அதிலும், உறவுமுறையைச் சொல்லி அழைப்பது அரிதாகி வரும் இந்த காலகட்டத்தில், தங்களின் அத்தை மகன்களை அத்தான் என்றும், அத்தை மகள்களை அண்ணி என்றும் சசிதரன், மற்றும் அருணின் பிள்ளைகள் அழைப்பதை பார்க்கும் போது, அவ்வளவு அழகாக இருக்கும்.
இவர்கள் மேலே ஏறத்தொடங்க, சிவரஞ்சனி, சந்த்ரிகாவோடு, மீனாட்சியும் கயல்விழியும் குளிப்பதற்காக கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
“நாம ரெண்டு பேரும் சேர்ந்து பிறகு குளிக்கலாம். இப்போ நீ குளிக்காத” மனைவிக்கு அருகில் வந்து அருண் கிசுப்பாகச் சொல்ல,
“ஹாங்… என்ன சொன்னீங்க மாமா?” அருவி நீரின் இரைச்சலில் கணவன் சொன்னது கேட்க்காமல் போக, திரும்ப கேட்டாள் சிவரஞ்சனி.
“நீ… உன் புருஷன் கூட பிறகு குளிக்கணுமாம். எங்க கூட குளிக்க கூடாதுன்னு தொர ஆர்டர் போடுறான்” பளிச்சென்று தம்பி சொல்லியதை கயல்விழி போட்டுடைக்க, மீனாட்சியோடு சந்த்ரிகாவும் சேர்ந்து சத்தமாக சிரித்தார்கள்.
“அக்கா… உனக்கிருக்கிறது காதா? இல்ல வேற எதுவுமா?” தமக்கையிடம் சத்தமாக கேட்ட அருண், “உன்னை வச்சிட்டு… ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல டி” என்று, மனைவியிடம் கடுகடுத்தபடியே மேலே சென்றான்.
திருமணம் முடிந்த பிறகு, பிறந்தவீட்டுக்கு வரும் ஒவ்வொரு பெண்களும் எதிர்பார்ப்பது இந்த ஒன்றைத் தானே.
அருணின் தங்கை ராகினிக்கும் திருமணம் முடிந்திருந்தது. கொரானா காலத்தில் அமெரிக்காவிலிருந்து வரமுடியாமல் தவித்த மீனாட்சியின் குடும்பத்தை பார்த்த ரத்னா, தன் பெண்ணுக்கு வெளிநாட்டு வரன் வேண்டாம் என்று முதலிலேயே சொல்லி விட்டார்.
அதேப்போல தனியார் நிறுவனங்கள் செய்த ஆட்குறைப்பின் மூலம் வேலையிழந்தவர்களையும் பார்த்தவர், மாப்பிள்ளை கவர்மென்ட்ல வேலை பாக்கணும், இல்லையா, நம்மளை மாதிரி வியாபாரம் பாக்குறவங்களா இருக்கணும் என்று விட்டார்.
கடைசியில், தென்காசியில் பிரபல நகைக்கடை வைத்திருக்கும் குடும்பத்து பையனுடனே ராகினியின் திருமணம் நடந்து முடிந்திருந்தது. அந்த தம்பதியருக்கும் இரண்டு வயதில் ஒரு குழந்தை உண்டு.
குழந்தைகள் அபிநந்தனும், நந்தனாவும் பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கவும், “பாவூர்சத்திரத்தில் கம்ப்யூட்டர் சென்டர் அமைத்து தரட்டுமா?” என்று சசிதரன் மனைவியிடம் கேட்டதற்கு, “நம்ம வியாபாரத்துலயே நாம பாக்க ஆயிரம் வேலை இருக்கும் போது, வேற வேலையை நாம இழுத்து போட்டுக்க வேண்டாமே” என்று மறுத்திருந்தாள் சந்த்ரிகா.
இப்போது கேவிஎஸ் பலசரக்கு கடையின், கணக்கு வழக்குகள் முழுமையும் கணிணி மயமாக்கப்பட்டு, சசிதரன் மற்றும் சந்த்ரிகாவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
தங்கள் இஷ்டம் போல அருவியில் ஆட்டம் போட்டு முடித்திருந்த அனைவரும், மொத்தமாக அமர்ந்து இரவு உணவை உண்டு, கதை, கலாட்டா என்று ஆர்ப்பரித்து விட்டு, குடும்பம் குடும்பமாக படுக்கைக்கு செல்லும் போது, மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது.
குழந்தைகள் அனைவரும் நாயகியோடு ஒட்டிக் கொள்ள, அவருக்கு அதில் ஏகப் பெருமை.
தங்களுக்கான அறைக்குள் மனைவியோடு வந்த அருண், “வீட்ல பெரியவங்க இருக்கிறது பலவகையில நன்மையாத்தான் இருக்கு ல்ல சிவா” என்றபடியே படுக்கையில் சாய்ந்தான்.
“என்ன மாமா திடீர்னு இப்பிடி சொல்லுறீங்க?”
“இல்ல… பிள்ளைங்க தொந்தரவு இல்லாம, நாம மட்டும் மஜாவா இருக்க முடியுதுல்ல, அதான் சொன்னேன்…”
“அப்போ பிள்ளைங்களை தொந்தரவுன்னு சொல்லுறீங்களா நீங்க? ஆறு வயசு பிள்ளைக்கு தகப்பன் மாதிரி, கொஞ்சம் பொறுப்பா பேசுங்க மாமா” சிடுசிடுத்தாள் சிவரஞ்சனி.
“ஆறு வயசுல ஒரே ஒரு பிள்ளை தானே இருக்கு, அதான் எனக்கு பொறுப்பில்லை போல. இன்னொன்னு பொறந்தா பொறுப்பு வந்தாலும் வரலாம், பெத்துக்குவோமா சிவா?”
கண்ணைச் சிமிட்டியபடியே கேட்டவன், அருகே படுத்திருந்த மனைவியை தனக்கு மிக நெருக்கமாக கொண்டுவர, “நம்ம கவர்மென்ட் நாமிருவர், நமக்கொருவர்னு சொல்லியாச்சு… தெரியும்ல மாமா?”
நமுட்டு சிரிப்போடு கணவனிடம் கேட்ட சிவரஞ்சனி, “அப்பப்ப, நீ நர்ஸம்மா ங்குறதை ப்ரூஃப் பண்ணுற டி, என் பொண்டாட்டி” என்று அவன் அலுத்துக் கொண்டதில், வாய்விட்டு சிரித்தாள்.
ஆமாம்… இப்போது வரைக்கும் சிவரஞ்சனி செவிலியப் பணியில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறாள். பிணி கொண்ட மக்களின் முகத்தில், புன்னகையை அரும்பச் செய்யும் அரும்பெரும் சேவையை, அவள் விரும்பியே செய்ய, பிள்ளை வளர்ப்பில் அவளுக்கு, அக்கா, அத்தைகள் என்று அனைவரும் துணையாக இருக்கிறார்கள்.
பேசிக்கொண்டிருந்த சிவரஞ்சனியின் கண்கள் தன்னை மறந்து, தூக்கத்துக்கு சொக்க, “சிவா… சிவா..” என்று மனைவியை எழுப்பினான் அருண்…
“ஐயையோ… என் ப்ளானை எல்லாம் நீ சொதப்பிடுவ போலயே” பதறினான் அவள் கணவன்.
“என்ன சொன்னீங்க மாமா?”
“இல்ல…எங்கூட வா…, இதைவிட அருமையான இடத்துல போய் தூங்கலாம்னு சொன்னேன்…”
“இதே நல்லாதான் இருக்கு. நான் இங்கயே தூங்கிக்கறேன்” தலையணை வாகாக வைத்துக் கொண்டு, சிவரஞ்சனி தூங்க முயன்றாள்.
“உன்ன இப்படி எல்லாம் கூப்பிட்டா வர மாட்ட…” என்றவன் மனைவியை தன் கைகளில் அள்ள முயன்றான்.
“ம்ப்ச்… இன்னைக்கு உங்களுக்கு என்னாச்சு மாமா? ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க?” கணவனிடமிருந்து நழுவ முயன்றபடியே கேட்டவள், “விடுங்க நானே வரேன்” என்றபடி, கழற்றி போட்டிருந்த ஷாலை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
“இப்போ இது ரொம்ப அவசியம்” என்று முணுமுணுத்தவன், ஷாலை பிடுங்கி கட்டிலில் எறிந்து விட்டு, மனைவியின் கையைப் பிடித்து வெளியே அழைத்து வந்தான்.
வெளியே வந்தவன், யாரும் தென்படுகிறார்களா? என்று சுற்றும் முற்றும் பார்த்தான். புரியாமல் பார்த்தவளுக்கு, கணவன் தன் கைப்பிடித்து அழைத்து சென்ற திசையைக் காணவும், அவன் எண்ணம் புரிந்தது.
ஆனாலும் எதுவும் தெரியாதவள் போல, “தூங்கலாம்னு சொல்லிட்டு இங்க எங்க கூட்டிட்டு போறீங்க மாமா? என்றாள்.
“ம்ம்… தூங்கத்தான் போறோம்.”
“எங்க அருவியில போயா?” கிண்டலாகக் கேட்டவள், மெல்லிய நிலவொளியில் கணவனின் முகத்தில் பளிச்சிட்ட மந்தகாச புன்னகையைக் கண்டு, அவன் இடுப்பில் கிள்ளியபடி,
“ஆறு வயசுல ஒரு புள்ளையை வச்சிட்டு, இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் மாமா உங்களுக்கு” என்றாள்.
“பிள்ளையோட வயசைச் சொல்லிச் சொல்லி, எனக்கு வயசாகிடிச்சோன்னு ஃபீல் பண்ண வச்சிடலாம்னு நினைக்கிற, உன்னோட இராஜதந்திரம் எல்லாம் எங்கிட்ட செல்லாது அம்மணி” என்றவன், மனைவியின் இடுப்பில் கைகொடுத்து தன்னோடு அணைத்தபடியே, முதல் அருவியின் படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தான்
படிக்கட்டு முடிந்து, சிற்றோடையாய் ஓடிக்கொண்டிருந்த அருவி நீரில் இருவரும் கால்வைக்க, அருவியில் குளித்ததனால் உடல் நனைய, தங்களுக்கு முன்னால் நின்றிருந்த ஜோடியைக் கண்டு, இருவருக்குமே அதிர்ச்சியில் விழிகள் விரிந்து போயின.
அந்த அரையிருட்டில் அங்கே, அப்போது, யாரையும் எதிர்பார்க்காத சிவரஞ்சனியோ, அதிர்ச்சியில் கணவனைக் கட்டிக் கொண்டு மெல்லியதாக அலறவே செய்துவிட்டாள்.
அவர்களை அத்தனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜோடி, வேறு யாருமல்ல. சசிதரனும், சந்த்ரிகாவும் தான்.
“ஹேய்… ஷாக்கை குறைங்கப்பா… எங்களை விட சின்னவங்க, உங்களுக்கே இந்த ஐடியா வரும்போது, எங்களுக்கு வரக்கூடாதா?” கேலியாக கேட்ட சசிதரன்,
“நாங்க குளிச்சு முடிச்சாச்சு. நீங்க போங்க” என்று சொல்ல, வெட்க்கத்தில் கணவனின் முதுக்கு பின்னால், மறைந்து கொண்டாள் சந்த்ரிகா.
“ம்ஹூம்… ஆனாலும் இந்த அப்பிராணி மாதிரி இருக்குறவங்களை எல்லாம் நம்ப கூடாது சிவா.”
சத்தமாக சொல்லிய தம்பியைப் பார்த்து சிரித்தபடியே மனைவியோடு படிகளில் சசிதரன் மேலே செல்ல, மனைவியின் கைகளை பிடித்து கொண்டு அருவியை நோக்கி சென்றான் அருண்.
“உன்னை இந்த அருவி பக்கத்துல பாத்த அன்னைக்கே, இப்படி குளிக்கணும்னு ஆசையா இருந்தது. அன்னைக்கு அக்கா பசங்க மட்டும் கூட இல்லாம இருந்திருந்தா, கண்டிப்பா குளிச்சிருப்பேன்.”
மனைவியின் முகத்தோடு தன் முகத்தை இழைத்தபடியே அருண் சொல்ல, “ம்ம்… அன்னைக்கு மட்டும் அப்பிடி செய்துருந்தீங்கன்னா, கண்டிப்பா உங்களை இப்பிடி கடிச்சே வச்சிருப்பேன்..” என்ற சிவரஞ்சனி, கணவனின் கழுத்தில் பொய்யாக கடித்து வைத்தாள்.
அதன்பிறகு அவர்களுக்கிடையே, அங்கே நடந்த செல்லச் சண்டையில், இப்படி ஒரு ஜோடியைத் தங்கள் வரலாறில் பார்த்ததே இல்லை என்பது போல, ஆர்ப்பரித்து கொட்டியது அருவி…
மறுநாள் சாயங்காலம் வரை அங்கே தங்கியிருந்து விட்டு, எல்லோரும் வீடுவந்து சேர்ந்திருந்தார்கள்.
அடுத்த நாள் காலையில் அபிநந்தனும், நந்தனாவும் சமத்து சக்கரைகட்டிகளாக பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருந்தார்கள்.
ஆனால், அவினாஷ், அத்தான்கள் இருவரையும் விட்டு விட்டு பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டிருந்தான்.
சிவரஞ்சனியும் அவன் பிடிவாதத்துக்கு மடங்காமல், அவனை பள்ளிக்கு அனுப்பி வைப்பதிலேயே குறியாக இருந்தாள்.
கடைசியில் சிவரஞ்சனியே ஜெயிக்க, பள்ளிக்கு சென்றிருந்தான் அவினாஷ்.
அவர்கள் கடைக்கு அன்று விடுமுறை என்பதால், ஒரு பத்து மணிக்கு போல வீட்டு ஆண்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, காலை உணவை இராஜேஸ்வரி பரிமாற உண்டு கொண்டிருந்தார்கள்.
சிவரஞ்சனிக்கும் அன்று மத்தியானத்துக்கு மேல், ஹாஸ்பிடல் போனால் போதும் என்பதால், சாவகாசமாக வீட்டில் நின்று கொண்டிருந்தாள்.
அப்போது அருணின் கைபேசி அழைத்தது. அதை உயிர்ப்பித்து காதுக்கு கொடுத்தவன்,
“ம்ம்… அவினாஷ் அப்பா தான் மேம் பேசுறேன்…”
“ஓ… அப்படியா மேம்?…
“இதோ கிளம்பி வர்றேன் மேம்…” பவ்யமாக அருண் பேச, கேட்டுக் கொண்டிருந்த எல்லோருக்குமே, அழைப்பு குழந்தைகளின் பள்ளியிலிருந்து வந்திருக்கிறது என்று புரிந்தது.
ஆனால்… ஏன், எதற்காக, என்று தெரியாமல் அருணிடம் கேட்டார்கள்.
அவனோ, திருடனுக்கு தேள் கொட்டியது போல, “அவினாஷ் க்கு வயிற்று வலியாம். ரொம்ப முடியாம க்ளாஸ்ல அழுதுட்டே இருக்கானாம்… அதான் வந்து கூட்டிட்டு போங்கன்னு, ஸ்கூல்லயிருந்து ஃபோன் பண்ணி சொல்லுறாங்க” என்று சொன்னான்.
அடுத்த வினாடியே எழுந்த சிரிப்பு சத்தத்தால், அதிர்ந்தது அந்த வீடு..