ஒரு முடிவின் துவக்கம்…
அத்தியாயம் — 10
சோபனாவின் திருமணம் முடிந்த மூன்றாவது நாள் வீட்டை விட்டு கிளம்பிய மாறன்.. இரண்டு மாதம் கழித்து இப்பொழுது நான்கு நாட்களாகத்தான் தொடந்து வீட்டில் இருந்தான். தன் அப்பாவிடம்.. வீட்டுகட்டும் வேலையை ஆரம்பிக்கலாம் என ஆலோசித்துக்கொண்டிருந்தான்.
‘என்ன மாறா.. இப்படி வீடே தங்கமாட்ற..? நாங்க ரெண்டுபேரு மட்டும் வீட்ல இருக்கிறதுக்கு பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்குடா..” என்றார் சுமதி.
‘ம்மா.. எப்படியும் இரண்டு வாரம் வீட்ல.. இரண்டு வாரம் வெளில இருக்கிறமாதிரிதான் வரும்..” என்றான்.
‘என்ன..? மாசத்தில பாதி நாளைக்கு வீட்லயே இருக்கமாட்டியா..? என்னால வீட்ல தனியா இருக்க முடியலடா..” என வருந்தினார்.
‘அப்போ தினமும் ராஜய்யா வீட்ல இருந்து அப்பாவை சீக்கிரம் வரசொல்லு..”
‘அது மட்டும் உங்கப்பாகிட்ட வேலைக்கே ஆகாது.. அப்படியே உங்கப்பா வந்தார்ன்னாலும்.. நீயும் வீட்ல இரு மாறா..” என ஆரம்பிக்க..
‘ம்மா.. பசிக்குது.. சாப்பிட என்ன இருக்கு..?” என்றான்.
‘சாம்பாரும் சட்னியும் செஞ்சி வச்சிருக்கேன்.. இட்லி சாப்பிடறதா இருந்தா நான் ஊத்தி தரேன்.. தோசைன்னா நீயே ஊத்திக்கோ.. நான் ஊத்தினா மொத்தமா வருது..”
‘எனக்கு சலுப்பா இருக்கு.. நீ இட்லியே ஊத்துமா..” என்றான்.
‘சரி..” என்று உள்ளே போனவர்.. பத்து நிமிடம் கழித்து.. ’மாறா.. சாப்பிட வா..” என்றழைக்க மாறன் சாப்பிட உக்கார்ந்தான்.
தட்டில் நான்கு தோசைகள் தான் இருந்தது. ஆனால் அதுவே தட்டை நிறைத்திருந்தது. ‘ம்மா… இது இட்லியா..? இல்ல தோசையா..?” என்று புன்முறுவலோடு கேட்டான்.
‘உனக்குதான் இட்லி பிடிக்காதில்ல.? அதான் தோசை சுட்டேன். ஆனா.. நீ இதை இட்லியா நினைச்சே சாப்பிட்டுக்கோ..” என்றார் சுமதி.
சிரித்துக் கொண்டே ஒருவாய் தோசையை உள்ளிரக்கியவன்.. தன் அம்மாவின் கைபக்குவத்தில் வைத்த சாம்பாரின் சுவைக்கும்.. காரசாரமான சட்னியின் சுவைக்கும் அடிமையாகி.. வேகவேகமாக சாப்பிடவும்..
‘மாறா இன்னொரு தோசை ஊத்தட்டுமா..?” என கேட்டார்.
‘யப்பா.. இதுக்குமேல என் வயித்தில இடமில்லமா.. உண்மையாவே இந்த சாம்பார் சட்னிக்கும்.. இந்த தோசைக்கும் நான் அடிமையாய்ட்டேன்.. இனி இப்படியே நீ தோசை சுடு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று பாராட்டவும் சந்தோசமடைந்தவர்…
‘மாறா.. நந்தினிக்கு சமைக்க தெரியுமா..?” என்றார் ஆர்வமாக.
நந்தினி பேச்செடுக்கவும் சந்தோசமானவன்.. ‘தெரியலையே ம்மா.. நான் இன்னும் கேட்டதில்ல.. அவளுக்கு சமைச்சி சாப்டிட்டிருக்காதான..? சமையல் தெரியாமையா இருக்கும்.?” என்றான்.
‘தெரிஞ்சிருக்கும்.. ஆனா நம்ம நிவி சமைக்கிறதுக்கும்.. சோபி சமைக்கிறதுக்கும் வித்யாசம் இருக்கில்ல..? ஒரு வேளை நம்ம சோபிமாதிரியேது சமைச்சி சாப்டுட்டிருந்தானா..?” என்று சுமதி கேட்கவும்..
சிரித்தவன்.. ‘ஆனாலும் நம்ம சோபி சமைக்கிறமாதிரி சமைச்சான்னா.. நம்ம பாடு திண்டாட்டம்தான்.. ஒன்னு பண்ணுங்க.. அவளுக்கு போன் செய்றேன்.. ஒழுங்கா சமைச்சி கத்துக்கோன்னு நீங்க அவளை மிரட்டுங்க..” என்று தன் மொபைலை எடுத்தான்.
‘வேணாம்.. வேணாம்.. நான் பேசலை. சோபி கல்யாணத்திலயே அவ என்கிட்ட சரியா பேசலை.. நம்ம நிவிகிட்ட மட்டும் நல்லா பேசிட்டிருந்தா.” என்று சுமதி கோபித்தார்.
‘என்ன தைரியம்..? உங்ககிட்ட சரியா பேசாம இருந்தாளா..? ஒரு மாமியார்ன்ற மரியாதை கூட தெரியலையா அவளுக்கு..?” என மாறன் பொய் கோபம் காட்டவும்..
மாறன் கோபத்தை உண்மையென நம்பிய சுமதி.. ‘விடு மாறா.. புதுசா பேசறதுக்கு அவளுக்கும் ஒரு மாதிரியிருக்கும்ல..? கல்யாணம் ஆகிட்டா எல்லாம் சரியாய்டும்.. நீ அவளை ஒன்னும் சொல்லாத.. அப்புறம் நம்ம சின்னைய்யா மனசு கஷ்டப்படுவார்..” என்று சுமதி சொல்லவும் மாறனுக்கு இதுவரை இருந்த இலகுத்தன்மை போய் கோபம்தான் வந்தது.
‘ம்மா.. அவ ராஜய்யா மகளா இருந்தாலும் சரி.. யாராயிருந்தாலும் சரி.. உங்களுக்கு அவ மருமக.. அவ்ளோதான்..‚ அவகிட்ட எதாவது சரியில்லைன்னா.. அவளை அதட்டறதுக்கும்.. திட்றதுக்கும் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. புரியுதா…?”என்றான் உயர்த்திய குரலில்.
மாறனின் குரல் கேட்டு உள்ளே வந்த ராமு.. ‘என்னாச்சி மாறா..?”என்றார்.
[the_ad id=”6605″]
தன் அம்மா சொன்னதை சொன்னவன்.. ‘அப்பா.. உங்களுக்கும் இதேதான் சொல்றேன்.. ஒரு பொண்டாட்டியா அவ எனக்கு எவ்ளோ முக்கியமோ.. அதுக்கு கொஞ்சமும் குறைவில்லாம.. நீங்க எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.‚ ராஜி.. ராஜய்யாவோட மகன்ற நினைப்பை விட.. அவ நம்ம வீட்டு மருமக.. என்னோட பொண்டாட்டிங்கிற நினைப்புதான் உங்க மனசில இருக்கனும்..‚ நம்ம சோபி.. நிவிகிட்ட எப்படி இருந்திங்களோ.. அதேமாதிரிதான் அவகிட்டையும் இருக்கனும்.. அதை விட்டுட்டு ராஜய்யாக்கு கும்பிடு போடுறமாதிரி அவகிட்டயும் நடந்துகிட்டிங்க.. அவ்ளோதான்..‚” என்றான் கோபமாக.
‘சரி மாறா..” என்ற இராமுவின் முகத்தில் தன் மகனை நினைத்து அவ்வளவு பெருமை.. தன் அப்பாவின் முகபாவனையில் தன் கோபம் குறைந்தவன்..
‘இங்க நம்ம வீட்டு பக்கத்தில எதாவது வீடு காலியா இருந்தா சொல்லுங்க.. வீடு கட்றவரைக்கும் வாடகைக்கு எடுத்துக்கலாம்..”
‘இப்போதைக்கு வேலாயுதம் ஐய்யா வீடுதாண்டா காலியா இருக்கு.. நீ வேற அவங்ககிட்ட வம்பு பண்ணி வச்சிருக்க.. நமக்கு வீடு தருவாங்களா..?” என்றார் சுமதி.
‘அப்ப ரொம்ப வசதியா போச்சி.. அதெப்படி நமக்கு வீடு தராம விட்ருவாங்கன்னு நான் பார்க்கிறேன்.” என்று வேலாயுதத்தை போனில் அழைத்தான்.
‘அப்பா குளிச்சிட்டிருக்கார்… நான் முத்து பேசறேன்..” என்றான்.
மாறன் அமைதியாக இருக்கவும்.. ‘நான் எதுவுமே பண்ணலயே..?” என்றான் பதறியவனாக.
‘ஹ..ஹ.. நீ எதாவது செய்தன்னு நான் இப்போ சொன்னேனா..? எனக்கு உங்கப்பாவைதான் பார்க்கனும்.. நான் வீட்டுக்கு வரேன்னு அப்பாகிட்ட சொல்லிடு..” என்று சொல்லி கட் செய்தான்.
‘மாறா.. நம்ம சின்னைய்யா தோட்டத்தில ஒரு வீடு காலியா இருக்கு.. நாம பேசாம அங்க போய் தங்கிக்கலாமா..?” என்றார் இராமு.
‘வேணாம்ப்பா… அது ரொம்ப தூரம்.. இங்க பக்கத்திலயே இருந்தா.. வீட்டை சிப்ட் செய்யிறதுக்கும் ஈசியா இருக்கும்.. நீங்களும் அலைச்சலில்லாம வீடு கட்றதை மேற்பார்வையும் பார்த்துக்குவிங்க.. நாம வேலாயுதம் வீட்லயே தங்கிக்கலாம்.. அதுக்கான பணத்தையும் நாம கொடுத்திடலாம்..” என வீடு கட்டுவதைப் பற்றி சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்த பின்..
‘நான் அவர் வீட்டுக்கு போய் இதுபத்தி பேசிட்டு வந்திடறேன்..” என்று சொல்லி முடிக்கவும் வேலாயுதம் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.
‘வாங்க.. வாங்க.. இப்பதான் உங்களை பார்க்க வரலாம்னு கிளம்பினேன்…” என்று முன்புபோல் இல்லாமல்.. இன்முகமாகவே வேலாயுதத்தை வரவேற்றான் மாறன்.
‘எதோ பார்க்கனும்னு சொன்னிங்கலாம்.. அதான் வந்தேன்..” என்று வேலாயுதம் மாறனிடம் மரியாதையாக பேசவும்..
‘நான் உங்களை விட வயசில ரொம்ப சின்னவன்.. வா போன்னே பேசுங்க..” என்று அவருக்கு அமர சேரை எடுத்து போட்டான்.
உக்கார்ந்தவர்.. ‘என்ன விசயம் தம்பி..?” என்றார்.
‘நாங்க வீடு கட்டலாம்னு இருக்கோம்.. வீடு கட்டி முடிக்கிற வரைக்கும் இங்க பக்கத்தில இருக்கிற உங்க வீடு கொஞ்சம் வாடகைக்கு வேணும்..” என்றான் கனிவாகவே.
‘வாடகையெல்லாம் எதுக்கு தம்பி..? நீங்க தாராளமா குடியிருந்துக்கோங்க..”
‘பழசை மனசுல வச்சிகிட்டு பேசாதிங்க.. அது வேற.. இது வேற.. நீங்க வாடகை எவ்ளோன்னு சொல்லுங்க..” என்றான்.
‘நான் பழசை மனசில வச்சிட்டுதான் தம்பி பேசுறேன்.. ஆனா.. வன்மமா இல்ல.. ரொம்ப சந்தோசமா சொல்றேன்.. உங்ககிட்ட தோத்திட்டேனேன்னு உண்மையாவே உங்கமேல நான் ரொம்ப கோபமாத்தான் இருந்தேன்.. பேசாம உங்களை வெட்டிபோட்டுட்டு ஜெயிலுக்கு போய்டலமான்னு கூட யோசிச்சேன்.. ஒரு பத்து நாளா வீட்டை விட்டு வெளில கூட எங்கையும் போகல..
அதுக்கப்புறம் என் பொண்டாட்டி ஒரு நாள் கோயிலுக்கு போயிந்திருக்கா.. அவகிட்ட ஒரு சில பேர் என்னை பத்தி பெருமையா பேசியிருக்காங்க. என் பொண்டாட்டி என்கிட்ட வந்து அதை சொல்லும்போது.. அவ முகத்தில இருந்த சந்தோசம்.. அதை எப்படி சொல்ல..? அது நான் அவளை கல்யாணம் செய்துக்கிட்டதுல இருந்து அவளை அப்படி சந்தோசமா பார்த்ததே இல்ல.. உண்மையான சந்தோசம் எதுல இருக்குன்னு அன்னைக்குதான் நான் புரிஞ்சிகிட்டேன்.. அதுக்கடுத்த நாள் ஒரு சோளியா வெளில கிளம்பினேன்.. ஊருக்குள்ள முன்னெல்லாம் என்கிட்ட சரியா யாரும் பேசக்கூட மாட்டாங்க.. ஆனா இப்ப.. ரொம்ப மரியாதையா கையெடுத்து கும்பிடறாங்க..
தாத்தா.. அப்பான்னு எல்லாரும்.. அக்குறும்புல அழிஞ்சாலும்.. நம்ம வேலாயுதம் ஐய்யா.. மத்தவங்க சொத்து நமக்கெதுக்குன்னு எல்லாருக்கும் திருப்பி கொடுத்துட்டாரு.. இப்படி தப்பை உணர்ந்து யாரு இந்த காலத்தில செய்வாங்கன்னு ரொம்ப பெருமையா பேசினாங்க..” என்று வேலாயுதம் பெருமையாய் சொல்ல..
‘பரிபோன நம்ம சொத்துதான நமக்கு கிடைச்சிருக்குங்கிற உண்மையை கூட புரிஞ்சிக்காம.. எதோ.. உங்களோட சொத்தை அவங்களுக்கு கொடுத்தமாதிரி.. பெருசா இப்படி சந்தோசப்படுறாங்களே..
சில எளிய மக்களோட இந்த குணம்தான.. தன்னை வலியவர்கள்ன்னு நினைச்சிட்டிருக்கிற.. உங்களை மாதிரியான ஏமாற்றுக்காரர்களின் வாழ்வை சிறக்க செய்யுது..‚” என்று மாறன் சொல்ல..
தலைகுனிந்தார் வேலாயுதம்.. ‘சரி விடுங்க.. அதான் இப்ப எல்லாம் சரியாகிடுச்சில்ல..” என்று மாறனே தேற்ற..
[the_ad id=”6605″]
‘அப்புறம் என் மகன்.. என்னதான் நான் வெளில காட்டிக்கலன்னாலும்.. ஒத்த மகனை பெத்துட்டு அவனும் சரியில்லாம இப்படி குடியும்.. பொம்பளை சவகாசமாவும்ன்னு தர்தலையா இருக்கானேன்னு நான் வருந்தாத நாளில்ல.. நானும்.. என் பொண்டாட்டியும் எவ்ளோ சொல்லியும் திருந்தாதவன்.. உங்க மேல இருக்கிற பயத்தில.. இப்ப அவனும் எந்த வம்பு தும்புக்கும் போறதில்ல.. ஒரு பெத்தவனுக்கு இதைவிட வேற என்ன வேணும்..?” என்று கண்கலங்க வேலாயுதம் பேசவும்..
‘ம்மா.. கொஞ்சம் தண்ணி கொண்டு வாம்மா..” என்று சொல்ல.. சுமதி கொண்டுவரவும்.. வேலாயுதம் வாங்கி குடித்ததும்..
‘முத்து எங்கம்மாகிட்ட ரொம்ப தப்பா பேசிட்டான். அதோட அன்னைக்கு ராஜி வேற முத்துவ அடிச்சிட்டா.. தனியா வேற இருக்கா.. அவளை பழி தீர்க்கிறதா நினைச்சி முத்து தண்ணியேது அடிச்சிட்டு ராஜியை எதாவது செய்திடுவானோன்னு என் மனசுக்கு உருத்திட்டே இருந்திச்சி.. அதனாலதான் என்னை கட்டிக்கப்போறவளுக்கு முத்துவால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னுதான்.. நான் அன்னைக்கு முத்துவை மிரட்டினேன்..
ஆனா நீங்க.. என்னை பழிதீர்க்க.. பெருசா திட்டம் போட ஆரம்பிச்சிட்டிங்க.. உங்களுக்கு சொன்னா புரியாதுன்னும்.. இனிமே நீங்களும் என்னை எதுவும் சீண்டக்கூடாதுன்னும்தான் இதுமாதிரி செய்ய வேண்டியதாய்டுச்சி..‚” என்றான் தன்னை புரிய வைக்கும் நோக்கோடு.
‘புரியுது தம்பி.. இன்னைக்கு கூட நீங்க என்னை கூப்டிருக்கிங்கன்னதும்.. முத்து ரொம்ப பயந்திட்டான். முதல்ல எல்லாரும் என்னை பார்த்துதான் பயப்படுவாங்க.. அப்ப எனக்குள்ள ஒரு கர்வம் இருக்கும்.. ஆனா.. அது எவ்ளோ மடத்தனம்னு இப்போதான் நான் புரிஞ்சிகிட்டேன்.. என் பையன் உங்களை பார்த்து பயந்துக்கிறது கூட.. எனக்கு சந்தோசமாத்தான் இருக்கு.. என் மகன் திருந்தினதுக்கப்புறம்தான் என் உண்மையான சொத்து.. எனக்கே திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு..” என்றார்.
வேலாயுதத்தின் மனமாற்றத்தை நினைத்து ஆச்சர்யமடைந்த மாறன் அமைதியாகவே இருக்கவும்..
‘நீங்க அன்னைக்கு என்ன நினைச்சி இனிமேலாவது நிம்மதியா இருன்னு சொன்னிங்களோ எனக்கு தெரியாது.. ஆனா.. உண்மையாவே நான் இப்ப ரொம்ப நிம்மதியாத்தான் இருக்கேன்.. அதனால நீங்க வீடு கட்டுற வரைக்கும் என் வீட்லயே இருந்துக்கோங்க.. எனக்கு வாடகை வேணாம்..” என்று சொன்னார் உளமாற.
‘இருந்துக்கிறேன்ங்க.. ஆனா நீங்க வாடகை வாங்கிக்கனும்.. இது என் அன்பு வேண்டுகோள்…‚” என்றான்.
‘சரி தம்பி.. இனி உங்க விருப்பம்.. நான் வீட்டுக்கு போனதும் முத்துகிட்ட இப்பவே வீட்டு சாவியை கொடுத்தனுப்புறேன்.. நான் கிளம்பறேன்..” என்று வேலாயுதம் கிளம்பவும்..
‘இவரால நமக்கு எதாவது பிரச்சனை வருமோன்னு நான் பயந்திட்டே இருந்தேன் மாறா.. நல்லவேளை வேலாயுதம்ய்யா திருந்திட்டார்..” என்று சுமதி நிம்மதி பெருமூச்சு விட்டார்.
‘ம்ம்.. மாறன் ரொம்ப பெரியாளாய்ட்டான் சுமதி.. வேலாயுதம்ய்யா எல்லார்கிட்டயும்.. மாறன்தான் இந்த ஐடியாவை கொடுத்தான்னு சொல்லி வச்சிருக்கார். நம்ம மாறனையும் எல்லாரும் ரொம்ப பெருமையா பேசிக்கிறாங்கன்னு சின்னைய்யா சொன்னார். சின்னைய்யாவோட மருமகனாகிறதுக்கு என் மாறனுக்கு எல்லா தகுதியும் இருக்கு..” என்று மாறனை பெருமையோடு கட்டியணைத்தார் இராமு.
‘எல்லாம் உங்க வளர்ப்புதான்ப்பா..” என்று தன் அப்பாவை பெருமை படுத்தியவன்..
‘நம்ம நிவி வளைகாப்புக்குள்ள வீட்டை கட்டி முடிக்கனும்னு நினைச்சிருக்கேன்.. அதனால.. இன்னைக்கே சாமான்லாம் எடுத்து வச்சிடலாமாப்பா..?” என்றான்.
‘இன்னைக்கு வேணாம் மாறா.. நாளை கழிச்சி புதன் கிழமை நாள் நல்லாயிருக்கு.. அன்னைக்கு அந்த வீட்ல பால்காய்ச்சிட்டு சாமான்லாம் எடுத்து வச்சிக்கலாம்.. அதுக்கப்புறம் நம்ம சோபியையும்.. நிவியையும் கூப்பிட்டு.. பூமி பூஜை போட்டுட்டு வீட்டு வேலையை ஆரம்பிச்சிக்கலாம்.” என்றார் இராமு.
‘சரிப்பா.. அப்படியே செய்துக்கலாம்.. நான் போய் ராஜய்யாகிட்ட இந்த விசயத்தை சொல்லிட்டு வந்திடறேன்..” என்று ராஜனை பார்க்க சென்றான்.
[the_ad id=”6605″]
அடுத்து வந்த புதனன்று தன் அப்பா சொன்னது போலவே தன் அக்கா தங்கை வீட்டிலும் சொல்லி.. அவர்களையும் வரவழைத்து சுபமுகூர்த்த வேளையில் பூமிபூஜை செய்து இனிதே துவக்கினான் வீடு கட்டும் பணியினை.
வீடு கட்ட ஆரம்பித்து ஆறு மாதங்கள் முடிந்திருந்த நிலையில்.. வீட்டை கட்டி முடித்திருந்தாலும்.. பெயின்ட்டிங்.. மற்றும் சின்ன சின்ன மேற்பூச்சு வேலைகள் பாக்கியிருக்க.. அதற்குள் நிவேதாவிற்கு ஒன்பது மாதம் ஆரம்பிப்பதால்.. வளைகாப்பு செய்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தால் பெயின்ட் வாசம் நிவேதாவிற்கு ஒத்து வராதென்று சுமதி சொல்லவும்.. பெயிண்டிங் வேலைகளை நிறுத்திவிட்டு.. கணபதி பூஜை செய்து.. மிக எளிமையாகவே குடியேறினார்கள்.
ராஜநந்தினிக்கு வேலைகிடைத்து இந்த ஊருக்கு வரும்பொழுது தன் வாழ்வில் இப்படி ஒரு மாற்றம் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. பூமி பூஜைக்கு எவ்வளவோ அழைத்துப்பார்த்தும் நந்தினி அதில் கலந்து கொள்ளாமல் போகவும்.. கோபமடைந்த மாறன்.. நிவேதாவும் சோபனாவும் எப்பொழுது ஊருக்கு வந்தாலும்.. நந்தினி வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு பத்து நிமிடமாவது பேசிவிட்டுதான் வருவான்.
இதோ இப்பொழுது வீட்டின் கிரகப்பிரவேசத்திற்க்கும் வீட்டிலுள்ள அனைவருக்கும் புதுத்துணி எடுக்கும்போதே நந்தினிக்கும் சேர்த்தே எடுத்திருந்தான். மாறனோடு சேர்ந்து.. சோபனா.. நிவேதாவும்… வீட்டிற்கு பால்காய்ச்ச அழைக்கவும்.. வேறு வழியில்லாமல் தான் வாழப்போகும் வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு வந்திருந்தாள் ராஜநந்தினி.
கணபதி பூஜை முடிந்ததும்.. சுமதி நந்தினியை பால் காய்ச்ச பணிக்கவும்.. மாறன் அதற்கு மட்டும் ஒத்துக்கொள்ளவில்லை.
‘நீங்கதான் என் செல்ல அம்மா.. இந்த வீட்டுக்கு மகாராணி.. இதெல்லாம் நீங்கதான் செய்யனும்..‚” என அன்பு கட்டளையிட்டான்..
புதுமணை புகுவிழாவிற்கு ராஜனும் வந்திருக்க.. அவரோடு சேர்த்து.. அனைவருக்கும் பறிமாறும் பணியிணை நந்தினியிடம் ஒப்படைத்து.. தானும் தன் வருங்கால மனையாளுக்கு உதவிசெய்தான். தன் மகளின் கையால் இன்பமாக சாப்பிட்டார் ராஜன். இப்படியாக திருமணமாகமலேயே இளமாறனின் காதலி என்ற நினைப்பை மாற்றி.. பொண்டாட்டி என்ற நினைப்பினை நந்தினிக்கு ஒவ்வொரு தருணத்திலும் பதித்திருந்தான் இளமாறன்.