அத்தியாயம் — 18–2
மாறன் வீட்டில் நடந்தை தேவியிடம் கேட்டுக்கொண்டிருந்த தண்டபானி கண்ணீர் வடித்தார்.. கண்ணீர் வடிப்பதை தவிர.. தண்டபானியால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.
விபச்சார வழக்கில் கைதுசெய்ய வைத்து உன் பேரை நாரடிச்சிடுவேன் என்று அமுதாவை மிரட்டியதை.. தண்டபானி தன் மகனிடம் ஒப்புக்கொண்டதிலிருந்து ராஜன் தண்டபானியிடம் பேசுவதில்லை.. ஏன்..? பார்ப்பது கூட இல்லை. இதுவரை தன் கண் அசைவிற்கு கூட மறுப்பு சொல்லாத தனது ஒரே மகனின் பாராமுகத்தை அந்த வயோதிகரால் தாங்க முடியவில்லை.
‘அழாதிங்க மாமா.. எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகிடும்..” என தேற்றிக்கொண்டிருந்தார் தேவி.
தாத்தாமீதுள்ள தன் அப்பாவின் இந்த மாற்றம்தான்.. லாவன்யாவை யோசிக்க வைத்தது. இரண்டுநாள் முன்பு.. ‘தாத்தா.. அப்பாவை நான் உங்களோட பேசவைக்கிறேன்.. நீங்க என்ன தப்பு செய்திங்கன்னு எனக்கு உண்மையை சொல்றிங்களா..?” என லாவன்யா கேட்க..
தன் மகனின் புறக்கணிப்பை தாளமுடியாத தண்டபானி.. சிறு பிள்ளை என்றும் பாராமல்.. அமுதாவின் கடந்த காலத்தில் தாம் நடந்து கொண்டதை.. லாவன்யாவிடம் மறைக்காமல் சொல்ல..
அமுதாவை நினைத்து லாவன்யாவிற்க்கும் கண்கலங்கியது. ‘நான் மாறனைத் திட்டும்போதெல்லாம் நமக்கு கீழ இருக்கிறவங்களை நாம எளக்காரமா பார்க்க கூடாதுன்னு.. எனக்கு சொல்லி கொடுத்திட்டு நீங்க ஏன்தாத்தா இப்படி செய்திட்டிங்க..?” என்று வருத்தத்தோடு கேட்க..
‘அமுதாவோட குணம் புரியாம அப்படி செய்திட்டேன்டா.. நீ இனி மாறனை பேர் சொல்லி கூப்பிடாத.. மாமான்னு சொல்லு.. மாறன் பொண்டாட்டி உன்கூட பிறந்த அக்காமாதிரி.. நான் செத்துட்டாலும் நீ அவங்களோட ஒட்டு உறவா இருக்கனும்..” என தன் பேத்திக்கு சொல்லவும்.. ஒரு முடிவிற்க்கு வந்தவளாய்..
அப்பா நானும் மாறன் வீட்டிற்கு வரேன்.. என லாவன்யா கேட்க.. இனி எதையும் மறைத்து ஒன்றும் அகப்போவதில்லை என ராஜனும் முடிவெடுத்தார்.. தன் மகளுக்கு எதையும் சொல்லத் தேவையில்லை.. எப்பொழுதும் வயதிற்கு மிஞ்சிய பக்குவம் லாவன்யாவிடம் இருக்கும்.. எனவே மானோஜிடம் மட்டும்.. உனக்கு இனி இரண்டு அக்கா என சொல்லி.. இருவரையும் மாறன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் ராஜன்.
தனதறைக்குள் வந்த ராஜன்.. மனைவியை அழைக்க.. தேவி வந்ததும் நன்றியோடு கட்டியணைத்தார். எதற்கு இந்த அணைப்பு எனப் புரிந்த தேவியும்.. சற்று நேரம் ராஜன் அணைப்பில் கட்டுண்டு பின்பு விலகவும்.. மனைவியின் காலில் ராஜன் விழப்போக..
‘என்னங்க..? என்ன இது..?” என பதறி விலகினார் தேவி.
‘உன்னோட அன்பும் ஆதரவும் இல்லன்னா.. என்னால என்ன செய்திருக்க முடியும்..? உன்னை மாதிரி ஒரு பொண்டாட்டி.. சத்தியமா இந்த உலகத்தில யாருக்கும் வாய்க்க மாட்டாங்க.. நீ நந்தினியை நம்ம வீட்டு பொண்ணாத்தான் பார்க்கிறேன்னு சொன்னதும்..” என்று அதற்கு மேல் பேசமுடியாதவராய் கண்ணீர் வடிக்க..
‘அழாதிங்க.. அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல உங்களுக்காக இங்க வரனும்னா.. நான் எப்பவோ வந்திருப்பேன்.. என் மகளுக்காகத்தான் நான் வந்தேன்னு அவங்க சொன்னதுமே.. அவங்க விட்டுக்கொடுத்த வாழ்க்கையைத்தான் நான் வாழ்ந்திட்டிருந்தேங்கிற உண்மையை உணர ஆரம்பிச்சிட்டேன்.. மனசு வலிச்சாலும் அதை ஏத்துகிட்டுதான் ஆகனும்..?
அத்தனை பேர் முன்னாடி என்னை பக்கத்தில வச்சிகிட்டு.. அவங்க கழுத்தில நம்ம பரம்பரை செயினை போடும்போதே.. அவங்க உங்களுக்கு எவ்ளோ முக்கியம்னு எனக்கு புரிஞ்சிடுச்சி..
இடையில நான் எதாவது பிரச்சனை செய்து.. அது உங்க உடம்பை பாதிச்சிடுமோங்கிற பயம் வந்திடுச்சி.. உடம்பு நல்லா இருக்கனும்னா.. மனசுல நிம்மதி வேணும்..
[the_ad id=”6605″]
இதெல்லாம் போக.. இத்தனை வருசத்துக்கு அப்புறம் உங்களை பார்த்தும்.. நம்ம சந்தோசத்துக்காக மறுபடியும் மூனுமாசத்தில இந்த ஊரைவிட்டு போய்டுறேன்னு சொல்றவங்களோட.. என்னால சண்டையும் போடமுடியாது..” என கனத்த மனதுடன் எடுத்துரைத்து..
‘நந்தினி கல்யாணம் முடிஞ்சதிலயிருந்து.. என்னை எப்படி சமாளிக்கிறது..? அவங்களை எப்படி சரிசெய்யிறதுன்னு உங்க மனசு படுற பாட்டை உங்க முகம் சொல்லுது.. மனசுல எதையும் போட்டு வருத்திட்டிருக்காதிங்க.. இனி உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்ங்க.. எனக்கு நீங்க பழைய மாதிரி சந்தோசமா இருக்கனும்..” என்று சற்றுநேரம் ஆழ்ந்த யோசனையில் இருந்தவர்..
‘உங்களால நந்தினியோட அம்மா பாதிக்கப்பட்டுருக்காங்க.. வாழ்க்கையோட போராடி தனியா உங்க பொண்ணை வளர்த்திருக்காங்க.. பெத்தவளை தனியா விட்டுட்டு அவளைமட்டும் நமக்குள்ள இழுக்குறது சரியில்லதான்.. ஊருக்கே நியாயம் சொல்ற நாம.. நமக்குன்னு வரும்போது சரியா யோசிக்காம விட்டுட்டோம்..
அம்மாக்கு வேணாங்குறது எனக்கும் வேணாம்னு.. நந்தினி அழகா சொல்லிட்டா அவ விருப்பத்தை.. அவ இடத்திலயிருந்து யோசிச்சி பார்த்தா அதுவும் சரிதான..?” என்று தளர்வாய் சொல்லி..
‘நீங்களும் நந்தினியோட விருப்பத்தை ஏத்துகிட்டு.. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்னு பெத்த மகளுக்கு வாக்கு கொடுத்திருக்கிங்க.. இனி அதைப் பாருங்க..” என்று கண்கலங்க.. ராஜன் தடுமாற..
‘ஒரு புருசனுக்காக இரண்டுபேர் அடிச்சிக்கிற வயசும் இது கிடையாது.. எப்பவும் வியாபார விசயமா வாரத்தில இரண்டு.. இல்ல மூனு நாள்.. வெளியூர் போவிங்கதான..? நான் அதுமாதிரி நினைச்சிக்கிறேன்..” என்று சொல்லும்போது பொலபொலவென கண்ணீர்விட.. தாளமுடியாத தவிப்போடு மனைவியை அணைத்த ராஜன்.. வேதனையோடு மனைவிக்கு தான் புரியவைக்கவேண்டியதை.. மனைவி தனக்கு புரிய வைத்ததில் பேச்சற்றுப் போனார்..
———————————————–
‘ராஜய்யாவை நீ உங்கப்பாவா ஏத்துக்கிட்டியா..? எப்படி அவர் பொருள்களை திரும்ப எடுத்து போனாரு.?” என.. நந்தினியிடம் மூன்று நாட்களாக கேட்டுக்கொண்டிருந்த மாறனுக்கு அமைதியையே பதிலாகத் தந்தாள் நந்தினி.
நந்தினிக்கு மாறனிடம் எதையும் மறைக்கும் எண்ணம் இல்லை.. ஆனால்.. மாறனுக்கும்.. தன் அம்மாவிற்கும் நல்ல புரிதல் இருப்பதால்.. இவன் நம்ம அம்முமாகிட்ட சொல்லிட்டான்னா.. அம்மாகிட்ட நம்மளால தப்பிக்கவே முடியாது.. என்ற பயத்தினாலேயே.. மாறனிடம் மனதை மறைத்திருந்தாள்..
பிறகு மாறனுக்கும் அவனின் வேலை அவனை மதுரைக்கு அழைக்க.. நான் வர பத்துநாளைக்கு மேல ஆகும்.. என்று நந்தினியிடமும்.. சுமதி ராமுவிடமும் சொல்லி மதுரை சென்றிருந்தான்.
தான் மனதில் நினைத்ததை நம்ம அம்மாவோட காதலன்.. சரிவர புரிந்திருப்பாரா என யோசித்தவள்.. புரியாமலா எல்லாம் நான் பார்த்துக்கிறேன்னு உறுதியாக சொன்னார்..? என நினைக்க.. மாறன் வீட்டில் இல்லாதபோதும்.. எதையோ எதிர்பார்த்து காத்திருக்கும் நந்தினியின் மனது.. அவளது முகத்தை மலர்ச்சியாகவே வைத்திருந்தது.
கடந்த பதிமூன்று நாட்களாக வழக்கமாக தன் வேலைகளை முடித்து.. நிம்மதியாக பள்ளிக்கு சென்று வந்திருந்தாள்.. அமுதாவிடம் பேசினால்.. தாம் உளறிவிடுவோம் என்று தன் அன்னையிடமும் தனிமையில் பேசுவதை தவிர்த்திருந்தாள். மாலை நேரங்களில் அமுதாதான் தன் மகள் வீட்டிற்கு வந்து நந்தினியை பார்த்துசெல்வார்.
மதியம் பள்ளியில் இருக்கும்போதே தான் ஊரிலிருந்து வந்துவிட்டேன்.. என்று நந்தினிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் மாறன். மாறன் வீட்டில் இருக்கிறான் என தெரிந்தால் தன் அன்னை இன்று மாலை வீட்டிற்கு வரமாட்டார்கள் என நினைத்து.. பள்ளி முடிந்ததும் தன் அன்னையை காண வந்திருந்தாள் நந்தினி.
நந்தினியை பார்த்ததும் சந்தோசமடைந்தாலும்.. ‘நந்துகுட்டி.. மாறன் ஊர்லயிருந்து வந்துட்டாப்லயாம்.. நீ கிளம்பு..” என்று சொல்ல..
அன்னையை முறைத்தவள்.. ‘அவர் வந்தா நான் உங்களை பார்க்க வரக்கூடாதா..? போங்க அம்மும்மா..” என நந்தினி கோபிக்க..
‘அதுக்கில்லடா.. பாவம்.. உன்னை பார்க்கனும்னு மாப்பிள்ளைக்கு இருக்கும்தான..?” என்றார் வாஞ்சையாக..
‘இருக்கட்டும்.. இருக்கட்டும்.. எனக்கு டீ வச்சிதாங்க..” என்று ஆயாசமாய் கட்டிலில் அமர்ந்தாள்.
‘டீ குடிச்சதும் கிளம்பிடனும்..” என்று பேசிக்கொண்டே டீயை வைத்தவர்.. நந்தினி டீ குடிப்பதற்க்குள்.. பூச்செடியிலிருந்து பூக்களை பறித்து அவசர அவசரமாய் அதனை தொடுத்து.. தன் மகளுக்கு வைத்து அழகுபார்த்து.. வழக்கம் போல் கன்னம் தடவி திருஷ்டி கழிக்க..
இதுபோல் தாமும் புருசனோடு வாழவேண்டி.. காதலிக்கும் காலங்களில் எத்தனை கனவுகளை கண்டிருப்பார் என நினைத்த நந்தினிக்கு.. முனுக்கென கண்ணீர் வந்தது. ‘ஏய் நந்து.. எதுக்கு அழற..?” என்று அமுதா பதற..
‘ஒன்னுமில்ல அம்மும்மா..” என்றவள்.. எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையோடு இறுக்கி அணைத்துக்கொண்டாள் தன் அன்னையை..
‘சரி.. நாளைக்கு ஞாயித்துக்கிழமைதான..? எதுன்னாலும் நாளைக்கு பேசிக்கலாம்.. இப்போ மாறன் உனக்காக காத்திட்டிருப்பார்.. கிளம்பு நந்தினி..“ என்று கனிவோடு அமுதா சொல்ல.. தன் அன்னைக்கு நெற்றிமுத்தம் வைத்து கிளம்பினாள்.
நந்தினி வீட்டிற்குள் நுழைய.. ‘உனக்கு மட்டும் ஆறுமணிக்குத்தான் வீட்டுக்கு போக மணி அடிச்சாங்களா..?” என்றான் கடுப்போடு.
அவனின் கோபத்தை கண்டுகொள்ளாமல்.. ‘அதெல்லாம் முன்னமே அடிச்சிட்டாங்க.. நான் அம்மும்மாவை பார்க்க போனேன்.. அதான் கொஞ்சம் லேட்டாகிடுச்சி..” என சாதாரணமாக சொல்லிக்கொண்டே தனதறைக்குள் போனாள்.
இவளுக்கு கொஞ்சமாச்சம்.. என்னைப் பத்தின நினைப்பிருக்கா..? என எரிச்சலடைந்து உள்ளே போய் பார்க்க.. உடை களைந்து நைட்டிக்கு மாறி.. கிச்சனுள் போய் மாறனுக்கு டீ வைக்க ஆரம்பித்தாள்.
கடுப்புடன் எழுந்து கிச்சனுக்குள் போய் நந்தினியை முறைக்க.. ‘அத்தையும் மாமாவும் எங்க காணோம்..? கோவிலுக்கேது போயிருக்காங்களா..?” என்றாள் அவனின் கோபத்தை புறக்கணித்தவளாய்.
‘உன்னை கட்டிக்கிட்டதுக்கு நான்தாண்டி கோவில் கோவிலா சுத்தனும்..” என்று எரிச்சலோடு மாறன் சொல்ல..
‘அப்போ சீக்கிரம் கிளம்பு..” என சொல்லி மறு பக்கம் திரும்பினாள்.
‘உன்னை..” என்றபடி மின்னலென அருகில் வந்தவன்.. நந்தினிக்கு நன்றாக வலிக்கும்படி கட்டியணைக்க.. ‘இரண்டு வார கேப்புக்கே உனக்கு இப்படி இருக்குன்னா.. எங்கம்மாக்கு எப்படி இருக்கும்…?” என்று கேட்ட நந்தினியின் குரல் தழுதழுக்க..
அணைப்பை விடுவித்து தன் புறம் திருப்ப.. அவளின் கண்கள் கலங்கியிருந்தது.
‘ப்ச்.. என்ன ராஜி நீ..? எல்லாம் தெரிஞ்சிருந்தும் இன்னும் அதையே நினைச்சிட்டிருக்க..?” என்று வருத்தத்தோட கேட்டு அவளின் கண்ணீர் துடைத்தவன்.. பிறகு நியாபகம் வந்தவனாய்..
‘நான் உன்கிட்ட பேசவேக்கூடாதுன்னு நினைச்சேன்.. உங்கப்பா எதனால திடீர்ன்னு மனம் மாறுனார்ன்னு.. நான் அத்தனை முறை கேட்டும் நீ சொல்லவே இல்லல்ல..?” என கோபிக்க..
‘எங்கப்பான்னு சொல்லாத..” என்றாள் கடுப்பாக.
‘அதான் இரண்டு பேரும் கொஞ்சிகிட்டிங்கல்ல..? இன்னும் ஏன் சொல்லக்கூடாது.. நான் அப்படித்தான் சொல்லுவேன்..” என்று மாறன் அவளை வம்பிளுக்க.. பதிலிருந்தும் பேசத்திராணியற்றவளாய் அமைதியாக கண்ணீர் வடித்தாள்.
திருமணம் முடிந்த மறுநாளிலிருந்து.. ஒருவாரமாக தனக்கு வேண்டியதை மறுக்காமல் கொடுத்து.. திளைக்க திளைக்க தம்மை இன்பத்தில் ஆழ்த்திய ராஜியின் முகம் இதுவல்ல.. இவள் மனதில் வேறு ஏதோ உழன்றுகொண்டிருக்கிறது எனப் புரிந்தவன்..
[the_ad id=”6605″]
‘ஏய் அழாதடி.. நீ என்னை கடுப்பேத்தினதால.. உன்னையும் கடுப்பேத்தி பார்க்கத்தான் சும்மா அப்படி சொன்னேன்..” என்று மாறன் கெஞ்ச..
‘எனக்கு அவர் அப்பாவாகிட்டா..? என் அம்முமாக்கும் அவரால புருசனாய்ட முடியுமா..?” என்று முன்பு கேட்க முடியாததை இப்பொழுது கேட்க.. மாறனுக்கு எதுவோ விளங்குவதுபோல் தோன்ற.. மனதில் மின்னலடித்தவனாய்..
‘ராஜி.. உனக்கு இதுல சம்மதமா..? நீ அவரை மன்னிச்சிட்டியா..?” என்றான் உற்ச்சாகமாய்.
‘எனக்கு சம்மதமா..? நான் அவரை மன்னிச்சிட்டேனாங்கிறதெல்லாம் இப்போ முக்கியமில்ல.. இத்தனை வருசமா எனக்காக மட்டுமே வாழந்திட்டிருந்த என் அம்மும்மாக்கு.. அவங்க இழந்த வாழ்க்கையை மொத்தமா கொடுக்க முடியாதுன்னாலும்..
அவங்க பிறந்து வளர்ந்த இந்த மண்ல.. யாருக்கு பயந்து சொந்த வீட்டை விட்டுட்டு போனாங்களோ அவங்க முன்னாடியே.. அதே வீட்ல இனிமேலாவது கௌரவமா வாழவைக்கனும்னு உள்ளுக்குள்ள ஒரு வெறி..“ என குரலுயர்த்தி சொன்னவள்..
சட்டென குரலிரங்கியவளாய்.. ‘அந்த பட்டுப்போன நெத்தியில மணக்கும் குங்குமம் வைச்சி பார்க்கனும்னு ஆசை.. அழுது அழுது கண்ணீர் வத்திப்போன அந்த கண்கள்ல.. அவங்களுக்கான ஆசையை பார்க்கனும்ங்கிற ஆசை..” என்று ஏக்கத்தோடு சொன்னவள்..
‘அந்த தங்கநிற கழுத்தில கம்பீரமான தாலிக்கொடி இருக்கனும்ங்கிற பேராசை.. அவங்க துன்பத்தை பகிர்ந்துக்க.. உரிமையாய் சாய்ந்துக்க.. அவங்களுக்கு பிடிச்ச ஒரு தோள்.. இப்படி இன்னும் நிறைய.. இதெல்லாம் இனியாவது அவங்களுக்கு கிடைக்குமா..?” என்று மாறனிடம் கேட்டுக்கொண்டே பெருகிய கண்ணீரோடு தளர்வாய் அவனின் மடிசாய்ந்தாள்.
ஆதரவாய் தன்னவளை சேர்த்தணைத்து தேற்றிக்கொண்டிருந்த வேளையில் மாறனின் போன் அழைக்க.. ‘ராஜி.. ராஜய்யாத்தான் போன் பண்றார்..” என சொல்லி ஆன் செய்யவும்..
‘எங்கடா இருக்க..?” என்று ராஜனின் குரல் ஓங்கி ஒலிக்கவும்..
‘ராஜி.. ராஜய்யா ரொம்ப சந்தோசமா இருந்தாத்தான்.. என்னை வாடா போடான்னு கூப்பிடுவாரு.. என்ன பேசுறாருன்னு நீயும் கேக்கிறியா..?” என ராஜியிடம் மாறன் கிசுகிசுக்க..
ஆர்வத்தோடு எழுந்தமர்ந்தாள் ராஜநந்தினி. ஸ்பீக்கரை ஆன் செய்ய..
‘மாறா.. மாறா.. நான் பேசுறது கேக்குதா..? எங்கயிருக்கன்னு கேட்டேன்..?”
‘இங்க வீட்லதான் ராஜய்யா இருக்கேன்.. மதியம்தான் ஊர்ல இருந்து வந்தேன்..”
‘கல்யாணம் முடிஞ்சி ஒரு மாசத்துக்கு கூட வீட்ல இருக்க முடியாதா உன்னால..? அப்படி என்னடா வெங்காய பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கு..? அதான் கோடி கணக்குல சம்பாதிச்சிட்டல்ல..? அப்படித்தான் போனியே என் பொண்ணையும் கூட்டிட்டு போயிருக்கவேண்டியதுதான..?” என்று கத்த..
‘அப்படித்தான் போவேன்.. அன்னைக்கு நான் அத்தனை முறை சொல்லியும்.. என் பேச்சை நீங்க கேக்கல.. உங்க பொண்ணுக்கும் உங்களுக்கும் நடுவில சைக்கிள் கேப்புல என்ன நடந்ததோ.. உடனே லாரியெல்லாம் எடுக்க சொல்லிட்டிங்கள்ல..? உங்க பொண்ணும் என்னன்னு சொல்லமாட்றா.. அதனால அவ பேச்சையும் கேக்கமாட்டேன்..” என்று மாறனும் செல்ல கோபத்தோடு கத்த..
‘அட மடப்பயலே.. உனக்கு அது புரியலையா..? என் பொண்ணு என்கிட்ட அவங்க அம்மாவோட சந்தோசத்தை பத்திதான் பேசினா..” என்று சந்தோசமாய் ராஜன் சிரிக்க..
ஆச்சர்யமாய் உணர்ந்த மாறன்.. ‘அதெப்படி ராஜய்யா அதுதான்னு கண்டுபிடிச்சிங்க..?” என கேட்க..
‘அதுக்கு பேர்தாண்டா ரத்தபாசம்.. இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது..” என்று பெருமையாய் சொன்ன ராஜன்.. ‘என் அறிவாளி பொண்ணுக்கு போயும் போயும் இப்படி ஒரு மடப்பையனா புருசனா கிடைக்கனும்..?” என்று ராஜன் மேற்கொண்டு பேச.. அச்சோ இவர் சொல்லித்தான் நாம இவளை பார்க்க போனதையும் உளறி.. நமக்கு ஆப்பு வச்சிடுவார் போலவே என பதறி..
‘ராஜய்யா.. தேவிம்மா நல்லா இருக்காங்களா..?” என்று இடைமறித்தான்.
‘நல்லாயிருக்கா..” என்று ஆரம்பித்து.. தேவி.. அமுதாவைப் பற்றி பேசியதையும்.. லாவன்யா அமுதாவின் மேல் பரிதாபம் கொண்டு.. அவளின் தாத்தாவை திட்டியதையும் விளக்கி..
‘மாறா.. யார் தடுத்தாலும்.. இனி அமுதாவை விடக்கூடாதுன்னுதான் நான் முடிவு செய்திருந்தேன்.. ஆனா.. இப்போ என் ரெண்டு பொண்ணுங்க.. முக்கியமா தேவியும் என்னை புரிஞ்சிக்கிட்டா.. இனி என் அம்முவை நான் விடப்போறதா இல்ல..” என்று ராஜன் உறுதிகொடுக்க..
சந்தோசத்தில் அழுத நந்தினியின் விசும்பல் சத்தம் ராஜனை அடைய.. ‘மாறா.. என் பொண்ணு நான் பேசினதை கேட்டுட்டிருக்காளா..?” என ஆர்வமாய் கேக்க..
‘ஆமாம் ராஜய்யா.. நான் அப்புறம் பேசுறேன்..” என்று இணைப்பை துண்டித்து ராஜியை பார்க்க.. ‘எல்லாம் சரியாகிடுமா..? அம்மும்மா இதுக்கு ஒத்துக்குவாங்களா..?” என்று தவித்தாள் நந்தினி.
‘எல்லாம் ராஜய்யா பார்த்துப்பார்.. நீ கவலைப்படாத..” என்று தனதறைக்கு அழைத்து வந்து.. அரைமணிநேரத்திற்கு மேல் ஆறுதலளித்த மாறன்.. ‘பத்து பதினைஞ்சு நாளுக்கு மேல ஆய்டுச்சி.. என்னைப் பார்த்தா உனக்கு பாவமா இல்லையா..?” என்று ஏக்கத்தோடு கேட்டு.. இதமாய் அணைத்து.. ராஜியை தன்வசப்படுத்தும் முயற்ச்சியில் இறங்கியவன்.. அதில் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்தான்.
———————————————————-
ராஜன் சீர் கொண்டு வந்ததையும்.. இங்கு நடந்ததையும்.. அவர்கள் வந்து சென்றதுமே இராமுவும் சுமதியும்.. அமுதாவிடம் சொல்லியிருந்தனர்.
ராஜன் தன் மகளை சீர்வரிசையோடு காணவந்திருந்தது ஓரளவிற்கு தாம் எதிர்பார்த்ததுதான்.. ஆனால் குடும்பத்தோடு வந்தது அமுதாவிற்கு ஆச்சர்யமே..
[the_ad id=”6605″]
தேவையான நேரத்தில் தேவைக்கு கிடைக்காத அரவணைப்பு.. அவர்களின் மன அமைதிக்காக நாம வாங்கிக்கனுமா..? இழந்த பாசத்திற்கும் அன்பிற்க்கும் நஷ்டஈடாக.. நகையும்.. பொருளுமா..? என மனம் வெம்பியது.
ராஜனின் சீர்வரிசையை நந்தினி வேண்டாம் என மறுத்ததும் அமுதா எதிர்பார்த்ததுதான்.. எனினும்.. ராஜனின் மீதான வெறுப்பு கடந்த பத்துநாளாக நந்தினிக்கு முன்புபோல் இல்லை என்பதையும் அமுதா உணர்ந்திருந்தார்.. ஆனால் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
கஷ்டப்படும் காலங்களில் கூட எப்பொழுதும் தன்னம்பிக்கையும்.. மகளுக்காக வாழவேண்டும் என்ற ஆர்வம் இருந்த முகத்தில்.. இப்பொழுதெல்லாம் சோர்வும் ஆர்வமின்மையுமே மிஞ்சியிருந்தது.
ஆறுமாத பணிவிடுப்பில்.. மூன்றுமாதம் முடிந்திருக்க.. இன்னும் மூன்று மாதத்திற்க்கு இங்கு இருக்க வேண்டுமா..? என மனது பாரமாய் உணர்ந்தது.
தீவிர யோசனைக்குப் பின் வேண்டாம்.. நந்தினிக்கு தாலிபிரித்து கோர்க்கும் விசேசம் முடிந்ததும் கிளம்பிடலாம்.. என முடிவெடுத்தபின்தான் சற்று நிம்மதி பிறந்தது.
இத்தனை வருடமாக திடமாக இருந்த மனது.. ஏனோ இப்பொழுதெல்லாம் நிலைகொள்ளாமல் தவித்தது. எல்லோருக்கும் ராஜனோடு நம் உறவு தெரிந்துவிட்டதால்.. ராஜனோடு சேர்ந்து வாழும் எண்ணம் தமக்குள் வந்துவிட்டதா..? என யோசிக்க.. ச்சே..ச்சே.. இல்லவே இல்லை.. என்றுதான் அடித்து கூறியது அமுதாவின் மனது.
சிறுவயதில்.. பாட்டியோடு இருக்கும் காலங்களிலிருந்தே.. அமுதாவின் பாட்டி காட்டு வேலைக்கு செல்வதால்.. வீட்டு வேலை.. பின்பு வீடு வீடாக சென்று மாட்டிற்கு கழனி எடுப்பது.. மாட்டு கொட்டகையை சுத்தம் செய்வது.. படிப்பு.. என எப்பொழுதும் ஓயாமல் எதையாவது செய்தே பழக்கப்பட்டிருந்ததாலும்..
பிறகு சென்னை வந்தபொழுதும்.. தனக்கான பணி நந்தினியின் பராமரிப்பு என.. அரிபரியான வாழ்கையையே வாழ்ந்திருந்த அமுதாவிற்கு.. இப்பொழுதெல்லாம் நேரமே நகர்வதில்லை.
மகளை நாம் நினைத்ததுபோல் வளர்த்து.. நல்ல இடத்தில் திருமணமும் முடிந்தாயிற்று.. இனி நந்தினியை கண்ணுக்குள் வைத்து தாங்குவார் நம் மாப்பிள்ளையும் அவர்களின் குடும்பமும்.. வாழ்க்கையில் தாமே எதிர்பார்க்காத திருப்பமாய் நந்தினியே விரும்பவில்லை என்றாலும்.. இனி ராஜன் அவளை விடமாட்டார் என்ற நம்பிக்கையும் வலுப்பெற..
இனி இந்த உலகில் தமக்கென்ன வேலை என்ற நினைப்பும் அவ்வப்போது தோன்றி மறைய.. யாருமில்லாமல் நந்தினியை தாம் பெற்றெடுத்ததுபோல் நந்தினியை தனியே விடக்கூடாது.. நந்தினிக்கு குழந்தை பிறக்கும்வரை தப்பான முடிவிற்கு செல்லக்கூடாது என்று.. எப்பொழுதும் போல் இப்பொழுதும் எண்ணி மனதை திடப்படுத்தினார்.. எனினும்.. எதிர்கால வாழ்வின் மீதுள்ள பிடித்தம்.. சட்டென விட்டுப்போனதாய் ஒரு உணர்வு..
மனதினுள் ஒரு விரக்தி.. வலுவாய் வந்தமர்ந்தது.