அன்று, சந்த்ரிகா வீடியோஸ் அனுப்பியதும், ஒரு நொடியைக் கூட வீணாக்காமல் லிங்கத்தின் வீட்டை நோக்கி தன் புல்லட்டில் பறந்திருந்தான் அருண்.
லிங்கத்தின் வீட்டுக்கு வந்தவன், புயலென உள்ளே நுழைந்து, பையும் கையுமாக எங்கேயோ புறப்பட்டு நின்ற லிங்கத்தின் கன்னத்தில், சரமாரியாக தன் கைகளை இறக்க, அவனும் இவனோடு சரிக்குசரியாக மல்லுக்கு நின்றான்.
உண்மையில், அருண் தன்னைத் தேடி தன் வீட்டுக்கு வரும்முன், எங்காவது சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் லிங்கம் புறப்பட்டதே. ஆனால் அவன் வெளியே கிளம்பும் முன், அருண் வந்துவிட்டான்.
வீட்டுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தன் கணவனை, வீட்டுக்குள்ளே வந்து அருண் அடிப்பதைக் கண்ட லிங்கத்தின் மனைவி ஓடி வந்து,
“அருண்… நீ பெரிய ஆளுன்னா, அதை வெளிய வச்சுக்கோ.. எதுக்காக டா எம்புருஷனை வீட்டுக்குள்ளவே வந்து அடிக்கிற? என்று கோபமாக கேட்டாள்.
“ம்ம்… அது… அடிக்கிறவனுக்கும், அடிவாங்குறவனுக்கும் மட்டும் தெரிஞ்சா போதும்னு, கண்டிப்பா சொல்ல மாட்டேன்… இன்னும் சொல்லப்போனா, இந்த பரதேசி என்ன செய்து வச்சிருக்கான்னு, அவனை வச்சிகிட்டே உங்ககிட்ட சொல்லணும்னு தானே, நானே இங்க வந்தது” அருண் நக்கலாகச் சொல்ல, பதறிப் போனான் லிங்கம்.
பின்னே, அருண் தன் மனைவியிடம் தன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றிவிட்டு சென்றுவிட்டால், இத்தனை நாளும் மனைவியிடம், தான் உருவாக்கி வைத்திருந்த, நான் நல்லவன், வல்லவன், நாலும் தெரிந்தவன் என்ற இமேஜ் எல்லாம் தரைமட்டம் ஆகிப்போகாதா?
லிங்கத்தின் பதட்டத்தை அழகாக புறம்தள்ளிய அருண், “இத்தனை வருஷத்தில, உங்க புருஷன் என் அப்பாகிட்ட அடி வாங்குன கதை எல்லாம், கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ஆனா, உங்களுக்கு தெரியாத கதையும் நிறைய இருக்கு. அதை எல்லாம் உங்களுக்கு சொல்லட்டுமா?” என்று லிங்கத்தின் மனைவியைப் பார்த்து கேட்டவன்,
தன்னுடைய திருமணத்தோடு தன் அக்காவிடம் லிங்கம் செய்த, சில்லுண்டிதனத்தை சொல்லியதோடு, இப்போது அரவிந்தனை சேர்த்துக் கொண்டு, சந்த்ரிகாவுக்கு செய்ய முயன்ற கீழ்த்தரமான வேலைகளையும் சொன்னான். கூடவே, ஆதாரத்துக்காக கையிலிருந்த வீடியோக்களையும் காட்ட, தலையில் கைவைத்து உட்கார்ந்தே விட்டான் லிங்கம்.
கணவனுக்கு வாலிப வயதில், அருணின் அக்கா மேல் இருந்த ஆசையும், அதைக் கொண்டு நடந்த களேபரங்களும், இத்தனை வருடங்களில் லிங்கத்தின் மனைவிக்கு தெரிய வந்திருந்தது தான்.
ஆனால், இளவயதில் அதெல்லாம் சகஜம் என்று கடந்து வரமுடிந்திருந்த அந்த பெண்ணால், இப்போது நடந்தவைகளை ஜீரணிக்கவே முடியவில்லை.
திருமணம் முடிந்த பிறகும், இத்தனை வருடங்களாக பழிவாங்குவதற்காக என்றாலும் இன்னொரு பெண்ணை, அதுவும் கணவன், குழந்தைகள் என்று வாழும் ஒரு பெண்ணை, மனதில் சுமந்து கொண்டு, தன்னோடு வாழ்ந்த கணவனின் கீழ்த்தரமான செயல், மனதளவில் பெருத்த அடியைக் கொடுத்தது அந்த பெண்ணுக்கு.
“ச்சீ… உன்னை என்னோட புருஷன்னு சொல்லவே எனக்கு வெக்கமா இருக்கு” முகத்தில் உமிழாத குறையாக கணவனைப் பார்த்து லிங்கத்தின் மனைவி சொல்லவும்,
“என்னடா?… குடும்பத்துல குழப்பம் உண்டாக்கலாம்னு பாக்குறியா? மரியாதையா இங்கயிருந்து போயிடு… இல்லைன்னா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது?” நெஞ்சை நிமிர்த்தி கொண்டு லிங்கம், அருணை மிரட்ட ஆரம்பித்தான்.
“இந்த நெஞ்ச நிமித்துற வேலை எல்லாம் எங்கிட்ட வச்சிக்காத” என்று லிங்கத்தின் நெஞ்சில் கைவைத்து தள்ளிய அருண், “இத்தோட என்குடும்பத்தை சீண்டுறதை நிறுத்திக்கோ லிங்கம். இல்லைன்னா நீ அசிங்கபட்டு போயிடுவ… ஸ்கூலுக்கு போயிருக்க உம் பொண்ணுகிட்ட…”
“ஏ…ய்… ஏய்… எம்பொண்ணை ஏதாவது பண்ணுன?…, உன்னை சும்மா விடமாட்டேன் டா…”
அருண் சொல்ல வந்ததை சொல்லவிடாமல் இடையிட்ட லிங்கம், ஆத்திரத்தில் கத்த ஆரம்பித்தான்.
“அடச்… ச்சீ… உன்ன மாதிரி ஈனப்பிறவின்னு, என்னையும் நெனச்சியா? இத்தோட எங்குடும்பத்தை சீண்டுறதை நீ நிறுத்தலைன்னா… ஸ்கூலுக்கு போயிருக்க உன் பொண்ணுகிட்ட, உன் அப்பா ஒரு பொம்பளை பொறுக்கின்னு சொல்லிக் குடுப்பேன். போதாததுக்கு இந்த வீடியோ எல்லாம் கூட காட்டுவேன். எப்படி உன் வசதி? என்று அருண் கேட்க, மிரண்டு போனான் லிங்கம்.
ஊரிலுள்ள காவாலித்தனம் அத்தனையும் செய்யும் ஒருசில ஆண்களுக்கு, தன் மனைவி மக்களுக்கு மட்டும், தாங்கள் எப்போதும் நல்லவர்களாகவேத் தெரிய வேண்டும் என்ற ஆசை உண்டு.
அந்த வகையைச் சார்ந்த ஆணான லிங்கத்துக்கு, தன் மனைவிக்கு தன்னைப் பற்றிய உண்மைகள் தெரிந்ததே அதிர்ச்சியாக இருக்க, உன் மகளிடமும் உன்னைப் பற்றி எல்லாம் சொல்வேன், என்று சொன்ன அருணின் வார்த்தைகள் பேரதிர்ச்சியைக் கொடுத்தது.
‘ஒருவேளை அருண் மட்டும் அப்படி ஏதாவது செய்துவிட்டால், தன் மகளின் மனதில் உயர்வாக இருக்கும் தன்னைப் பற்றிய பிம்பம் சரிந்து விடுமே!’
நினைவே மனதுக்குள் கிலியை உண்டாக்க, “உன் காலப்பிடிச்சு வேணும்னாலும் மன்னிப்பு கேட்டுக்கறேன் அருண்… தயவுசெய்து அப்படி எதுவும் செஞ்சிடாத.. ” உடனடியாக அருணைக் கையெடுத்து கும்பிட்டு, கெஞ்சியபடி கேட்டான் லிங்கம்.
“நீ காலப்பிடிச்சி மன்னிப்பு கேட்க வேண்டியது எங்கிட்ட இல்ல, என் அண்ணிகிட்ட… அவங்க ஊருக்கு வரட்டும்… அப்போ சொல்லிவிடுறேன்… வந்து மன்னிப்பு கேட்டுட்டு போ. அதுக்கப்புறம், உன்னை மன்னிக்கலாமா? வேண்டாமான்னு நான் யோசிக்கிறேன்” என்றவன்,
“இப்படிப்பட்ட புருஷன் கூட வாழணுமான்னு நீங்களும் யோசிங்க” என்று லிங்கத்தின் மனைவியிடம் சொல்லிட்டு, அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
அத்தனையையும் கணவன் சொல்லக் கேட்டிருந்த சந்த்ரிகாவுக்கு, அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. வேலை பார்க்க வேண்டும் என்ற சந்த்ரிகாவின் ஆசை, ஒருவேளை வெறியாக மாறியிருந்தால், இன்று அவளுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்குமே?
இது அத்தனைக்கும் காரணகர்த்தா லிங்கம் அல்லவா? அதனால், அவன் அருணிடம் அடிவாங்கி, அடங்கி, ஒடுங்கி போனதை கேட்கும் போது, சந்தோஷமாகவே இருந்தது சந்த்ரிகாவுக்கு.
இரவு எட்டு மணிக்கு போல தன் இலக்கை அடைந்த இன்னோவா, சசிதரன் வீட்டுக்கு முன் வந்து நின்றது. கணவனும் மனைவியும், ஆளுக்கொரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு, காரிலிருந்து இறங்கி நின்றார்கள்.
சந்த்ரிகாவுக்கு நடந்தது குடும்பத்தில் எல்லாருக்குமே தெரிய வந்திருந்தது. ஃபோன் மூலம் அவளுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுத்திருந்தவர்களுக்கு, இப்போது நேரில் குழந்தைகளோடு வந்து நிற்பவளை, ஓடிச்சென்று கட்டி அணைத்துக் கொள்ளத் தான் ஆசை.
ஆனால், “கோவிட் அச்சுறுத்தல் இருப்பதால், வெளியூரிலிருந்து பல மணி நேரங்கள் பயணம் செய்து வந்த தங்களிடம், யாரும் ஒட்டி உறவாடக் கூடாது” என்று, ஏற்கனவே சசிதரன் கண்டிப்பாக சொல்லியிருக்கவே, தங்கள் கைகளையும் கால்களையும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு, ராதா உட்பட வாசலிலேயே அனைவரும் நின்று கொண்டிருந்தார்கள்.
அதுவும், சிவரஞ்சனியின் கர்ப்பம் உறுதியாகி இருந்த இந்த சூழ்நிலையில், சசிதரன் சொல்லியதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் அனைவரும்.
ஆனால், அதையும் மீறி நாயகி, “எங்கிட்ட வாங்க என் கண்ணுங்களா…” என்றபடியே குழந்தைகளை நோக்கி கைகளை நீட்டிக்கொண்டே வந்தார்.
அதற்காகத் தானே ரத்னாவும், நாயகிடம் அப்படிக் கேட்டது.
வீட்டுக்கு பின்புறமும் இருந்த மாடிப்படி வழியே இரண்டாவது மாடிக்கு நாயகி சகிதம் சென்ற தம்பதியினர், பதினான்கு நாட்கள் அங்கேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்வது என்று முடிவானது.
கீழிருந்து சாப்பாடு செய்து அனுப்ப வேண்டும் என்று சொன்ன நாயகியே, அதற்கு உடன்படாமல், மாடியில் தற்காலிகமாக ஒரு சமயலறையையே உருவாக்கி கொண்டார்.
அதற்கு அவர் சொன்ன காரணம் சந்த்ரியை ஆச்சர்யமாக புருவத்தை தூக்க வைத்தது.
ஆம்… “சின்ன பிள்ளைங்களை வச்சிகிட்டு, சாப்பாடு எப்போ வரும்னு எதிர்பார்த்துட்டு எல்லாம் இருக்க முடியாது. அவங்களுக்கு எப்போ, என்ன தேவைப்படும்னு யாருக்கு தெரியும்? அதனால நாமளே சமையல் பண்ணிக்கலாம்” என்று நாயகி சொல்ல அசந்து போய்விட்டாள் சந்த்ரிகா.
‘குழந்தைகளின் தாயான நானே, இப்படி எல்லாம் அவர்களுக்காக யோசிக்காமல், அவர்களை விட்டுவிட்டு ஓடிக் கொண்டிருந்தேனே… அதுவும், ஆளில்லாத களத்தில் கம்பு சுற்றுவது போல, பொருளாதார ரீதியாக எந்த தேவையுமே எனக்கு இல்லாத போது, குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு ஓடிக்கொண்டு இருந்திருக்கிறேனே’ என்று நினைக்கும் போது, அவளை, அவளாலேயே மன்னிக்க முடியவில்லை.
மனதில் இருந்த மாய எண்ணங்கள் விடைபெற்றுச் செல்லவும், சந்த்ரிகாவால் நாயகியிடம் இயல்பாக பழக முடிந்தது. அதுவும் ‘நாயகி அம்மா…’ என்று அவரை அழைத்தே பழக முடிந்தது.
முதலில் சந்த்ரிகாவின் அழைப்பில் சற்றே திகைத்தாலும், அதை புன்னகையோடே ஏற்றுக் கொண்டார் நாயகி.
இந்த பெண்ணைப் பற்றியும், அவளது குணநலன்களைப் பற்றியும், அவரும் கவலைப்பட்டவர் தானே. ‘நடந்து முடிந்திருந்த நிகழ்வுகள் சந்த்ரிகாவை புடம்போட்ட தங்கமாக மாற்றியிருக்கிறது’ என்று நாயகியால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் சந்த்ரிகாவின் நாயகனோ அதை எல்லாம் கண்டு கொள்ளவேயில்லை. மனைவியின் மாற்றம் அவனுக்கு புரிந்தாலும், கணவனிடம் சந்த்ரிகா இழந்திருந்த நம்பிக்கையை திரும்பவும் ஈட்டிக்கொள்ள, இவை எல்லாம் போதவில்லை போலும்.
ஒருவழியாக பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, வீட்டின் பின்வழியாக மாடிக்கு சென்றவர்கள், வீட்டுக்குள் இருக்கும் படிவழியாக ஹாலுக்கு வந்து கொண்டிருந்தார்கள்.