‘இப்படியே இந்த பெண் தன் கோபம், பிடிவாதம் போன்ற வேண்டாத குணங்களை எல்லாம் தூக்கி கடாசிவிட்டு, ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டும் ஆண்டவா’ அன்னையாக ராதா, பிரார்த்தனை ஒன்றை வைத்தார்.
“ஏன் ராதா… உங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க தானே? உங்க சின்ன பொண்ணை எங்க காணவே இல்லை? வீட்டில இருந்தா கூப்பிடுங்களேன். நாங்களும் பாத்துக்கறோம்” என்று பெரிய நாயகி சொல்ல,
ஹாலுக்கு அருகில் இருந்த அறையின் முன்நின்று, இளைய மகளை ராதா அழைத்தார். எல்லோருடைய பார்வையும் அவரையே ஆர்வத்தோடு தொடர, அறைக்குள் இருந்து வெளியே வந்தாள் சிவரஞ்சனி.
“வா சிவா… உன்னையும் பாக்கணும்னு சொல்லுறாங்க” மகளிடம் மெல்லிய குரலில் சொல்லியவர், அவளின் கைப்பற்றி அழைத்து சென்று, “இது தான் என்னோட இரண்டாவது பொண்ணு சிவரஞ்சனி” என்று பொதுவாக அறிமுகம் செய்தார்.
வந்திருந்தவர்களுக்கு அன்னை சொல்லாமலேயே வணக்கம் வைத்த, சிவரஞ்சனியைப் பார்த்து, “அக்கா… இது நம்ம ரஞ்சனி சிஸ்டர் இல்ல?…” உற்சாகமாக குரல் கொடுத்தார், சசிதரனின் அன்னை இராஜேஸ்வரி.
“அட… ஆமா ராஜி…” முகமெல்லாம் சந்தோஷத்தோடு பதில் சொல்லிய நாயகி, சட்டென்று சிவரஞ்சனியின் கையைப் பற்றி தன்னருகே உட்கார வைத்துக் கொண்டு, “அப்போ… நாம ரஞ்சனியோட அக்காவைத் தான் பார்க்க வந்திருக்கோமா?” என்றார் முகம் கொள்ளா சிரிப்போடு.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன் நாயகி, காய்ச்சலில் ஒரு மூன்று நாட்கள், ரஞ்சனி வேலை செய்த நர்சிங்ஹோமில், உள்நோயாளியாக தங்கியிருந்தார்.
அப்போது, அவரது ரூமில் டுயூட்டி நர்ஸ்ஸாக, அவரைக் கவனித்துக் கொண்டது ரஞ்சனி தான். பேச்சிலும் செயலிலும் கனிவு நிரம்பியிருந்த அந்த சிறு பெண்ணை நாயகிக்கும், அவரோடு உடனிருந்த ராஜேஸ்வரிக்கும் அவ்வளவு பிடித்திருந்தது.
அதனாலேயே ரஞ்சனியைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார் சசிதரனின் அன்னை.
தங்கள் வீட்டு பெண்களின் ஆரவாரமான பேச்சில் எல்லோரும் ஆர்வமாக ரஞ்சனியைப் பார்த்தார்கள். ஒருவித வெக்கத்தோடும், சிவந்து போன முகத்தோடும், பேசிக்கொண்டிருந்த சிவரஞ்சனியை, அருணும் ஆர்வமாகப் பார்த்தான்.
சிவரஞ்சனியைப் பார்த்த மாத்திரத்தில், “அருண்…இவள் தான்… இவள் தான் உனக்கானவள்” உள்ளுக்குள் இருந்து ஒரு குரல் வேகமாக கேட்டது அருணுக்கு.
‘ஒரு பொண்ணை நான் பாத்துடக்கூடாதே? உடனே குதிச்சுற வேண்டியது.’
இதுவரையில், வாழ்க்கையில் ஒருமுறை கூட தையா தக்கா என்று இப்படி குதிக்காத தன் உணர்வுகளின் மீது வீணாக பழியைத் தூக்கிப் போட்ட அருண், ரஞ்சனியின் மீதான தன் ரசனையான பார்வையை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை.
“மச்சான்… இங்க நாம சசி மச்சானுக்கு மட்டும் தான் பொண்ணு பார்க்க வந்ததா எனக்கு ஞாபகம்!” மைத்துனனை கண்டு கொண்ட ராகவ், அருண் காதோரம் ரகசியம் பேசினான்.
அதற்கு நேர்மாறாக, இதுவரை புன்னகை முகமாக இருந்த சந்த்ரிகாவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக தன் பொலிவை இழக்கத் தொடங்கியது.
படாதபாடுபட்டு அதை மறைத்தவள், “நான் போகட்டுமா?” என்று கயல்விழியிடம் கேட்டாள். அவளிடமிருந்து பதில் ஏதும் வருவதற்கு முன்பே எழும்பியவள், தங்கையைப் பார்க்க, சுவிட்ச் போட்டாற்போல எழும்பிய ரஞ்சனி, “இதோ… இப்போ வர்றேன் ஆன்ட்டி” என்றபடியே தமக்கையின் பின்னோடு சென்று மறைந்தாள்.
பெண் பார்க்கவென்று வந்து, எத்தனை நேரம் தான் பெண்களை தங்களோடு பிடித்து வைத்திருக்க முடியும்? எனவே அவர்கள் அங்கிருந்து சென்றதை யாரும் தவறாக எண்ணவில்லை.
மாறாக, ‘சகோதரிகளுக்குள் என்ன ஒரு ஒற்றுமை!’ என்று தான் எண்ணத் தோன்றியது.
அறைக்குள் வந்த சந்த்ரிகா, “உன்னை யாருடி அங்க வரச்சொன்னது?” எடுத்த எடுப்பிலேயே எகிறினாள் தங்கையிடம்.
“அம்மா தான் க்கா கூப்பிட்டாங்க, அதான் நான்…”
“அவங்க கூப்பிட்டா… நீ வரலைன்னு சொல்லுறதுக்கென்ன?”
தங்கையை முடிக்க விடாமல் இடைவெட்டியவளுக்கு, ‘தனக்கான இன்றைய பொழுதை தங்கை பாழ்படுத்தி விட்டாள்’ என்று அவள்மீது கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.
எங்கும், எதிலும் தானே முதன்மையாக கருதப்பட வேண்டும் என்ற மனநிலை உடைய சந்த்ரிகாவிற்கு, தங்கையைக் கண்டதும் அந்த பெண்களிடையே ஏற்பட்ட ஆரவாரத்தில், தன் முக்கியத்துவம் குறைந்து அந்த இடத்தில் தான் இரண்டாம்பட்சம் ஆகிப்போனது போன்ற எண்ணம் உண்டானது.
போதாததற்கு, “ரஞ்சனியோட அக்காவும், ரஞ்சனியை மாதிரி பொறுமைசாலியா, அன்பானவளாகத் தான் இருப்பாள்” என்ற சாராம்சத்தில் பெண்களின் பேச்சிருக்க, தங்கையோடு தன்னை ஒப்பீடு செய்வது, சுத்தமாக பிடிக்காமல் போனது சந்த்ரிகாவுக்கு.
அதற்கு மேலும் அங்கிருந்து, அவர்களின் பேச்சை கேட்க விரும்பாதவள், ரஞ்சனியையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.
“அவங்க எல்லாரும், இங்கயிருந்து போற வரைக்கும், நீ இந்த ரூம்லயே இருக்கணும். அத விட்டுட்டு, அம்மா கூப்பிட்டாங்க, ஆட்டுக்குட்டி கூப்பிட்டாங்கன்னு அங்க வந்து நின்ன... கொன்னுடுவேன்.”
அவள் சொல்லி முடிக்கவும், “சந்த்ரி… வா… வந்து எல்லாருக்கும் உங்கையாலயே டீ கொடு” என்று வந்த நின்ற ராதா, “நீயும் வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணு சிவா” என்று இளைய மகளையும் அழைத்தார்.
“இல்லம்மா… எனக்கு அங்கவர ஒரு மாதிரியா இருக்கு, நான் வரலை.”
அவசரமாக பதில் சொன்ன தங்கையை மெச்சுதல் பார்வையொன்று பார்த்தபடியே அன்னையோடு சென்றாள் சந்த்ரிகா.
சிறுவயதிலிருந்தே தன் அக்கா இப்படித்தான் என்ற பிம்பம் ரஞ்சனியின் மனதில் பதிந்து போயிருந்ததால், சந்த்ரிகாவின் நடவடிக்கைகள் பெரிதாக பாதிக்கவில்லை அவளை.
ஆனால் ரஞ்சனியை எதிர்பார்த்த அருணின் மனம் லேசாக சுணங்கியது, கடவுளுக்கே பொறுக்கவில்லை போலும்.
டீயை மறுத்ததால், ராதா தந்த பழச்சாறை குடித்துக் கொண்டிருந்த கயல்விழியின் பெண்குழந்தை கைத்தவறி தன்மீதே பழச்சாறை கொட்டிக்கொள்ள,
“சிவா… பாப்பாவை கூட்டிட்டு போய் ட்ரெஸ்ஸை கழுவி விடுடா” தன்னை மறந்து மகளை அழைத்திருந்தார் ராதா.
அத்தனை பேருக்கு மத்தியில் பெயர் சொல்லி அழைத்து, தாய் ஒரு வேலையும் சொல்லிய பிறகு எப்படி போகாமல் இருக்க முடியும்?
வேகமாக அறையை விட்டு வெளியே வந்தவள், “ரெஸ்ட் ரூம் எங்கயிருக்குன்னு மட்டும் சொல்லு டா, நானே வாஷ் பண்ணிக்கிறேன்” என்று சொன்ன கயல்விழிக்கு, அழகாக சமாதானம் சொல்லி தானே சிறுமியை அழைத்துச் சென்றாள்.
மெல்லிசையாக வெளியே வந்த பெண்ணை மறுபடியும் அருண் கண்களில் நிறைத்துக் கொள்ள, யதேச்சையாக அவனின் பார்வையைக் கண்டு கொண்ட தாய்மாமன் மனைவி பாக்யாவுக்கு தான் திக்கென்று ஆகிப்போனது.
பின்னே, தன் மகள் மாலதியை அருணுக்கு மணமுடித்து விட வேண்டும் என்று பலவருடங்களாக கனவு கண்டு கொண்டிருப்பவருக்கு, மருமகனின் ரசனையான பார்வை மற்றொரு பெண்ணின் மீது விழுவதைக் காணும் போது பதறத்தானே செய்யும்.
தான் இருந்த அறையோடு இணைந்திருந்த பாத்ரூமிலே, அந்த சிறுமியின் உடையில் இருந்த ஜூஸ் கறையைக் கழுவிய ரஞ்சனி, “ட்ரெஸ் காய்ஞ்ச பிறகு வெளியே போலாம் ஓகேயா” என்று சொல்லி தன்னுடனேயே வைத்துக் கொண்டாள்.
அறைக்கு வெளியே கல்யாணப் பேச்சு ஆரம்பமானது.
“எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க விருப்பம் என்னன்னு சொன்னீங்கன்னா, மேற்கொண்டு நாம பேசலாம்” பளிச்சென்று பேசினார் நாயகி.
பெண்ணை பிடித்திருக்கிறது, என்ற நாயகியின் வார்த்தையில், சிறகில்லாமலே வானத்தில் பறந்த ராதாவுக்கு, ‘எனக்கு பூரண சம்மதம்” என்று உடனே சொல்லிவிடத் தான் ஆசை.
ஆனால் வாழப்போவது மகளாயிற்றே. அதனால் அவள் வார்த்தை முக்கியம் எனக்கருதி, அங்கே சற்று ஒதுங்கினார் போன்று, தன் சக ஆசிரியரோடு நின்றிருந்த மகளுக்கு அருகில் வந்து, “நான் என்ன பதில் சொல்லணும் சந்த்ரி?” என்றார் ஆவலாக.
மக்களிடமிருந்து சாதகமான முடிவு தான் வரும் என்று ராதாவின் மனது அடித்து சொல்லியது. இல்லையென்றால், மகள் இப்படியெல்லாம் பொறுமையாக நிற்கின்ற ஆளில்லையே.
ஆனால் சந்த்ரிகாவோ, அன்னை எதிர்பார்த்த பதிலைத் தராமல், “எனக்கு அவங்க கூட கொஞ்சம் பேசணும்” என்றாள் வேகமாக.
மகள் சொன்ன பதிலில் அடிவயிறெல்லாம் கலங்கியது ராதாவுக்கு. ‘ஏடாகூடமாக ஏதாவது பேசி கூடிவந்திருக்கும், திருமணத்தை குழப்பி விட்டுவிடுவாளோ?’ என்று பதறியது அவர் தாய் மனது.
அவர் கலங்கிய முகம் கண்டு, “இப்போ இதெல்லாம் சகஜம் தான் ராதா. பசங்களே அவங்க வாழ்க்கையைப் பற்றி பேசி முடிவெடுக்கட்டும். நாம வெயிட் பண்ணுவோம்” என்று பெரியநாயகி கூறவும்,
உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பிய சசிதரன், சந்த்ரிகாவைப் பார்க்க, வீட்டின் முன் வாசல் வழியே வெளியேறி, பின்பக்கத்தில் இருந்த தோட்டத்தை நோக்கி நடந்தாள் சந்த்ரிகா. அவள் பின்னோடு சென்றான் சசிதரன்.
தோட்டத்தை அடையவும், பூத்துக் குலுங்கியிருந்த செம்பருத்தி செடிக்கு அருகில் போய் நின்று கொண்டாள் சந்த்ரிகா.