ஒரு முடிவின் துவக்கம்…
அத்தியாயம் — 12
‘ஏங்க.. என்ன ஆச்சி உங்களுக்கு..? கொஞ்சநாளாவே எங்கையும் வெளில போறதே இல்ல..? தோட்டத்தில வேலைசெய்யிறவங்க கூட என்கிட்ட சின்னய்யாவை மூனு மாசமா கண்லயே பார்க்க முடியறதில்லைன்னு சொல்றாங்க.. எதையாவது மனசில போட்டு மருகிட்டிருக்கிங்களா..? வீடே தங்க மாட்டிங்க.. இப்ப என்னன்னா.. மாறன் விசேசத்தில கூட கலந்துக்காம.. எப்பப்பார்த்தாலும் என்கூடவேதான் இருக்கிங்க.. எதுன்னாலும் மாறன் நீங்க இல்லாம பண்ணமாட்டான்.. அவனும் உங்களை எதுவும் சொல்லலை.. இங்க வந்தா நல்லா சந்தோசமாத்தான் பேசுறான்.. பின்ன ஏன் அவன் உறுதி பண்ற விசேசத்துக்கு கூட நீங்க போகல…? எதுன்னாலும் சொல்லுங்க.. மறுபடியும் நெஞ்சுவலியேது வந்திடப்போகுது.. உடம்பை கெடுத்துக்காதிங்க..” என்று தேவி ராஜனிடம் வருந்தினார்.
‘இந்த மூனு மாசமா நான் உன்கூடவேதான் இருக்கேன்னு உனக்கு புரிஞ்சா சரி தேவி.. நான் என்ன தப்பு செய்திருந்தாலும்.. நீ என்னை மன்னிச்சிடுவியா தேவி..” என்றார்.
‘இதென்ன…? திடீர்ன்னு இப்படி கேக்கிறிங்க..? நீங்க தப்பு செய்விங்கன்னு சொன்னா.. அந்த கடவுள் கூட நம்ப மாட்டார். ஏன் இப்படி பேசுறிங்க.?” என்றார் தவிப்போடு.
‘இல்ல தேவி.. நம்ம கல்யாணத்துக்கு முன்ன.. நான் தப்பு செய்திருக்கேன்.. ஆனா.. என்னைக்கு உன் கழுத்தில தாலி கட்டினேனோ.. அப்போ இருந்து.. உனக்கும்.. நம்ம குழந்தைகளுக்கும் உண்மையாத்தான் இருக்கேன்.. ஆனாலும் நமக்கு கல்யாணம் ஆகியும் இரண்டு வருசமா உன் கூட வா.. ழா..ம.. உன்னை கஷ்டப்படுத்திட்டேன்.. என்னை மன்னிச்சிடு தேவி..” என்று கண்கலங்கினார்.
ராஜன் மேல் உள்ள நம்பிக்கையால்.. ராஜன் சொல்வதை தேவி ஆழமாக யோசிக்கவில்லை.
‘ஏங்க.. எப்பவோ நடந்ததை நினைச்சா இப்ப வருத்தப்பட்டுட்டு இருக்கிங்க.. நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்தே போய்ட்டேன்.. நீங்க ஏன் அந்த இரண்டு வருசத்தை நினைக்கிறிங்க.. அதுக்கப்புறம் நாம இத்தனை வருசமா எவ்ளோ சந்தோசமா இருக்கோம்.. அதை நினைச்சி சந்தோசப்படுவிங்களா..” என்று.. இந்த வயதிலும் முகம் சிவந்தார் தேவி.
‘இல்ல தேவி.. நான் ஒரு பெரிய தப்பு செய்திருக்கேன்.. கூடிய சீக்கிரம் நானே அதை எல்லார்கிட்டயும் சொல்லத்தான் போறேன்.. அதுக்காக.. நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் சரி.. ஆனா.. என்னை விட்டு விலகி மட்டும் போய்டாத.. நீ என்னை வெறுத்திட்டினா.. அந்த நிமிசமே என் உயிர் போனாலும் போய்டும்..” என்று தேவியின் கரங்களை பற்றினார். தன் கணவர் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார் என அப்பொழுதுதான் தேவிக்கு புரிய..
[the_ad id=”6605″]
‘இன்னைக்கு ஏன் இப்படி பேசுறிங்க..? இருங்க.. நான் மாறனை வரசொல்றேன்.. அவன்கிட்டயாவது மனச விட்டு பேசுங்க.. நீங்க இப்படி வருத்தப்படறதை என்னால தாங்க முடியலை..” என்று போனை எடுத்தார் தேவி.
தேவியை தடுத்தவர்.. ‘மாறன் இப்ப புதுமாப்பிள்ளை.. நாம அவனை தொல்லை பண்ண கூடாது.. நீ என் பக்கத்தில இருக்கிற வரைக்கும் எனக்கு ஒன்னும் ஆகாது..” என்று தன் மனைவியை பேரன்புடன் அணைத்தார் ராஜன்.
இளமாறனின் அப்பா வழியிலும்.. அம்மா வழியிலும் சேர்த்தே சொந்தங்கள் மிகக் குறைவுதான். இருக்கும் சொந்தங்கள் அனைவரும் உள்@ரிலேயே இருக்கவும்.. யாருக்கும் எந்த அலைச்சலும் கூடாதென.. அவ்வூரின் மையத்தில் இருக்கும் சமுதாயக் கூடத்திலேயே தன் திருமணத்தை வைத்திருந்தான். கூடத்தின் வெளியில் உள்ள காலி இடத்தில் தன் செலவில் மாறன் போட்டிருந்த பெரிய பந்தலும்.. சுற்றிலும் ஜொலித்த பல்வண்ண மின்விளக்குகளின் ஒளியும்.. அந்த சமுதாயக் கூடத்தை மிகப்பெரிய மண்டபம் போல் காட்சியளிக்க வைத்தது.
மண்டபத்தில் ஊர் பெரியவர்களின் முன்னிலையில்.. இளமாறனுக்கு ராஜநந்தினியை நிச்சயம் செய்தனர். மாறன் வாங்கி கொடுத்த பட்டில் ஜொலித்தாள் ராஜநந்தினி. நிச்சயம் முடிந்ததும் போட்டோகிராபர் விதவிதமாக போஸ்கொடுக்க சொல்லவும்.. சிறு தயக்கமும் இல்லாமல் இளமாறனோடு இணைந்து நின்றாள் ராஜநந்தினி. மாறனின் கண்களாவது அப்படி இப்படி என்று அவ்வப்போது மற்றவர்களிடம் சென்று மீண்டது. ஆனால் ராஜியின் கண்கள் அவனை மட்டுமே பார்த்திருந்தது. பெருமையாக.. காதலாக.. என்பன போன்ற பல பாவனையோடு..
‘ரா.. ஜி.. என்ன இது..? எல்லாரும் உன்னைதான் பார்க்கிறாங்க.. நமக்கு முன்னாடி இருக்கிறவங்களையும் கொஞ்சம் பாருடி..” என்று செல்லமாய்.. முனுமுனுத்தான் மாறன்.
‘ம்ஹ_ம்.. நான் உன்னை மட்டும்தான் பார்ப்பேன்..” என்று பிடிவாதமாய் வந்தது ராஜியின் குரல்.
‘இது வேலைக்காகாது..” என்று பெருமூச்சொன்றை விடுத்தவன்.. ‘பாஸ்.. போட்டோ எடுத்தது போதும்.. மீதியை நாளைக்கு எடுத்துக்கலாம்..” என்று சொல்ல..
‘சரிங்க சார்..” என்று போட்டோ எடுப்பவர்களும் தூங்க சென்றனர்.. அதன் பின்னும் நந்தினி மாறனையே பார்த்திருக்க..
‘அடியேய்.. ஏண்டி என்னை இப்படி படுத்துற..? அங்க பாரு மனமகள் அறைன்னு ஒன்னு இருக்கு.. ஒழுங்கா அங்கபோய் தூங்கு..” என கடிந்து மனமகன் அறை நோக்கி மாறன் செல்ல.. அவன் பின்னோடே நந்தினியும் இரண்டடி எடுத்து வைக்கவும்..
‘நீ இப்படி செய்தா.. உன்னை இப்பவே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய் குடும்பம் நடத்த ஆரம்பிச்சிடுவேன்..‚” என்று நந்தினியை பயமுறுத்த எண்ணி.. மாறன் எச்சரிக்கவும்..
‘ம்ம்.. ஓ.கே..” என்றாள் சிறு தாமதமும் இன்றி.
மாறன் அதிர்ச்சியில் விழிவிரிக்க.. ‘உன்னை என் புருசனா மனசுல பதிச்சி வச்சிக்கோன்னு என்கிட்ட நீ சொல்லி ஒரு வருசத்துக்கும் மேல ஆகுது.. இதுவரைக்கும் ஒரு சின்ன முத்தம் கொடுக்க வக்கில்ல.. நீயாவது.. தாலிகட்றதுக்கு முன்ன குடும்பம் நடத்துறதாவது..?” என்று இளக்காரமாய் நந்தினி சொல்ல..
‘எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி.. நாளைக்கு இருக்குடி உனக்கு..” என்று மாறன் ரோசமாய் சொல்ல..
சிறிதும் அசராமல்.. ‘அப்பவும் நாளைக்கு தானா..? அப்போ இன்னைக்கே குடும்பம் நடத்துவேன்னு.. வெறும் வாய் சவடாலெல்லாம் நமக்கெதுக்கு..? போ.. போ.. போய் நல்லா இழுத்து போத்திட்டு தூங்கு..” என்று நக்கலோடு சொல்லி அவ்விடம் விட்டு நகர்ந்தாள் ராஜநந்தினி.
‘என்ன மாறா சொல்லிட்டு போறாங்க..? இப்படி அதிர்ச்சியாகி நிற்கிற..?” என்று அங்கு வந்த சோபனா கேட்டாள்.
‘ஒன்னுமில்ல சோபி.. அவளுக்கு வாய்கொழுப்பு ரொம்ப அதிகமாய்டுச்சி..” என்று சிரித்தான்.
‘சரி மாறா.. நான்.. நிவி.. அம்மா.. நம்ம மயிலம்மா எல்லாரும் வீட்டுக்கு போறோம்.. குட்டிம்மா இங்க அழுதிட்டே இருக்கா.. காலைல ஐஞ்சு மணிக்குதான முகூர்த்தம்.. நாங்க சீக்கிரம் வந்திடறோம்.. மாமாவும்.. முரளியும் இங்கையே இருப்பாங்க.. அப்பாவும் வரவங்களை கவனிக்கனும்னு இங்கையே இருக்கிறேன்னுட்டார்..” என்றாள்.
‘யார் உங்களை கூட்டிட்டு வந்து விட வராங்க..?”
‘முரளி எங்களை கூட்டிட்டு போய் விட்டுட்டு திரும்ப வந்திடுவார்..” என்றாள் சோபனா.
[the_ad id=”6605″]
‘சரி சோபி.. பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க..” என்று அவர்களை அனுப்பி வைத்து திரும்ப.. அங்கே ஒரு சேரில் ஆழ்ந்த யோசனையோடு அமர்ந்திருந்தார் அமுதா. அவரை பார்த்ததும்.. மாறனுக்கு திருமண சந்தோசம் போய்.. நாளை என்ன நடக்குமோ.. என்ற பதட்டம்தான் அதிகம் வந்தது.
‘அத்தை.. நீங்க போய் தூங்குங்க..” என்றான்.
‘தம்பி.. நாளைக்கு எந்த பிரச்சனையும் வராதில்ல..? என் பொண்ணு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடுமா..?” என்றார் பதட்டத்தோடு.
‘நாளைக்கெல்லாம் எந்த பிரச்சனையும் வராதுங்கத்தை.. ராஜய்யாவும் ராஜிமேல உயிரையே வச்சிருக்கார்.. நீங்க போய் நிம்மதியா தூங்குங்க.. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என்றான்.
‘இல்ல தம்பி.. ராஜன்தான் அவங்கப்பான்னு தெரிஞ்சதும்.. நந்தினி என்ன பண்ணுவாளோன்னு எனக்கு ரொம்ப பயமாயிருக்கு.. நீங்க ராஜனோட ரொம்ப நெருக்கமா இருக்கிங்கன்னு அவளுக்கு தெரிஞ்சதும்.. என் மேல இருக்கிற பாசத்தில.. அவசரப்பட்டு உங்களையே வேணாம்னு சொன்னாலும் சொல்லிடுவா.. சட்டுன்னு கோபப்படுவாதான்.. ஆனா எவ்ளோ கோபமா இருந்தாலும்.. நாம எடுத்து சொன்னோம்னா.. உடனே புரிஞ்சிக்குவா.. நந்தினி எதாவது செய்திட்டாலும்.. பேசிட்டாலும்.. எனக்காக அவளை மன்னிச்சிடுங்க தம்பி..” என அமுதா கலக்கத்தோடு சொல்ல..
‘அப்படியெல்லாம் எதுவும் ஆகாது.. நீங்க கவலைப்படாம போய் தூங்குங்க..”
‘எனக்கு தூக்கம் வரலை தம்பி.. நீங்க போய் தூங்குங்க..” என்று மாறனை அனுப்பி வைத்த அமுதாவிற்கு நெஞ்சினுள் அவ்வளவு கலக்கம்.
அவரின் மனைவி பக்கத்தில் இருக்கும்போது.. நம்மிடம் என்ன கேப்பார்..? ஒருவேளை மனைவியை அனுப்பிவச்சிட்டு.. தனியாக கேப்பாரோ.. என யோசித்தார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு ராஜனை நாளை நேரில் சந்திக்கப்போகிறோம் என்ற பதட்டம் ஒருபுறம் இருக்க.. ராஜனின் அப்பாவும் வருவார் என்று சுமதி சொல்லவும்.. பதட்டத்தோடு பயமும் சேர்ந்துகொண்டது.
அப்பொழுதே தன்னை அப்படி பேசியவர்.. இப்பொழுது அவரின் பேரக் குழந்தைகளை நினைத்தும்.. தன் மருமகளின் வாழ்க்கையை நினைத்தும்.. இன்னும் நம்மை எதாவது அசிங்கமாக பேசுவாரா..? என்றது ஒரு மனம்.
இல்லையில்லை.. அவர் மகன் அருகில் இருக்கும்போது அப்படி பேசமாட்டார்.. தன்னை நல்லவன் என காட்டிக்கொள்வதற்காக அமைதி காப்பார் என்றது இன்னொரு மனம்.
இதெல்லாம் போக.. ராஜன்தான் தனது அப்பா என்று தெரிய வந்தால் நந்தினியால் அதை தாங்கிகொள்ளவே முடியாது என்பது அமுதாவிற்கு நன்றாக தெரியும். அதுவும் அவர் குழந்தை மனைவியோடு சந்தோசமாக இருக்கிறார்.. நம் அம்மாவின் வாழ்க்கை மட்டும்.. இப்படி ஆகிவிட்டதே என்ற ஆற்றாமையில்.. ராஜனை எதாவது மரியாதை குறைவாக பேசிடுவாளோ..? என்ற பயம் வேறு மனம் முழுதும் ஆட்கொண்டது. இப்படியாக பலசிந்தனைகள் படையெடுக்க.. அமுதாவிற்கு அன்றிரவு தூக்கம் என்பதே இல்லாமல் போனது.
அடுத்த நாள் காலை ஐந்தரை மணியாகியும் ராஜன் வரவில்லை. அனைத்தும் தயார் நிலையில் இருந்தும்.. அவரின் வரவிற்க்காக காத்திருந்தனர் மனமக்கள் மற்றும் குடும்பத்தினர்.
சுபமுகூர்த்த நேரம் ஆறு மணியோடு முடிவதால் மாறன் போனை கையில் எடுக்க.. தன் மனைவி மக்களோடும்.. தன் தந்தை தண்டபானியோடும். அப்பொழுதுதான் உள்ளே வந்தார் ராஜன். மேடையில் இருந்து எழுந்து வந்து தண்டபானியை வரவேற்ற மாறன்.. அவரை கைத்தாங்கலாய் அழைத்து வந்து முன்னிருக்கையில் அமரவைத்தான்.
[the_ad id=”6605″]
மாறன்.. இது எங்கள் வீட்டின் கடைசி கல்யாணம்.. என் அக்கா தங்கை கல்யாணம்தான் மாப்பிள்ளை வீட்டார் ஊரில் வைத்ததால்.. உங்களுக்கு அலைச்சல் இருக்கும் என நான் வற்புறுத்தவில்லை.. நான் உள்@ரிலேயாதான் கல்யாணம் வைத்திருக்கிறேன்.. நீங்கள் வந்தேதான் ஆகவேண்டும் என்று அன்போடு வற்புறுத்தியிருந்தான். எனினும் மாறனின் அன்பைத்தாண்டி.. தண்டபானிக்கு இராமன் மேல் மிகுந்த மதிப்பு இருந்ததாலும்.. திருமணம் உள்@ரிலேயேதான் என்பதாலும்.. வெகு வருடங்களாய் எந்த விசேசங்களிலும் கலந்து கொள்ளாதவர்.. இன்று இளமாறனின் திருமணத்தை காண வந்தார்.
மனமேடையில் இளமாறன் ராஜநந்தினிக்கு அருகில் அமர.. ஐயர் மந்திரம் ஓத.. மனதுக்கு நிறைந்த மனாளனை மனம் முடிக்கும் பூரிப்பை நந்தினியின் சிவந்த கன்னங்கள் காண்பிக்க.. அதை ரசித்தவாறே.. அளவில்லா காதலோடு திருமாங்கல்யத்தை நந்தினியின் கழுத்தில் அணிவித்து.. நீண்ட நாளாக நந்தினிக்கு நிறைவேறாத ஆசையாய் இருந்த இளமாறனின் அன்பு முத்தம்.. இன்று அனைவர் முன்னிலையிலும் தன் மனையாளுக்கு அவளின் நெற்றியில் அழுந்தப்பதித்து நிறைவேற்றினான் காதல் கணவனாக.
தன் வாழ்க்கைதான் இப்படி ஆகிவிட்டது.. தன் மகள் வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்க வேண்டும் என்றெண்ணியும்.. நந்தினியின் திருமணம் முடியும் வரை.. ராஜனின் கண்களுக்கு தாம் தென்படக்கூடாது என்ற எண்ணத்திலும்.. மேடைக்கே செல்லாமல் ஒரு ஓரமாக அமர்ந்து தன் மகளின் திருமணத்தை கண்டுகழித்த அமுதாவின் கண்கள் பேரின்பத்தில் கலங்கியது.
காதலனும் காதலியும்.. கணவன் மனையாய் மாறியதும்.. ஐயர் சொற்படி மாறனின் அப்பாம்மாவிடம் ஆசி பெற்றதும்.. நந்தினியின் அம்மாவிடம் ஆசி பெற அமுதாவை அழைக்கவும்.. மாறனை பார்த்து கண்களால் வேண்டாம் என்று அமுதா ஜாடை செய்ய.. அதை கவனித்த நந்தினி..
‘இப்ப வரப்போறிங்களா..? இல்ல நான் அங்க வரவாம்மா..?” என்ற நந்தினியின் குரல் சற்று ஓங்கி ஒலிக்க.. இதற்கு மேல் நாம் போகவில்லையென்றால்.. நிச்சயம் நந்தினி கீழிறங்கி வந்து நம்மை அழைத்து செல்வாள் என்றுணர்ந்து.. மெல்ல நடந்து மணமேடைக்கு அமுதா செல்ல.. அப்பொழுதுதான் நீண்ட வருடங்களுக்கு பிறகு அமுதாவைப் பார்த்தார் ராஜன்.