ஆர்ப்பரித்து கொட்டிய அருவி நீருக்கடியில் நின்றிருந்த சிவரஞ்சனிக்கு, அதன் சில்லிப்பை விட அருணின் பார்வையின் வீரியமே ஊசியாய் உள்ளுக்குள் இறங்கியது.
“ரொம்பத்தான்… இவங்க கண்ணாலே கட்டளை போட்டுட்டு போனா, நாங்க போய்டணுமா?” உள்ளுக்குள் நொடித்துக் கொண்டாலும், அவனின் ஒவ்வொரு செயல்களையும் பாழாய் போன அவள் மனது ரசித்து தொலைத்தது.
காரண காரியம் ஏதுமின்றி, பார்த்த நொடியே பாவையவளை வசீகரித்திருந்தவன் அருண்.
இப்போது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஒன்றாக அவனோடு பயணித்த பொழுதில், குடும்பத்து மீதான அவனின் பாசம், அக்கறை போன்ற குணங்களால், இன்னும் அதிகமாக அவள் மனதை நிறைத்திருந்தான்.
ஆனால், அதையும் தாண்டி, அவள் உள்மனது, “இது தப்பு ரஞ்சனி…” என்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தது.
‘அருணுக்கும் அவன் மாமன்மகள் மாலதிக்கும் பேசி வைத்திருந்த திருமணம், தன்னால் தடைபட்டு விட்டது’ என்று நூறு சதவீதம் அவள் நம்பியதால் வந்த விளைவு அது.
‘இல்ல… நான் போகப்போறது இல்ல… நான் போகலைன்னாலே, அன்னைக்கு நான் சொன்ன விஷயத்துல உறுதியா இருக்குறேன்னு புரிஞ்சுக்குவாங்க.’
முடிவெடுத்தவளுக்கு அதை செயல்படுத்த தான் இயலவில்லை. அடுத்த ஐந்தாவது நிமிடமே அருவி நீரிலிருந்து வெளியே வந்தவள், “என்னாச்சு ரஞ்சனி?” என்று கேட்ட கயல்விழியிடம்,
“ரொம்ப குளிருது, எனக்கு போதும்” என்று சொல்ல, அப்படித்தான் என்று கிடுகிடுவென்று மேலும் கீழும் அடித்துக்கொண்ட அவள் பற்களும் சொல்லியது.
வந்த குளிர் அருவி நீராலா? இல்லை அருணாலா? என்பது அவளுக்கே வெளிச்சம்.
“ஹஹ… இதுக்கே உனக்கு பல்லு தந்தியடிக்குதா?” கிண்டல் செய்து சிரித்த கயல், “கார்ல இருந்து உன் ட்ரெஸ்ஸை எடுத்துட்டு, அந்த வீட்டுக்குள்ள போய் மாத்திக்கோ” என்றார்.
“சரி…” என்று தலையாட்டியவளிடம், “தனியாப் போய்டுவியா? இல்லை நான் வரணுமா?” என்று கயல்விழி கேட்க, அவரை மறுத்து, படியேறி மேலே வந்தாள் சிவரஞ்சனி.
அவள் சிந்தனையைப் பொய்யாக்காமல், காரில் சாய்ந்து ஃபோன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அருண். இவளைக் காணவும் ஃபோனை ஆஃப் செய்து பான்ட் பாக்கட்டில் போட்டுவிட்டு, விழியாலே இவளை மொய்த்தபடி நின்றிருந்தான்.
அருணவன் பார்வையில் நடை பின்னினாலும் அதை மறைத்து, அவன் அருகே வந்து நின்றாள் சிவரஞ்சனி.
அவள் ஈரம் சொட்டும் கோலத்தை மேலும் கீழுமாக பார்த்த அருண், தன் தோள் தழுவிக் கிடந்த டவலை எடுத்து அவளிடம் நீட்டி, “துவட்டிக்கோ” என்றான் மெல்லிய சிரிப்போடு.
டவலில் அங்கங்கே தெரிந்த ஈரம் ஏற்கனவே அவனால் அது ஊபயோகபடுத்தபட்டிருக்கிறது என்ற தகவலை அவளுக்கு சொல்ல, “எங்கிட்டயும் இருக்கு, வேண்டாம்” என்று மறுத்தவள், “ஏதோ பேசணும்னு சொன்னீங்க…” என்றாள் அவனுக்கு ஞாபகப்படுத்துவது போல.
டவலை மறுத்ததிலேயே, அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட அருண், “இப்படி ஈரத்தோட நின்னு, எங்கூட பேசணும்னு வேண்டுதலா? மொதல்ல போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா” என்றான் அங்கிருந்த வீட்டைக் சுட்டிக்காட்டி.
அவ்வாறே செய்தவள், வீட்டை விட்டு வெளியே வரும் போது, காரின் பானட் மீது வாழையிலையில் நறுக்கி வைக்கப்பட்டிருந்த மாங்காய் கீற்று இவளைப் பார்த்து கண்சிமிட்டியது.
காயிலிருந்து, பழத்திற்கு மாறும் பருவத்தில் இருந்ததால் லேசான மஞ்சள் நிறத்தில் இருந்தது அந்த மாங்காய்.
அதைப் பார்த்ததும் சிவரஞ்சனியின் வாயில் நீரூறியது. இப்போது அவன் நீட்டியதை மறுக்கவில்லை அவள்.
மாங்காயைக் கொடுத்தவன், தன் மனம் கவர்ந்த மங்கையிடம், “நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் சிவா?” என்றான் எடுத்த எடுப்பிலேயே.
அவனிடமிருந்து வேறுவிதமான விசாரணையை எதிர்பார்த்து வந்திருந்தவளுக்கு, இந்த கேள்வி அதிர்ச்சியைத் தர, புளிப்பும் இனிப்புமாக வாயில் நீரூறி இருந்த மாங்காய் புரையேறியது.
சட்டென்று தன் கைநீட்டி அவள் தலையில் லேசாக தட்டியவனிடம், “எ… என்ன கேட்டீங்க?…” என்றாள், மெதுவாக.
ஏதோ கிடைப்பதற்கரிய பேறு மறுபடியும் கிடைத்தது போல, “நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டேன்” என்றான் அருண் வார்த்தைகளை நிறுத்தி நிதானமாக.
அவனது நிதானத்தில் இவளுக்கு தான் பதறியது.
கூடவே, ‘தன் மனதறிந்து அன்று சொல்லிய பொய்யை இன்றும் தொடரமுடியுமா?’ என்று சந்தேகமாக வேறு இருந்தது.
ஏதோ பொருள் விளங்காத கேள்வியை அருண் கேட்டுவிட்டது போல, பதிலேதும் சொல்லாமல் மௌனமாக நின்றாள் ரஞ்சனி.
“ம்ம்… பதில் சொல்லு…” தூண்டினான் அருண்.
“அதான், அன்னைக்கே சொல்லிட்டேனே?…” ரஞ்சனியிடமிருந்து மெதுவாக வந்தது பதில்.
“எதே… எனக்கு உங்களை பிடிக்கலை, என்னை தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொன்னியே, அதுவா?” ஒருவித கிண்டல் தொனியில் கேட்டவன்,
“உனக்கு பிடிக்காதவனா நான் இருந்திருந்தா, என் பேச்சைக் கேட்டு, எதுக்கு இங்க ஓடி வந்து நிக்குற?” என்றான் அழுத்தமான குரலில்.
அவன் கேள்வியில் சீண்டப்பட்ட ரஞ்சனி, “தப்பு தான்… வேண்டாத ஆசையை வளத்துட்டு, இலவு காத்த கிளியா நீங்க இருந்துடக் கூடாதுன்னு நினைச்சு, என்னோட முடிவை தெளிவா இன்னொரு தடவை உங்ககிட்ட சொல்லிட்டு போயிடலாம்னு, நீங்க கூப்பிட்டதும் ஓடி வந்தேன் பாருங்க… அது என் தப்பு தான்” என்றவள்,
முணுமுணுப்பாக என்றாலும் அவன் காதில் விழவேண்டும் என்ற எண்ணத்தில் சொன்ன வார்த்தைகள் தானே! தெளிவாக விழுந்தது அருணின் காதுகளில்.
“என்ன சொன்ன?… எனக்காக காத்திருக்காங்களா? அது யாரு எனக்கு தெரியாம?” என்றான் நக்கலாக.
“உங்க மாமன் பொண்ணு மாலதி தான்” ஒற்றை வரியில் பதில் வந்தது ரஞ்சனியிடமிருந்து.
“ஹஹ… நல்ல ஜோக்… இதை யாரு ம்மா உனக்கு சொன்னது? ” என்றான் கூர்மையான பார்வையோடு.
அவன் கண்களில் ‘இப்போதாவது உண்மையைச் சொல்லிவிடமாட்டாளா?’ என்ற எதிர்பார்ப்பு மின்னியது.
அவளோ, “எனக்கு மட்டும் யாரும் தனியா சொல்லலை. எங்க அக்காவை பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு, எல்லாருக்கும் முன்னாடி வச்சு தானே உங்க அத்தை சொன்னாங்க” என்றாள் தப்பிக்கும் விதமாக.
பாக்யா அன்று தன்னிடம் சொல்லியவற்றை அருணிடம் சொல்ல ரஞ்சனிக்கு விருப்பமில்லை. அதை விட அருணைப் பற்றி அவர் சொன்ன வார்த்தைகளை அவள் நம்பவில்லை.
‘தன் மகளை அருண் மறுத்த காரணத்தால் பாக்யா இப்படி பேசியிருக்கிறார்’ என்று அவளால் அனுமானிக்க முடிந்தது.
‘ஆனால், மாலதியை அருண் மறுப்பதற்கே காரணம் நானல்லவா?’ இந்த எண்ணம் வந்த பிறகு அருணின் காதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ரஞ்சனியால்.
‘தான் இப்படி கடுமையாக பேசினாலாவது, தன்னை ஒதுக்கி, மாலதியுடன் தனது திருமணத்தை நடத்தி கொள்வான் அருண்’ என்று சிறுபிள்ளைத்தனமாக எண்ணினாள்.
மனமோ, தன் ஒரு மாதகால காதலுக்காக ஊமையாக அழுதது.
அதையும் மீறி, ‘குறுகிய காலங்களே ஆசைவைத்த தன்னாலேயே அருண் தனக்கில்லை என்ற எண்ணத்தை தாங்க முடியவில்லை என்றால், நெடுங்காலங்களாக அருண் தான் தன் கணவன் என்ற நம்பிக்கையோடு இருந்த மாலதியால் எப்படி தாங்க முடியும்?’ என்று நியாயம் பேசியது.
ஆனால், அவளிடமிருந்து உண்மையை வாங்கிவிடும் வேகத்தில் வேறு பேசினான் அருண்.
“அப்போ… இன்னொருத்திக்கு நான் சொந்தமானவன்னு தெரிஞ்சே தான், என் பார்வைக்கெல்லாம், நீ பதில் பார்வை தந்தியா?” என்றான் நக்கலாக.
இந்த கேள்வி அவளை வலிக்கச் செய்யும் என்று தெரியும் தான். இருந்தும் கேட்டான்.
‘என்ன மாதிரியான கேள்வி இது?’ துடிதுடித்து போனாள் ரஞ்சனி.
நாடகம் இப்போது அவள் கையிலிருந்து அவன் கைக்கு இடம் மாறியிருந்தது.
“ஐயையோ… அப்படி இல்ல…” பதறினாள் ரஞ்சனி.
“பின்ன எப்படி? சொன்னா நாங்களும் தெரிஞ்சிப்போம்ல.”
“உங்களுக்கு மாலதியை கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லைன்னு, நாயகி அம்மா சொன்னதா அம்மா சொன்னாங்க. அப்புறம் தான் நான்…” என்று இழுத்தவள், உன்மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது உண்மைதான் என்று தானாகவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
ரஞ்சனியின் இந்த பதிலில் இதழ்கடையோரம் சிரிப்பு மின்ன நின்றவன், அடுத்து அவள் சொன்ன வார்த்தைகளில், கோபத்தின் உச்சிக்கே சென்றான்.
“ஆனா… அந்த ஐடியாவே உங்களுக்கு இல்லாமல் போனது என்னால தான்னு, நம்பிக்கையான ஆள் மூலமா அப்புறம் தான் எனக்கு தெரிய வந்தது” என்று சொன்னாள்.
‘நம்பிக்கையான ஆள்…’
அருணை அடித்து சாய்க்க, இந்த ஒற்றை வார்த்தை போதுமானதாக இருந்தது.
“ஓஹ்… யாரு ம்மா அந்த நம்பிக்கையான ஆளு? என்றவனின் குரலில் உஷ்ணம் கூடியிருந்தது.
‘இதற்கு மேலும் இங்கே நின்றால் எல்லாம் உளறிவிட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது’ என்று எண்ணி பதில் பேசாமல் அங்கிருந்து நகர முயன்றாள் ரஞ்சனி.