ஒரு முடிவின் துவக்கம்…
அத்தியாயம் — 1
மணக்கோலத்தில் ஜோடியாய் நின்றிருந்த தன் மகளைப்பார்த்து பூரித்துப்போனார்கள் ராமனும்.. சுமதியும். இதுபோல் ஒரு தருணத்திற்காக அவர்கள் வேண்டாத தெய்வமில்லை.. தன் மகளை நிறைய பேர் பெண் கேட்டிருந்தாலும் பெண்ணின் வயதை கேட்டதும்.. பதிலின்றி கிளம்பிவிடுவார்கள். ஒரு சிலபேர் இரண்டாம் தாரமாகவும் கேட்டுவிட மனம் நொந்து போவார்கள். ஒரு கட்டத்தில்.. நிவேதாவின் பெற்றோரே தன் மகளுக்கு நாற்பது வயது மதிக்கத்தக்க மணமகன்தான் கிடைப்பான் என எதிர்பார்த்திருக்க.. அவர்கள் எதிர்பார்த்ததற்க்கு மாறாக சர்வ லட்சணங்களுடன்.. முப்பத்தி ஒரு வயது நிரம்பிய மணமகன் கிடைக்கவும் இருபத்தி ஒன்பது வயதான நிவேதாவின் திருமணம்.. இனிதாய் முடியவே அவர்களின் சந்தோசத்திற்க்கு அளவே இல்லை.
‘ராஜய்யா.. நீங்க இல்லன்னா.. எங்கக்காவுக்கு இப்படியொரு மாப்பிள்ளை அமைஞ்சிருக்கவே மாட்டாரு.. இனி எங்கப்பா மட்டுமில்ல.. நானும் உங்களுக்கு கடன்பட்டவன்தான் ராஜய்யா..” என்று இளமாறன் உணர்ச்சிப்பூர்வமாக சொன்னான்.
‘மாறா.. நீயும் என்ன உங்கப்பா மாதிரியே பேசிட்டிருக்கிற..? அதுவும் புதுசு புதுசா கண்ணெல்லாம் கலங்குது.. இப்படி இளமாறனை எனக்கு பிடிக்காது.. நான் என்ன செய்துட்டேன்..? மாப்பிள்ளை வீடு ரொம்ப வசதியா இருந்தாலும்.. அவங்கம்மாக்கு கொஞ்சம் முடியாம இருக்கு.. அதனால வசதியில்லைன்னாலும் பரவாயில்ல.. எங்கம்மாவை நல்லபடியா பார்த்துக்கிற பொண்ணு இருந்தா சொல்லுங்கன்னு என்கிட்ட கிசோர் ரொம்ப கேட்டுக்கிட்டான். பையன்வேற பேக்ங்ல வேலைல இருக்கான்னதும்.. எனக்கு உடனே நிவேதா நியாபகம்தான் வந்திச்சி. நான் நிவேதாவைப்பத்தி சொன்னதும் அவங்க உடனே பொண்ணுகேட்டு வந்திட்டாங்க.. அதுவும் நம்ம நிவேதாவைப் பார்த்ததும் கிசோர் இருபத்திஒன்பது வயசுன்னு நம்பவே முடியலைன்னு சொன்னான்.
நம்ம நிவேதாவைக் கட்டிக்க யாருக்கு கசக்கும்..? அழகான பொண்ணு.. எம்.எஸ்.சி. படிச்சிருக்கு.. இது எல்லாத்துக்கும்மேல நிவியோட நல்ல குணத்துக்கு.. நம்ம நிவியை கட்டிக்க கிசோர்தான் கொடுத்து வச்சிருக்கனும்..” என்றார் பெருமையாக.
‘அவங்ககிட்ட வசதி கம்மின்னுதான் சொல்லிவச்சிருந்தேன்.. இவ்ளோ நகை போட்டிருக்காங்க.. கார்.. பேங்க் பேலன்சுன்னு வேற போட்டிருக்காங்க.. கல்யாணத்துக்கப்புறம் எங்களோட இருப்பாங்களா..? இல்ல தனிக்குடித்தனம் போய்டுவாங்களான்னு இப்ப கிசோர் வீட்லதான் பயந்துக்கிறாங்க..” என்றார் ராஜன்.
‘ராஜய்யா கிசோர் மாமாவோட அம்மா.. இனி எங்கக்காக்கும் அம்மாமாதிரிதான். எங்கக்கா அப்படி செய்யாது.. போகப்போக அவங்களே நிவியைப்பத்தி புரிஞ்சிப்பாங்க..” என்றான் இளமாறன்.
‘இதை நீ சொல்லித்தான் எனக்கு தெரியனுமா மாறா..? உண்மையை சொல்லனும்னா.. நிவேதா மாதிரி குணமுள்ள பொண்ணை கல்யாணம் செய்துக்கிறதுக்கு அவங்கதான் கொடுத்து வச்சிருக்கனும்.. ‚’ என்றார் மீண்டும்.
‘ஆமா.. நானே நீ இவ்ளோ சீர்சினத்தி செய்வன்னு நினைக்கல.. உனக்கேது இவ்ளோ பணம்..? என்கிட்ட கேக்க கஷ்டப்பட்டுகிட்டு வேலை செய்யிற இடத்தில ஏது லோன் வாங்கிட்டியா…? அப்பகூட இவ்ளோ பணம் தரமாட்டாங்ளே.. வெளில எங்கையாவது வட்டிக்கு வாங்கிட்டியா மாறா..?” என்றார் சற்று பதட்டமாக.
‘நான் எதுக்கு கடன் வாங்கப்போறேன்..? எல்லாம் நாங்களும் சம்பாதிப்போம்ல…” என்று சிரித்துக்கொண்டே தன் மீசையை முறுக்கினான் இளமாறன்.
‘பணம் கொடுக்கும்போது நீ வேணான்னப்ப கூட.. நீ இவ்ளோ செய்வன்னு நான் எதிர்பார்க்கல.. சரி எப்படியும் தேவைப்படும்.. அப்போ கொடுத்துக்கலாம்னு தனியாதான் எடுத்து வச்சிருந்தேன்.. உனக்கேது மாறா இவ்ளோ பணம்..?” என்று மீண்டும் கவலையுடன் கேட்டார் ராஜன்.
[the_ad id=”6605″]
‘ராஜய்யா.. நான் ஆடிட்டிங் பண்ணிட்டிருக்கேன்.. அதுவும் ஒன்னு இல்ல.. நாலு கம்பெனிக்கு பண்ணிட்டிருக்கேன்.. எல்லாம் என் திறமைக்கு கிடைச்ச பணம்தான்.. நீங்க கவலைப்படாதிங்க.. இன்னும் ஒரு ஐம்பது லட்சம் கிட்ட கையிருப்பு கூட இருக்கு.. சரி.. சோபனாக்கும் இருப்பத்தி ஐஞ்சு வயசாகுது.. இனி அவளுக்கும் உடனே பார்த்திடலாம்னுதான் அந்த பணத்தை அப்படியே வச்சிகிட்டேன்.. இல்லன்னா அந்த பணத்துக்கும் நிவேதாக்கே எதாவது செய்திருப்பேன்.” என்றான்.
பெருமையுடன் இளமாறனைப் பார்த்தவர்.. ‘உனக்கும்தான் இருபத்திஏழு வயசாகுது.. அதையும் மனசில வச்சிக்கோ.. உங்கக்கா தங்கை அழகுல.. நீ பாதி இருந்தாலாவது பரவாயில்ல.. நீவேற கொஞ்சம் இல்ல.. ரொம்..ப சுமாராதான் இருக்க.. அதுக்காக உன்னை அப்படியே விட்டுட முடியுமா என்ன..? நம்ம ராமு மகனா வேற போய்ட்ட.. பணத்தை காட்டியாவது எதாவது நல்ல பொண்ணாப் பார்த்து மடக்கிபோடனுமில்ல.. அதனால உனக்கும் கொஞ்சம் சேர்த்து வை..” என்று நக்கலாய் சொல்லி சிரித்தார் ராஜன்.
ராஜாவை முறைத்தவன்.. ‘நிவி.. சோபனாவை விட கலர் கொஞ்சம் கம்மின்னதும் நான் சுமாரா இருக்கேனா..? அதுவும் ரொம்ப சுமாரா இருக்கேனா..? உங்களுக்கு கல்யாணவயசில ஒரு மகள் இல்லாம போச்சி.. இல்லன்னா நீங்க என்னை பழிச்சதுக்கு.. காலம் எல்லாம் இந்த சுமாரான மாப்பிள்ளையையே பார்த்திட்டு இருக்கிற மாதிரி.. நானே உங்க மகளை தூக்கிட்டுபோய் கல்யாணம் செய்திருப்பேன்..‚” என்றான் இளமாறன்.
‘யாரு…? நீயா..? கல்யாண வயசு மக இருந்திருந்தா மட்டும்..‚ தூக்கிட்டுப்போய் கல்யாணம் செய்திருப்பியா..? இப்ப இந்த கூட்டத்தில.. எதாவது ஒரு பொண்ணுகிட்ட போய்.. பயமில்லாம நாலு வார்த்தை பேசி காட்டு பார்ப்போம்..” என்றார் சவாலாக.
இளமாறன் முறைக்கவும்.. ‘பத்தாவதுதான் படிக்கிறா.. என் பொண்ணு.. லாவன்யாகிட்ட பேசி உன்னால ஜெயிக்க முடியலை.. இதுல வாய் மட்டும் வானம் வரைக்கும் நீளுது.. லாவன்யாக்கு மட்டும் கல்யாண வயசா இருந்திருந்தா.. இந்நேரம் உன்னை என்ன செய்தின்னு கேட்டிருப்பா…” என்று தன் மகளின் பெருமையை பேசிய ராஜன்.. இப்படி யாரிடமும் சகஜமாக பேசுபவர் கிடையாது. இளமாறனிடம் மட்டுமே இந்த மாதிரியான பேச்சுகள்.
‘ராஜய்யா.. ஒரு உண்மையை சொல்லட்டுங்களா..? எனக்கு இப்பவே லாவன்யான்னா கொஞ்சம் பயம்தான்.. அவளுக்கு நீங்க என்கிட்ட இப்படி சகஜமா பேசறது சின்ன வயசில இருந்தே பிடிக்காது.. நான் உங்ககிட்ட பேசும்போதெல்லாம் என்னை முறைச்சிட்டே இருப்பா.. நான்தான் அதை கண்டுக்காத மாதிரி இருந்திடுவேன்.. அவ எல்.கே.ஜி படிக்கும்போதே.. நீ எதுக்கு எங்கப்பாகிட்ட பேசற..? போய் உங்கப்பாகிட்ட பேசுன்னு திட்டுவா.. சரியான பொறாமைக்காரி..” என்று சிரித்தான் மாறன்.
‘ஆமாம்மா.. அது எனக்கும் தெரியும்..” என்று ராஜனும் சிரித்தார்.
‘மாறா.. அம்மா கூப்பிட்டாங்க..” என்றாள் சோபனா.
‘சரி மாறா.. நான் கிளம்பறேன்..” என்று ராஜன் விடைபெற்றார். பிறகு பெண்அழைப்பு.. மாப்பிள்ளை வீட்டு அழைப்பு என மாலைவரை இளமாறனுக்கு நிற்க நேரமில்லை.. மாலை ஆறு மணிபோல் நிவேதாவை கிசோர் வீட்டிற்கு அனுப்பியதற்கு பிறகு சோபனாவும்.. இளமாறனும் மிகவும் மனம் வாடிவிட்டனர்.
நிவேதாவின் அம்மா.. நிவேதாவிற்கு விபரம் அறிந்த நாளிலிருந்து துணிதைப்பதை தவிர வேறு வீட்டு வேலைகள் செய்ய மாட்டார். எல்லாம் நிவேதாதான் செய்வாள். சோபனாவையும் எந்த வேலையும் செய்ய விடமாட்டாள். இளமாறனின் அப்பா அதிகாலை ராஜன் வீட்டிற்கு தோட்ட வேலை செய்ய கிளம்பினார் என்றால்.. இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வருவார். ஏப்படியாவது மூவரையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அயராது உழைப்பார். இளமாறனின் அம்மா தன் கணவனுக்கு சிறிதும் குறைவில்லாமல் துணிதைப்பதில் சம்பாரித்து கொடுப்பார். தன் அம்மாவின் வேலை சுமையை குறைப்பதற்காகவே நிவேதா தனது பத்து வயதிலிருந்தே வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
நிவேதாவை வழியனுப்ப தைரியமற்றவராய்.. மரியாதை நிமித்தமாக கிசோரிடம் மட்டும் சொல்லிவிட்டு.. வெளியில் கிளம்பிவிட்டார் இராமன்.
‘மாறா.. என்னடா இது..? எல்லார் வீட்லயும் பொம்பளை பிள்ளையை கல்யாணம் செய்துகொடுக்கும்போது அப்பாம்மாதான் அழுவாங்க..? இங்க.. நான் மட்டும்தான்.. என் பொண்ணை நல்லபடியா கரையேத்திட்டோமேன்னு சந்தோசத்தில.. தைரியமா அழாம இருக்கேன்.. நிவேதா கிளம்பினதுக்கப்புறம்.. உங்கப்பாவை என்னடான்னா.. ஆளையே காணோம்.. இதுல.. நீங்க ரெண்டுபேரும் ஏண்டா இப்படி உக்கார்ந்திருக்கிங்க..? எனக்கு மட்டும் நிவேதா மேல பாசம் இல்லையா..? உங்க ரெண்டுபேரையும் பார்த்து இப்ப எனக்கும் அழ வருது..” என்று கண்கலங்கினார் சுமதி.
[the_ad id=”6605″]
‘அழாதம்மா.. காலைல எழுந்து டீ குடுக்கறதில இருந்து.. நைட் தூங்கும்போது பால் குடிக்கிற வரைக்கும்.. எல்லாம் நிவி கையிலயே பழகிட்டோமா.. அதான் ரொம்ப ஒரு மாதிரியிருக்கு..” என்று கண்கலங்கினான் இளமாறன்.
இளமாறன் எம்.காம்.. முடித்ததும் ஒரு நிறுவனத்தில் அக்கௌன்ட் வேலைகிடைக்க.. நான்கு மாதம் அந்த வேலையை மட்டும் பார்த்திருந்தவன்.. அந்நிறுவனத்திற்கு வருமானவரி பிரச்சனை வர.. அந்த நேரம் அந்நிறுவனத்தின் ஆடிட்டர் வெளியூரில் இருக்கவும்.. இளமாறன்தான் எளிதாய் அந்த பிரச்சனைக்கு வழி சொன்னான். அதன் பிறகு.. இளமாறனின் திறமையைப் பார்த்து அயர்ந்தவர்கள்.. அவனே அந்நிறுவனத்தின் ஆடிட்டராக பணிபுரிய கேட்டார்கள்.. பத்தாயிரம் ரூபாய்க்கு அக்கௌன்டன்ட் வேலைக்கு சேர்ந்தவன்.. ஆடிட்டராக பதவி உயர்வுடன் நான்கே மாதத்தில் இருபத்தி ஐந்தாயிரம் சம்பளம் கொடுத்து அவனை தக்கவைத்து கொண்டனர் அந்த நிறுவனத்தினர்.
சிறிது நாள்களுக்கு பிறகு இவனின் திறமையை கண்டு மற்ற கம்பெனிகளும் ஆடிட்டிங் செய்ய கேட்க.. இப்பொழுது கடந்த இரண்டு வருடமாக நாலு கம்பெனிகளுக்கு ஆடிட்டிங் பார்த்துக்கொண்டிருக்கிறான். இரண்டு வருடமாக.. அவனின் மாத வருமானம் மூன்று லட்சத்திற்கும் மேல்.. அது தவிர சேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட்.. சில பெரிய புள்ளிகளின் கணக்கில்லா சொத்துக்களுக்கும் இவனே அட்வைசராக இருக்க.. அவர்களிடம் பெறும் கமிசன் பணம்.. அவர்களை பொருத்தவரை குறைந்த பணம் என்றாலும்.. சில சமயம் அந்த பணம் இவனது மாத வருமானத்தையே மிஞ்சிவிடும்.
அதனாலேயே குறுகிய காலத்தில் அவனிடம் இவ்வளவு பணம் சேமிப்பு இருந்தது. பணம் இருந்தாலும் தன் வீட்டை மாற்றி அமைக்கவோ.. அதிக ஆடம்பர வாழ்க்கை என்றோ.. இதுவரை அவனின் பணத்தை வெளிகாட்டாமல்தான் இருந்தான். அவனின் எண்ணமெல்லாம் முதலில் தன் கூடப்பிறந்தவர்களின் வாழ்க்கை சரியாகவேண்டும் என்பது மட்டுமே..
அவன் செய்த ஒரே ஒரு மாற்றம்.. இரண்டு வருடமாக எக்காரணம் கொண்டும் தன் அம்மாவை துணிதைக்க விடுவதில்லை. தன் அப்பாவையும் வேலைக்கு போகவேண்டாம் என்றுதான் சொன்னான். ஆனால் இராமனுக்கு.. ராஜன் வீட்டு தோட்டத்திற்கு செல்லவில்லையென்றால் அன்றைய பொழுது அவருக்கு நகரவே நகராது. இராமன்.. அவருடைய திருமணத்திற்கு முன்பிருந்தே அங்குதான் வேலை செய்துகொண்டிருக்கிறார். கிட்டதட்ட நாற்பது வருடங்களாக.
எனவே தன் அப்பா வேலைக்கு போயே தீருவேன் என்று உறுதியாக சொல்லவும்.. நேராக ராஜனிடம் சென்று தன் அப்பாவிற்கு இனி சம்பளம் தரவேண்டாம்.. அவர் இங்கு வந்து என்ன வேலை செய்யமுடியுமோ.. அதைமட்டும் செய்யட்டும். அதிக வேலைப்பளு கூடவே கூடாது.. என்று திட்டவட்டமாக இளமாறன் சொல்லிவிட்டான். இளமாறனின் இந்த பண்பே ராஜனுக்கு மாறனை இன்னும் இன்னும் பிடிக்க வைத்தது.
ராஜன் என்பவர் இராமுவின் எஜமானர் மட்டுமல்ல.. ஊரில் முக்கியஸ்த்தர்களில் ஒருவர். மிகநல்லவர்.. இளமாறன் பேசுவதுபோல் யாரும் அவரை ராஜய்யா என அவரை அழைத்துவிட முடியாது. அவ்வூரில் அவனுக்கு தெரிந்து அனைவரும் ஐயா.. அல்லது சின்னைய்யா என்றுதான் அழைப்பார்கள். இளமாறனை சிறுவயதில் ஒருமுறை ராஜய்யா என சொல்லக்கூடாது.. ஐயான்னு மட்டும்தான் சொல்லனும்னு என்று ராஜனின் அப்பா மிரட்ட.. உங்களையும் ஐயா சொல்ல சொல்றாங்க.. நான் ஐயான்னு கூப்பிட்டா யாரை கூப்பிடறேன்னு உங்களுக்கு புரியத்தான் நான் உங்களை ஐயா.. சொல்லிட்டு.. ராஜய்யாவை… ராஜய்யான்னு கூப்பிடறேன்.. என்று சிறு வயதிலேயே பயமில்லாமல் இளமாறன் சொல்ல.. ராஜனுக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. அன்றிலிருந்து இளமாறனிடம் நட்பாகவே பழகினார் ராஜன்.
மூவரின் படிப்பிற்காக நிறையமுறை இராமுவிற்கு உதவியிருக்கிறார் ராஜன். இராமுவாய் பார்த்து பணத்தை திருப்பி கொடுக்கும்போதுதான் வாங்கிகொள்வார். அவராக பணத்தை திருப்பிதர கேட்கமாட்டார். ஒரு சில நேரம் பணம் வேண்டாம் என்று ராஜன் சொன்னாலும் இராமு கட்டாயப்படுத்தி கொடுத்துவிடுவார். இளமாறனுக்கு முன்பே நிவேதா படிப்பை முடித்திருந்தாலும் எங்கும் வேலைக்கு செல்ல இராமு அனுமதிக்கவில்லை. கவர்ன்மென்ட் வேலைக்கு முயற்ச்சி செய்.. அது கிடைச்சா போ.. இல்ல போகவேண்டாம்.. என்று தன் அப்பா சொல்ல.. அவளும் எத்தனையோ பரிச்சையை எழுதினாள். ஆனால் அரசு வேலை கிடைக்கவில்லை. எனவே வீட்டிலிருந்தபடியே டியூசன் மட்டும் எடுக்க அனுமதித்தார். அதுவும் இளமாறன் எடுத்து சொன்னதால் ஒப்புக்கொண்டார்.
[the_ad id=”6605″]
ஆனால் சோபனா.. நிவேதாவைப்போல் அல்ல.. மாறன் மட்டும் போறான்.. நான் மட்டும் போகக்கூடாதா..? பசங்களுக்கு ஒரு நியாம்.. பொண்ணுங்களுக்கு ஒரு நியாமா..? என கேட்டு அடம் பிடித்து வேலைக்கு சென்றுகொண்டிருப்பவள். சோபனா கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்து.. தனியார் கம்பெனியில் மூன்று வருடமாக பணிபுரிகிறாள்.
சோபனா வேலைக்கு போக ஆரம்பிக்கும்போது.. இளமாறன் சம்பாதிக்க ஆரம்பித்திருந்ததால்.. சோபனாவின் சம்பளத்தை நகையாக மாற்றிக்கொண்டிருந்தார் சுமதி. இப்படியாக அவர்களின் வாழ்க்கை.. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தில் இருந்தபோதும்..
எப்போதும் மாறனின் பெற்றோர் முகத்தில் நிலைத்த புன்னகை இருந்ததில்லை.. தன் மகளை விட சின்ன பொண்ணுங்களெல்லாம் திருமணம் முடிந்து.. அவர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கும் நிலையில் இருக்க.. நிவேதாவிற்கு நல்ல வரன் அமைய வேண்டி மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்கள்..
இதோ இப்பொழுது நடந்த நிவேதாவின் திருமணம்.. அவர்களின் ஐந்து வருட துயரத்தை துடைத்தெறிய அப்படி ஒரு மனநிறைவு அவர்களுள்.