பெங்களூருவிலிருந்து தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பாவூர்சத்திரத்தை தன் இலக்காக கொண்டு இன்னோவா ஒன்று விரைந்து கொண்டிருந்தது.
காருக்குள் சசிதரன் தன் குடும்பத்தோடு இருந்தான். குழந்தைகள் அபிநந்தன், நந்தனா தவிர, சசிதரன் தோள்களில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த சந்த்ரிகா, சசிதரன், ட்ரைவர் ஆகிய மூவரும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள்.
ஆம்… கொரனா பரவலைத் தடுக்க அரசாங்கம் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கியிருந்ததோடு, ஒரு வாரகால ஊரடங்கையும் அறிமுகப்படுத்தியிருந்தது.
அந்த ஒருவாரம் முடியவும், வந்த சனி, ஞாயிறுகளில், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் செல்லலாம் என்று அரசாங்கம் அனுமதி வழங்கவே, சாரைசாரையாக மக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்த வண்ணம் இருந்தார்கள்.
சசிதரனும் ஒரு ட்ராவல்ஸ் மூலம் வாடகைக்கு காரை அமர்த்திக் கொண்டு, இதோ… மனைவி மக்களோடு தன் சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருக்கிறான்.
“சந்த்ரி… எழும்பு…” மனைவியின் காதருகே சசிதரன் மெதுவாகச் சொல்ல, திடுக்கிட்டு முழித்த சந்த்ரிகா முதலில் பார்த்தது தன் மடியைத் தான்.
தன் மடியில் தேடிய மகன், கணவனின் மடியில் அமர்ந்து கொண்டு தன்னைப் பார்த்து சிரிக்கவும், “மடியிலருந்து பிள்ளையை தவற விட்டுட்டனோன்னு பயந்தே போயிட்டேன் சசி” என்றாள் பதட்டத்தோடு.
“நீ தூங்க ஆரம்பிச்சதுமே, அபியை நான் தூக்கிகிட்டேன்.”
நீண்ட நேரமாக தன்னையும் தோள்களில் தாங்கிக்கொண்டு, இரண்டு குழந்தைகளையும் மடியில் வைத்துக்கொண்டு பயணம் செய்தபிறகும், முகச்சுணக்கம் எதுவுமின்றி புன்னகையோடு பதில் சொன்ன கணவன் மீது காதல் பொங்கி வழிந்தது சந்த்ரிகாவுக்கு.
பெண்ணவளின் அகத்திலிருந்த அழுக்குகளை எல்லாம், ஒரே நாள் நிகழ்வு அடித்து கொண்டு சென்றிருக்க, கணவன் மீதும், தான் பெற்ற புத்திரசெல்வங்களின் மீதும் எல்லையில்லா காதலும், பாசமும் பொங்கி பிரவாகம் எடுத்தது சந்த்ரிகாவுக்கு.
சந்த்ரிகாவின் பாசத்திற்கு பதில் பாசம், குழந்தைகளிடமிருந்து தாராளமாகவே அவளுக்கு திருப்பி கிடைத்தது. ஆனால், அவள் காதலுக்கு சொந்தக்காரனிடமிருந்து தான், அதற்கான பிரதிபலிப்பு எதுவுமே இல்லை.
அதில் அவளுக்கு ஏகவருத்தம் இருந்தாலும், கண்சிமிட்டும் நேரத்திற்குள், தங்களுக்குள் எல்லாம் சரியாகிவிட வேண்டும் என்று, தான் எதிர்பார்ப்பது தவறு என்றும் புரியத்தான் செய்கிறது.
காதலுக்கு பிரதிபலிப்பு மட்டும் தான் இல்லையேயொழிய, தான் கொண்ட கடமைகளிலிருந்து சற்றும் பின்வாங்கினான் இல்லை சசிதரன்.
“சந்த்ரி… இந்த இடத்துல அதிகம் க்ரௌவுட் இல்லாம, நல்ல நிழலா இருக்கு. காரை நிறுத்தி சாப்பிட்டுடுவோமா?” மனைவியிடம் அபிப்பிராயம் கேட்ட சசிதரன், அவள், சரி என்று சொல்லவும், ட்ரைவரிடம் காரை ஒதுக்கி, அங்கிருந்த மர நிழலில் நிறுத்தச் சொன்னான்.
ட்ரைவர் அவ்வாறே செய்யவும், காரிலிருந்து இறங்கி ஏற்கனவே வீட்டிலிருந்தே தயார் செய்து கொண்டு வந்திருந்த உணவை குழந்தைகளுக்கும், ட்ரைவருக்கும் கொடுத்து சாப்பிட்டு முடித்தார்கள்.
மறுபடியும் கார், தன் இலக்கை அடைய முன்னோக்கி பயணம் செய்ய, சந்த்ரிகாவின் மனமோ, கணவன் தன் முடிவை நம்ப மறுத்த நாளின் நிகழ்வுகளை எண்ணி, பின்னோக்கி பயணம் செய்தது.
அன்று…
“நான் இப்போ எடுத்த முடிவை நினைச்சி எப்பவுமே வருத்தப்பட மாட்டேன், என்னை நம்புங்க சசி” தன் வாழ்க்கையில், தனக்கு முக்கியமானது எது, என்ற தெளிவு வந்திருந்த சந்த்ரிகா கணவனிடம் கெஞ்சினாள்.
“எதை வச்சி உன்னை நம்ப சொல்லுற சந்த்ரி? இப்படி ஒரு விஷயம் நடந்து ரெண்டு நாளாகியும், எங்கிட்ட எதுவும் சொல்லாம, நீயே ஒரு முடிவெடுத்து அந்த அரவிந்தன் வீடு வரைக்கும் போயிருக்கிற. போன இடத்தில் பிரச்சினை மட்டும் ஆகாம இருந்திருந்தா, கண்டிப்பா நீ, இப்போ கூட எங்கிட்ட இந்த விஷயத்தை சொல்லியிருக்கவே மாட்டன்னு எனக்கு தெரியும்.”
குற்றம் சாட்டும் விழிகளோடு, மனைவியை சசிதரன் பார்க்க, பதிலேதும் இல்லாமல் நின்றாள் சந்த்ரிகா.
“ம்ஹூம்… விஷயத்தை எங்கிட்ட சொன்னா, ஒருவேளை, வேலைக்கு போகவேண்டாம்னு நான் தடுத்துடுவேன்னு உனக்கு பயம்… அதான் எங்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணவேயில்லை…”
ஐயையோ… அப்படி எல்லாம் நான் நினைக்கலை சசி” பதறியபடி பேச்சில் இடையிட்ட சந்த்ரிகாவிடம், “இரு ம்மா… நான் பேசிமுடிச்சிடுறேன்” என்ற சசிதரன்,
“இவ்வளவு பெரிய பிரச்சினையைக் கூட, வேலைக்கு போகணும் ங்குற உன்னோட ஆசையால எங்கிட்ட இருந்து மறைச்ச நீ, எதிர்காலத்துல, இப்போ எடுத்த முடிவை நினைச்சு வருத்தப்பட மாட்டேன்னு என்ன நிச்சயம்? அதனால, உன்னோட ஆசையை, நீ யாருக்காகவும், எதுக்காகவும் விட்டுக்கொடுக்க தேவையில்ல” என்றான் உறுதியாக.
“நீங்க சொல்லுற மாதிரி எல்லாம் நான் யோசிக்கலை சசி. விஷயத்தை சொன்னா, நீங்க என்னைத் தப்பா புரிஞ்சுக்குவீங்களோன்னு, சின்னதா ஒரு தயக்கம் வந்தது நிஜம். அதான் சொல்லலை…” கணவனிடம் உடனே சொல்லாமல் விட்ட தன் மடத்தனத்தை நொந்தபடியே, இப்போதும் மடத்தனமாகவே பதில் சொன்னாள் சந்த்ரிகா.
“சபாஷ்… யாரோ ஒரு அரவிந்தன் மேல வச்ச நம்பிக்கையை, சொந்த புருஷன் மேல உன்னால வைக்க முடியல. கேக்கும் போதே மனசுக்கு குளுகுளுன்னு இருக்கு” கிண்டல் போல சொன்னாலும் சசிதரனின் குரலில் ஏகத்திற்கும் வலியிருந்தது.
சசிதரனின் பேச்சில், ஆப்பசைத்த எதுவோ போன்று சந்த்ரிகா முழித்தபடி நின்றாள்.
“என்னப்பத்தி நீ, எப்பிடி நினைச்சியிருந்தாலும் எனக்கு கவலையில்ல. அதேபோல ஊருக்கு போற என்னோட முடிவிலும் மாற்றமில்ல. நீ இங்கயும், நான் அங்கயுமா இருகப்போறதால, நமக்குள்ள இருக்கிற கணவன் மனைவி ங்குற உறவும் மாறப்போறதில்ல, புரிஞ்சுதா?” என்றவன், இத்தோடு என் பேச்சு முடிந்தது என்பது போல எழும்பி சென்றிருந்தான்.
கணவனை எப்படி சமாதானப்படுத்துவது எனத்தெரியாமல் உறைந்து போய் இருந்தவளை, குழந்தைகளின் குரல் கலைத்தது. அதன் பிறகு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் நேரம் பறந்தது சந்த்ரிகாவுக்கு.
அலுவலகம் செல்ல புறப்பட்டு வந்த சசிதரன், சோனத்தின் கைபேசி எண்ணைக் கேட்டான். கொடுத்த சந்த்ரிகா, கேள்வியோடு கணவனைப் பார்த்தாள்.
“நம்மளை மாதிரி முட்டாள்கள் இந்த சோனத்துகிட்ட மாட்டி ஏமாறாம இருக்க, என்னாலான முயற்சியை நானும் எடுக்கணும்ல”, என்றவன், “எதுக்கும் நீயும் கொஞ்சம் பிள்ளைகளோட கவனமாகவே இருந்துக்கோ” என்றபடி அலுவலகம் சென்றான்.
கணவன் சென்றபிறகு குழந்தைகளோடு நேரத்தை செலவிட்ட சந்த்ரிகா, ‘என்ன ஆனாலும் இதற்கு மேல் குழந்தைகளை மட்டும் பிரிந்து இருக்கப் போவதில்லை’ என்று திடமாக முடிவெடுத்து கொண்டாள்.
‘நான் முடிவெடுத்தா மட்டும் ஆச்சா? சசி என்னை கூட கூட்டிட்டு போகலைன்னா என்ன செய்யமுடியும்?’ தன்னைத் தானே கேள்வி கேட்டுக்கொண்டவள்,
‘இவங்க கூட்டிட்டு போகலைன்னா, என் வீட்டுக்கு போக எனக்கு வழி தெரியாதா என்ன?’ என்றும் சிலிர்த்துக் கொண்டாள்.
ஆமாம்… எந்த கூட்டுக்குள் இருந்து, தன் ஜோடிக் குயிலோடு பறந்து சென்று விடவேண்டும் என்று, இந்த பேடைக்குயில் நினைத்ததோ, அதே கூட்டுக்கு, இன்று தன் துணையோடும் குஞ்சுகளோடும் சென்றுவிட வேண்டும் என்று தவியாய் தவித்தது.
எனவே, கணவன் இங்கேயே இரு என்று சொன்னாலும், எல்லாவற்றையும் உதறிவிட்டு அவன் பின்னோடு செல்வதற்கு தயாராகிவிட்டாள் சந்த்ரிகா.
மாலையில் வேலைவிட்டு வந்த சசிதரன், “அரவிந்தன் மேல டிசிப்ளினரி ஆக்ஷன் எடுக்க சொல்லி கம்ப்ளைண்ட் மெயில் பண்ணியாச்சா?” என்று மனைவியிடம் கேட்க,
“இனிமே, நான் தான் வேலைக்கே போகப் போறதில்லையே சசி. அப்படியிருக்கும் போது, அவனை கம்ப்ளைண்ட் பண்ணுனா என்ன? பண்ணாட்டா என்ன?” என்றாள் சந்த்ரிகா அசட்டையாக.
“எந்த காரியத்தை செய்தாலும், யோசிச்சு செய்யணும் ங்குறது உன் அகராதியிலே கிடையாதா சந்த்ரி?”
‘கணவன் எதற்காக திட்டுகிறான்? வேலைக்கு போகவில்லை என்பதற்காகவா? இல்லை அரவிந்தன் மீது புகார் குடுக்கவில்லை என்பதற்காகவா?’ புரியாமல் திருதிருத்தாள் சந்த்ரிகா.
“வேலைக்கு போறதைப் பற்றி உன்னோட முடிவு எதுவாயிருந்தாலும், கண்டிப்பா அவன் மேல ஆக்ஷன் எடுக்க சொல்லி கம்ப்ளைண்ட் பண்ணு. இல்லைன்னா…”
“இல்லைன்னா என்ன சசி?” கணவன் சொல்லாமல் இழுக்கவும் குழப்பத்தோடு கேட்டாள் சந்த்ரிகா.
“இந்த அளவுக்கு பழியோட இருக்குறவங்க, ஒருவேளை நீ அவன் மேல ஆக்ஷன் எதுவும் எடுக்காம ஜாப்பை ரிசைன் பண்ணியது தெரிஞ்சா, அதை கூட தங்களுக்கு சாதகமா யூஸ் பண்ணிக்க சான்ஸ் இருக்கு.”
“அந்த சந்த்ரிகாவுக்கும் எனக்கும் லவ்வு… விஷயம் தெரிஞ்சு அவ புருஷன், அவளைக் கட்டாயப்படுத்தி வேலையை விடச் சொல்லி ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டான்… இப்படி, எவ்வளவோ உன் கொலீக்ஸ் மத்தியில அந்த அரவிந்தன் பரப்பலாம். அப்புறம் அந்த லிங்கம் ஆசைப்பட்டது ஈசியா நடந்துடும்” சுழித்த முகத்தோடு சசிதரன் சொல்ல, அரண்டு போய்விட்டாள் சந்த்ரிகா.
‘ஒரு, கூடா நட்பு தன்னை எங்கே கொண்டு நிறுத்தியிருக்கிறது?’ என்று கலங்கிப்போனது பெண்ணின் மனது. அதை மறைக்காமல் கணவனிடமும் சொன்னாள்.
“மனுஷன் தப்பு செய்யுறது இயல்பு தான், ஆனா அந்த தப்புல இருந்து அவன் பாடம் படிச்சுக்கணும். இல்லைன்னா அவன் மனுஷனே இல்லை” என்று மனைவியின் தோளில் தட்டி அவளை சமாதானப்படுத்தியவன்,
“இந்த அவசர உலகத்துல எதையும் சாதாரணமா எடுத்துக்காத சந்த்ரி… முதல்ல மெயில் பண்ணு” என்று விட்டு நகர்ந்தான். அதன்பிறகு ஒரு நொடியையும் கூட சந்த்ரிகா வீணாக்குவாளா என்ன?
காரண காரியங்களோடு அரவிந்தன் மீது அலுவலகத்தில் புகார் செய்தவள், அதற்கு சாட்சியாக தான் எடுத்து வைத்திருந்த வீடியோக்களையும் தயங்காமல் பகிர்ந்து கொண்டாள்.
இப்போது, அவளுக்கு உடனடியாக வேலையை ரிசைன் செய்வதா, இல்லை பேப்பர் போட்டு, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வேலையில் இருந்து ரிலீஸ் ஆவதா என்ற குழப்பம் எழுந்தது.
உடனடியாக வேலையில் இருந்து நின்றுவிடுவதாக இருந்தால், அலுவலகத்தில் பெனால்டியாக கேட்கும் மூன்று, அல்லது நான்கு மாத சம்பள பணத்தை கட்டுவதற்கும் அவள் தயார் தான்.
ஆனால், ‘போய்க்கொண்டிருக்கும் ப்ராஜெக்ட்டை முடித்த பிறகே, வேலையில் இருந்து விலகிக்கொள்ள முடியும் என்று சொல்லி விட்டால், என்ன செய்வது?’ என்ற பயம் அவளுக்கு இருந்தது.
அவள் பயந்தது போலவே சந்த்ரிகாவின் மேலதிகாரியும் சொல்லிவிட, ‘அப்படியானால் இன்னும் மூன்று நாட்களில் ஊருக்கு போக தயாராகிக் கொண்டிருக்கும் கணவன் மற்றும் குழந்தைகளோடு, தான் ஊருக்கு போகமுடியாதா?’ என்று தவித்துப் போனாள் சந்த்ரிகா.
ஆனால், அவள் கணவனையே குறிப்பிட்ட நாளில் ஊருக்கு போகவிடாமல் செய்து விட்டது இந்த ஊரடங்கு.
உண்மையில் முதல் ஊரடங்கை மற்றவர்கள் எந்த மனநிலையில் எதிர்கொண்டார்களோ தெரியாது, சந்த்ரிகா சந்தோஷமாகவே உணர்ந்தாள்.
அலுவலக வேலையை வீட்டிலிருந்து செய்ய ஆரம்பித்திருந்த சந்த்ரிகாவுக்கு, கணவன் எந்நேரத்தில் கிளம்பினாலும், வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதால், தானும் கிளம்பி சென்றுவிட முடியும் என்ற நினைப்பே நிம்மதியைக் கொடுத்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தாயும் தகப்பனும் எந்நேரமும் தங்களோடே இருக்க, குழந்தைகளிடமும் உற்சாகமே.
முழுதாக கிடைத்த அந்த ஒரு வாரத்தில், நான் மாறிவிட்டேன் என்பதை கணவனுக்கு புரிய வைக்க முயன்று கொண்டே இருந்தாள் சந்த்ரிகா.
ஊரடங்கு முடிந்து, வந்த சனி, ஞாயிற்றுக்கிழமையில் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் செல்லலாம் என்ற செய்தி வரவும், கார் ஏற்பாடு செய்து விட்டு, “இங்க வீட்டுலயிருந்து செய்யுற வேலையை, அங்க வந்தும் செய்யலாம். அதனால எங்க கூட ஊருக்கு வரியா சந்த்ரி?” என்று சசிதரன் கேட்க,
‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற ரீதியில் புறப்பட ஆரம்பித்த மனைவியைப் பார்த்து அசந்து போனான் சசிதரன்.
“லாக் டவுண் முடியவும், திரும்ப இங்க தான் நீ வரணும் சந்த்ரி, அப்புறம் ஏன் எல்லாம் பேக் பண்ணுற?”
“கண்டிப்பா வரமாட்டேன்..” கணவனின் கேள்விக்கு மனதுக்குள் பதில் சொல்லிக் கொண்டாலும், அதைப் பற்றி வாயே திறக்கவில்லை சந்த்ரிகா.
‘எதுவாக இருந்தாலும், இனி ஊரில் போய் பேசிக் கொள்ளலாம்’ என்று முன்னெச்சரிக்கையாக முடிவெடுத்துக் கொண்டது சந்த்ரியின் மனது.
இடைப்பட்ட இந்த காலத்தில், அரவிந்தன் மீது சந்த்ரிகா கொடுத்திருந்த புகாருக்கு ஆன்லைன்னிலேயே விசாரணையும் நடந்து, தண்டனையாக பதவி இறக்கமும் செய்யப்பட்டான் அரவிந்தன்.
அதேபோல கணவன் ஒருநாள், அருணோடு பேசிக் கொண்டிருக்கும் போது, லிங்கம் என்ற பெயர் காதில் விழ, கணவனின் பேச்சை கூர்ந்து கேட்க ஆரம்பித்தாள் சந்த்ரிகா.
எதிர்புறத்தில் இருந்து அருண் என்ன சொன்னானோ தெரியாது, அட்டகாசமாக சிரித்த சசிதரன், “என்னை பெர்ஃபார்மென்ஸே பண்ண விடமாட்டியாடா நீ?” என்று கேட்க, வகையாக அருணிடம் வாங்கி கட்டியிருக்கிறான் லிங்கம் என்று புரிந்து, சந்தோஷமாக இருந்தது சந்த்ரிகாவுக்கு.
அதேநேரம், ‘லிங்கத்தை என்ன செய்திருப்பான் அருண்?’ என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தது அவளுக்கு.
“என்னது?… நான் வந்த பிறகு இன்னொரு ரௌண்ட் போலாமா? ஹஹ… அப்பயாவது என்னை பெர்ஃபார்மென்ஸ் பண்ண விடுவியா நீ?…” திரும்பவும் வெடித்து சிரித்த கணவனின் செயலில், அருண் செய்ததை தெரிந்தேயாக வேண்டும் என்ற ஆவல் உந்தித்தள்ளியது சந்த்ரிகாவை.
ஆர்வம் தாளாமல் கணவனிடம் கேட்டே விட்டாள் சந்த்ரிகா. அவனும் நடந்ததை மனைவிக்கு சொல்ல ஆரம்பித்தான்…