சாவியை, தன் இடது கையால் எடுத்து சோனம் கதவைத் திறந்தாள். அவளையும் வீட்டுக்குள் தள்ளிக்கொண்டே படுக்கை அறைக்கு விரைந்தாள் சந்த்ரிகா.
அங்கே நிர்மலமான முகத்தோடு அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டவளுக்கு, இவ்வளவு நேரமும் இருந்த திடம் காற்றோடு பறந்தது.
தன்னை மறந்து சோனத்தின் கைகளை விட்டவள், குழந்தைகளிடம் பாய்ந்து செல்ல, இப்படி ஒரு தருணத்திற்காக காத்திருந்த சோனம், ஒருநொடியைக் கூட வீணாக்காமல் மின்னலென அங்கிருந்து ஓட்டமெடுத்தாள்.
அது எதையுமே கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை சந்த்ரிகா. குழந்தைகள் இருவரையும் கைகளில் அள்ளியவள், “அம்மா வந்துட்டேன்… முழிச்சுக்கோங்க செல்லம்…” என்று கதறினாள்.
மாலையில் தாய் வந்த பிறகே முழிக்கும் குழந்தைகள், இன்று மதியம் வந்து, தாய் அழைத்தவுடனே முழித்து விடுவார்களா என்ன? எப்போதும் போல அமைதியான உறக்கமே குழந்தைகளிடம்.
இத்தனை நாட்கள், தான் வரும் போதெல்லாம் தூங்கும் குழந்தைகளை பார்க்கும் போது வராத ஒரு உணர்வு, தன் குழந்தைகள் தூக்க மாத்திரையின் உதவியால் தினமும் தூங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரியவும், சந்த்ரிகாவிடம் கரைபுரண்டு வந்தது.
குழந்தைகளை மெதுவாக கட்டிலில் படுக்க வைத்தவளுக்கு, இதயமே வெடித்து விடுவது போலிருக்க, “நான் பாவி… நான் பாவி” என்று திரும்பத் திரும்ப சொல்லியபடியே கட்டிலின் காலில் வேகமாக முட்ட ஆரம்பித்தாள் சந்த்ரிகா.
“ஐயையோ… என்னமா செய்யுற நீ?” பதறிப்போனவராக அந்த கீழ் வீட்டு பெண்மணி சந்த்ரிகாவைத் தடுத்தார். அவரைக் கட்டிக்கொண்டு, “அம்மான்னு சொல்லிக்கவே எனக்கு தகுதி இல்லை ல்ல ம்மா” என்று வெடித்து அழுதாள் சந்த்ரிகா.
அப்போது, “என்னாச்சு சந்த்ரி?… நீ ஏன் அழுவுற?… எதுக்கு அந்த சோனம் என்னைக் கண்டதும் ஓட்டமா ஓடுறா?” பதறியபடியே சசிதரன் அறைக்குள் நுழைந்தான்.
ஓடிச்சென்று கணவனின் மார்பில் தஞ்சமடைந்த சந்த்ரிகா, “என்னோட ஆசைதான் பெருசுன்னு நினைச்சு, யாரையோ நம்பி நம்ம பிள்ளைச்களை விட்டுட்டு போய், அவங்களை எந்த நிலைமைக்கு தள்ளியிருக்கேன் பாருங்க சசி” என்று மறுபடியும் உச்சஸ்தாயியில் அழ ஆரம்பித்தாள்.
மனைவியின் வார்த்தைகளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்த சசிதரன், எதுவும் புரியாதவனாக, “ம்ப்ச்… புரியும்படி சொல்லிட்டு அழு சந்த்ரி” என்று அதட்டினான்.
அங்கே நின்றிருந்த கீழ் வீட்டு பெண்மணி, குழந்தைகளுக்கு சோனம் ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்து விட்டு, தினமும் மதிய வேளையில் தங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்ததை, தனக்கு தெரிந்த வரையில் சொல்லியவர், “விஷயம் தெரிஞ்சதும் உங்க மனைவி நொறுங்கி போய்ட்டாங்க தம்பி… பாத்துக்கோங்க” என்று கூடுதலாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
இப்போது சசிதரனின் தலையில் இடியே விழுந்தது போலிருந்தது. மனைவியை அவசரமாக தன்னிடமிருந்து விலக்கியவன், குழந்தைகள் அருகே பொத்தென்று அமர்ந்து, அவர்களின் கை கால்களை தடவி கொடுத்தபடியே, கன்னத்தை மெதுவாக தட்ட, அதே நிர்மலமான உறக்கமே அவர்களிடம்.
அலுவலகத்திற்கு சென்றிருந்த மனைவி வேறொரு இடத்திலிருந்து தகவல் அனுப்பியதோடு, சின்ன ப்ரச்சினை வீட்டுக்கு வாங்க சொல்லுறேன் என்று சொல்லவுமே, தன் அலுவலகத்தில் இருந்து கிளம்பியிருந்தான் சசிதரன்.
ஆனால் சத்தியமாக இப்படி ஒன்றை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
மனைவிக்கு குறையாத அதிர்ச்சியோடு கட்டிலில் சாய்ந்திருந்தவனின் கண்களிலிருந்து, கண்ணீர் அவன் அனுமதியின்றியே வழிந்து கொண்டிருந்தது.
கணவன், மனைவி இருவருமே எதுவுமே பேசவில்லை. தங்கள் குழந்தைகள் கண்விழிக்கும் நேரத்திற்காக, தவம் போல காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
வழக்கமான நேரத்திற்கு குழந்தைகள் கண்விழிக்கவும், ஆளுக்கொரு குழந்தையாக அள்ளி அணைத்து முத்தமிட்ட பெற்றவர்களின் வேகத்தில், குழந்தைகளே திணறிப் போய் சிணுங்க ஆரம்பித்தார்கள்.
மறுபடியும் அழத்தொடங்கிய சந்த்ரிகாவின் அழுகை, குழந்தைகளையும் வேகமாக தொற்றிக் கொண்டது. முதலில் சுதாரித்துக் கொண்ட சசிதரன், “பிள்ளைங்க பயப்படுறாங்க இல்ல… அழுறதை நிறுத்து சந்த்ரி” என்றான் மனைவியிடம்.
சரி, என்பது போல தலையாட்டிய சந்த்ரிகா, தன் அழுகையை முயன்று கட்டுப்படுத்த, அவள் கண்களில் வழிந்த கண்ணீரை, அவளிடம் இருந்த அபிநந்தன் தன் பிஞ்சுக் கரங்களால் துடைத்துவிட்டு, தாயைப் பார்த்து சிரித்தான்.
இப்போது நந்தனாவும் தாயிடம் தாவிக் கொள்ள, தன் குஞ்சுகளை இறக்கைக்குள் பாதுகாப்பாக பொதிந்து வைத்துக் கொள்ளும் தாய்பறவை போல, குழந்தைகளை அணைத்துக் கொண்டாள் சந்த்ரிகா.
சிறிது நேரம் அப்படியே இருந்து அவர்களை பார்த்து விட்டு, குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்த சசிதரன், தான் போகும் போது எப்படி இருந்தாளோ அதே நிலையில் இருந்த மனைவியிடம்,
“பாத்ரூம்ல ஹாட் வாட்டர் பிடிச்சி வச்சிருக்கேன், பிள்ளைகளை குளிக்க வச்சி, நீயும் குளிச்சிட்டு வா சந்த்ரி” என்றபடி அறையை விட்டு வெளியே சென்றான்.
கணவன் சொன்னபடி செய்து, குழந்தைகளோடு சந்த்ரிகா அறையை விட்டு வெளியே வந்தாள். கிச்சனில் சசிதரன் மும்முரமாக டிபன் செய்யும் வேலையில் இறங்கியிருந்தான்.
இது அடிக்கடி இல்லாவிட்டாலும், எப்போதாவது அந்த வீட்டில் நடைபெறும் நிகழ்வு தான். எனவே, குழந்தைகளோடு ஹால் தரையில் அமர்ந்த சந்த்ரிகா, அருகே இருந்த சோஃபாவில் சாய்ந்து கொண்டாள்.
குழந்தைகளைப் பற்றிய சிந்தனையே கணவன் மனைவி இருவரின் சிந்தையை ஆக்கிரமித்து நிற்க, வேறெதையும் சொல்லும் மனநிலையிலோ, இல்லை கேட்கும் மனநிலையிலோ இருவருமே இல்லையாதலால், எதைப்பற்றியும் பேச இருவருமே முயலவில்லை.
இட்லி, சட்னி என்று டிஃபனை செய்து முடித்திருந்த சசிதரன், தட்டில் போட்டு கொண்டு வந்து குழந்தைகளுக்கு ஊட்ட முயன்றான். அவனை விசித்திரமாக பார்த்த சந்த்ரிகா, தன் கையில் பாத்திரத்தை வாங்கி குழந்தைகளுக்கு ஊட்டி முடித்தாள்.
இப்போது மனைவிக்கும் தனக்குமாக உணவை சசிதரன் கொண்டு வந்தான். உண்ண மறுத்தாள் சந்த்ரிகா.
“நீ சாப்பிடாம இருக்கிறதுனால நடந்தது எதுவும் இங்க மாறிடப் போகுதா? பேசாம சாப்பிடு சந்த்ரி” என்று சசிதரன் அதட்ட, அது வேலை செய்தது.
இருவரும் உண்டு முடித்து, விளையாடும் தங்கள் குழந்தைகளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கட்டிலில் முட்டி அழுததில், சந்த்ரிகாவின் முன்நெற்றி சிவந்து லேசாக புடைத்திருந்தது. வித்தியாசமாக இருந்த தாயின் நெற்றியை லேசாக தன் விரல் கொண்டு அழுத்தினான் அபிநந்தன்.
அது வலிக்கவே, தன்னை மீறி சந்த்ரிகா, “ஷ்ஷ்…” என்று சத்தமெழுப்பினாள். அதன்பின், குழந்தைகள் இருவருக்குமே அது ஒரு விளையாட்டாக மாறிப்போக, தாயிடம் உற்சாகமாக தொற்றிக் கொண்டார்கள்.
சூழல் கொஞ்சம் இலகுவாக மாறியது. “என்னவோ பிரச்சினைன்னு காலையில சொன்னியே சந்த்ரி? அது என்ன பிரச்சினை? அதுக்கும், சோனம் நம்ம வீட்டுல நடந்துகிட்டதுக்கும், ஏதாவது சம்மந்தம் இருக்கா?” சசிதரன் தன் மௌனம் கலைத்து, மனைவியிடம் கேட்டான்.
“இல்லைன்னு தான் நினைக்கிறேன் சசி” என்ற சந்த்ரிகா, முதன்முதலில் தான் வேலையில் சேரும்போது ட்ரைய்னராக அரவிந்தனை சந்தித்ததிலிருந்து தொடங்கி, இதோ இன்று காலை நடந்ததுவரை, அத்தனையையும் ஒளிவு மறைவின்றி கணவனிடம் சொல்லிவிட்டாள்.
சொல்லி முடித்தவள், தன் பேச்சுக்கிடையே தலையிடாமல் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த கணவனின் முகத்தை யோசனையோடு பார்க்க,
‘நடந்தது அத்தனையையும் கேட்டதும், லிங்கம் மீது கோபம் கொண்டு வானத்துக்கும் பூமிக்குமாக கணவன் குதிப்பான், தனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லுவான்’ என்று எதிர்பார்த்திருந்த சந்திரிகாவுக்கு, முகம் இறுக சோனத்தின் விலாசம் கேட்ட கணவனின் செயல் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
அப்போது அரவிந்தன் மீதிருந்த நம்பிக்கையில், அவன் வார்த்தை ஒன்றே போதுமாக இருந்தது சந்த்ரிகாவுக்கு.
மனைவி எல்லாவற்றையும் சரியாக செய்திருப்பாள் என்ற எண்ணத்தில் சசிதரன் அவளிடம் எதுவும் விசாரிக்கவில்லை.
கடைசியில் இவர்களின் முட்டாள்தனத்தில் கஷ்டப்பட்டது என்னவோ குழந்தைகள் தான்.
“அந்த சோனம், இன்னமும் அந்த ஃபோன் நம்பரை வச்சிட்டு இருக்கிறதுக்கு, நம்மளைப் போல முட்டாளா என்ன?” சத்தமாகச் சொல்லிய சசிதரன்,
“எப்பவுமே அடுத்தவங்க வார்த்தையை மதிக்காமல், தன்னை மட்டுமே அதிபுத்திசாலின்னு நினைச்சிட்டு இருந்தா, இப்படித்தான் எல்லா இடத்திலும் கோட்டை விட்டுட்டு ஏமாந்து நிக்கணும்.
“இனிமேலாவது நல்லவங்க யாரு? கெட்டவங்க யாரு? யாரை நம்ம பக்கத்துல சேர்த்துக்கலாம் ங்குறதை புரிஞ்சு நடந்துக்கோ. அப்பதான் இந்த உலகத்தில் பிழைக்க முடியும்” என்றான் கோபமாக.
கணவனின் பதிலில் முகம் விழுந்துவிட்டது சந்த்ரிகாவிற்கு. ஆனாலும், தனக்கு இது தேவைதான் என்பது போல, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
அன்றிரவு, நடந்தவற்றையே எண்ணி, எண்ணி சரியான தூக்கம் இல்லாது தவித்த சந்த்ரிகா, தூங்கியதே அதிகாலையில் தான். எனவே, காலையில் வழக்கத்திற்கு மாறாக தாமதமாகவே எழும்பினாள். பக்கத்தில் குழந்தைகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, அறையை விட்டு வெளியே வந்தாள் சந்த்ரிகா.
ஹால் சோஃபாவில் சாய்ந்தமர்ந்து, ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் அவள் கணவன்.
அவனுக்கு எதிர்புறமாக இருந்த இருக்கையில் அமர்ந்து, “என்னாச்சு சசி?” என்று கேட்டாள் சந்த்ரிகா.
“நீ ஒரு மூனு நாள் லீவ் போட்டுட்டு, பிள்ளைங்களை பாத்துக்க முடியுமா சந்த்ரி?” லேசான யோசனையோடு கேட்டான் சசிதரன்.
“நான், இனி வேலைக்கு போறதில்லைன்னு முடிவெடுத்துட்டேன் சசி. அதனால, இனிமே எப்பவுமே பிள்ளைங்களை நானே பாத்துப்பேன்.”
“ஐயையோ… நீ, பிள்ளைங்களைப் பாக்குறதுக்காக வேலையை எல்லாம் விடவேண்டாம் சந்த்ரி. ஜஸ்ட், ஒரு மூனு நாள் லீவ் எடுத்து பேபீஸை பாத்துகிட்டா மட்டும் போதும். அதோட நான் என் வொர்க்கை கம்ப்ளீட்டா முடிச்சு கொடுத்துட்டு, கம்பெனியில் இருந்து வெளியே வந்துடுவேன்.”
“அப்புறமா, நானும் பிள்ளைங்களும் ஊருக்கு போறோம். நீ இங்கயே, நம்ம வீட்டுல இருந்தே, தொடர்ந்து வேலைக்கு போ. அதுக்கு முன்னாடி, அந்த அரவிந்தன் மேல ஆஃபீஸ்ல டிசிப்ளினரி ஆக்ஷன் எடுத்துக்கோ. அந்த லிங்கத்தோட வாலை, ஊருக்கு போய் நான் ஒட்ட நறுக்கிடுறேன்.. கவலப்படாத” என்றான் ஏதோ முடிவெடுத்தவன் போல.
“என்ன சொல்லுறீங்க சசி?” காற்றாகிப் போன குரலில் கேட்டாள் சந்த்ரிகா.
“ம்ம்… ஆமா சந்த்ரி… பிள்ளைங்களை அம்மா மட்டும் இல்ல அப்பாவும் பாத்துக்கலாம். இந்த எண்ணம் மட்டும் முதல்லயே எனக்கு வந்திருந்தா, நம்ம பிள்ளைகளுக்கு இந்த நிலமை வந்திருக்க விட்டுருக்கவே மாட்டேன்” கலங்கிய குரலில் சொன்னான் சசிதரன்.
நடந்திருந்த எல்லாவற்றையும் விட, தங்கள் குழந்தைகளுக்கு நடந்திருந்த அநியாயம் சந்த்ரிகாவை அடியோடு புரட்டிப் போட்டிருந்தது.
பணம், பதவி, புகழ், நகரத்து வாழ்க்கை எல்லாமே குழந்தைகளுக்கு முன், இப்போது இரண்டாம் பட்சமாக அவளுக்கு தெரிய, வேலையை விட்டுவிடும் முடிவை ஏற்கனவே எடுத்து விட்டாள் சந்த்ரிகா. ஆனால், மனைவியின் முடிவை நம்ப மறுத்தான் கணவன்.
“இல்ல… அது சரிவராது சந்த்ரி. நீ இப்போ ஒரு எமோஷனலான சிச்சுவேஷன்ல இப்படி முடிவெடுக்குற. அப்புறம் ஏதாவது சூழ்நிலையில், ஏன்டா இப்படி ஒரு முடிவெடுத்தோம்னு நீ வருதப்படக்கூடாது. அதனால நீ இங்கயே இருந்து வேலைக்கு போ.”
“அப்பா, வெளியூர்லயோ, வெளிநாட்டுலயோ வேலை பாக்கும் போது, அம்மா ஊர்லயிருந்து தன்னோட பிள்ளைங்களை வளக்குறதை நீ பாத்துருப்ப தானே. நம்ம வீட்டுல அதுக்கு நேர்மாறா, நீ இங்க இருந்து உனக்கு பிடிச்ச வேலையைப் பாரு, நான் ஊர்ல இருந்து நம்ம கடையையும் பாத்துட்டு, பிள்ளைங்களையும் பாத்துக்குறேன்.”
“இப்படி நாம செய்யுறதால, வேலைப் பாக்கணும்ங்குற உன் ஆசைக்கு எந்த தடையும் வராது. என் அப்பாவோட ஆசையும் நிறைவேறும். நம்ம பேபீஸூம் பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பாங்க. ஒரு முடிவு, மூனு பலன், த்ரீ இன் ஒன்” என்று சிரித்த சசிதரனை, திகைத்து போய் பார்த்தாள் சந்த்ரிகா…