அதற்கு பக்கத்தில் கம்பீரமாக நின்றிருந்த வேப்பமரத்தில் சாய்ந்து, மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டு சந்த்ரிகாவைப் பார்த்தபடியே நின்றான் சசிதரன். முகத்தில் வாடாத புன்னகை பூத்துக் கிடந்தது.
சசிதரனின் அருகாமையில், வாழ்க்கையில் முதன்முறையாக வெட்கம் வந்து தொலைக்க, காலையிலிருந்து அவனிடம் பேசவேண்டும் என்று மனதில் மனனம் செய்து வைத்திருந்தது எல்லாம் வசதியாக மறந்து போனது சந்த்ரிகாவிற்கு.
மொழி மறந்தவள் போல ஒருவித பதட்டத்தில், செம்பருத்தி பூக்களை பறித்து அதன் இதழ்களை பிய்த்து போட ஆரம்பித்தாள் சந்த்ரிகா.
“ஐயோ பாவம்... அதை விட்டுடுங்க சந்த்ரி” குரலில் குறும்பு கூத்தாடச் சொன்னான் சசிதரன்.
எதிர்பாராமல் கேட்ட ஆணவனின் குரலில், “ஹாங்…” என்று பதறியவள், அவனின் பேச்சின் அர்த்தம் புரிந்து, தன்கையில் ஒன்றுமே இல்லை என்னும் விதமாக கைகளை தன் சேலை முந்தானையால் துடைத்துக் கொள்ள,
“ரொம்ப…” சுருக்கமாக சொல்லியவன், “உங்களுக்கு?” என்றான் ஒரு எதிர்பார்ப்போடு.
“ரொம்ப…” என்றாள், அவளும் அவனுடைய பாணியிலேயே.
“அப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாமா சந்த்ரி?”
அனைவரும் கூப்பிடும் பெயர் தான். அதையே மனதுக்கு பிடித்தவனின் வாய்மொழியாக கேட்கவும், சித்தம் கலங்கி ஆணவன் மீது பித்தம் கொண்ட பெண், “பண்ணிக்கலாமே..” என்றாள் ராகமாக.
“அப்போ அச்சாரம் குடுத்துக்கலாமா?”
“அச்சாரமா?”
சிரிக்கும் கண்களோடு தன்னையே விழுங்கும் பார்வை பார்த்தபடி நின்றவனிடம், குழப்பத்தோடு சந்த்ரிகா கேட்க, தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த சிறிய பாக்ஸ்ஸிலிருந்து மோதிரம் ஒன்றை கையிலெடுத்தவன், சந்த்ரியின் கரத்திற்காக தன் கையை நீட்டினான்.
“அப்போ ரெடியாத் தான் வந்துருக்கீங்க” புதிதாக விரலில் குடியேறிய மோதிரத்தை பார்த்தபடியே சந்திரிகா கேட்டாள்.
“சந்த்ரியை பிடிச்சதாலத் தான் வந்தேன்.”
அவளிள் வார்த்தைகளை திருத்தியவன், “அம்மணிகிட்ட இருந்து எனக்கு அச்சாரம் எதுவும் கிடைக்காதா?” என்றான் புன்னகையோடு.
எத்தனை படங்களில் இப்படி ஒரு காட்சியைப் பார்த்திருப்பாள் சந்த்ரிகா. எனவே, “அதெல்லாம் இப்போ கிடையாது” என்றாள் லேசான பதட்டத்தோடு.
அவள் பதட்டத்தின் காரணம் புரிந்தவனுக்கு, இதழ்கடையோரம் சிரிப்பில் துடித்தது. அதை அழகாக மறைத்து, “மனசிருந்தா குடுக்கலாமே” என்றபடியே சந்த்ரிகாவின் கையைப் பற்றியவன்,
அவள் விரலில் ஏற்கனவே அணிந்திருந்த மோதிரத்தை வருடிக்கொடுத்தபடியே, “இதைக் கூடவா எனக்கு போட்டுவிடக் கூடாது?” என்று கேட்டான்.
நிமிடத்தில் தன் கற்பனை பறந்த திக்கை நினைத்து தனக்குள்ளே சிரித்து கொண்ட சந்த்ரிகா, “இது ரொம்ப சின்னது உங்க விரலுக்கு பொருந்தாது” என்றாள் மெதுவாக.
“அப்போ பொருந்துர மாதிரி போட்டுறலாமா?” கேட்டபடியே தன் விரல் அளவுக்கு ஒரு மோதிரத்தை பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்தவன், அதை சந்த்ரிகாவின் கையில் கொடுத்து, “போட்டுவிடு” என்று தன் கரத்தையும் நீட்டினான்.
தான் கற்பனை செய்து வைக்காதது எல்லாம் அங்கு நடந்துவிட, பதறிப்போன சந்த்ரிகா, சட்டென்று தன் கையை இழுத்துக் கொண்டு, “போலாம்…” என்றபடியே நடக்க ஆரம்பித்தாள். உல்லாச சிரிப்போடு உடன் நடந்தான் சசிதரன். (simplyearth.com)
தனித்தனியாக போனவர்கள், ஜோடியாக திரும்பி வந்ததிலேயே அவர்கள் மனம் புரிந்து விட்டது, அனைவருக்கும்.
இருந்தாலும் தங்கள் வாய் வார்த்தையாக அவர்களே சொல்லட்டும் என்று அவர்கள் முகத்தை அனைவரும் ஆவலாக பார்க்க, “எல்லாம் சுபமே” என்னும் விதத்தில் வலது கையின் கட்டை விரலை உயர்த்தி காட்டினான் சசிதரன்.
நொடியில் ஒரு பரபரப்பு எல்லாரிடமும் ஒட்டிக்கொள்ள, “அப்போ நாளை இழுக்காம, ஒரு மாசத்துக்குள்ள கல்யாணத்தை வச்சிக்கலாம். நான் சொல்லுறது சரிதானே தம்பி” வேலுச்சாமியிடம் கேட்டார் நாயகி.
“அப்படியே செய்திடலாம் அண்ணி” எப்போதும் போல அண்ணியை ஒட்டியே பேசினார் சசிதரனின் அப்பா வேலுச்சாமி.
பெரியவர்களுக்குள் இப்படி பேச்சு போய்கொண்டிருக்க…,
“ஹேய் மச்சான்… அது என்ன விரல்ல புதுசா மோதிரம் தெரியுது? இங்கயிருந்து நீ எழும்பி போகும்போது கூட உங்கையில் அது இல்லையே?”
“காலைல தான் யாரோ, என் தம்பிக்கு தில்லு பத்தாது, அவன் பச்சபுள்ளன்னு சொன்னாங்க. ஆனா அந்த பச்சபுள்ள செய்திருக்க வேலையைப் பாத்தியா?”
மனைவியிடம் சொன்ன ராகவ், “என் கணிப்புபடி பாத்தா, அங்கயும் இருக்கணும்” என்று சிரித்தபடியே சொல்ல, பக்கத்தில் நின்றிருந்த சந்த்ரிகாவின் விரல்களைப் பிடித்து பார்த்தாள் கயல்விழி.
அங்கும், தம்பியின் விரலில் கிடந்த டிசைனிலையே புத்தம் புதிதாக மோதிரம் ஒன்று கண்சிமிட்ட, “இப்பிடி என்னை கவுத்திட்டியே தம்பி” என்று சிரித்தாள் கயல்விழி.
“கவுத்திட்டியேன்னு சொல்லாத அக்கா, கவுந்திட்டியேன்னு சொல்லு” என்று அருண் சொல்ல, திரும்பவும் ஒரு சிரிப்பு அலை எழுந்து அடங்கியது இளையவர்களுக்குள்.
இளையவர்களின் கலகலப்பில், அவர்களை கவனித்த பெரியவர்களுக்கும் நடந்தது புரிந்து, புன்னகை ஒட்டிக்கொண்டது இதழ்களில்.
“என்னைக்கேட்டா, நாம இதை செய்திருக்கணும், ஆனா செய்யலை… அதுதான் எம்பிள்ளையே செய்துட்டான். விடுவீங்களா..”
சசிதரனுக்கு ஆதரவாக பேசிய நாயகி, “அந்த தாம்பாளத்துல இருக்கிற பூவை எடுத்து, பிள்ளைக்கு வச்சிடு கயல்” என்றார்.
சந்தோஷமாக பூவை வைத்து விட்ட கயல்விழி, “ஒரு முக்கியமான ஆளைத்தவிர, நம்ம வீட்டுல உள்ள எல்லோரும் இங்க தான் இருக்கோம். அவளும் உன்கூட பேசணும்னு ஆசைப்படுவா, பேசிடலாமா சந்த்ரி?”
சந்திரிகாவிடம் அனுமதி கேட்ட கயல்விழி, வாட்ஸ்ஸப் வீடியோ காலில் தனது அக்கா மீனாட்சியை அழைத்தாள். தங்கையின் அழைப்பிற்காக காத்துக்கொண்டிருந்த மீனாட்சியும், உடனடியாக அழைப்பை ஏற்று ஃபோனின் திரையில் வந்தாள்.
“இதுதான் எங்க பெரிய அக்கா, எங்க எல்லாருக்கும் மூத்தவங்க.”
தங்களது சகோதரியை, சந்த்ரிகாவிற்கு முறையாக அறிமுகம் செய்த கயல்விழி, “மீனா க்கா… எல்லாம் ஃபிக்ஸ் ஆயாச்சு, நம்ம சசி வைஃப் க்கு ஒரு ஹாய் சொல்லு பார்க்கலாம்” என்று கலகலக்க, சந்த்ரிகாவிடம் சரளமாக பேச ஆரம்பித்தார் மீனாட்சி.
அந்த இடத்தில், அப்போது ஒரு மகாராணியைப் போல தன்னை உணர்ந்த சந்த்ரிகாவும் உற்சாகமாகவே பேசினாள்.
மீனாட்ச்சியோடு சந்த்ரிகா பேசி முடிக்கவும், “நாங்க இப்போ கிளம்புறோம். இன்னொருநாள் கலந்து பேசி எவ்ளோ சீக்கிரம் கல்யாணத்தை வைக்கமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வச்சிடலாம்” என்று ராதாவிடம் சொல்லியவர்கள், புறப்பட ஆயத்தமானார்கள்.
அறைக்குள் இருந்த சிறுமியும் இவர்களோடு வந்து சேர்ந்து கொண்டாள். சிவரஞ்சனி மட்டும் வெளியே வரவேயில்லை.
“கிளம்பும் முன் அறையிலிருந்து வெளியே வந்து விடமாட்டாளா? ஒருமுறை பார்த்துவிடமாட்டோமா?’ என்று ஆசையோடு, சிவரஞ்சனி இருந்த அறையைத் தொட்டுத் தொட்டு மீண்ட அருணின் பார்வை, பாக்யாவின் மனதிற்குள் அபாயச் சங்கை ஊதியது.
அதற்கு ஏதுவாக, “ரஞ்சனியையும் கூப்பிடுங்க ஆன்டி, நாங்க அவகிட்டயும் சொல்லிட்டு கிளம்புறோம்” என்று கயல்விழி சொல்ல, மறுபடியும் மகளிடம் வந்து நின்றார் ராதா.
“நான் எதுக்கு ம்மா அங்க?”
வெளியே வரமறுத்து அடம்பிடித்த மகளிடம், “இன்னைக்கு என்னாச்சு சிவா? ஏன் இப்படி அடம்பிடிக்குற?”
ஆராய்ச்சியாக மகளைப் பார்த்த ராதா, “எல்லோரும் உனக்காகத்தான் வெயிட் பண்ணுறாங்க. இப்போ நீ வரலைன்னா நல்லாயிருக்காது” என்று சொல்லியவர், கைப்பிடியாக மகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
அவளைக் கண்ட நொடி அருணின் முகம் பிரகாசமாகியது. நொடியில் முடிவெடுத்த பாக்யா, “இன்னும் கொஞ்ச நாளுல சொந்தமாகப் போற நமக்குள்ள இந்த வெக்கமெல்லாம் தேவையா?” என்று ரஞ்சனியிடம் கேலிபோல சொல்லியவர்,
கிளம்புவதற்கு தயாரானது போல தாம்பாளத்தை கையிலெடுத்துக் கொண்டு, “சசி தம்பிக்கு தான் இந்த பொண்ணு தேடுற கஷ்டம் எல்லாம். எங்க அருணுக்கு சொந்தத்திலேயே பொண்ணு காத்திட்டு இருக்கு” எதேச்சையாக சொன்னது போல ராதாவிடம் சொல்ல, அவரோ புரியாமல் கேள்வியாக நோக்கினார்.
“பொண்ணு வேற யாரும் இல்லைங்க, எம்பொண்ணு மாலதி தான். சசி தம்பிக்கு கல்யாணம் முடியவும், அடுத்து எங்க அருணுக்கும் மாலதிக்கும் தான் கல்யாணம்” என்று சத்தமாக சொன்னார்.
“அப்பிடியா! ரொம்ப சந்தோஷம் ங்க” என்றார் ராதா.
ஆனால், மாமன் மனைவியின் பேச்சில் எள்ளும் கொள்ளும் வெடித்தது அருணின் முகத்தில்.
சட்டென்று கோபத்தோடு பதில் பேச முயன்றவனிடம், “அருண்… சாந்தா க்கா இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகணும்னு சொன்னாங்க. இதோ இப்போ நாங்க வந்துடுவோம், வந்த பிறகு போலாம்னு, நான் சொன்னதா வீட்டுக்கு ஃபோன் பண்ணி சொல்லு” என்றார் நாயகி வேகமாக.
சாந்தா என்பது அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி.
நாயகியின் வார்த்தையிலேயே, இங்கே வைத்து எதுவும் பேசக்கூடாது என்ற தகவல் இருக்க, வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு காரை நோக்கி நடந்தான் அருண்.