“ரூமுக்கு போய், உங்க ரெண்டு பேருக்கும் ட்ரெஸ் எடுத்து வச்சுக்கோ” இப்போது கயல்விழி சந்த்ரிகாவிடம் சொல்ல, அவளோ, “நான் சிவா வையும் கூப்பிடட்டுமா?” என்றாள் ஆர்வமாக.
இங்கே பாசத்தில் திளைத்துக் கொண்டிருந்த உடன்பிறப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, தன்னையும் அறியாமல் தங்கை மீது பாச ஊற்று பொங்கியெழ, கேட்டுவிட்டாள்.
‘எப்படி அவளை சந்திப்பது?’ என்ற சிந்தனையில் இருந்த அருணுக்கோ, பழம் நழுவி வாயிலேயே விழுந்தது போல் இருந்தது.
“கண்டிப்பா கூப்பிடு ம்மா. கூடபிறந்தவ நீ கூட்டிட்டு போகாம, வேற யாரு அவளைக் கூட்டிட்டு போவாங்க?” என்று கயல்விழி சொன்னார்.
கையிலிருந்த அலைபேசியிலிருந்து வீட்டுக்கு அழைத்து சந்த்ரிகா விஷயத்தை சொல்லவும், “நான் அனுப்பி வைக்கிறேன் சந்த்ரி” என்றார் ராதா கொஞ்சம் நெகிழ்ந்து போன குரலில்.
அவருக்கு மகளின் இந்த மாற்றம் எல்லையில்லா நிம்மதியைக் கொடுத்தது. அக்காவின் அழைப்பை ஏற்று அங்கு போக மறுத்த இளைய மகளிடம்,
“அக்கா, கல்யாணத்துக்கு பிறகு மாறிடுவா ம்மா ன்னு, நீ தான சொன்ன சிவா. இப்போ தன்னை மாற்றிக்க முயற்ச்சி செய்யுறவளுக்கு, நாம உதவி செய்ய மறுத்தா எப்படி?” என்று உணர்ச்சி வசப்பட்டு பேச, ஆவது ஆகட்டும் என்று தைரியமாக கிளம்பி விட்டாள் சிவரஞ்சனி.
அடுத்த அரைமணி நேரத்தில், தனது ஸ்கூட்டியிலேயே அக்கா வீட்டுக்கு வந்து இறங்கி விட்டாள் சிவரஞ்சனி. அவளைக் காணவும் இளையவர்கள் கூட்டணியில் உற்சாகம் பறந்தது.
வீட்டின் பெரியவர்கள் அத்தனை பேரும் சொல்லிவைத்தது போல தாங்கள் வரவில்லை என்று சொல்ல, மீதி உள்ள அத்தனை பேரும் கிளம்பினார்கள்.
மதிய உணவு தென்காசியிலிருந்து தருவித்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு கொண்டார்கள்.
அவர்கள் செல்ல இருக்குமிடம், குற்றாலத்திலிருந்து ஒரு பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மேக்கரை என்னும் மலைக் கிராமம். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
பெரியவர் கந்தசாமி இருக்கும் போதே, ஒரு இருபது ஏக்கர் நிலம் சேர்ந்தார் போல் நியாயமான விலையில் கிடைக்கவே, யோசிக்காமல் வாங்கிப் போட்டு விட்டார்கள்.
கந்தசாமிக்கு அங்கே ரிசார்ட் ஒன்று அமைக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்த கனவு இப்போது சமீப காலங்களாக அருணின் மனதிற்குள் குடிவந்திருக்கிறது.
புதுமணத் தம்பதியர்கள் என்ற சலுகையில், சசிதரனையும் சந்த்ரிகாவையும் தனியாக இன்னோவாவில் அனுப்பி வைத்தான் அருண்.
மற்றவர்களை எல்லாம் தன்னோடு ஸ்கார்பியோவில் ஏறச்சொல்லியவன், “மீனாட்சி அக்கா, நீ முன்சீட்ல உக்காரு” என்றான்.
எப்போதுமே மீனாட்சியிடம் ஒட்டுதல் அதிகம் அருணுக்கு. அது குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
எதிரெதிராக இருக்கும் இரண்டு, பின்பக்க சீட்டுகளில் இளையவர்கள் நால்வரும் அமர்ந்து கொள்ள, இரண்டாவது சீட்டில் கயல்விழிக்கு இரு பக்கமும் ராகினியும், சிவரஞ்சனியும் அமர்ந்திருந்தார்கள்.
அதுவும் சரியாக ட்ரைவர் சீட்டுக்கு பின்னால் அமர்ந்திருந்தாள் ரஞ்சனி.
ட்ரைவர் சீட்டில் அமர்ந்த அருண், அக்காவுக்காக கதவை திறந்து விட்டுவிட்டு, ஒரு ஆழ்ந்த பார்வையோடு முதலில் சரிசெய்தது, தன் முன்னால் இருந்த கண்ணாடியைத் தான்.
அவன் செயலிலேயே பயத்தில் சடுகுடு ஆடத்தொடங்கியது சிவரஞ்சனியின் மனது.
மீனாட்சி தன் பக்கத்து இருக்கையில் அமரவும், அருண் காரை ஸ்டார்ட் செய்தான்.
“இப்போ அக்காவை பக்கத்துல உக்கார சொல்லுறவன், உங்கல்யாணத்துக்கு அப்புறம் என்ன செய்யப் போறன்னு நானும் பாக்கத்தானே டா போறேன்” அருணை கிண்டலடித்தார் கயல்விழி.
“அப்பவும் எம்பொண்டாட்டிகிட்ட, கொஞ்சம் பின்னாடி இரும்மா, என் அக்கா முன்னாடி இருக்கட்டும்னு சொல்லுவேன். ஏன்?… நான் சொன்னா கேக்க மாட்டாளா அவ?”
லாவகமாக வண்டியை கையாண்டவனின் கண்கள், தன் முன் இருந்த கண்ணாடியில் தெரிந்த சிவரஞ்சனியிடம், “கேக்க மாட்டியா?” என்னும் ரீதியில் புருவத்தை உயர்த்த, சில்லிட்டு போனவள், சட்டென்று கண்களை மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.
வீடுகள் இருந்த தெருக்களைக் கடந்த கார், இப்போது மார்க்கெட் இருக்கும் சாலையில் இறங்கியது. ‘ரோட்டின் மீதுதான் கடைகள் இருக்கிறதோ?’ என்று எண்ணும் அளவிற்கு கொஞ்சம் நெருக்கடியான சாலை அது.
கவனமாக அருண் வண்டியை ஓட்டியும், ஒரு கடையின் முன் நிறுத்தியிருந்த தன் இருசக்கர வாகனத்தை, முன்னே பின்னே வரும் வாகனங்களைக் கவனிக்காமல் வேகமாக ஒரு நபர் திருப்ப, நூலிழை தூரத்தில் வண்டியை ப்ரேக் இட்டு அருண் நிறுத்தியிருந்ததால் ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது.
எதிராளி மீதே தவறென்பதால், சட்டென்று மூண்ட கோபத்தில், “ஏய்… கண்ணை என்ன பொடறியில வச்சிட்டா வண்டியோட்டுற?” என்று சத்தமிட்டபடி, எதிரே பைக்கில் இருந்தவனை அருண் கூர்ந்து பார்த்தான்.
பைக்கிலிருந்தது லிங்கம்.
நடக்க இருந்த விபத்தைப் பற்றிய கவலை ஏதுமில்லாமல், அவனின் கண்கள், அருணின் அருகில் அமர்ந்திருந்த மீனாட்சியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
அவன் பார்வையை கண்டு கொண்ட அருணுக்கு கோபம் கண் மண் தெரியாமல் ஏற, “இவன…” என்று பல்லைக் கடித்தவன், “நாலு அப்பு அப்புனாத் தான் இவனெல்லாம் சரி வருவான்” என்று உறுமியபடி கார் கதவைத் திறந்து இறங்க முற்பட்டான்.
சட்டென்று தம்பியின் கைகளை எட்டிப் பிடித்து அவனைத் தடுத்த மீனாட்சி, தன் முகம் பார்த்த தம்பியிடம் “வேண்டாம்…” என்று கண்களாலேயே சொல்ல, சர்ரென்று வண்டியை பின்னால் ரிவர்ஸ் எடுத்து, முன்னால் நகர்த்திய அருண், தன் கோபம் முழுவதையும் ஆக்ஸ்ஸிலேட்டரில் காட்ட, பறந்தது அந்த வாகனம்.
ஒருவித இறுக்கத்தோடு காரை விரட்டிக் கொண்டிருந்த தம்பியிடம், மீனாட்சி “ரிலாக்ஸ் அருண்… நீ கோபப்படுற அளவுக்கெல்லாம் அவனுக்கு வொர்த்தே கிடையாது டா. மெதுவா போ” என்று சொல்ல, வண்டியின் வேகம் குறைத்தான் அருண்.
இருந்தாலும், ‘மவனே… எங்கையால உனக்கு தீபாவளி கொண்டாட்டம் ஒருநாள் இருக்குடா’ என்று நினைத்துக் கொண்டான்.
அதன்பிறகு இயல்பாக அக்காவுடன் பேசி சிரித்தபடியே வண்டியை ஓட்டியவன், தென்காசியின் பிரபல பேக்கரியின் முன் வண்டியை நிறுத்தினான்.
‘யார் யாருக்கு, என்ன வேணுமோ வாங்கி குடு ராகினி. நான் இப்போ வரேன்” என்று தங்கையோடு இளையவர்களை கடைக்குள் அனுப்பி வைத்துவிட்டு, ஃபோனைக் கையிலெடுத்தவன், காரிலிருந்து இறங்காமல் இருந்த ரஞ்சனியிடம்,
“நீ மட்டும் ஏன் உக்கார்ந்திருக்க, போ… போய் உனக்கு தேவையானதையும் வாங்கிக்க” என்று அவள் பக்கத்து கார் கதவைத் திறந்தான்.
தன் சகோதரிகளுக்கு முன்பாகவே தன்னிடம் நேரடியாக பேசுவான், என்று எதிர்பார்க்காத சிவரஞ்சனி, விழிகள் விரிய அவனைப் பார்த்து, “இல்ல… எனக்கெதுவும் தேவையில்ல.”
படபடவென்று சொல்லியபடியே, பக்கத்தில் இருந்த கயல்விழியோடு லேசாக ஒன்ற, விழிகள் இடுங்க அவளைப் பார்த்தவன், வேறெதுவும் சொல்லாமல் கடைக்குள் நுழைந்து கொண்டான்.
சிறிது நேரத்தில், கைகள் கொள்ளாத அளவுக்கு தின்பண்டங்களோடு காரில் ஏறிய தங்கள் பிள்ளைகளிடம், “நீங்க சாப்பிட வாங்கினீங்களா? இல்ல அங்க போய் கடை ஏதும் வைக்கப் போறீங்களா டா?” என்று கயல்விழி கேட்க, ஒரு சிரிப்பலை எழுந்தது காருக்குள்.
அந்த உற்சாகத்தோடே மேக்கரைக்கு வந்து சேர்ந்தார்கள்.
மேற்கு தொடர்ச்சிமலை சூழ, பசுமை போர்வை போர்த்தி, பூலோக சொர்க்கம் இது தானோ என்று எண்ணும் அளவுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது அந்த மலைக் கிராமம்.
இவர்கள் கார் பண்ணைக்குள் நுழையும் போது, அங்கிருந்த சிறிய வீட்டுக்கு முன் சசிதரன் தம்பதியர் வந்திருந்த இன்னோவா மட்டும் நின்றிருந்தது. அவர்கள் இல்லை.
இருவரும் இறங்கி பண்ணைக்குள் நடந்திருந்தார்கள் போலும்.
உண்மையில் அந்த இடம் பண்ணை என்று சொல்லக் கூடிய தோற்றத்தில் இல்லை. கிட்டத்தட்ட, ஒரு குட்டிக்காடு போலவே தோன்றியது. அங்கே முழுவதும் காட்டு மரங்களோடு, பாக்கு , தென்னை, மா மரங்களும் நிறைந்திருந்தது.
ஒரே சமதள பரப்பாக இல்லாமல் பள்ளமும், மேடும், பாறைகளுமாக இருந்தது அந்த இடம்.
அருண் வண்டியை நிறுத்தவும், வண்டியிலிருந்து உற்சாகத்தோடு குதித்து இறங்கிய சிறுவர்கள் பட்டாளம், அங்கிருந்த சாய்வான பகுதியை நோக்கி ஓடியது.
அந்த இடத்தின் ரம்யமான தோற்றத்தில் மனதை பறிகொடுத்த ரஞ்சனி, “அங்க தான் ஃபால்ஸ் இருக்கா ராகினி” என்று சிறியவர்கள் போன திசையை சுட்டிக் காட்டி கேட்டாள்.
“ம்ம்… இப்படியே கொஞ்ச தூரம் நடந்து போனா ஒரு அருவி வரும், அங்கயிருந்து கொஞ்ச தூரம் மேல ஏறிப்போனா இன்னொரு அருவி வரும். அங்கயிருந்து ஒரு பத்து நிமிஷம் மேல நடந்து போனா இன்னொன்னு வரும், மொத்தம் மூனு அருவி இங்க இருக்கு” என்று ராகினி சொல்ல, ஆச்சர்யமாகிப் போனது சிவரஞ்சனிக்கு.
பேசிக்கொண்டே இருவரும் அருவிக்கு செல்லும் வழியில் நடந்து சென்றார்கள். அவர்களுக்கு சற்று பின்னால் கயல்விழியும் மீனாட்சியும் வந்து கொண்டிருந்தார்கள்.
சற்று நேரத்துக்கெல்லாம், காற்றில் கலந்திருந்த ஈரப்பதம் உடம்பை சில்லென்று தழுவியது. அருவியிலிருந்து தண்ணீர் விழும் சத்தமும் மெல்லிய இரைச்சலாக கேட்டது.
“ஆமா… இந்த படி வழியே கீழ இறங்கி போனா வந்துடும்” என்றபடியே, அருகே இருந்த பள்ளத்தில் இறங்குவதற்கு ஏதுவாக அமைந்திருந்த, கற்களாலான படிகள் வழியே ராகினி இறங்கினாள்.
அவளோடு சேர்ந்து இறங்கிய சிவரஞ்சனி, அங்கே, இரண்டு ஆள் உயரத்திலிருந்த ஒரு பாறையிலிருந்து ஆர்ப்பரித்து விழுந்து கொண்டிருந்த அருவியைக் கண்டு அதிசயித்து போனாள்.
“சூப்ப்பரா இருக்கு…” விழிகளை விரித்தபடி உற்சாகமாக அருவிக்கு அருகில் செல்ல முயன்றவள், அக்கா பிள்ளைகளோடு அருவியில் நனைந்து கொண்டிருந்த அருணைக் கண்டு தயங்கி நின்றாள்.
யாரையும் எதிர்பார்க்காமல் ராகினி ஏற்கனவே அருவியில் ஐக்கியமாகி இருக்க, தன்னைக் கண்டதும் தயங்கியவளைக் கண்டு நீரிலிருந்து வெளியே வந்தான் அருண்.
“அதான் நான் வெளியே வந்துடுட்டேன் ல்ல… இப்ப போய் குளிக்குறதுக்கு என்னவாம்?” இன்னும் தயங்கியபடியே நின்றவளிடம் சொல்லியவன், “சீக்கிரம் குளிச்சிட்டு கார் நிக்குற இடத்துகிட்ட வா, எனக்கு உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.”
முகத்தில் வழிந்த நீரை துடைத்தபடியே, அமர்த்தலான குரலில் சொல்லியவன், அங்கே நின்றிருந்த மரத்தின் கிளையில் கழற்றி தொங்க விட்டிருந்த தன் சட்டையை கையிலெடுத்து கொண்டான்.
அப்போது அங்கே வந்து சேர்ந்த தமக்கைகளிடம், “அக்கா, புதுமாப்பிள்ளை, மேல மூனாவது அருவியில் இருக்குறாராம். வாட்ஸ்அப் பண்ணியிருந்தாரு… பசங்களை கவனிச்சுக்கோங்க.”
கிண்டல் குரலில் தகவல் சொல்லியபடியே, நின்றிருந்த இடத்திலேயே வேரோடிப் போனது போல நின்றிருந்த சிவரஞ்சனியைப் பார்த்தவனின் கண்கள்,
“சீக்கிரம் வந்து சேர்” என்று அவளுக்கு கட்டளை பிறப்பித்தன…