ஒரு முடிவின் துவக்கம்..
அத்தியாயம் — 19
இன்று அமுதாவை போய் பார்க்க வேண்டும் என நினைத்திருக்க.. காலை எழுந்ததிலிருந்து பலமான யோசனையில் இருந்தார் ராஜன். எப்படி அமுதா முகத்தினில் விழிப்பது..? வாழ்க்கையை மொத்தமாய் இழந்தவளிடம்.. என்ன ஆறுதல் சொல்லுவது..? இத்தனை வருடம் கழித்து வந்திருக்கிறாள்.. தம்மீது சிறு ஆர்வம்.. பார்வையில் கூட இருக்கவில்லை.. மருத்துவமணையிலும் அப்படி உக்கிரமாக பேசியவளிடம்.. ராஜனுக்கு பேசுவதற்கு கூட பயம்தான்.. எனினும் சந்தித்துதான் ஆகனும் என முடிவெடுத்திருந்தார்.
‘அப்பா.. அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க..” என்று லாவன்யா அழைக்க.. உள்ளே வந்த ராஜனுக்கு இட்லியும்.. நாட்டுகோழிகுழம்பும் பரிமாறப்பட மிகவும் பிடித்த உணவுதான்.. இன்று தொண்டைக்குள் இறங்க மறுத்தது.
ஒழுங்கா சாப்பிடுவளா..? மாட்டாளா..? அப்போவே ஒல்லியான தேகம்தான்.. இப்பவும் சற்றே கூடினாற்போன்ற உடல்வாகுதான்.. ஆனால்.. வயதிற்கும் உயரத்திற்க்கும் ஏற்ற பருமன் கிடையாது.
வருத்தமாய் ஆரம்பித்த அமுதாவின் நினைவு.. இப்பொழுது ரசனையாக மாறியது.. அமுதாவின் வயதை யோசித்தார்.. அம்மு ஊரைவிட்டு போய் இருபத்தி நாலு வருசமாகுது.. இங்கயிருந்து போகும்போது பதினெட்டு வயசு இருக்கும்.. அப்போ நாப்பத்திரண்டு வயசாகுதா..? ஆனா முப்பது வயசுபோலத்தான் இருக்கா.. ம்ம்.. அம்மாவும் மகளும் அக்கா தங்கைபோலத்தான் இருக்காங்க.. என நினைக்க..
‘அப்பா.. சாப்பிடுங்க..” என்ற லாவன்யா அதட்டலில்தான் தன்னுணர்வு பெற்றார். ராஜனின் நிலை தேவிக்கு புரிந்துவிட்டது.. இன்று அமுதாவை பார்க்கபோவார் என உள்ளுக்குள் ஓட.. என்னமுயன்றும் கண்ணீர் கரகரவென வெளிக்கிளம்ப.. கிச்சனில் தஞ்சமடைந்து..
‘லாவி.. அப்பாக்கு பார்த்து குழம்பு போடு.. நான் தாத்தாக்கு தோசை ஊத்தனும்..” என்று.. தண்டபானிக்கு தோசை ஊற்றி.. அவரிடம் போய் அமர்ந்துகொண்டார்.
ராஜன் சாப்பிட ஆரம்பிக்க.. ‘ப்பா.. சீக்கிரம்.. இன்னைக்கு ஆட்டோமேன் வரமாட்டாங்க.. நீங்கதான் ஸ்கூல்ல போய் விடனும்..” என்றாள்.
பிறகுதான்.. பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நெருங்கிவிட்டதால்.. இனி ஞாயிற்றுகிழமைகளிலும் பள்ளிஉண்டு என நேற்றே லாவன்யா சொல்லியிருந்தது நியாபகத்திற்கு வரவும்.. ‘எனக்கு பசிக்கிலம்மா.. நான் வந்து சாப்டுக்கிறேன்.. “ என்று லாவன்யாவை அழைத்துச்சென்றார்.
‘அப்பா.. சரியா நாலு மணிக்கு வந்திடுங்க..” என சொல்லி லாவன்யா பள்ளிக்குள் செல்ல.. தன் மகளுக்கு விடையளித்த ராஜன் அமுதாவின் வீட்டை நோக்கி பயணித்தார்.
ஏனோ உடல் அசதியாய் இருப்பதாக தோன்ற.. அமுதா இன்று எழுந்ததே காலை எட்டுமணிக்கு மேல்தான்.. மெதுவாய் குளித்து.. கூழ்காய்ச்சி.. அதனை ஆற்றிக்கொண்டிருந்தார். வாசலில் ஏதோ வண்டி வந்து நிற்பதாய் தோன்றினாலும்.. எழுந்து பார்க்க சங்கடப்பட்டவராய் அமர்ந்திருக்க..
நந்தினியின் அழைப்பு வரவும்.. ‘நந்துகுட்டி..” என்ற அமுதாவின் குரல்.. ராஜனை வாயிற்படியிலேயே நிற்க வைத்தது. கதவு லேசாய் திறந்திருக்க..
‘ம்ம்.. இப்போதான் ஆத்திகிட்டு இருக்கேன்.. இனிதான் குடிக்கனும்.”
‘அம்மும்மா… உடம்பேது சரியில்லையா.? குரலே ஒருமாதிரியிருக்கு..” என நந்தினி பதற..
‘நான் நல்லாத்தான் இருக்கேன் நந்து.. கொஞ்சம் சலுப்பா இருந்துச்சி.. லேட்டாத்தான் எழுந்தேன்..”
‘சரி.. மதியம் இங்க வரிங்களா..?” என நந்தினி ஆர்வமாக கேக்க..
‘அங்க நான்வெஜ் செய்விங்க.. நான் சாப்பிடலன்னா அங்க எல்லாரும் சங்கடப்படுவாங்க.. மதியம் இங்கையே சாப்டுட்டு.. மூனுமணிபோல வரேன்..” என்று அமுதாசொல்ல.. அவ்வளவுதான் பேச்சு சத்தம் நின்றிருந்தது.
மீண்டும் சற்றுநேரம் தயக்கத்தில் நகர.. முயன்று.. ‘அமுதா..” என அழைத்து கதவை நன்றாக திறக்க.. அங்கு ராஜனை எதிர்பார்க்காத அமுதா.. பட்டென கதவை தாழிட முனைய.. அதற்க்குள் தனது ஒரு காலை உள்ளே வைத்து தடுத்தார் ராஜன்.
அமுதாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை.. வெளியே போ என்று சொல்லக்கூட வார்த்தை வெளிவரவில்லை.. அதற்குள் ராஜன் உள்ளே வந்திருக்க.. அப்படி ஒரு ஆத்திரம் அமுதாவினுள் கிளம்ப.. அந்த நொடியே தயக்கமெல்லாம் விடைபெற்றிருந்தது.
‘என்ன..? என்னை வப்பாட்டியா வச்சிக்கலாம்னு வந்திருக்கிங்களா..?” என்றார் ஆக்ரோசமாக.
‘அமுதா..” என்ற ராஜனின் குரல்.. கர்ஜனையாய் வெளிவர..
‘இந்த கோபம் உண்மைன்னா.. இந்நேரம் வெளில போயிருக்கனும்..‚” என்றார் அழுத்தமாய்.
‘என்னால வெளில போகமுடியாது..” என்று சட்டமாய் சேரில் அமர..
‘நான் இங்க இருந்தாதான இந்த பிரச்சனை..? பார்த்துக்கலாம் விடுங்க..” என்று அமுதா சவாலாய் கத்த..
‘ஹ.. இனி என் அனுமதியில்லாம.. இந்த தெருவைக்கூட உன்னால தாண்ட முடியாது..” என்று திமிராய் ராஜன் சொல்ல..
‘ஓ..ஹோ.. அப்படியா..? என்னை தடுப்பிங்களா..? நானும் பிரச்சனைக்கு பயந்து ஓடுற பழைய ஏமாளி அமுதா கிடையாது.. இங்கயே இருந்து என்னை மிரட்டுறவங்களுக்கு பதில் கொடுத்திட்டுத்தான் கிளம்புவேன்..” என்று தைரியத்தோடு சொல்ல..
மெச்சுதலாக பார்த்தவர்.. ‘பார்டா.. என்னை என்ன செய்வ..?” என்றார் ஆவலாக.
‘தனியா இருக்கிற பொம்பளைகிட்ட வந்து டார்ச்ர் பண்றிங்கன்னு.. கோர்ட்ல கேஸ்போடுவேன்..” என்று எரிச்சலாக சொல்ல..
[the_ad id=”6605″]
‘ஏன் அம்மு.. இந்த ஊர் பஞ்சாயத்து.. உள்@ர் போலீஸ் ஸ்டேசன்.. இங்கல்லாம் போகமாட்டியா..? ஸ்ட்ரைட்டா.. கோர்ட்தானா..?” என வியப்போடு கேட்டு ராஜன் சிரிக்க..
பேச்சு வேறுதிசையில் செல்வதை உணர்ந்த அமுதா… சட்டென வெளியே வந்தார். இந்த ஊரில் காலடி வைக்கும்போதே.. ராஜனின் அன்புக்கு மயங்கிடவும் கூடாது.. தண்டபானியின் அவமானத்திற்கு தயங்கிடவும் கூடாது.. என்று திடமாக முடிவெடுத்துதான் வந்தார்..
ஆனால்.. நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு ராஜனின் அம்மு என்ற அழைப்பை கேட்டதும்.. தலைமுதல் கால்வரை வலுவிழந்ததுபோல் ஒரு உணர்வு.. தளர்வாய் திண்ணையில் அமர்ந்தார்.. குனிந்திருந்த அமுதாவின் தலையை.. அவரின் இருகைகள் தாங்கியிருந்தது.
வெளியே வந்த ராஜன்.. சிறிதான இடைவெளியில் அமுதாவின் அருகில் அமர.. பலவருடங்களுக்கு முன்னால் தன்னை மயக்கிய அதே ஜவ்வாது வாசனை.. சற்றுமுன் கோபத்தில் உணராத வாசனை.. உடலும் மனமும் தளர்ந்த நிலையில்.. நேரடியாய் அமுதாவின் நாசியை அடைய.. உன் ஒவ்வொரு அனுவிலும் நான் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.. என்று கர்வத்தோடு ராஜன் சொல்வதுபோல் தோன்ற..
தன் மனதை இரும்புத்திரையால் பூட்டிவைத்திருக்கிறோம் என்ற நினைப்பெல்லாம் பொய்தானா..? இத்தனை வருடத்திற்க்கு பிறகும் என் அனுமதியில்லாமலே ராஜனால் மட்டும் எப்படி தன்னுள் நுழையமுடிகிறது..? மீண்டும் தோல்வி.. தன்மானத்தோல்வி.. அதுவும் இன்னொரு பெண்ணின் கணவனிடம்.. இயலாமையில் பொத்துக்கொண்டு வந்தது கண்ணீர்.. பல இரவுகளில் நந்தினிக்கு தெரியாமல் சத்தமின்றி அழுத பழக்கம்.. உடல் குலுங்கவில்லை.. சிறு கேவல்கூட வெளிவரவில்லை.. முகத்தை மூடியிருந்த கைகளின் வழியாக.. தாரைத்தாரையாய் கொட்டியது கண்ணீர்..
கண்ணீர் விட்டது அமுதா.. அதில் மொத்தமாய் கரைந்துகொண்டிருந்தார் ராஜன்.. தன் அன்பில் திளைக்கவேண்டிய செப்புச்சிலை.. தற்போது கற்சிலையாய் கண்ணீர் வடிப்பதை பார்த்து உள்ளுக்குள் நொருங்கிகொண்டிருந்தார்.. இருபது நிமிடங்களுக்கு மேல் ஆயிற்று.. இன்னும் அழுகை நின்றபாடில்லை..
‘அம்மு.. போதும்டா..” என்ற கரகரத்த குரலோடு ராஜன் அமுதாவின் தலைகோத..
ராஜனின் தொடுகையில் தன்னுணர்வு பெற்ற அமுதா.. இவர்முன் இப்படி அழுதுட்டோமே.. யாருக்கு வேண்டும் இவர் பரிதாபம்..? இவ்வளவுதானா நம் மனதிடம்…? ச்சே.. என தன்னைத்தானே அருவருத்துக்கொண்டவராய்.. ‘கையை எடுங்க ராஜன்..” என கர்ஜித்து.. எழுந்து உள்ளே போக எத்தணிக்க..
கோவைப்பழமாய் சிவந்திருந்த அமுதாவின் முகத்தை பார்த்து.. சிலநொடி தன்நிலையிழந்தவர்.. பிறகு கலங்கிய கண்களோடு உள்ளே போக எழவும்.. இம்முறை ராஜன் உள்ளே வருவதற்கு முன்பாகவே கதவை தாழிட்டிருந்தார்.
‘கதவைத்திற அம்மு.. நீ நினைக்கிறமாதிரி தப்பான எண்ணத்தோட நான் வரலடா.. அதுக்கான தகுதியும் எனக்கில்ல..” என்று தன்னிலை விளக்கம் கொடுக்க..
‘எனக்கு உங்களோட எந்த விளக்கமும் வேணாம்.. பரிதாபமும் வேணாம்.. என் உலகத்துக்குள்ள என் பொண்ணுமட்டும்தான்.. மகளுக்கு கல்யாணம் செய்து மருமகனும் எடுத்தாச்சி.. எல்லாம் முடிஞ்சி தனிமையில இருக்கிற என்கிட்ட.. இப்படி வந்து நிக்கிறதும் பேசறதும்.. சரிதானான்னு யோசிச்சிபாருங்க..” என்று அமுதா கோபத்தோடு வாதிட..
‘நீதான் மருமகன் எடுத்திட்டியா…? நான் எடுக்கலயா..? நந்து நம்ம மக அம்மு.. இப்படி பேசி என்னை சாகடிக்காதடி.. கதவைத்திறடி..” என்று வெளியிலிருந்தபடியே இறங்கிய குரலில்.. ராஜன் கெஞ்ச..
‘ராஜன் ப்ளீஸ்.. திரும்ப திரும்ப அவமானங்களை சந்திக்கிறதுக்கு எனக்கு தெம்பில்ல.. எனக்கு அது தேவையுமில்ல.. தயவுசெய்து இங்கயிருந்து கிளம்புங்க..” என்ற அமுதாவின் குரலும் இம்முறை கலக்கத்தோடே வெளிவர..
‘அம்மு..” என்று ராஜன் ஆரம்பிக்கும்போதே..
‘அப்போ நான் சின்னபிள்ளை.. சென்னையில இருந்திட்டேன்.. இப்போ இந்த உலகத்தில எந்த மூளைக்கு போறதுக்கும் எனக்கு தைரியம் இருக்கு..” என்று கோபத்தோடு கத்தி..
‘இதுக்குமேல என்கிட்ட பேசுனிங்கனா.. என் மகளையும் நான் இழந்திடுவேன்.. நந்துகிட்டயும் சொல்லிக்காம.. வேற எங்கையாவது கண்காணாத இடத்துக்கு போகவச்சி.. மறுபடியும் என்னை கோழையாக்கிடாதிங்க ராஜன்..” என்று அழுகையோடு முடிக்க..
மீண்டும் திண்ணையிலேயே அமர்ந்தார் ராஜன். சற்று நேர அமைதிக்குப்பின்.. இன்று இதுபோதும்.. பாவம் என் அம்மு.. மீதியை இன்னொருநாள் பேசிக்கலாம்.. என்று தன்னைதானே சமாதானம் செய்துகொண்டார்.
ம்ம்.. அப்போல்லாம்.. ராஜான்னு கூப்பிடு.. இல்ல.. மாமான்னு கூப்பிடுன்னு எத்தனை முறை கெஞ்சியிருக்கேன்..? வாங்க போங்கன்ற சொல்லு தவறமாட்டா.. இப்போ வார்த்தைக்கு ஒரு ராஜன் போடுறா.. என செல்லமாக கடிந்துகொண்டார்.
பின் சற்று நேரத்திலேயே ஆமா.. நாம வரும்போது நந்தினிகிட்ட இப்போதான் குளிச்சேன்.. இனிதான் குடிக்கனும்னு சொன்னாளே.. அப்போ இன்னும் சாப்பிடலையா..? அங்கே குடிக்க என்ன இருந்தது.. என யோசிக்க.. ஆம்.. கேப்பைகூழ்தான் அது..
உடலுக்கு நல்லதுதான் என்றாலும்.. இன்று ஞாயிற்றுகிழமையில் கூட அதை குடிக்கவேண்டுமா என யோசித்தவர்.. மாறனுக்கு அழைத்தார்.
‘சொல்லுங்க ராஜய்யா..” என்றான் மாறன்.
[the_ad id=”6605″]
‘சாப்டியா..?” என அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு கேட்க..
அதையேன் இவ்ளோ கோபமா கேக்குறார்..? என நினைத்த மாறன்.. ‘ம்ம் சாப்டேன்..” என்று பதிலளிக்க..
‘என்ன சமைச்சா என் பொண்ணு..?” என்றார்.
‘காலைல சிக்கன் குழம்பும் தோசையும் செஞ்சா.. மதியத்துக்கு பிரியாணி பண்றேன்னு சொல்லியிருக்கா.. நீங்களும் வாங்க ராஜய்யா..” என மாறன் சந்தோசத்தோடே ராஜனையும் விருந்திற்கு அழைக்க..
‘அமுதாவைப்பத்தி நீ யோசிக்கவே இல்லையா மாறா..? அவளை விட்டுட்டு சாப்பிட உங்களுக்கு எப்படி மனசுவந்திச்சி..?” என ராஜன் தவிப்போடு கத்த..
‘ராஜய்யா.. உங்களுக்கு விசயமே தெரியாதா..? அத்தைக்கு சின்னவயசில இருந்தே நான்வெஜ் வாசனையே பிடிக்காதாம்.. உங்களுக்குத்தான் அவங்களோட பழக்கவழக்கம் மறந்திடுச்சிபோல..” என தன்மையாக சொன்னவன்..
‘அதுமட்டும் இல்ல ராஜய்யா என ஆரம்பித்து.. அமுதா பூ வைக்காததிலிருந்து.. அவரின் உணவுபழக்கங்கள் வரை.. அவரின் கட்டுக்கோப்பான அன்றாட வாழ்க்கைமுறை அனைத்தும் வேதனையோடு சொல்லிமுடிக்க.. போனை அணைத்த ராஜன்.. கத்தி கதறிவிட்டார்.
உள்ளிருந்த அமுதாவிற்கும் ராஜனின் உரையாடல் கேட்டது.. ராஜனின் அழுகையிலேயே மாறன் அனைத்தும் சொல்லியிருப்பார் என புரிந்தது.. வாழ்க்கையே போய்டுச்சி.. சாப்பாடுதான் முக்கியமா..? என விரக்தியான சிரிப்பொன்று வந்தது.. ஆனாலும்.. இப்போ எதற்கு இந்த அழுகை..? என்று பாழாய் போனமனம் பரிதவிக்கத்தான் செய்தது.
சற்று நேரத்தில் சத்தமில்லாமல் அடங்கியிருக்கவும்.. மெல்ல ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார் அமுதா.
அழுது அழுது ஓய்ந்தவராய் திண்ணையிலேயே படுத்துவிட்டார். அமுதாவின் வீட்டிற்கு கிழக்கு பார்த்த வாசற்படி.. காலை பத்துமணி வெயில்.. ராஜனின் முகத்தில் சுள்ளெனப்பட.. ஒருசலனமும் அவர் முகத்தில் தெரிவதாய் இல்லை.. மூடியிருந்த இருகண்களின் ஓரத்திலும் சிறிதுசிறிதாய் கண்ணீர் வந்துகொண்டிருந்தது. ராஜனையே பார்த்திருந்த அமுதாவிற்கு.. கடந்த காலத்தை நினைத்து வருந்துகிறார் எனப்புரிந்தது.
ஆமாம்.. ராஜனும் அதைத்தான் நினைத்திருந்தார். காதலிக்கும் காலங்களில் தியேட்டருக்கு போவது அமுதாவிற்கு பிடித்தமான ஒன்று.. அப்படி அழைத்துப்போகும் நேரங்களில்.. ராஜன் அன்போடு வாங்கிகொடுக்கும் மல்லிகைப்பூ.. அமுதாவின் சிகையை நிறைத்திருக்கும்.. படம் முடிந்து வரும்போது.. உயர்தர அசைவ உணவகத்திற்கு அழைத்துச்சென்று விதவிதமாய் வாங்கிகொடுத்து.. கள்ளம் கபடமில்லாமல் அமுதா விரும்பி சாப்பிடுவதை ரசித்தபடி.. அவளின் அகஅழகை மனக்கண்ணில் சேமித்துக்கொள்வார்.
புத்தாடைகள் தங்க ஆபரணங்கள் வாங்கிகொடுத்தால்.. வேண்டாம் பாட்டி பயந்துக்கும் என மறுத்துவிடுவாள்.. மிகவும் வற்புறுத்தியதற்கு பிறகுதான் கால் கொலுசை மட்டும் வாங்கிகொண்டாள்.
இதுக்கு மட்டும் பாட்டி பயந்துக்காதா..? என கேட்டதற்கு.. ப்ளஸ் டூ பாஸ் பண்ணினதுக்கு டீச்சர் வாங்கிகொடுத்தாங்கன்னு சொல்லிக்கிறேன்.. என்று தன் குழந்தை முகத்தை புத்திசாலியாய் வைத்தபடி சொன்னதெல்லாம்.. வரிசையாய் அணிவகுத்து நிற்க.. கண்கள் கண்ணீரை வெளியனுப்பிக்கொண்டே இருந்தது.
என் பாட்டிக்கப்புறம் எனக்கு யார்இருக்கா..? என்று வருத்தப்படும் நேரமெல்லாம்.. நாம குறைஞ்சது ஒருடசன் பிள்ளைகள் பெத்துக்கலாம்.. அப்புறம் கொஞ்ச வருசம் கழிச்சி.. ஒரு கிராமமே உனக்கு சொந்தமாகிடும் என சமாதானம் செய்வார் ராஜன். வெக்கப்பட்டாலும் அதற்கும் சரியென்றே சொல்லுவாள் அமுதா.
தன்னவளை பள்ளிகொள்ளும் போதெல்லாம்.. அமுதாவின் பிறைநெற்றியை நிறைத்திருக்கும் மனம் மயக்கும் தாழம்பூ குங்குமம்.. உன்னை ஏமாத்தனும்னு நான் ஒருநாளும் நினைக்கலயேடி.. ஊரறிய கல்யாணம் செய்துக்கனும்னுதான நினைச்சேன்.. அந்த நம்பிக்கையோடதான உன்கூட.. என்று நினைக்க மீண்டும் ஒரு விசும்பல்.. சத்தமாய் வந்தடங்கியது. ராஜனின் உதடெல்லாம் உலர்ந்துபோயிருக்கவும்..
மனம் தாளாமல் ஒருசொம்பில் தண்ணீரோடு வெளியே வந்த அமுதா.. அதை ராஜனருகில் வைத்து.. ‘நடந்ததை நினைச்சி ஒன்னும் ஆகப்போறதில்ல..” என்று சன்னக் குரலில் சொல்ல.. உடனே கண்திறந்தார்.
வெகுவருடங்களுக்கு பிறகு ராஜனின் கண்களைப்பார்த்து.. ‘திரும்பவும் நெஞ்சுவலியேது வந்திடப்போகுது.. தண்ணிகுடிச்சிட்டு வீட்டுக்கு போங்க..” என தன்மையாகவே சமாதானம் சொல்லி.. உள்ளே சென்றவர் மீண்டும் கதவடைத்துக்கொள்ள..
அமுதா கழுத்தில் இருந்த வெள்ளிசங்கிலியின் மீது.. அப்பொழுதுதான் கருத்தொன்று புத்திக்கு எட்ட.. எழுந்து கதவருகே நின்று.. ‘உன் கழுத்தில இருக்கிற அந்த சங்கிலி.. நான் போட்ட கொலுசா அம்மு..?” என்றார் வேதனையோடு.
அமுதாவின் மௌனமே சொன்னது அது தாம்போட்ட கொலுசுதான் என்று.. தன்னை விட்டு சென்றுவிட்டாளே என்ற கோபத்தில்.. தனக்கென ஒரு வாழ்க்கையை தாம் அமைத்துக்கொண்டதை போல.. தனக்கு போட்டியாக தன்னை வெறுத்து.. மறந்து.. வேறொரு வாழ்க்கையை அமுதா வாழ்ந்திருந்தாலாவது ராஜனின் மனம் ஆறியிருக்குமோ என்னவோ..
ஆனால் தம்மோடு வாழவும் முடியாமல்.. தன்னை மறக்கவும் முடியாமல் எப்படியெல்லாம் தவித்திருக்கிறாள் என்பதை.. அமுதா போட்டிருந்த அந்த ஒற்றை வெள்ளிச்சங்கிலியும்.. இத்தனை வருட உணவுபழக்கவழக்கமும் விளக்க.. பேச்சு வரவில்லை ராஜனுக்கு.. இரணமாய் துடித்தது மனம்.. அந்த இடத்தை விட்டு நகர கால்கள் ஒத்துழைக்கவில்லை. காலையில் சாப்பிடாததோ என்னவோ.. அடிக்கும் வெயிலுக்கு ராஜனின் உடலும் ஒத்துழைக்க மறுத்தது.
வாசற்படியை தவிர்த்து.. கொஞ்சம் தள்ளி நின்றால் போதும்.. புங்கமரத்து நிழல் கிடைக்கும்.. ஆனால் ராஜன் நகர்ந்தால்தானே..? எப்படியாவது அமுதாவை சமாதானப்படுத்த வேண்டும்.. அவளோடு உல்லாசமாய் வாழ்வதற்க்கு அல்ல.. காமம் கடந்த கணவன் மனைவியாய்.. அமுதாவின் அடிமையாய்.. உயிர் கொடுக்கும் தோழனாய்.. நலன்விரும்பியாய்.. நீயே மறுத்தாலும் இது நடந்தே ஆகவேண்டும் என திடமாய் நினைத்தவர்.. ஒரு வேகத்தோடு எழுந்து பார்க்க.. மீண்டும் கதவு தாளிடப்பட்டிருந்த கோபத்தில்..
[the_ad id=”6605″]
‘தண்ணி மட்டும் எதுக்குடி கொடுக்குற..? நான் செத்தா சாகறேன்.. புருசன் செத்தா பொண்டாட்டி எப்படி இருப்பாளோ அப்படித்தான இருக்குற..?” என ராஜன் கத்த.. தொண்டை வரண்டது.. மீண்டும் திண்ணையில் வெயிலிலேயே அமர்ந்தார்.
‘கதவைத்திற அம்மு.. கதவைத்திற அம்மு..” என்ற வார்த்தையையே கெஞ்சலாய்.. கதறலாய்.. திரும்ப திரும்ப உச்சரித்திருந்தார். மெல்ல மெல்ல சப்தம் குறைந்துகொண்டே போக.. பேச வாய் வரவில்லை. அமுதாவும் வெளிவரவில்லை.. ராஜனும் ஓய்வதாய் இல்லை.. தன் மொபைலில் உள்ள பாடலை ஒலிக்கவிட்டார்.
தண்ணீரில் மீன்கள் வாழும்..
கண்ணீரில் காதல் வாழும்..
ஊடல்கள் எல்லாம்..
தேடல்கள் தானே..
பசியாற பார்வை போதும்..
பரிமாற வார்த்தை போதும்..
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்..
தலைசாய்க்க இடமா இல்லை..
தலைகோத விரலா இல்லை..
இளங்காற்று வரவா இல்லை..
இளைப்பாறு பரவாயில்லை..
பாடலை கேட்க கேட்க.. இப்போது ராஜன் இன்னொரு பெண்ணின் கணவன் என்பதெல்லாம் மறந்துபோக.. எங்கே ஓடிப்போய் ராஜனின் மார்பில் தஞ்சமடைந்திடுவோமோ என்ற பயம் வர.. தன்னை நிலைப்படுத்தி தன் மனதை கட்டுக்குள் கொண்டுவந்தவர்.. முதலில் ராஜனை இங்கிருந்து அனுப்பியாக வேண்டி.. அமுதாவும் தனது கடைசி முயற்ச்சியாக சில வேலைகளை செய்து..
‘இப்போ பாட்டை நிறுத்தப்போறிங்களா இல்லையா..?” என்று உள்ளிருந்தபடியே உக்கிரமாக கத்த.. பயந்து எழுந்தவர் ஜன்னலில் தன் பார்வையை செலுத்த.. வெலவெலத்து போனார் ராஜன்.. பலத்தை திரட்டி கதவை உடைக்கப்போக..
‘கதவை உடைச்சிட்டு உள்ளே வந்திங்திங்கனா.. இப்போ என்னை காப்பாத்திடலாம்.. ஆனா அது எப்பவும் உங்களால முடியாது…” என மீண்டும் அமுதா மிரட்ட..
ராஜனின் செயல் தானாய் தடைபட்டுப்போனது.. உடலும் கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்க.. நடுங்கிய கைகளோடு தன் மொபைலை எடுத்து மாறனுக்கு அழைத்தார்.. மாறன் அட்டன் செய்ய.. ‘மா…றா…” என அச்சத்தோடு அழைத்த மறுநொடி மயங்கிச் சரிந்தது ராஜனின் உடல்.