கேவிஎஸ் சகோதரர்களின் வீட்டுக்கு பின்புறம் உள்ள பெரிய வளாகத்தில், கடைக்காக கொள்முதல் செய்யப்படும் மளிகைப் பொருட்களை, கால் கிலோ, அரைகிலோ, ஒருகிலோ என்று எடைவாரியாக அவர்களின் கடை பெயர் அச்சடிக்கப்பட்ட கவர்களில் பொட்டலம் போடும் பணியில், ஒரு இருபது பெண்கள் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
அங்கே ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து அவர்களை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார் பெரிய நாயகி.
“நாயகி அக்கா, நம்ம சசி தம்பிக்கு கல்யாணம் முடிவாகியிருக்காம்ல… பொண்ணு கூட அல்லி குளமாம், இவ்வளவு நடந்துருக்கு நீங்க எங்களுக்கு ஒரு வார்த்தை கூட சொல்லலை பாத்தீங்களா?”
கைகள் பொட்டலம் போடுவதில் கருத்தாக இருக்க, நாயகியிடம் கேட்டார் பெண் ஒருவர்.
“அதுதான் நான் சொல்லாமலேயே விஷயம் இவ்வளவு தெளிவா தெரிஞ்சிருக்கே உனக்கு!” கேலி போலச் சொல்லிய நாயகி,
“உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு எதுவும் கிடையாது வள்ளி. இன்னும் இரண்டு மூனு நாள் கழிச்சு சொல்லலாம்னு நினைச்சேன், அவ்வளவு தான்” என்றார் தன்னிடம் ஆதங்கப்பட்ட பெண்ணிடம்.
“அப்போ தம்பி கல்யாணத்துக்கு எங்களுக்கு புதுத்துணி, போனஸ் எல்லாம் உண்டுன்னு சொல்லுங்க க்கா” என்றார் இன்னொரு பெண்மணி.
“கண்டிப்பா… குடுத்துட்டா போச்சு.”
புன்னகையோடு நாயகி சொல்ல, பார்சல் செய்யப்பட்ட பொருட்களை கடைக்கு எடுத்துச் செல்ல டெம்போவோடு வந்து நின்றான் கணேஷ்.
அவனோடு வந்த நபர்கள் தயாராக இருந்த பொருட்களை வண்டியில் ஏற்ற ஆரம்பிக்க, கணேஷிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார் நாயகி.
“கணேஷ், இன்னைக்கு நைட்டுக்குள்ள கண்டிப்பா சரக்கு லோடு வந்து இறங்கிடுமில்ல?”
“கண்டிப்பா வந்துடும் ம்மா.”
“எதுக்கும் லோடு கொண்டுவர்ற லாரி ட்ரைவருக்கு ஃபோன் பண்ணி கேட்டுக்கப்பா, இன்னைக்கு சரக்கு வரலைன்னா, நாளைக்கு இங்க பொட்டலம் போடுற வேலையில்லை.”
“நான் ஏற்கனவே கேட்டுட்டேன் ம்மா, லோடு வண்டி மதுரையைத் தாண்டி வந்துட்டு இருக்குதாம். எல்லாம் நல்லபடியா நடந்தா, இன்னும் நாலு மணி நேரத்தில சரக்கு டாண்ணு வந்து இறங்கிடும்.”
“அப்படி வந்தா சரிதான்” என்ற நாயகி, வந்தவர்கள் லோடு ஏற்றி முடிக்கவும்,
“இந்த லோடை இறக்கி முடிச்சி சாப்டுட்டே அடுத்த லோடுக்கு வாங்க” என்று கணேஷை அனுப்பி வைத்துவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்து கணக்கு வழக்கு நோட்டில் மூழ்கிவிட, தொலைபேசி அழைத்தது அவரை.
அழைத்தது ராதா.
ஃபோனை எடுத்து நாயகி காதுக்கு கொடுக்க, “ஹலோ… நாயகி அண்ணிங்களா?” என்றார் ராதா.
“ஹ்ம்ம்… ஆமாம் ராதா, சொல்லுங்க.”
கைகள் வேலை பார்த்தாலும் ஆர்வமாக தன்னை நிமிர்ந்து பார்த்த பெண்களிடம், “வேலையைப் பாருங்க” என்று சைகையில் சொல்லிய நாயகி, அங்கிருந்த சாந்தாவிடம்,
“கொஞ்சம் கவனிச்சுக்கோ சாந்தா. நான் இப்போ வந்துடுறேன்” என்று சொல்லியபடியே வீட்டை நோக்கி நகர்ந்தார்.
“இன்விடேஷன் மாடல் கொண்டு வந்து அருண் தம்பி காட்டுனாங்க அண்ணி, ரொம்ப நல்லாயிருந்தது” மகிழ்ச்சி குரலில் ராதா பேச்சைத் தொடங்கினார்.
“ரொம்ப சந்தோஷம் ராதா, எங்க மருமக பார்த்துட்டு என்ன சொன்னா?”
“அவளுக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது அண்ணி.”
உலக அதிசயமாக முதல் பார்வையிலேயே மணமகன் வீட்டார் காட்டிய அழைப்பிதழ் மாடல் சந்த்ரிகாவுக்கும் பிடித்திருக்கவே, எந்த குறையும் அவளும் சொல்லவில்லை.
அன்று, இவ்வளவு சீக்கிரத்தில் திருமண நாளா? என்று அயர்ந்து போன ராதாவிற்கு, நாங்க பாத்துக்குறோம் என்று சொன்ன வார்த்தைகளை வெறும் பேச்சுக்காக மட்டும் சொல்லாமல், செயலிலும் காட்டினார்கள் அருண் வீட்டினர்.
ஆம்… திருமண வேலைகளை எந்த அளவிற்கு பெண் வீட்டாருக்கு எளிதாக்க முடியுமோ, அந்த அளவுக்கு எளிதாக்கி கொடுத்தனர்.
அதில் ஒன்று தான் இருவீட்டார் அழைப்பாக பத்திரிகை அடித்தது.
“அது என்ன?…, வெறும் முன்னூறு பத்திரிக்கை மட்டும் போதும்ன்னு சொல்லிட்டீங்க ராதா! உங்க வீட்டுல மொதக்கல்யாணம், ஒரு ஐந்நூறு பத்திரிக்கையாவது வேண்டாமா?”
“ம்ஹூம்… இவங்க அப்பா இருந்திருந்தா ஐந்நூறு இல்லை, ஆயிரம் பத்திரிகை கூட காணாது அண்ணி. ஆனா, என்னால தனியாளா எல்லா பக்கமும் போய் இன்விடேஷன் வைக்க முடியாது. அதான் ரொம்ப முக்கியமானவங்களுக்கு மட்டும் வச்சா போதும்னு நினைச்சிருக்கேன்” பெருமூச்சொன்றை வெளியிட்டபடியே சொன்ன ராதா,
“நீங்க எல்லாரும் இந்த அளவுக்கு ஹெல்ப் பண்ணுறதால தான் எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா இருக்கு. இல்லைன்னா எனக்கு முழி பிதுங்கி போகும் அண்ணி. அதுக்கு நான் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். ரொம்ப ரொம்ப நன்றி அண்ணி” என்றார் மனதார.
ராதாவோடு உடன்பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை. அவர் கணவரோடு பிறந்தவர்கள் ஆணொன்று, பெண்ணொன்று இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அவர்கள் இருவருமே தங்கள் சகோதரனின் மறைவுக்குப் பிறகு, அவருக்கு அரசாங்கத்திடமிருந்து வந்த பணத்தின் மீதே குறியாக இருந்தார்கள்.
ஆரம்பத்தில் அது தெரியாமல் அவர்கள் கேட்கும் போதெல்லாம், ‘நம் கணவர் இல்லை, அவர் உடன்பிறந்தவர்கள் நமக்கு வேண்டும்’ என்ற எண்ணத்தில் பணத்தை எடுத்து எடுத்து கொடுத்த ராதா, அதை திரும்ப கேட்கும் போது அவர்களின் உண்மையான முகத்தை கண்டுகொள்ள, அவர்களிடமிருந்து தானாகவே ஒதுங்க ஆரம்பித்து விட்டார்.
இதோ… இப்போது கல்யாணத்தை முடிவு செய்து விட்டு அவர்களுக்கு தகவல் சொல்லும் போது, அவர்கள் துளியளவு சந்தோஷத்தை கூட வெளிப்படுத்தவில்லை. மாறாக தங்களிடம் சொல்லாமல், எல்லாவற்றையும் தானாகவே ராதா நடத்திக்கொண்டார், என்று ஒரு ஆட்டம் தான் ஆடி முடித்திருக்கிறார்கள்.
இதில் அவர்களிடமிருந்து கல்யாண வேலையில் உதவி பெறுவது என்பதெல்லாம், கல்லிலிருந்து நார் உறிப்பதற்கு சமம் தான்.
“இதெல்லாம் ஒரு விஷயம்னு, சமயம் கிடைக்கும் போதெல்லாம் நன்றி சொல்லி எங்களை தள்ளி வைக்காதீங்க ராதா” கேலியாக சொன்ன நாயகி,
“ஹாங்… வர்ற ஞாயிற்றுக்கிழமை ரொம்ப நல்லநாளா இருக்கு. அன்னைக்கு போய் முகூர்த்த பட்டு எடுத்துட்டு வந்துடலாமா ராதா? சசியும் வரேன்னு சொல்லியிருக்கிறான். உங்களுக்கு வசதிபடுமா?”
தாங்கள் மாப்பிள்ளை வீடு என்ற பந்தா எதுவுமில்லாமல் மிகவும் சாதாரணமாக கேட்டார் நாயகி.
“ஹ்ம்ம்… கண்டிப்பா அன்னைக்கே போலாம் ண்ணி” என்று சொல்லிய ராதா, ஜவுளி எடுக்க, எங்கே, எப்படி, எத்தனை மணிக்கு வரவேண்டும் என்ற விபரங்களை விலாவாரியாக நாயகியோடு பேசி முடித்துவிட்டு,
“எனக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும், நீங்க என்னை எதுவும் தப்பா நினைச்சிடக் கூடாது அண்ணி…” சிறு தயக்கத்தோடு லேசாக இழுத்தார்.
“எங்கிட்ட என்ன தயக்கம் உங்களுக்கு? சங்கடப்படாம சொல்லுங்க ராதா” என்று நாயகி சொல்ல,
“இல்ல… நீங்க எங்க சந்த்ரியை பொண்ணு பாத்துட்டு போன அன்னைக்கு, ஒரு ஃபோன்கால் வந்தது எனக்கு…” விஷயத்தை பளிச்சென்று சொல்ல முடியாமல் மெல்லிய தயக்கத்தோடு ஆரம்பித்தார் ராதா.
“சரி…” அடுத்து என்ன வரும் என்பதை ஓரளவிற்கு யூகித்தவராக இழுத்தார் நாயகி.
“நம்ம மாப்பிள்ளையோட பெயரச் சொல்லி, இது அவருக்கு முதல் கல்யாணம் இல்ல. ஏற்கனவே பெங்களூருல அவருக்கு கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்கு. உங்க பொண்ணை கல்யாணம் செய்து கொடுத்து, அவ வாழ்க்கையை வீணடிச்சிடாதீங்கன்னு சொல்லிட்டு சட்டுன்னு காலை கட் பண்ணிட்டாங்க.”
“ம்ம்…”
‘என்னடா இது?… நான் இவ்வளவு சொன்ன பிறகும் ஏதோ கதாகாலட்சேபம் கேட்கும் பாவனையில் நாயகியின் ரீஆக்ஷன் இருக்கிறதே!’ என்ற எண்ணத்தில்,
“அண்ணி… நான் பேசுனது உங்களுக்கு கேட்டிச்சா, இல்லையா?” என்றார் ராதா.
“உண்மையைச் சொல்லணும்னா, மொதல்ல கொஞ்சம் பயமாத்தான் இருந்தது அண்ணி. எனக்கு தெரிஞ்சவங்களை வச்சி தம்பியோட ஆஃபீஸ் அட்ரஸ் எல்லாம் கொடுத்து விசாரிக்க கூட செய்தேன்.”
“ஏன் அண்ணி?… உங்களுக்கு வேண்டாதவங்க யாரும் இப்படி சொல்லியிருப்பாங்களோ?”
“ஹ்ம்ம்… இங்க மாடு திங்காத வைக்கீலு ஒருத்தன் இருக்கான். பெயர் லிங்கம். எல்லாம் அந்த கடங்காரன் வேலையா தான் இருக்கும். இதே மாதிரி, என் பொண்ணுங்க கல்யாணத்துலயும் சில்லுண்டிதனம் பண்ணினான் அந்த கிறுக்குப்பய.”
வார்த்தைகள் கொஞ்சம் சூடாக தான் வந்து விழுந்தது நாயகியிடமிருந்து.
“என்ன அண்ணி சொல்லுறீங்க?” ஏதும் புரியாமல் ராதா கேட்க,
“ஒருத்தொருக்கொருத்தர் நெருங்கிய சொந்தமாகப் போறோம். நமக்குள்ள எதுக்கு ஒளிவு மறைவு?” என்று லிங்கம் அவர்களுக்கு பகையாகிப்போன கதையை சொல்ல ஆரம்பித்தார் நாயகி…
பெரிய மகள் மீனாட்சி பாளையங்கோட்டையில் இருந்த பிரபல மகளிர் கல்லூரியில் தன்னுடைய முதுகலை பட்டபடிப்பையும், இளையமகள் கயல்விழி குற்றாலத்தில் இருக்கும் மகளிர் கல்லூரியில் தன்னுடைய இளநிலை பட்டபடிப்பையும் படித்து கொண்டிருந்தார்கள்.
குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகள் எல்லோருமே அப்போது பள்ளிப் படிப்பில் தான் இருந்தார்கள்.
சகோதரிகள் இருவரும் கல்லூரிக்கு அரசுபேருந்தில் தான் செல்வார்கள். இருவரின் கல்லூரியும் இருவேறு திசைகளில் இருந்ததால் தனித்தனியாக தான் அவர்களின் பயணமும் இருந்தது.