அக்காவைக் கண்டதும், தன்னை மறந்து வேகமாக ரஞ்சனி மாடிப்படி ஏறி அவளிடம் செல்ல முயல, “ஹேய்… நில்லு டி நானே வரேன்…” என்று பதட்டத்தோடு வேகமாக படியிறங்கி வந்து தங்கையை கட்டிக் கொண்டாள் சந்த்ரிகா.
அந்த ஒற்றை செயலே, அங்கிருந்த அத்தனை பேருக்கும் சந்திரிகாவின் மனமாற்றத்தை அழகாக எடுத்துக்காட்ட, உற்சாக வெள்ளத்தில் நிறைந்தது வீடு.
அதன்பிறகு வந்த நாட்களில் வீட்டு பெண்களோடு சந்த்ரிகா இணைந்து கொண்டாளானால், சசிதரன் ஆண்களோடு கடைக்கு சென்று வர ஆரம்பித்தான்.
குழந்தைகளோ, உறங்கும் நேரம் மட்டுமே பெற்றவர்களிடம் வந்தார்கள்.
ஒரு மாதம் என்று சொன்ன வேலை, அப்படி இப்படி என்று இரண்டு மாதங்களில் நிறைவு பெற, அத்தோடு தன் வேலையில் இருந்தும் விடுதலை பெற்றுக் கொண்டாள் சந்த்ரிகா.
“வீட்டிலிருந்து தானே வேலை பாக்குற? அப்படியே கன்டினியூ பண்ண வேண்டியது தானே?” என்று சொன்ன கணவனிடம்,
“எனக்கு போதும் சசி” என்று சந்த்ரிகா சொல்ல, அந்த குரலில் இருந்த உறுதியில் ஒன்றும் சொல்லாமல், தோளைக் குலுக்கியபடி சென்றுவிட்டான் சசிதரன்.
இந்த இரண்டு மாத காலங்களும் சந்த்ரிகாவின் வாழ்வில் பொன்னான நாட்கள் என்று தான் சொல்லவேண்டும்.
ஒரு பெண் வெளியே சென்று பொருளீட்டி வருவதை விட, வீட்டிலிருந்தபடியே, ஒரு தலைமுறையையே சரியான பாதையில் வழி நடத்தி செல்வது ஒன்றும் குறைவான வேலையில்லை என்று சந்த்ரிகாவுக்கு புரிந்து போன கால கட்டமிது.
மேலும் ஐந்தாறு மாதங்கள் கழிந்திருந்தது. கொரானா முதல் அலை சற்றே ஓய்ந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டிருந்தது.
இரவு, கடையிலிருந்து வந்த சசிதரன், கட்டிலில் அமர்ந்து துவைத்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த மனைவியிடம், “நாளைக்கு பெங்களூர் போறேன், வரியா சந்த்ரி?” என்று கேட்டான்.
“இல்லை” என்று தலையசைத்தபடியே தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள் சந்த்ரிகா.
“பெங்களூருக்கு எதுக்கு போறேன்னு கேக்கமாட்டியா?” குளிப்பதற்கு தயாராகிக் கொண்டே கேட்டான் சசிதரன்.
“தேவைன்னா நீங்களே சொல்லுவீங்களே சசி?”
“அவ்வளவு நம்பிக்கையா எம்மேல?”
கணவனின் கேள்வியில் அவனை நிமிர்ந்து பார்த்த சந்த்ரிகா, பதிலேதும் சொல்லாமல் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தாள்.
“பெங்களூர் வீட்டுக்கு சரியான விலை அமைஞ்சிருக்கு. அதான் ரெஜிஸ்ட்ரேஷன் முடிச்சுக் குடுக்கப் போறேன்” என்றான் சசிதரன்.
“ஓ…” ஒற்றை எழுத்தை பதிலாக்கினாள் சந்த்ரிகா.
“வீடு வித்த பணத்தை அப்படியே அருண் கிட்ட குடுத்துடுவேன். அவனா பாத்து, நமக்கு எதுவும் செய்தா தான் உண்டு.”
” மனைவியைக் கூர்ந்து பார்த்தபடியே சசிதரன் சொல்ல, சட்டென்று நிமிர்ந்த சந்த்ரிகா, “அப்படி அருண்கிட்ட, அந்த பணத்தை நீங்க குடுக்குறது தான் நியாயமும் கூட” என்றாள் வேகமாக.
“ஏன்?..”
“இல்ல… அருண் மட்டும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணலை ன்னா, நீங்க இத்தனை வருஷமா இந்த வேலையை பாத்துருக்கவே முடியாது. அப்படியிருக்கும் போது, அதால வந்த வருமானத்தை அருண்கிட்ட நீங்க குடுத்தா தப்பில்ல.”
சொல்லி முடிக்கவில்லை… கணவனின் கையணைப்புக்குள் இருந்தாள் சந்த்ரிகா.
” இப்போ தான், உன்னை எனக்கு ரொம்ப… ரொம்ப பிடிச்சிருக்கு சந்த்ரி” என்று முணுமுணுத்தவன், அவனுக்கு பிடித்த பதிலைச் சொன்ன மனைவியின் இதழ்களுக்கு பரிசுகளை வாரி வழங்கினான்.
நீண்ட நெடுங்காலங்களுக்குப் பிறகு கணவனிடமிருந்து கிடைக்கும் பரிசுகள், அந்த மனைவியின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்க, “எம்மேல உங்களுக்கு இருந்த கோபமெல்லாம் போயிடிச்சா சசி” என்றாள் தழுதழுப்பாக.
“உம்மேல கோபம் எல்லாம் இல்லை சந்த்ரி… கொஞ்சம் வருத்தம் தான் இருந்தது. அந்த வருத்தமும் இப்போ போயே போச்சு” என்று சொன்னவனின் உதடுகள், மறுபடியும் தன் இணையைத் தேடி இணைந்து கொண்டது.
மனைவியிடம் சொன்னது போல பெங்களூருக்கு சென்று வந்திருந்த சசிதரன், வீடு வித்த பணம் இருந்த பையைத் தம்பியிடம் கொடுத்தான்.
“என்ன சசி இது?” என்ற கேள்வியோடு வாங்கிக் கொண்டான் அருண்.
“நம்ம பெங்களூர் வீட்டை வித்த பணம்.”
எல்லோரிடமும் சொல்லிவிட்டு தான், வீட்டை விற்கும் முயற்சியில் இறங்கியிருந்தான் சசிதரன். அதனால் அங்கிருந்த யாருக்கும் வீட்டை விற்றது புதிய தகவல் இல்லை.
பின்னே…, எல்லாருக்கும் குல்லா போட்டு, மொத்த சொத்தையும் அருண் ஒருவனே சுருட்டிக்கொண்டு போய்விடுவான் என்று ஆருடம் சொன்ன அறிவாளி ஆயிற்றே அவள்.
அருணின் பார்வையே, அவன் என்ன நினைத்து தன்னைப் பார்க்கிறான் என்று சந்த்ரிகாவுக்கு சொல்ல,
“உங்க அண்ணா சரியாத்தான் சொல்லுறாங்க அருண், நீங்க இதை என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ, அதையேப் பண்ணுங்க” என்று சிரித்தபடியே சொன்னாள் சந்த்ரிகா.
சந்த்ரிகாவின் வார்த்தையில், வீட்டில் உள்ள அனைவரும் வியந்து போய் நிற்க, அருணின் பார்வையோ, தன் தாயிடம் நிலைகொண்டு, “இப்போ என்ன சொல்லுறீங்க? என்று கேள்வி கேட்டது.
ஆம்… எத்தனையோ தடவைகள் சசிதரனையும் அருணையும் ஒப்பிட்டு, அவன் சொகுசா வேலைப் பாக்குறான், நீ அவனுக்கும் சேர்த்து பாரம் சுமக்குற என்று சொல்லியிருக்கிறாரே ரத்னா.
ஆனால் சசிதரனோ, தான் இத்தனை வருடங்கள் சம்பாதித்ததை அருண் கைகளில் கொண்டு வந்து கொடுத்து, என்ன வேணும்னாலும் செய்துக்கோ, என்று சொல்லி நிற்கிறானே. இந்த மனது யாருக்கு வரும்?
எனவே கொஞ்சம் கர்வமாகவே இருந்தது அருணின் பார்வை.
ஆனால் ரத்னாவோ, “நான் நல்லபிள்ளையா மாறி, வருஷம் ஒன்னுக்கு மேல ஆகியாச்சு.. என்னை அப்படி எல்லாம் பாக்காத அருண்” என்று சத்தமாக சொல்ல, கிண்கிணியாக அங்கே சிரிப்பு சத்தம் எழும்பியது…
இனிமேல், இந்த கூட்டில் இருக்கும் குயில்கள், ஆனந்த கீதங்கள் மட்டுமே இசைக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?!
**********************
“அத்தான்… குளுருது… என்னை விட்டுருங்க…”
சோ… என்று ஆர்ப்பரித்து கொட்டிக் கொண்டிருந்த அருவி நீரின் சத்தத்தையும் தாண்டி, ஒரு இளங்குரல் ஓங்கி ஒலித்தது.
“இதெல்லாம் ஒரு குளிராடா உனக்கு?… சும்மா ஓவரா சீன் போடாத” என்ற கிண்டல் குரல்கள், அதன் பின்னே ஒலித்தன.
முதலில் ஒலித்த இளங்குரலுக்கு சொந்தக்காரன், ஆறு வயது அவினாஷ். அருண், சிவரஞ்சனி தம்பதியினரின் ஏகபுதல்வன்.
அந்த கிண்டல் குரலுக்கு சொந்தக்காரர்கள், மீனாட்சி, கயல்விழியின் ஆண்மக்கள். இருபது வயதின் துவக்கத்தில் நிற்கும் இளைஞர்கள்.
அப்படியானால் அவர்கள் நிற்பது?…
ஆம்… நீங்கள் யூகம் செய்தது போல, மேக்கரையில் உள்ள தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான அருவித்தோட்டத்தில் தான் நின்று கொண்டிருந்தார்கள்.
அன்று சசிதரன் கொடுத்த பணத்தில், தங்கள் தோட்டத்திற்கு அடுத்தாற்போல் விலைக்கு வந்த ஒரு பத்து ஏக்கர் தோப்பை வாங்கி, தங்கள் தோப்போடு இணைத்துக் கொண்ட அருண், அதில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் ரிசார்ட் ஒன்றும் கட்டத் தொடங்கி இருந்தான்.
ஆங்காங்கே குறிப்பிட்ட இடைவெளியில், கேரள பாணியில் சின்னச் சின்னதாக கட்டியிருந்த வீடுகள், கண்ணையும் கருத்தையும் கவர்வதாக இருந்தன.
இதோ… ரிசார்ட் வேலைகள் முடிவடைந்து, திறப்புவிழா காண்பதற்கு தயாராக நிற்கிறது. அது வியாபார பயன்பாட்டுக்கு வருவதற்கு முன், குடும்பத்தோடு அங்கே தங்கி வரலாம் என்று எண்ணி, கேவிஎஸ் குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் வந்திருக்கிறார்கள்.
காலையில் வந்திருந்தவர்கள் ஆங்காங்கே இருந்த அருவியில் குளித்து, மூக்குமுட்ட சாப்பிட்டு விட்டு, அறைகளின் மதியதூக்கம் போட்டுக் கொண்டிருக்க, இவர்கள் மூவரும் அடுத்த ரௌண்ட் குளியலில் இறங்கியிருந்தார்கள்.
“அடேய்… எம்புள்ளையை என்னடா செய்யுறீங்க?” தற்செயலாக அந்த பக்கமாக வந்த அருண், அக்கா மகன்களிடம் கேட்டான்.
“ஜோக் அடிக்காதீங்க மாமா… அவன் எங்களை ஏதாவது செய்தா தான் உண்டு” என்றான் ஒருவன்.
” நீங்களும் சின்னவயசுல, இதே போல தொல்லையாத் தான்டா இருந்தீங்க.. ஆனாலும், இந்த தோள்லயும் மார்லயும் தூக்கி போட்டு, உங்களை வளக்கலையா இந்த மாமா?”
“இந்த குண்டுபுஸ்காவை என்னால தூக்கிட்டு போகமுடியாது. நீங்க தூக்கிட்டு போங்கடான்னு சொன்னா தூக்கிட்டு போறோம் மாமா. அதுக்காக இப்படி சென்டிமெண்டா பேசி உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க.”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சரசரவென்று தகப்பனின் தோளில் ஏறிக்கொண்ட அவினாஷைப் பார்த்து சிரித்தபடியே சொல்லிய இளைஞர்களில் ஒருவன், மாமனின் தோள்களில் இருந்த சிறுவனை, அரிசி மூட்டையை தூக்கி தோளில் போட்டுக் கொள்வது போல, தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு, படிகளின் வழியே மேலே ஏற ஆரம்பிக்க, அவன் காதில் தன் வாயை வைத்து ஊஊ… என்று கத்தினான் அவினாஷ்.
சொன்னோம் ல்ல… என்பது போல மாமனை திருப்பி பார்த்த இளையவர்கள், “மரியாதையா தோள்ல இருக்கணும், இல்ல… அப்படியே படியில உருட்டி உட்டுட்டு போயிடுவோம்” என்று அவினாஷை மிரட்டியபடியே போய்க் கொண்டிருந்தார்கள்.
அந்த இளைஞர்கள் இருவருக்கும், அபிநந்தனையும், நந்தனாவையும், அவர்களின் குட்டி தம்பியான மூன்று வயது அஜய் யையும் பிடிக்கும் என்றாலும், அவர்களின் விளையாட்டுக்கெல்லாம் ஈடு கொடுக்கும் அவினாஷை நிரம்பவே பிடிக்கும்.
அவினாஷூம் அத்தை மகன்கள் ஊருக்கு வந்துவிட்டால், அவர்களுடனே தான் சுத்துவான்.