ஒரு முடிவின் துவக்கம்…
அத்தியாயம் — 16
இம்முறை மாறனோடு பைக்கில் வரும்போது.. இயல்பான முகத்தோடு வந்தாள் நந்தினி. ராஜியின் மீதான தன் கோபம் குறைவதற்க்காகத்தான்.. தன் அத்தை அவளின் குழந்தை பருவ வாழ்க்கையிலிருந்து அனைத்தும் தம்மிடம் பகிர்ந்திருக்கிறார்.. ராஜய்யாவால் தன் வாழ்வையும் தொலைத்து.. இனி அவராலேயே தன் மகள் வாழ்வும் என்னாகுமோ..? என்ற அமுதாவின் தாய்மையுள்ளம் மாறனுக்கும் புரிய.. மாறன் முகமும் சற்று இயல்பாகவே இருந்தது.
இருவரின் இயல்பான முகத்தை பார்த்த இராமுவும்.. சுமதியும் நிம்மதியடைந்தனர். மாறன் ஹாலில் இருந்த டி.வி.யை உயிர்ப்பித்து.. அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தான். சற்று நேரம் நின்றிருந்த நந்தினி.. தனதறைக்கு சென்று சாரி களைந்து நைட்டிக்கு மாறிக்கொண்டிருந்தாள்.
‘மாறா.. டீ குடிக்கிறியா..?” என சுமதி கேட்க..
‘இல்லம்மா.. இப்பதான் அத்தை வீட்ல குடிச்சிட்டு வந்தோம்..”
‘அப்போ போய்.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு..” என்றார் இராமு.
‘எனக்கு டையர்டா இல்லப்பா..” என்றான்.
இராமு.. ‘மருமக தனியா இருக்கும்.. போடா..” என்றார் முறைப்பாக.
‘உங்க மருமக என்ன.. அமேசான் காட்டுக்குள்ளயா இருக்கிறா..? வீட்டுக்குள்ளதான இருக்கா..?” என்றான் சிடுசிடுப்பாக.
‘ரிமோட்டை கொடு.. எப்பப்பாரு உங்கப்பா மாதிரியே நியூசை போட்டு உக்கார்ந்துக்கிறது.. நான் நாடகம் பார்க்கனும்.. உனக்கு டி.வி. பார்க்கனும்னா உன் ரூமுக்கு போய் பாரு..” என்று மாறனிடமிருந்து சுமதி ரிமோட்டை பிடுங்க..
மாறன் எழவும்.. நந்தினி தனதறையிலிருந்து வெளியே வந்தாள்.
‘சரி.. சரி.. இந்தா நீயே பாரு.. நான் நாடகம் பார்க்கல..” என்று சுமதி சொல்ல..
‘ம்மா…” என இழுத்தான் சலித்தபடி.
‘நைட்டுக்கு சமைக்கனும்டா.. நீ டி.வி. பாரு..” என சுமதி காரணம் சொல்ல.. மீண்டும் டி.வி.யில் கவனமானான்.
‘அத்தை.. நீங்க டி.வி. பாருங்க.. நான் சமைக்கிறேன்…” என்றாள் நந்தினி.
‘நானே சமைக்கிறேன்மா.. எங்க சின்னைய்யாவோட பொண்ணு நீ.. உனக்கு இங்க எந்த சிரமமும் இருக்கக்கூடாது..” என்று சுமதி சொல்லவும்..
செய்வதறியாது ஒரு நிமிடம் நின்றவள்.. நின்ற இடத்திலேயே அமர்ந்து.. தலைகவிழ்ந்து தன் முகத்தை மூடிக்கொண்டு சத்தமின்றி அழுதாள்.
‘சுமதி.. நந்தினி நம்மளோட மருமக.. மாறனோட பொண்டாட்டி.. அவ்ளோதான்.. சின்னையாவோட பொண்ணுங்கிற பேச்சே இருக்கக்கூடாதுன்னு கல்யாணத்துக்கு முன்னமே மாறன் சொல்லியிருக்கானா இல்லையா..?” என இராமு சற்று குரலுயர்த்தியதற்கே.. சுமதியின் கண்கள் கலங்கியது.
[the_ad id=”6605″]
‘நந்தினி.. உன் அத்தை தெரியாம பேசிட்டா.. நீ எதையும் மனசில வச்சிக்காதம்மா.. நீ என் தங்கச்சி பொண்ணு.. படிச்சி முடிச்ச கையோட சர்க்கார் வேலை வாங்கின அறிவுள்ள டீச்சர் பொண்ணு.. என் வம்சத்தை தழைக்க வைக்க வந்த தங்கம் டா.. நீ இப்படி அழலாமா..? எழுந்திரி…” என கனிவாக பேசி நந்தினியின் முகத்தை நிமிர்த்தினார் இராமு.
கண்ணில் நீர் வழிய நந்தினி இராமுவை பார்க்கவும்.. ‘அங்கபாரு.. இப்ப நான் என்ன சொல்லிட்டேன் உன் அத்தையை..? அதுக்கே எப்படி கண்ணை கசக்கிட்டு நிக்கிறான்னு..“ என்றார் இலகிய குரலில்.
நந்தினி.. சுமதியை பார்க்கவும்.. பெரிய தவறு செய்ததைபோல்.. பரிதவிப்பாய் நின்றிருந்தார் சுமதி. ‘நீ மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் அழுதேன்னு வை.. என் பொண்டாட்டி உன்னோட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாலும் கேட்டுடுவா..” என இராமு பாவம்போல் சொல்ல.. அவசரமாய் தன் கண்களை துடைத்தாள் நந்தினி.
தன் மருமகளின் செயலில் சந்தோசமானவர்.. ‘உன் அத்தை பேசினதுதான் தப்புன்னாலும்.. நான்தான் உன் அத்தையை சமாதானம் படுத்தனும்.. இல்லன்னா.. பண்றதையும் பண்ணிட்டு… இப்படித்தான் அழுதே நம்மளை ஒரு வழியாக்கிடுவா..” என்றார் விரிந்த புன்னகையோடு.
இவர் எப்படி வெளிப்படையாக தன் மனைவியின் தவறை ஒத்துக்கொள்கிறார்..? ஆனா.. நாம.. தாலியை கழற்ற நினைத்தது இவருக்கு தெரியாது என்றாலும்.. நாமும் இவரிடம் உண்மையாகத்தான இருக்கனும்..? என யோசித்தவள்..
‘என்னை மன்னிச்சிடுங்க மா..மா..” என்றாள் குற்ற உணர்வோடு.
‘நீ எதுக்குமா மன்னிப்பு கேக்குற..?” என்றார் வாஞ்சையாக.
‘இல்ல மாமா.. நான் நேத்து.. கல்யாணத்துல..” என தடுமாறும் போதே..
‘அது பத்தி இப்போ ஏன்மா பேசுற..? விடு..” என்றார் பொதுவாக.
‘நான்.. மத்த பிரச்சனையைப் பத்தி சொல்லல மாமா.. நான்.. நேத்து..” என நந்தினி தயங்கி கண்கலங்கவும்..
‘விடும்மா.. எல்லாரும் நம்மகிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டாங்களேன்ற கோவத்துலதான.. தெரியாம மாலையை கழட்டி போட்டுட்ட..?” என்றவர்.. நந்தினியின் அருகில் நெருங்கி..
‘தாலியையும் கழட்டிடலாம்னு நினைச்சிட்ட..?” என சன்னக்குரலில் சொல்லி..
‘அது பெரிய தப்புதான்.. ஆனா நீ அதை இன்னைக்கு நம்ம குலசாமி கோவில்ல பூஜை நடக்கும்போதே உணர்ந்திட்டேன்னு எனக்கு தெரியும்.. சும்மா நடந்ததையே நினைச்சிட்டிருக்கக் கூடாது.. சந்தோசமா இருக்கனும்..” என இராமு.. நந்தினியின் தலையை கோத..
அதிர்ச்சியோடு நந்தினி இராமுவைப் பார்த்த நேரம்.. அதிர்ந்தவனாய் எழுந்த மாறனிடம்… ‘டேய்.. நான் உன் அப்பன்.. டா..” என கெத்தாக சொன்னவர்..
‘எத்தனை பேர் எத்தனை சொன்னாலும்.. சின்னையாவால பாதிச்சது நம்ம சம்மந்தியம்மாதான..? அவங்கம்மா பட்ட கஷ்டத்தை கண்கூட பார்த்து வளர்ந்த பொண்ணு.. திடீர்ன்னு நம்ம அம்மாவை ஏமாதினவங்க கண்முன்னால வந்து நின்னா.. முதல்ல அதையே தாங்கிக்க முடியாது..
இதுல.. நாம எல்லாரும் சேர்ந்து சின்னைய்யா விசயத்தை.. நந்தினிகிட்ட மறைச்சிருக்கோம்.. அந்த துரோகத்தை தாங்க முடியாமையும்.. அவங்கம்மா மேல இருக்கிற பாசத்திலயும்.. கோவத்திலயும் ஏதோ தெரியாம பண்ணிடுச்சி..” என மாறனிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே..
‘என்னை மன்னிச்சிடுங்க மாமா…” என இராமுவின் காலில் விழுந்தாள். நந்தினியின் இச்செய்கையில்.. அவங்க அம்மா சொன்னதை போல தப்புன்னு உணர்ந்ததும்.. இப்படி பொசுக்குன்னு கால்ல விழுந்துட்டாளே.. என ஆச்சர்யத்தோடு அவளையே பார்த்திருந்தான்.
‘ப்ச்.. என்னம்மா.. நீ..? முதல்ல எழுந்திரு.. நீ சின்ன பொண்ணு.. சில விசயங்கள் உனக்கு இன்னும் புரியல..” என சமாதனப்படுத்தி..
‘நீ சின்னையா மகளா இல்லாம இருந்திருந்தாலும்.. ஒருவேளை உங்கம்மா உங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னாலும்.. இல்ல.. நாங்களே சம்மதிக்கலன்னாலும்.. எல்லார்கிட்டயும் சண்டை போட்டாவது மாறன் உன்னைத்தான் கல்யாணம் செய்திருப்பான்..
[the_ad id=”6605″]
உன்னை பார்த்ததுமே அவனுக்கு ரொம்ப பிடிச்சிடுச்சி போல.. எப்பவும் எதுக்கும் என் பேச்சுக்கு மறு பேச்சு பேசமாட்டான்.. ஆனா அன்னைக்கு உன்னைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு.. எங்ககிட்ட எப்படி எகிறிட்டு சண்டைக்கு வந்தான் தெரியுமா..? உன் புருசனோட குணம் தெரியாம நீயும்தான் அவனை முறைச்சிட்டிருக்க..” என நந்தினி மீது குற்றம் சுமத்தினார் தன்மையாகவே.
மாறனைப் பற்றி பேசவும்.. தடுமாற்றத்தோடு நந்தினி தலைகவிழ..
‘உனக்கு சமைக்க தெரியுமா..?” என்றார் மருமகளை சகஜமாக்க..
தெரியும் என்பதாய் தலையாட்டினாள். ‘ஏங்க.. காலைல கோவில்ல பொங்கல் வச்சதே நந்தினிக்கு அலுப்பா இருக்கும்.. நானே சமைக்கிறேன்..” என மீண்டும் சுமதி சொல்ல..
‘நான் மதியம் கொஞ்ச நேரம் தூங்கிட்டேன்த்தை.. எனக்கொன்னும் பிரச்சனையில்ல.. நீங்க என்ன சமைக்கிறதுன்னு சொல்லுங்க.. நான் சமைக்கிறேன்..” என்றாள் இயல்பாக.
‘மதியம் நிறைய பிரியாணி சாப்டுட்டேன்.. அதனால.. ரச சாதம்தான் பரவால்லையா இருக்கும்..” என்றார்
பிரியாணியும் செய்திருந்தார்களா.? நாம இவனுக்கு போடவே இல்லையே.. என உள்ளுக்குள் வருந்தி.. ‘மாமா உங்களுக்கு..?” என்றாள் இராமுவிடம்.
‘எனக்கும் அதுவே போதும்மா..” என்றதும்.. தம்மிடம் எதாவது கேட்பாளா என எதிர்பார்த்திருக்க.. அவனை கண்டு கொள்ளாமல்.. சமையலறை சென்று தன் சமையலை துவக்கினாள்.
‘அத்தை.. இங்க நிறைய காளான் இருக்கே.. எப்போ வாங்கினது..?” என கேட்டுக்கொண்டே பிரிட்ஜ்ஜை திறந்து பார்த்தாள்.. அவள் எதிர்பார்த்திருந்த தோசை மாவு இருந்தது.
‘கல்யாணத்துக்கு வாங்கினதுதான் நந்தினி..” என்றார் சுமதி.
‘உங்க மகனுக்கு தோசை செய்து காளான் கிரேவி செய்யப்போறேன்.. உங்களுக்கும் வேணுமா..?” என கொஞ்சம் சத்தமாக மாறனுக்கு கேட்கும் வகையில் கேட்டாள். ஒரு நொடி அவள்புறம் திரும்பியவன்.. பிறகு மீண்டும் டி.வியைப் பார்த்தபடி உள்ளுக்குள் லேசாய் சிரித்தான்.
‘இல்லம்மா.. எனக்கும் ரச சாதமே போதும்.. அதான் இன்னும் நிறைய காளான் இருக்குல்ல..? எனக்கு நாளைக்கு செய்து தரியா..?” என்றபடி சுமதியும் சமையலறைக்குள் வந்தார்.
‘ம்ம்.. பண்றேன்த்தை..” என்றவள்.. சுமதியோடு பேசிக்கொண்டே ஒரு மணிநேரத்தில் சமையலை முடித்திருந்தாள். கிரேவியை ருசி பார்த்த சுமதி..
‘ம்ம்.. நல்லாயிருக்கே.. உனக்கு சமைக்க வருமா..?” என்றார் ஆச்சர்யத்தோடு.
‘ஏன்.. அப்படி கேக்குறிங்கத்தை..? சமைக்கிறது அவ்ளோ கஷ்டமான விசயமா என்ன..?” என்றாள் இயல்பாக.
‘சாப்பாடு குழம்பு ரம்ன்னா எத்தனை பேருக்குன்னாலும்.. நல்லா செய்துடுவேன்.. இந்த கிரேவி பண்றது பிரியாணி பண்றதெல்லாம் எனக்கு எனக்கு கஷ்டமான விசயம்தான்..” என்றார்.
‘அம்மும்மாவும்.. கறி சாப்பிட மாட்டாங்க.. எனக்கொருத்திக்கு எதுக்குன்னு பிரியாணி மட்டும் செய்ததில்ல.. உங்களுக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும்னு உங்க மகன் சொல்லியிருக்கார்.. இந்தவாரம் ஞாயித்துக்கிழமை செய்து பார்க்கலாம்..” என பேசிக்கொண்டே அடுப்பை துடைத்து.. சமைத்த பாத்திரங்களையும் கழுவி முடித்து..
இராமுவிடம்.. ‘மாமா.. சமையல் ஆச்சு.. நீங்க சாப்பிடுறிங்களா..?”
[the_ad id=”6605″]
பசியில்லை என்றாலும்.. தான் சாப்பிட்டு ரூமிற்க்குள் சென்றுவிட்டால் இவர்களும் சீக்கிரம் உண்டு தூங்கப்போவார்கள் என நினைத்து.. ‘சாப்பிடுறேன்மா..” என்றார்.
‘பத்து மணிக்கு முன்ன சாப்பாடே இறங்காது.. இன்னைக்கு மருமக கேட்டதும் எட்டு மணிக்கே பசிக்குதா..?” என முறைத்தான் மாறன்.
‘கல்யாண அலைச்சல் இன்னும் போகலைடா.. படுத்தா நல்லாயிருக்கும் போல இருக்கு.. அதான் கையோட சாப்பிட்டு படுத்துக்கலாமேன்னு சொன்னேன்..” என்றார் இராமு.
‘ம்ம்.. நம்பிட்டேன்.. நம்பிட்டேன்..” என்றான் நம்பாத பாவனையோடு.