சிவரஞ்சனியின் வார்த்தைகள் அன்று முழுவதும் அருணை துரத்திக் கொண்டிருந்தது.
கடையில் வியாபாரம் முடிந்து இரவு பதினோரு மணிக்கு போல, தன் அப்பாவுடனும், பெரியப்பாவுடனும் வீட்டுக்கு வந்தவன், தன்னை சுத்தப்படுத்தி கொண்டு உணவு உண்டுவிட்டு வந்து படுக்கையில் விழுந்தான்.
வியாபார பரபரப்பில் சற்று நேரம் உள்ளடங்கி இருந்த ரஞ்சனியின் வார்த்தைகள், மறுபடியும் மேலெழுந்து பேயாட்டம் போட்டது.
‘நல்லாத் தானே எல்லாம் போச்சு. அப்புறம் ஏன், திடீர்னு இப்படி சொல்லுறா?’ விடை தெரியாமல் மண்டையே வெடித்து விடும் போலிருந்தது அவனுக்கு.
‘அரே… அருண் பையா… நீ மாலதிக்கு செய்தது, இப்போ உனக்கு திருப்பி கிடைச்சிருக்கு. அனுபவி ராஜா… அனுபவி…”
சமயம் பார்த்து அவன் மனமே அவனைப் பார்த்து கைகொட்டி சிரித்தது.
‘அப்படி இல்ல… எனக்கும் விருப்பம் இருந்தா தானே நான் கல்யாணம் பண்ணமுடியும். மாலதியை நான் என் வாழ்க்கைத் துணையா நினைச்சு பாத்ததே இல்லை, அதனாலத் தான் முடியாதுன்னு சொன்னேன். அது ஒரு தப்பா?’
“ஏன்?… நீ மட்டும் தான் ஒருத்தங்களை பிடிக்கலைன்னு சொல்லுவியா? உன்னைப் பார்த்து அதே வார்த்தையை வேற யாரும் சொல்ல கூடாதா?”
“அப்படி சொல்லக் கூடாதுன்னு நான் சொல்லலையே. என்னைப் பிடிக்கலைன்னு சொன்னா, நான் யாரையும் ஃபோர்ஸ் பண்ணமாட்டேன், அது சிவா வா இருந்தாக் கூட. ஆனா, சிவாக்கு என்னைப் பிடிக்கும். அது எனக்கு நிச்சயமா தெரியும்.”
தனக்குத் தானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்கொண்ட அருணின் நிம்மதி, அவனிடமிருந்து சொல்லாமலேயே விடைபெற்று சென்றிருக்க, உறக்கம் உன்னிடம் வருவேனா பார் என்று கண்ணாமூச்சி ஆடியது.
“ம்ப்ச்…” ஒரு சலிப்போடு எழுந்தவன் கண்கள் மூடி, கட்டிலில் கால்நீட்டி சாய்ந்தமர்ந்தான்.
மூடிய கண்களுக்குள்ளும் உலா வந்த சிவரஞ்சனி, அவனைப் பார்த்து முறைத்தாள், “உன்னை எனக்கு பிடிக்கலை, எம்பினாடி வராத” என்று சொல்லி அவன் மனதை உடைந்தாள்.
சிறிது நேரத்தில் மனம் லேசாக அமைதியடைந்தது. அமைதியான மனமோ, நிதானமாக யோசிக்க தொடங்கியது.
சசிதரனின் திருமண வேலைகள் சம்மந்தமாக ரஞ்சனியின் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் சிவரஞ்சனியின் ரசனையான பார்வைகளை அருண் சந்தித்திருக்கிறான் தான்.
‘அதுவுமில்லாமல் அன்று மொட்டைமாடியில் பேசியது சில நிமிடங்கள் என்றாலும், அந்த முகம் தன்னைக் காணவும் வெட்கத்தில் குளித்திருந்ததே!’
‘என்னைப் பிடிக்கவில்லை என்றால், அங்கே கோபமல்லவா குடியிருந்திருக்க வேண்டும்?’
யோசிக்க, யோசிக்க, நேற்றைய கோப முகத்தையும் தாண்டி, பெண்ணவளின் வலி நிறைந்த கண்களை இப்போது உணர முடிந்தது அவனால்.
‘என்னைப் பிடிக்கவில்லை என்று சொன்னவளின் கண்களில், ஏன் அத்தனை வலி தெரிய வேண்டும்? அப்படியானால் என்னிடம் பொய் சொல்கிறாளா? ஆனால் எதற்காக?’
கேள்வி கேட்டுக் கொண்டவனுக்கு, நேற்று தன் வீட்டில் சிவரஞ்சனியின் அருகே, ஏளனச் சிரிப்போடு தன்னையே சவாலாக பார்த்தபடி உட்கார்ந்திருந்த அத்தை பாக்யா நினைவுக்கு வர, சட்டென்று குழப்பத்தின் முடிச்சு அவிழ்ந்தது போல இருந்தது.
‘அப்படியென்றால்…, எல்லா குழப்பத்திற்கும் காரணம் தன் அத்தையா? ஒருவேளை, தன்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி சிவரஞ்சனியை குழப்பி விட்டுவிட்டாரா?’
சந்தேகம் இல்லாமல் அப்படித்தான் ஏதோ பாக்யா செய்துவிட்டார் என்று உறுதியாக நம்பினான் அருண். தன் அம்மாவைக் குழப்பி விடுவதை, அவர் தொழிலாகவே வைத்திருந்ததை அவன் அறிந்தவன் தானே.
‘இப்போது எதற்காக தன் வேலையை ரஞ்சனியிடம் காட்டியிருக்கிறார்? எங்களைப் பற்றி அறிந்து கொண்டதாலா?’ யோசித்தவனுக்கு அப்படித்தான் என்று உறுதியானது.
அதுவும், தன்னை அவர் முதல்நாளே கண்டு கொண்டார் என்பது தெள்ளத் தெளிவாக இப்போது புரிந்தது அருணுக்கு.
இல்லையென்றால், சம்மந்தமே இல்லாமல் சசிதரனுக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில், அன்று அப்படி அவர் பேசியிருக்க வேண்டாமே!’
பிரச்சினையின் நுனி கிடைத்துவிடவே, அதை அங்குலம் அலங்குலமாக அலசி ஆராய்ந்தவனுக்கு, இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகியது.
“டேய்… இப்படியா காதலிக்க தொடங்குறதுக்கு முன்னாடியே வில்லங்கத்தையும் சேர்த்து உஷார்படுத்துவ?” என்று கேட்டு, தன்னை மறந்து சிரித்தான்.
எல்லாம் சில நிமிடங்கள் தான். அடுத்த நிமிடமே, “யாரோ என்னவோ சொன்னாங்கன்னா, இவ எப்படி அதை நம்பலாம்? அந்த அளவுக்கு எம்மேல நம்பிக்கை இல்லாம போச்சா?” என்று சிலிர்த்துக் கொண்டான்.
சற்று முன் இளகியிருந்த முகம், மறுபடியும் இறுகிப் போக, வேக வேகமாக தன் நடையால் அறையை அளக்க ஆரம்பித்தான்.
‘என்மேல நம்பிக்கை இருந்திருந்தா எங்கிட்டயே விஷயத்தை சொல்லி, உண்மையைத் தெரிஞ்சிருக்கலாமே. அதை விட்டுட்டு, எனக்கு உன்னைப் பிடிக்கல, என்னைத் தொந்தரவு பண்ணாதன்னு எப்படி எங்கிட்ட சொல்லலாம்? ஹ்ம்ம்…”
“போடீ… போ… எம்மேல நம்பிக்கை இல்லாத நீயும் எனக்கு வேண்டாம்” என்று சத்தமாகவே முணுமுணுத்தவன், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
காதல் நோய் கண்ட அருணுக்கு, கன்னாபின்னாவென்று காதல் ஜூரம் ஏறி இறங்கியதில், முன்னுக்குப்பின் முரணாக நிமிடத்திற்கு நிமிடம் வெவ்வேறு எண்ணங்கள் வந்து சென்றது.
“உம்மேல நம்பிக்கை வைக்கணுமா? அப்படி நம்பிக்கை வர்ற மாதிரி எத்தனை நாள் டா, அந்த பிள்ளைக் கூட பேசிப் பழகிட்ட நீயி? அன்னைக்கு, பேசக்கிடைச்ச சந்தர்ப்பத்துலயும் அந்த பிள்ளைக் கையை பிடிச்சு இழுத்து பயங்காட்டி ஓடவச்சிட்ட… அப்புறம் நம்பிக்கை இல்லையா, தும்பிக்கை இல்லையா ன்னு புலம்புறது. போடாங்… நீயும், உன் காதலும்.” மெதுவாக முணுமுணுத்தது அவன் மனது.
மனதின் முணுமுணுப்பு அருணிடம் சரியாக வேலை செய்தது.
‘ஒருத்தரையொருத்தர் நேரில் பார்த்து பேசிப் பழகாத நிலையில், தங்கள் காதலை வைத்துக்கொண்டு, என் மீது நம்பிக்கை இல்லை என்று சிவரஞ்சனியின் மீது கோபம் கொள்வது தவறு’ என்று புரியத் தொடங்கியது அருணுக்கு.
‘கூடிய சீக்கிரமே எப்படியாவது சிவாவை நேரடியாக பார்த்து, என்ன நடந்தது என்று கேட்க வேண்டும்’ முடிவெடுத்து கொண்டவனுக்கு, எப்படி நேரில் சந்தித்து கொள்ளுவது என்று தான் தெரியவில்லை.
அன்று, ரஞ்சனி வேலைக்கு வரும் வழியில் இடைமறித்து பேசியது போல, இப்போது பேச மனமில்லை.
‘தனியாக எப்படி சந்தித்து கொள்வது?’ என்று யோசித்தவனுக்கு, சந்த்ரிகாவே வழி ஏற்படுத்தி கொடுத்தாள்.
குலதெய்வ வழிபாடு, சடங்கு, சம்பிரதாயம், விருந்து என்று மேலும் நாலைந்து நாட்கள், அந்த வீட்டில் உள்ளவர்களின் பொழுது புதுமணத் தம்பதியரோடு கழிந்தது.
அன்று காலையில் கடைக்கு செல்வதற்காக புறப்பட்டு தன் அறையிலிருந்து வெளியே வந்த அருணை, அவனுடைய அக்கா மக்கள் நால்வரும் சுற்றிவளைத்துக் கொண்டு, “எங்களை ஃபால்ஸ் க்கு கூட்டிட்டு போங்க மாமா” என்றார்கள் ஆர்வமாக.
தம்பி திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் வந்த கயல்விழியும், மீனாட்சியும் குடும்பத்தோடு நேரடியாகவே தாய் வீட்டில் வந்து இறங்கிவிட்டார்கள்.
திருமணம் முடிந்த மறுநாள் தங்களது வீட்டுக்கு கிளம்பிய அவர்களது கணவன்மார்கள், மனைவியையும் குழந்தைகளையும் தங்களோடு அழைத்தார்கள்.
இருவரது பிள்ளைகளுமே, அருணின் தங்கை ராகினியைச் சொல்லி, “சித்தியோட லீவ் முடியுற வரைக்கும், அவங்களோட டைம் ஸ்பெண்ட் பண்றோமே, ப்ளீஸ் பா…” என்று கேட்க, தங்கள் பிள்ளைகளோடு, மனைவிமார்களையும் இங்கே விட்டு சென்றிருக்கிறார்கள்.
“உங்க அத்தான்ஸ் ரெண்டு பேருமே, இன்னும் இரண்டு நாள் கழிச்சு தான் இங்க வருவாங்க. வந்ததும் எங்களையும் தாத்தா பாட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவாங்க. அதனால இன்னைக்கே கூட்டிட்டு போங்க மாமா.”
மருமக்களின் வார்த்தையில், ஹாலில் அமர்ந்திருந்த தன் சகோதரிகளைப் பார்த்து, “அப்படியா க்கா…” என்று அருண் கேட்க, “ஆமாம்” என்று தலையசைத்தனர் இருவரும்.
“ஒரு இரண்டு நாளு அதிகமாக எங்ககூட உங்களை விட்டு வைக்க இவங்களுக்கு மனசு வராதே … வரட்டும், அவங்களை வச்சுக்குறேன்” விளையாட்டாக சொல்லியவன், “அப்போ எல்லாரும் ரெடியாகுங்க இன்னைக்கே போய்ட்டு வந்துடலாம்” என்றான்.
ஆரவாரமாக மாமனைக் கட்டியணைத்து கொண்டார்கள் இளையவர்கள். எல்லாரும் பத்து, பதினொன்று, பனிரெண்டு வயது சிறுவர், சிறுமிகள் தான்.
அவர்களின் உற்சாகத்துக்கு சற்றும் குறைவில்லாமல் சசிதரனும் மனைவிடம், “புறப்படு சந்த்ரி.. நாமளும் போய்ட்டு வந்திடலாம்” என்று சொல்ல, அவளோ, “அங்கெல்லாம் கூட்டம் அதிகமா இருக்குமே” என்று முகம் சுளித்தாள்.
“நம்மளை தவிர யாரும் இருக்க மாட்டாங்க சந்த்ரி” என்ற கணவனிடம், “அதெப்படி?” என்றாள் சந்த்ரிகா வியப்போடு.
“நமக்கு சொந்தமான இடத்துல இருக்குற ஃபால்ஸ் ம்மா. அதனால வேற யாரும் அங்க வரமாட்டாங்க. நாம தைரியமா குளிக்கலாம்” என்று சொல்ல, சந்த்ரிகாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அவளும் குற்றாலத்திற்கு அருகில் இருக்கும் தனியார் அருவிகளைப் பற்றி கேள்விபட்டிருக்கிறாள் தான். ஆனால் இதுவரை சென்றதே கிடையாது.