மண்டபத்தினுள் வரிசையாக போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த உறவுகளும், நட்புகளும் மணவறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த திருமண நிகழ்வுகளை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
திருமண பந்தத்தில் இணைந்திருந்த சசிதரனும், சந்த்ரிகாவும் கைகளைப் பற்றிக்கொண்டு மணவறையை சுற்றி வலம்வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பின்னோடு, கயல்விழியும் மீனாட்சியும், தங்கள் பிள்ளைகளோடு உற்சாகமாக இணைந்து கொண்டார்கள்.
மணவறையை சுற்றி நின்ற உறவுகள், மணமக்கள் தங்கள் பக்கமாக வரும்போதெல்லாம், அவர்கள் மீது தங்கள் கைகளிலிருந்த உதிரிப்பூக்களை வஞ்சமில்லால் வாரியிறைத்தார்கள்.
அருண் மட்டும் புதுமண தம்பதிகளின் மேல் பூக்களைத் தூவும் சாக்கில், சிவரஞ்சனியின் மீது தூவிக் கொண்டிருந்தான்.
காதல் பாஷையில் அதைச் சொல்வதென்றால், காதல் பாணங்களை தன் ரதிதேவி மீது அள்ளி வீசிக் கொண்டிருந்தான்.
ஆரம்பத்தில் ஏதோ தெரியாமல் தன்மீது பூ விழுகிறது என்று நினைத்த ரஞ்சனி, அப்படி இல்லை என்பதை உணரவும், அதுவும் அருணின் கைப்பூக்கள் தன்மீது விழுகிறது எனத்தெரியவும் பதட்டத்தின் பிடியில் சிக்குண்டாள்.
“இப்ப எதுக்கு இப்படி பண்ணுறாங்க? யாராவது இதை பாத்தா என்ன நினைப்பாங்க?’
நினைத்ததோடல்லாமல், லேசாக நிமிர்ந்து அவனை முறைத்துப் பார்த்தாள். அவனோ உற்சாகமாக அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.
அருணின் அந்த அவதாரத்தில் மிரண்டு போன ரஞ்சனி, அருகில் நின்றிருந்த தோழி கஸ்தூரியின் பின்னால் லேசாக மறைந்தாள்.
ஆம்… கூட பணிபுரியும் கஸ்தூரியையும் அக்காவின் திருமணத்திற்கு அழைத்திருந்தாள் அந்த தங்கை. கஸ்தூரியும் மத்தியானம் வரை பெர்மிஷன் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள்.
மூன்று முழுச்சுற்று மணவறையை சுற்றி முடித்து, இன்னபிற சடங்குகளையும் செய்தபிறகு, அங்கே மணமேடையில் போடப்பட்டிருந்த அலங்கார இருக்கைகளில் உட்கார வைக்கப்பட்டார்கள் மணமக்கள்.
சசிதரனுடன் உடன்பிறந்த பெண்கள் யாருமில்லாததால், மீனாட்சியும் கயல்விழியும் அக்கா ஸ்தானத்தில் நின்று திருமண சடங்குகள் அத்தனையையும் செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த இரண்டு பெண்களுக்கும் உடன்பிறந்த ஆண்கள் இல்லாததால், அவர்களுடைய கல்யாணத்தின் போது பதின்ம வயதுகளில் இருந்த சசிதரனும், அருணும் தான் சகோதரர்கள் ஸ்தானத்தில் நின்று எல்லா கடமைகளையும் செய்தது.
மொத்தத்தில் அந்த குடும்பத்தில் யாருக்குமே இதுவரையில் ‘எனக்கு சகோதரன் கிடையாது, சகோதரி கிடையாது, மகன் கிடையாது மகள் கிடையாது’ என்ற எண்ணமே வந்தது கிடையாது.
மூன்று பெற்றோருக்கு பிறந்த அந்த ஐந்து பிள்ளைகளுமே, தங்களை உடன் பிறந்தவர்களாகத் தான் இதுவரையில் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படித் தான் அவர்களுடைய பேச்சு, நடவடிக்கைகள் எல்லாமே இருக்கும்.
மணமக்கள் இருக்கையில் வந்து அமரவும்…
“நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான், பேரு விளங்க இங்க வாழணும்…” என்று ஆர்ப்பாட்டமாக, ஆர்கஸ்ட்ரா தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியைத் தொடங்க, எல்லோருடைய முகங்களிலும் ஒரு உல்லாச பாவனை வந்து ஒட்டிக் கொண்டது.
“ஹேப்பி மேரீட் லைஃப் மச்சான்.”
மீனாட்சி மற்றும் கயல்விழியின் கணவன்மார்கள் தங்களின் வாழ்த்தோடு தங்கத்தில் ப்ரேஸ்லெட், செயின் என்று சசிதரனுக்கு அணிவித்துவிட,
“எதுக்கு அத்தான் இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம்?” என்று சிறு வெட்கத்தோடே சசிதரன் அவற்றை பெற்றுக் கொண்டான்.
அருணோ, “ஹலோ அத்தான்ஸ்… இதைவிட கொஞ்சம் பெருசாத்தான் போட்டா என்னவாம்?” என்று அவர்களை வம்பிழுத்தான்.
“கவலையேப்படாத மச்சான்… உங்கல்யாணத்துக்கு…” என்று மீனாட்சியின் கணவர் சபரீஷ் சொல்ல தொடங்க,
“இதைவிட பெருசா போடுவீங்களா அத்தான்?” என்று ஆர்வமாக கேட்டான் அருண்.
“இல்ல… இதைவிட சின்னதா போட்டுரலாம், அப்போ இது பெரிசா தெரிஞ்சிடும் பாரு” சொல்லிவிட்டு சபரீஷ் அட்டகாசமாக சிரிக்க, அவரோடு சேர்ந்து சிரித்தார்கள் அனைவரும்.
அக்காவுக்கு சற்றுதள்ளி தோழியோடு நின்றிருந்த ரஞ்சனியும் பக்கென்று சிரித்தவள், தன் கையால் வாயை மூடி சிரிப்பை மறைக்க முயற்சித்தாள். அதை ஒரு புன்னகையோடு பார்த்த அருண்,
“சரியான ஃப்ராட் அத்தான்” என்று சபரியின் வயிற்றில் தன் கை முஷ்டியை மடக்கி விளையாட்டாக குத்தினான்.
அருணின் வார்த்தையில், “என்ன இவங்க எல்லார் முன்னாடியும் வச்சு இப்படி பேசுறாங்க? அவங்க அத்தான் கோபப்பட்டா என்ன செய்வாங்க?” என்று கொஞ்சம் மிரட்சியாகத் தான் இருந்தது ரஞ்சனிக்கு.
ஆனால் அவள் எண்ணத்துக்கு எதிர்மாறாக, புன்னகையோடு அவர்கள் அருணை பதிலுக்கு கலாய்க்கவும், ஆச்சர்யமாக இருந்தது.
அவர்கள் அனைவரும் தங்களுக்குள் கேலிபேசி சிரித்துக்கொள்ளும் அன்யோன்யம், அத்தனை பிடித்திருந்தது ரஞ்சனிக்கு.
‘நானும் அக்காவும் இப்படியெல்லாம் ஜாலியாக பேசி விளையாடியிருக்கிறோமா?’ என்று தன் நினைவடுக்கை ரஞ்சனி தூளாவிப் பார்த்தாள். அங்கே அப்படி எதுவுமே பதிந்திருக்கவில்லை.
சிறுவயதிலிருந்தே சந்த்ரிகா பிடிவாதக் குழந்தை தான். அதிலும் அவர்களுடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு அது இன்னும் வளர்ந்து நின்றது.
‘ஹ்ம்ம்...இப்படி எல்லாம் சொந்தம் அமைய குடுத்து வச்சிருக்கணும்’ என்ற எண்ணத்தோடு அவர்களுடைய சின்னச்சின்ன செயல்களையும் ரசித்து பார்த்து கொண்டு நின்றிருந்தவளை,
“சிவா, இங்க கொஞ்சம் வா” என்றழைத்தாள் சந்த்ரிகா.
அக்காவின் அழைப்பில் உள்ளுக்குள் திக்கென்றாகிப் போக, “என்னக்கா?” என்றபடியே பக்கத்தில் வந்தாள் சிவரஞ்சனி.
“நான் கர்சீப் எடுக்க மறந்துட்டேன், உங்கிட்ட இருந்தா குடுக்கிறியா?” மிகவும் சாதாரணமாகவே கேட்டாள் சந்த்ரிகா.
“எங்கிட்ட புதுசாவே இருக்கு க்கா…இந்தா வச்சிக்கோ” தன் கையிலிருந்ததைக் கொடுத்த தங்கைக்கு, அக்காவின் இந்த செயலை நம்பவே முடியவில்லை.
“அம்மா எங்க?” தங்கையிடம் வாங்கிய கர்சீப்பால் நெற்றி வியர்வையை துடைத்தபடியே கேட்டு, இன்னும் அவளை ஆச்சர்யத்தில் தள்ளினாள் சந்த்ரிகா.
“அம்மா கூட வேலை பாக்குற டீச்சர்ஸ் வந்துருக்காங்க க்கா. அவங்களை வெல்க்கம் பண்ணிட்டு வரேன், கொஞ்ச நேரம் இங்க நில்லுன்னு சொல்லிட்டு போனாங்க.”
அக்காவின் கேள்விக்கு பதிலையும், தான் அங்கே எதனால் நிற்கிறேன் என்ற தகவலையும் ஒரு சேர சொல்லியவளுக்கு, அக்காவின் இந்த புதிய அவதாரம் அதிர்ச்சியைத் தான் தந்தது.
தங்கையிடம் கைக்குட்டை வாங்கி சந்த்ரிகா முகம் துடைப்பதை கண்ட கயல்விழி, “ரொம்ப ஸ்வெட்டிங் ஆகுதா சந்த்ரி?…” என்று கேட்டு, தன் கையில் இருந்த கர்சீப்பால் சந்த்ரிகாவின் முகம் துடைத்தார்.
அருணோ, மணமேடையில் இயங்கிக் கொண்டிருந்த ஏர்கூலரை சந்த்ரிகாவின் பக்கம் அதிக காற்று வருவது போல சரி செய்தான்.
தன் முகம் துடைக்கும் கயல்விழியை நிமிர்ந்து பார்த்தாள் சந்த்ரிகா. அச்சுஅசலாக அவளைப் போலவே மாந்தளிர் கலரில் அடர்குங்குமங்கலர் அகலபார்டர் வைத்த பட்டு அணிந்திருந்தார்.
ஆம்… அன்று வேறுவழியில்லாமல் முகூர்த்தத்திற்கு புடவை தான் தேர்வு செய்திருந்தாள் சந்திரிகா.
நாயகியின் வார்த்தைகளை மறுத்துக் கூறி, அடம்பிடித்து தான் நினைத்ததை சாதித்துக் கொள்ள அவரொன்றும் அவளின் அம்மா இல்லையே. எனவே சந்த்ரிகாவின் வார்த்தைகள் வாய்க்குள்ளேயே அடங்கிப்போயின.
அப்படியிருந்தும், அவள் ஆசைப்படி லெஹங்கா ஒன்றும் அவளுக்கு எடுத்து கொடுத்து, “மேரேஜ் அன்னைக்கு ஈவ்னிங் போட்டுக்கோ” என்று சொல்லியிருந்தான் சசிதரன்.
முகூர்த்த புடவையை சந்த்ரிகா தேர்வு செய்து முடிக்கவும், அதைப்போலவே மேலும் மூன்று புடவைகள் சசிதரனின் சகோதரிகளுக்கென்று எடுத்தைப் பார்த்த சந்த்ரிகாவின் மனது,
‘நான் மட்டும் யூனிக்கா அந்த புடவையில கல்யாணத்தன்னைக்கு தெரிவேன்னு நினைச்சா, இவங்களுக்கும் அதே சாரியா? இதுக்கு, நான் ஏன் வந்து புடவை செலக்ட் பண்ணனும்?’ என்று புலம்பியது.
ம்ம்… புலம்ப மட்டும் தான் செய்தது. ஏதும் ஏடாகூடமாக பேசி சசிதரனின் மனதில் தன் இமேஜ் சரிவதை விரும்பவில்லை சந்த்ரிகா.
அந்த அளவிற்கு சசிதரனைப் பிடித்திருந்தது அவளுக்கு. அதனாலேயே அடக்கி வாசித்தாள்.
இன்று காலையில், பட்டும், நகையும், பூவுமாக அவளைக் கண்ணாடியில் பார்க்கும் போது, அவளுக்கே ரொம்ப பிடித்திருந்தது.
போதாததற்கு மணவறையில் வந்து அமரவும், மாலை மறைவில், “லுக்கிங் ப்யூட்டிஃபுல்…” என்று ரசனையாக சசிதரன் சொல்ல, இந்த உலகையே வென்றுவிட்ட திருப்தி எழுந்தது மனதில்.
“என்ன யோசனை? ம்ம்…”
ஒரு புன்னகையோடு தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த தம்பி மனைவியின் கன்னம் தட்டி கயல்விழி கேட்க,
வெறும் வாய் வார்த்தையாக சொன்னாளா? இல்லை மனதார சொன்னாளா? அது அவளுக்கே வெளிச்சம்.
அதற்கே பூரித்து போன கயல்விழி, வாயெல்லாம் பல்லாகிப் போய் தம்பி மனைவிக்கு நன்றி சொன்னார்.
“கல்யாணத்துக்கு வந்திருக்கவங்களும் பொண்ணையும் மாப்பிள்ளையையும் விஷ் பண்ண இடங்கொடுத்து நாம கொஞ்சம் ஒகுங்குவோமா?” என்று கேட்டார் கயல்விழியின் கணவர்.
அவரின் வார்த்தைகளை ஒத்துக்கொண்டு எல்லோரும் அங்கிருந்து நகர முற்பட்டார்கள்.
இதுவரையில் அவர்களுக்குள் நடந்து கொண்டிருந்த அத்தனை நிகழ்வுகளையும் வீடியோவாக தன் கேமாராவுக்குள் அடக்கி கொண்டிருந்த கேமராமேன்,
“ப்ளீஸ்… எல்லோரும் சேர்ந்து நில்லுங்க, ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்துடலாம்” என்று சொல்ல, அதன்படி எல்லோரும் அன்றைய விழா நாயகர்களோடு இணைந்து போஸ் கொடுக்க தயாரானார்கள்.
ஆனால், அவர்களோடு இணைந்து நிற்காமல், மெல்ல பின்னடைந்தாள் சிவரஞ்சனி.
“எங்க போற?… நீயும் உன் அக்கா பக்கத்துல நில்லு ரஞ்சனி.”
மீனாட்சி உரிமையோடு சொல்ல, தயக்கத்தோடு தன் முகம் பார்த்த தங்கையை “வா…” என்று தலையசைத்து சந்த்ரிகா அழைக்கவும், அவள் பக்கத்தில் வந்து நின்றாள் சிவரஞ்சனி.
அத்தனை பேரையும் உள்ளடக்கி கொண்டு, கேமரா மூலம் கோணம் பார்த்தார் புகைப்படக்கலைஞர்.
“இரண்டு பக்கமும் பேலன்ஸ்டா ஆட்கள் நின்னா தான் ஃபோட்டோ கவர் பண்ண ஈசியா இருக்கும்” என்று புகைப்பட கலைஞர் சொல்ல, தன் அக்கா மக்களோடு சிவரஞ்சனியின் பக்கத்தில் வந்து நின்றான் அருண். பதறிப்போனாள் ரஞ்சனி.