“நில்லு ரஞ்சனி… நான் ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை கொடுத்துட்டு, இன்னொரு பொண்ணு பின்னாடி சுத்துறவன்னு மறைமுகமா யாரோ என்மேல பழியைத் தூக்கி போட்டுருக்காங்க. அதையும் நம்பி நீ என்னை மறுக்குற.”
“பரவாயில்லை, அது உன் இஷ்டம். ஆனா என்னைப் பற்றி தப்பு தப்பா சொல்லித் தந்த ஆளு யாருன்னு, எனக்கு கண்டிப்பா தெரிஞ்சே ஆகணும். (redzer.tv) பொண்ணுங்களுக்கு மட்டுமில்ல ஆம்பிள்ளைங்களுக்கும் கற்பு உண்டுன்னு நினைக்கிற ஆளு ம்மா நான். அப்படியிருக்கும் போது என்னைப் பற்றி யாரோ என்னவோ பேசட்டும்னு என்னால விட்டுட்டு போக முடியாது” என்றான் கோபமாக.
‘இதற்கே இவ்வளவு கோபம் வருகிறதே, அவன் அத்தை பேசியது எல்லாம் தெரிய வந்தால் என்னவாகுமோ?’ என்று உதறலெடுத்தது ரஞ்சனிக்கு.
இருந்தாலும், இதற்கு மேல் எதுவும் சொல்லி பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று நினைத்து, அங்கிருந்து நகர்வதிலேயே கண்ணாக இருந்தாள் ரஞ்சனி.
“அந்த நம்பிக்கையான ஆள் மேல வச்ச நம்பிக்கையை, இந்த அருண் மேல உன்னால வைக்க முடியலை இல்ல. நீயும் என்னை பொம்பளை பொறுக்கின்னு நினைச்சிட்டல்ல… அதனாலத் தானே இவன் என்ன கேக்குறது, நாம என்ன சொல்லுறதுன்னு இவ்வளவு அலட்சியமா பதில் சொல்லாமல் போற?”
‘தான் உயிராய் நினைக்கும் பெண்ணிற்கு தன் மீது நம்பிக்கை இல்லை’ என்ற எண்ணம் அருணை வெகுவாக தாக்க, கொஞ்சம் எல்லைமீறி வந்தது வார்த்தைகள்.
“ஐயையோ… நான் என்னைக்குமே உங்களை அப்படி நினைச்சது கிடையாது அத்தான். மாலதியோட அம்மா உங்களைப் பத்தி தப்பு தப்பா சொல்லித்தந்த பிறகு கூட, அவங்க பொண்ணை நீங்க கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதாலத் தான், அதுக்கு காரணமான என்னை பயங்காட்ட உங்களை தப்பா பேசுறாங்கன்னு கெஸ் பண்ணுண நானா உங்களைத் தப்பா நினைப்பேன் அத்தான்?”
தன்னைத்தானே நிந்தித்துக் கொண்ட அருணின் வார்த்தைகளில், தன் சுயம் மறந்து அவனை ‘அத்தான்’ என்று அழைத்ததோடு, பாக்யா சொல்லிய அத்தனையையும் அருணிடம் சொல்லியிருந்தாள் சிவரஞ்சனி.
“நினைச்சேன்… இவங்களாத் தான் இருக்கும் ன்னு நெனைச்சேன்” என்றவன், “அவங்க சொன்னமாதிரி எனக்கும் மாலதிக்கும் இடையில எதுவும் கிடையாது. மாலதியைக் கல்யாணம் பண்ண சொல்லி எங்கிட்ட கேட்டாங்க, எனக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லை. அதை மாலதிகிட்ட நேரடியாவே சொல்லிட்டேன், அவளும் என்னை புரிஞ்சுகிட்டா” என்றான் தெளிவாக.
அருணின் பேச்சில் நெஞ்சுக்குள் சாரலடித்தது சிவரஞ்சனிக்கு. இருந்தாலும் மகளை திருமணம் செய்ய மறுத்தற்காகவே அருண் மீது சேற்றை வாரி இறைத்த பாக்யாவின் செயல் மிரட்டியது.
அதை மறைக்காமல், “மனசுக்குள்ள எவ்வளவு பெரிய ஆசை வச்சிருந்தாங்கன்னா, அது இல்லைன்ன உடனே, இப்படி எல்லாம் செய்யத் தோணும்!” என்று அருணிடம் சொல்லவும் தவறவில்லை.
“அதுக்கு பெயர் ஆசையில்ல…” என்றான் அருண் வெறுப்பாக.
பின்னர் ஏதோ யோசனையில் ஆழ்ந்தவன், “நம்ம மேல ஆசைப்பட்டவங்களை எல்லாம், நாம கல்யாணம் பண்ணனும்னுனா, ஒவ்வொருத்தரும் சில நூறு கல்யாணமாவது பண்ணியாகணும்” என்று சொல்லியபடியே, ஆழ்ந்து மூச்சை எடுத்து வெளியே விட்டவன்,
“நானும் உங்கிட்ட இருந்து வலுக்கட்டாயமா காதலை பறிச்சுக்க நினைக்கிறேன்னு எனக்கே இப்போதான் புரியுது. அதனால, நான் உங்கிட்ட பேசுனதை, நடந்துகிட்டதை எல்லாம் மனசுல வச்சிக்காத, மறந்துடு. கூடவே உன்னை தொந்தரவு பண்ணுனதுக்காக என்னை மன்னிச்சிடு.”
சிவரஞ்சனிக்கு பேசுவதற்கே இடம் கொடாமல் பேசி முடித்தவன், இருவருக்குள்ளும் எதுவுமே இல்லை என்பது போல அங்கிருந்து நகர ஆரம்பிக்க, விழி பிதுங்கி போய் நின்றிருந்தது சிவரஞ்சனி மட்டுமல்ல, அவர்களுக்கிடையே இருந்த காதலும் தான்…
____________________________________
நாளை மறுநாள் பெங்களூருக்கு புறப்படுவதை முன்னிட்டு தனது உடமைகளை பேக் செய்து கொண்டிருந்தாள் சந்த்ரிகா.
அவளது நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும் தருணத்தில் வந்து நிற்க, முகமெல்லாம் மலர்ந்து விகசித்து கிடந்தது.
‘இனி இப்போதைக்கெல்லாம் இங்கே வரவேப் போவதில்லை’ என்ற எண்ணத்தில் தன்னுடைய, உடைகளை ஒன்றுவிடாமல் பேக் செய்து முடித்த சந்த்ரிகா, கணவனின் துணிகளையும் பேக் செய்வதில் இறங்கினாள்.
கணவனில்லாமல், அவன் உடமைகளை பேக் செய்வது சற்று சிரமாக இருக்கவே, தன்னால் முடிந்தவற்றை அடுக்கியவள் வெளியே சென்றிருக்கும் கணவனின் வருகைக்குப் பின்னர் மீதியை அடுக்கி கொள்ளலாம் என்று முடிவெடுத்து தங்கள் அறையிலிருந்து இறங்கி வந்தாள்.
அன்று மொட்டைமாடியில் கணவனிடம் வாய்த்துடுக்காக பேசி, அவனிடமிருந்து நாசூக்காக ஒரு குட்டும் வாங்கிய பிறகு, அநாவசியமான பேச்சுகள் எதுவும் பேசுவதற்கு வாயே திறப்பதில்லை சந்த்ரிகா.
அதுவுமில்லாமல், இத்தனை நாள் பழக்கத்தில், இளைய மாமியார் ரத்னாவிற்கு இந்த குடும்பத்தின் மீது பெரிய அளவிற்கு பிணைப்பு கிடையாது என்று அவரது நடவடிக்கைகளிலிருந்து புரிந்தும் கொண்டாள்.
ஆனால், தன் குடும்பத்தைப் பற்றி பேசும் போது, ஒரு தடவைக் கூட அதைப்பற்றி பேசாத கணவனின் செயலிலேயே, குடும்பம் மீதான கணவனின் பற்றுதலை உணர்ந்து கொள்ள முடிந்தது அவளால்.
எனவே, ஏடாகூடமாக வாயைவிட்டு, தன் மரியாதையை குறைத்துக் கொள்வதை விட, இங்கிருந்து கிளம்பும் வரை பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருப்பதே நலம்’ என்று எப்போதோ முடிவெடுத்து விட்டாள்.
தம்பியின் திருமணத்திற்காக வந்திருந்த அந்த வீட்டின் பெண்ணரசிகளும் தங்கள் வீட்டுக்கு கிளம்பி சென்றிருக்க, வீடு இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது.
கீழே வந்த சந்த்ரிகா, மெதுவாக கிட்சனை எட்டிப் பார்த்தாள். அங்கே மதிய சமையலுக்கான ஆயத்தங்கள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நாயகி மளிகைப் பொருட்களை பொட்டலம் போடும் வேலையை மேற்பார்வையிடுவதால், எப்போதுமே சமையல், ரத்னா மற்றும் ராஜேஸ்வரி பொறுப்பு தான்.
மருமகளைக் காணவும், “வா சந்த்ரி…” என்று இராஜேஸ்வரி வரவேற்க, “மருமக வந்துட்டாளா? அப்போ இந்த காயை நறுக்கி தரச் சொல்லுங்க க்கா… நான் போய் இந்த மீனை சுத்தம் பண்ணிட்டு வரேன்” என்று ரத்னா நழுவி விட்டார்.
‘நல்லவேளை… மீனை எங்கையில குடுக்காம, காய்கறியை குடுத்துதே இந்த அம்மா’ என்ற எண்ணத்தில் சொன்ன வேலையை செய்ய ஆரம்பித்தாள் சந்த்ரிகா.
ராஜேஸ்வரிக்கோ, ‘இன்னும் ஒருநாள் இங்கே இருக்கப் போகும் மருமகளை எதற்காக வேலை வாங்க வேண்டும்?’ என்ற எண்ணம் இருந்தாலும், அதை ரத்னாவிடம் சொல்லுவது வீண் என்பதால் அமைதியாக இருந்தார்.
அந்நேரம், வழக்கத்துக்கு மாறாக வீட்டுக்கு வந்த அருணிடம், யோசனையோடு, “என்னாச்சு ப்பா?” என்றார் ராஜேஸ்வரி,
“குடோன்ல கொஞ்சம் வேலையிருந்தது பெரியம்மா. அதை பாத்தேன், ட்ரெஸ் எல்லாம் அழுக்கா போச்சு. அதான் ஒரு குளியல் போட்டுட்டு வேற ட்ரெஸ் மாத்திட்டு போலாம்னு வந்தேன்” என்றவன்,
சந்த்ரிகா கழுவி வைத்திருந்த காய்கறிகளிலிருந்து ஒரு கேரட்டை உருவி கடித்தபடியே தனது அறைக்கு சென்றான். அவனைக் காட்டுவாசியைப் பார்ப்பது போல பார்த்து வைத்தாள் சந்த்ரிகா.
தனது அறைக்கு வந்த அருண் பாத்ரூமிற்குள் நுழைந்து, ஷவரை திறந்து விட்டு அதற்கு கீழே நின்றான். நீர்துளி மேலே படவும், தன்னையறியாமல் அன்று அருவிக்கு சென்ற நாளின் ஞாபகம் வந்தது.
கூடவே சிவரஞ்சனியும் நினைவுக்கு வந்தாள். ‘இவ வேற… என்னைக் கொல்லாம கொல்லுறா’ அலுத்துக் கொண்டவன், குளித்து முடித்து, கபோர்டிலிருந்து வேஷ்டி ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டு சட்டையைத் தேட, அங்கே பெயருக்கு கூட ஒரு சட்டையில்லை.
‘ப்ச்ச்… நல்ல நேரத்துல இஸ்த்ரி பண்ணக் குடுத்தாங்க டா…’ என்று முணுமுணுத்தபடியே, கையில்லா பனியனும் வேஷ்டியும் அணிந்து கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தவன், ஹாலில் இருந்த டேபிளில் இஸ்த்ரி செய்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த சட்டைகளிலிருந்து ஒன்றை எடுத்து அணியத் தொடங்கினான்.
“ஹேய்… அருண்… அது உங்க அண்ணா சர்ட்… நீ போடாத, கழட்டு…” என்றபடி அவனிடம் ஓடிவந்தாள் சந்த்ரிகா. அந்நேரம் சரியாக ரத்னாவும் அங்கே வந்தார்.
எத்தனையோ முன்னேற்பாடோடு இருந்தும், தன்னுடைய இயல்பான வாய்த்துடுக்கை கட்டுப்படுத்த முடியாமல், சந்த்ரிகாவால் அங்கே முதல் பூகம்பம் வெடிக்கத் தயாரானது…