அத்தியாயம் — 19–2
‘ராஜய்யா.. ராஜய்யா…” என கத்த.. எந்த பதிலும் இல்லாமல் போகவும்.. தேவிக்கு அழைத்தான் மாறன்.
‘என்ன மாறா..?” என்ற தேவியின் குரல் எப்பொழுதும்போல் அன்பாய் ஒலிக்க..
தன்னை ஆசுவாசப்படுத்தியவன்.. ‘ராஜய்யா இருந்தா கொடுங்க தேவிம்மா..” என்று வரவழைத்த இயல்போடு மாறன் கேட்க..
‘காலைல லாவன்யாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனவர் இன்னும் வரல மாறா.. ஏன் எதாவது முக்கியமான விசயமா..?” என்று தேவி கேட்க..
‘சரிங்க தேவிம்மா.. நான் அவருக்கே போன் செய்துக்கிறேன்..” என சொல்லி இணைப்பை துண்டிக்க.. ராஜனிடமிருந்து மீண்டும் அழைப்பு வரவும்..
‘ராஜய்யா..” என்ற மாறனின் குரல் பதறி ஒலிக்க..
‘தம்பி நான் அமுதா பேசுறேன்.. கொஞ்சம் சீக்கிரம் வீட்டு வாங்கதம்பி..” என்று அழுதுகொண்டே அமுதா பேச..
உடைகூட மாற்றாமல் மாறன் பதறி ஓடி வண்டி எடுக்க.. பின்னோடே தன் ஆக்டிவாவில் மாறனை பின்தொடர்ந்தாள் ராஜநந்தினி.
மொபைல் விழுந்த சத்தத்தோடு.. தொம்மென்ற வித்யாசமான சப்தமும் கேட்கவும்.. கட்டிலில் இருந்து விழுந்தடித்து வந்த அமுதா.. செயலற்றுபோய் கிடந்த ராஜனைப் பார்த்ததும் பதறிப்போனார். இருபத்திநான்கு வருடம் மருத்துவமணையில் பணிபுரிந்தவருக்கு.. ஒருநொடி என்ன செய்ய வேண்டுமென்று தோன்றவில்லை..
ராஜன் குடிப்பதற்க்காக கொண்டுவந்திருந்த தண்ணீர் அருகிலிருந்தது.. அதை எடுத்து அவசரமாய் முகத்தில் தெளிக்க எந்த அசைவும் இல்லை. வெயிலில் இருந்து முதலில் நிழலுக்கு கொண்டுவரலாம் என நினைத்து ராஜனை தூக்க முற்பட.. ஆறடி உயரத்தில் வாட்டசாட்டத்தோடு இருக்கும் ராஜனை அசைக்ககூட முடியவில்லை அமுதாவால்.. பிறகுதான் மாறனுக்கு அழைத்தார். கூடவே ஆம்புலன்சுக்கும் அழைத்திருந்தார். ஐந்து நிமிடமாகிறது.. இருவரும் இன்னும் வரவில்லை..
நாடித்துடிப்பை அறிய முனைய.. பதட்டத்தில் நடுங்கிக்கொண்டிருந்த அமுதாவின் கைகளால் ஒன்றும் உணரமுடியவில்லை.. ‘ராஜன்.. ராஜன்.. “ என்று கதறிய அமுதா.. வேறு வழியின்றி.. தன் முந்தானைகொண்டு இருவரின் முகத்தையும் மூடி.. மனதை திடப்படுத்தி.. ராஜன் இதழில் தனது இதழ்பொருத்தி தன் மூச்சுக்காற்றை ராஜனுள் செலுத்த.. சிலநொடிகளிலேயே மாறனின் வண்டிசத்தம் கேட்டு இதழ்விலக்கினார்.
இருவரின் நிலைகண்டு மாறன் ஒருநொடி தயங்கிநிற்க.. முந்தானை திரைவிலக்கி.. ‘தம்பி..” என்று அமுதா கதறிஅழ.. வேர்த்து சிவந்திருந்த அமுதாவின் முகம் கண்டும்.. அமுதாவின் மடிமீது படுத்திருந்த ராஜனைக் கண்டும்.. அங்கு வந்த நந்தினி திகைத்து நின்றாள்.
பின் சுதாரித்தவளாய்.. ‘என்ன ஆச்சி அம்மும்மா..” என்று அமுதாவின் அருகில் நந்தினி வர.. தன்மகளின் கேள்வியெல்லாம் அமுதாவின் கருத்தில் பதியவில்லை.
‘ராஜி.. அந்த கொடியில இருக்கிற பெட்சீட்டை எடுத்து மரத்துக்கடியில போடு…” என்றபடியே ராஜனை மாறன் தூக்க.. நிழலில் ராஜனை படுக்கவைத்ததும்.. தன் போனை எடுத்த மாறன்.. ‘குமார்.. ராஜய்யாவோட காரை எடுத்துகிட்டு ராஜி வீட்டுக்கு சீக்கிரம் வா..” என்று தகவல் சொன்னதும்..
‘என்னாச்சு அத்தை..” என்று மாறன் வினவ.. எதை சொல்ல.. எதைவிட.. என நினைத்தவர்.. ‘பேசிட்டிருக்கும்போதே மயங்கிட்டார் தம்பி..” என்று அமுதா கதறியழ..
தன் அம்மாவிற்கு தண்ணீர் கொண்டுவர உள்ளே போன நந்தினி.. வீடே அதிரும் வண்ணம் வீரிட்டு கத்தினாள்.. ‘ராஜி..” எனப்பதறி மாறன் உள்ளே வர.. அங்கு பார்த்தது.. மின்விசிறியில் தற்கொலை செய்வதற்கு ஏதுவாக தொங்கிக்கொண்டிருந்த சேலையைத்தான்.
பெரிதாய் எதுவோ நடந்திருக்கிறது என்றுணர்ந்த மாறன்.. ‘அதான் நாம வந்துட்டோம்ல..? பயப்படாத… யாருக்கும் ஒன்னும் ஆக நான் விடமாட்டேன்..” என மனைவியை சமாதனப்படுத்தி..
‘ராஜி.. இப்போதைக்கு இதைப்பத்தி அத்தைகிட்ட எதுவும் கேக்காத.. முதல்ல அவங்களுக்கு போய் தண்ணிகொடு..” என்றவன்.. தொங்கிகொண்டிருந்த சேலையை கழற்ற கட்டில்மீது ஏறினான். அந்தநேரம் குமாரோடு சேர்த்து தேவியும் வந்திருந்தார்.
கட்டில் மேல் நின்றிருந்த மாறன்.. சேலையின் முடிச்சை அவிழ்க்க போராடிக்கொண்டிருக்க.. அதைப்பார்த்த தேவி.. சட்டென புரிந்துகொண்டார் நிலைமையை.. சேலையை கழற்றி வீசி.. கீழிறங்கிய பிறகுதான் தேவியைப் பார்த்தவன்.. ‘தேவிம்மா..” என்று பதற..
‘குமார் பதட்டமா கார்சாவி கேட்டான்.. கொஞ்சம் முன்னதான் நீவேற அவரைக்கேட்ட.. என்னவோ ஏதோன்னு.. நானும் குமாரோட வந்தேன்.. முதல்ல அவரை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போலாம் மாறா..” என்று கண்ணீரோடு தேவி சொல்ல.. பிறகுதான் தேவியை பார்த்தார் அமுதா.
மாறன் ராஜனை தூக்க.. அதற்குள் அங்கு ஆம்புலன்சும் வந்திருந்தது.
[the_ad id=”6605″]
‘தம்பி.. கார் வேண்டாம் ஆம்புலன்சுல போங்க.. அவங்க பர்ஸ்ட்டெய்டு பண்ணுவாங்க..” என சொல்ல.. அமுதாவை தனியே விட மாறனுக்கு பயம்.. மீண்டும் இதுபோல் முயற்ச்சிசெய்தால் என்று யோசிக்க..
‘ராஜி.. நீ அத்தையோடவே இரு.. நான் ஹாஸ்பிட்டலுக்கு போய்ட்டு கால் பண்றேன்..” என்று சொல்லிக்கொண்டே ஆம்புலன்சில் மாறன் ஏற.. வண்டிகிளம்பியது.
ஆம்புலன்ஸ் வரவும் அங்கே அக்கம் பக்கத்தினரின் கூட்டம் கூடிவிட்டது. மாறன் திருமணத்தின்போதே ராஜன் அமுதாவின் விசயம் ஊரறிந்த உண்மை என நிரூபிக்கப்பட்டதால்.. இப்பொழுது தேவி அமுதா என இருவரும் ஒரே இடத்தில் இருக்கவும்.. என்னதான் நடக்கும் என்ற ஆவலில்.. வந்த கூட்டம் அந்த இடத்தை விட்டு நகரமறுத்து ஆவலோடு நின்றிருக்க.. எது நடக்கக்கூடாது என நினைத்தோமோ.. அது நடந்துவிட்ட வேதனையில்.. சத்தென திண்ணையில் அமர்ந்தார் அமுதா.
முன்பொருநாள் ராஜனுக்கு நெஞ்சுவலி வந்தபோதே.. அதிக மனஉளைச்சல் ஆகக்கூடாதென்று மருத்துவர்கள் எச்சரித்தது நியாபகம் வரவும்.. இப்பொழுது என்ன ஆகுமோ.. என்று மனம் பதைபதைக்க..
‘அக்கா.. நீங்களும் வாங்க.. அவர் கண்முழிச்சதும் உங்களைத்தான் கேப்பார்..” என்று கலக்கத்துடன் தேவி சொல்ல..
தேவியின் அக்கா என்ற அழைப்பும்.. தனக்காக பேசும் பேச்சும்.. அமுதாவிற்கு கோபத்iதைத்தான் வரவைத்தது. அதோடு கூடியிருந்த கூட்டத்தால் அவமானமும் தோன்ற..
‘உன் புருசனை நீ பார்த்தா பாரு.. இல்ல எப்படியோ போ.. என்னை வாழவைக்கிறதா நினைச்சி.. எல்லாருமா சேர்ந்து என்னை அசிங்கப்படுத்தாதிங்க.. முதல்ல இங்கயிருந்து கிளம்பு.. இனி யாரும் என்வீட்டுப் பக்கம் வராதிங்க..” என்று ஆக்ரோசமாய் கத்தினார் அமுதா.
‘அம்மும்மா கோபப்படாதிங்க.. இந்த தண்ணியை குடிங்க..” என்று நந்தினி கண்ணீரோடு சொல்ல.. அப்பொழுதுதான் நந்தினிமீது கவனம் திரும்ப.. ‘நந்து..“ என தன் மகளை கட்டிக்கொண்டு அப்படியொரு அழுகை அழுதார்.
‘என்னை விட்டுட்டு போகலாம்ன்ற எண்ணம்.. உங்களுக்கு எப்படி வந்தது அம்மும்மா..?” என நந்தினியும் கதற..
சிறு உடல்உபாதை என்றால் கூட தனது அண்ணன்கள்.. அம்மா அப்பா.. மாமனார் கணவர் என அனைவரும் துடித்துப்போவது நினைவில்வர.. இந்த சூழலிலும் இருவர் மட்டுமே ஒருவருக்கொருவராய் ஆறுதல் தேடிக்கொள்ளும்.. தாய் சேயைப்பார்த்து கண்கலங்கினார் தேவி.
நளினி மூலமாக.. தேவியின் பின்புலம் அறிந்தவர் அமுதா. செல்வாக்கு அந்தஸ்த்து என அனைத்திலும் ராஜனின் குடும்ப்பத்திற்கு சற்றும் குறைவில்லாத குடும்பத்தில் இருந்து வந்தவள்.. ராஜனோடு இருபது வருட தாம்பத்ய வாழ்க்கை வாழ்ந்தவள்.. இப்பொழுது தம் வீட்டு வாசலில் தனக்காக அழுகிறாளே.. என்று தேவியின் நிலையை யோசித்த அமுதா..
‘எனக்காக யாரும் அழவேண்டாம்.. என் பொண்ணுக்காகவாவது நான் உயிரோடு இருக்கனும்.. தயவுசெய்து போ தேவி..” என்று இறங்கிய குரலில் கெஞ்ச..
‘முதல்ல தண்ணி குடிங்க..” என்று தேவிசொல்ல.. நந்தினி அமுதாவிற்கு தண்ணீர் புகட்டி.. பிறகு முகத்தையும் கழுவிவிட்டாள். சற்று நேர அமைதிக்கு பிறகு..
‘நீ பெருசா.. நான் பெருசான்னு.. இரண்டுபேரும் போட்டிபோடுற நேரம் இது கிடையாது. நான் வேற.. நீங்க வேறதான்.. ஆனா நாம இரண்டுபேருமே அவருக்கு முக்கியம்..
இப்ப கூட.. ஒரேயொரு பார்வையாலயே இங்க சுத்தியிருக்கிற ஜனங்களை கலையவைக்க என்னால முடியும்.. நான் ஏன் அதைசெய்யில தெரியுமா..? அவங்க என்ன நினைப்பாங்க..? இவங்க என்ன நினைப்பாங்கன்றதுதான உங்க பயம்..? இப்போ எல்லாருக்கும்.. அவர் உங்களை எவ்ளோ நேசிக்கிறார்ன்னு தெரிஞ்சிருக்குமில்ல..?
யாரோ என்னவோ நினைக்கட்டும்.. உங்க வாழ்க்கையை சரிசெய்யனும்னு நினைக்கிறார்.. அவரால இவ்ளோ கொடுமையை அனுபவிச்சிட்டிங்களேன்ற குற்ற உணர்வுல இருக்கார்..
உங்களுக்கு ஆறுதல் சொல்ல அவர்கிட்ட வார்த்தை இல்லை.. உங்களோட ஆறுதல் வார்த்தைகள்தான் இனி அவரை குணப்படுத்தும்.. அவருக்காக உங்க வேதனையை மறந்து கொஞ்சம் மனமிறங்குங்க..” என தேவி பேசப்பேச.. நந்தினிக்கு மிகுந்த சந்தோசம்தான்.
ஆனால் அமுதா அமைதியாகவே அமர்ந்திருந்தார். ‘ஊருக்குள்ள எவ்ளோ பெரிய பிரச்சனை வந்தாலும்.. பத்தே நிமிசத்தில அதுக்கு தீர்வு சொல்லிடுவார்.. அப்படிப்பட்டவர் மனசுல இடம்பிடிச்ச நீங்க.. இப்படி கோழையா அழலாமா..? இவ்ளோ பேர் முன்னாடியும் நீங்க அழறது.. அவருக்கு அசிங்கமில்லயா..? கண்ணைத்துடைச்சிட்டு எழுந்திருங்க.. நாம ஹாஸ்பிட்டல் போலாம்..” என்று தேவி அமுதாவின் கையை பிடித்து உயர்த்த.. தேவியின் போன் அழைத்தது.
‘என்ன மாறா..?” என்று எப்பொழுதும்போல் அமைதியான குரலிலேயே கேட்க..
‘தேவிம்மா.. ஹாஸ்பிட்டல்ல உங்க கையெழுத்து கேக்குறாங்க.. கொஞ்சம் சீக்கிரம் வாங்க..” என்று மாறன் சொல்ல..
‘ம்ம்.. வந்திடறேன்..” என்று கட்செய்த தேவி..
‘என் கையெழுத்து கேக்குறாங்களாம்.. வாங்க போலாம்..” என்று தேவி சொல்ல..
ராஜனின் நிலை என்னவோ என பதறிய அமுதா.. ‘நீ போய் அங்க என்னன்னு பாரு..” என்று இம்முறை இறங்கிய குரலில் சொல்ல..
‘டாக்டர்தான் என் கையெழுத்தை கேக்குறார்.. அவர் கண்முழிச்சா உங்களைத்தான் கேப்பார்.. வாங்க..” என்றார் மீண்டும்.
‘சொன்னா புரிஞ்சிக்கோ தேவி.. எனக்கு ஒருமாதிரியா இருக்கு.. நீ முதல்ல போ..” என்று சொல்ல..
மாறனின் அவசர அழைப்பை நினைத்தவர்.. ‘நான் கிளம்பறேன்.. அவர் உங்களை கேட்டார்ன்னா.. நீங்க வந்திடனும்..” என தன்மையாகவே சொல்லி..
[the_ad id=”6605″]
‘நந்தினி.. அம்மாவை கூட்டிட்டு வரது உன் பொறுப்பு…” என கட்டளையிட்டு.. சுற்றியிருப்பவர்களை ஒரு பார்வை பார்க்க.. கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவராய் கிளம்ப.. தேவியும் கிளம்பினார்.
தன் மகள் என்ன நினைப்பாளோ என பதறி.. ‘நந்து..” என்று அமுதா ஆரம்பிக்க.. ‘ரொம்ப டையர்டா தெரியிறிங்க.. இப்போதைக்கு எதுவும் யோசிக்காதிங்க.. முதல்ல வந்து சாப்பிடுங்க..” என்று வீட்டினுள் அழைத்துப்போனாள் நந்தினி.
நேரம் இரண்டை காட்ட.. வீட்டினுள் இருந்ததோ ஆறிப்போன ராகிக்கூழ்தான்.
‘அம்மும்மா.. மாமாக்கு போன்செய்து.. கடையில தயிர்சாதம் வாங்கிவர சொல்லவா..?” என கேக்க..
‘எனக்கு எதுவும் வேண்டாம் நந்து..” என சோர்வாய் சொல்லி கட்டிலில் சரிந்தார்.
‘அம்மும்மா.. இங்க பக்கத்து கடைக்கு போய் பால் வங்கிட்டு வந்திடறேன்..” என சொல்லி நந்தினி கிளம்ப.. மீண்டும் கண்மூடி படுத்தார்.
அங்கு ராஜனுக்கு என்ன ஆனதோ என்ற பதைப்பிருக்க.. பசி என்ற உணர்வே இல்லை. கண்மூடியிருந்த அமுதாவின் மனம் முழுதும் ராஜனேதான். இந்த சூழலை சந்திக்கவா நான் உயிர்வாழ்ந்தேன்..? கடவுளே அபத்தமும் ஏதும் நிகழ்ந்திடக்கூடாது.. என நினைத்ததும் பதறி எழுந்து உக்கார்ந்தார்.
தன் அம்மா இறந்தது.. அப்பா விலகிச்சென்றது என.. சிறு வயதிலிருந்தே எத்தனையோ சந்தித்தாகிவிட்டது.. ஆதரவற்று தனிமரமாய் இருந்த நிலையிலும்.. தனக்கு துரோகம் இழைத்த தண்டபானியையும்.. நான் சபித்தது கூட இல்லையே.. யாருக்கும் தொல்லையில்லாமல் எனக்கான வாழ்வைத்தானே நான் வாழ்ந்திட்டிருக்கேன்..? எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகள்..? மனம் முழுதும் வேதனை ஆட்கொள்ள.. மீண்டும் கண்மூடி படுத்துக்கொண்டார்.
என்னால ஒரு குடும்பம் சீர்குலைந்ததுன்ற அவமானம் மட்டும்தான் இதுவரை நான் சந்திக்காதது.. இப்பொழுது அதுவும் நடந்தேறிவிடுமா..? என நினைக்க கண்ணீர்தான் வந்தது.
அமுதாவின் கண்ணீரைத்துடைத்து.. ‘அழாதிங்க அம்மும்மா.. டீ வச்சிருக்கேன்.. எழுந்து குடிங்க..” என நந்தினி சொல்ல..
‘என்னால இப்ப எதுவும் குடிக்க முடியாது.. எனக்கு வேணாம் நந்து..” என்றார் வேதனையாய்.
‘முயற்சி பண்ணுங்க.. குடிக்க முடியும்.. என் அம்மும்மாவால முடியாததுன்னு இந்த உலகத்தில எதுவுமே இல்ல..” என்று நந்தினி தேற்றிக்கொண்டே.. அமுதாவை எழுப்ப முற்பட.. மகளுக்காக கண்திறந்த அமுதா.. அங்கிருந்த கோதுமை அடையை பார்த்து நந்தினியை முறைக்க..
‘என் செல்ல அம்மால்ல..? எனக்காக இந்த அடையை சாப்பிடுவிங்களாம்.. நீங்க சாப்பிடறதுக்குள்ள.. உங்களுக்காக டீ போட்ருவேனாம்..” என தன் அம்மாவிற்கு ஊட்டப்போக.. நந்தினியின் கையை தடுத்த அமுதா..
‘அங்கே ராஜன்..” என தன்னை மறந்து விசும்ப..
‘அவருக்கு ஒன்னும் ஆகாது.. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத உங்களோட உண்மையான அன்பே அவரை வாழவைக்கும்.. இப்பக்கூட கண்முழிச்சதும்.. அவரும் உங்களுக்கு என்னாச்சோன்னுதான் பயப்படுவார்.. நீங்க சாப்பிட்டு டீ குடிங்க.. நாம அங்க போலாம்..” என நந்தினி தைரியம் சொல்ல..
ஆச்சர்யமாய் தன் மகளை பார்த்தார் அமுதா. ‘எந்த சூழ்நிலையிலும் தப்பான முடிவெடுக்காத என் அம்மும்மா.. இன்னைக்கு என்னைக்கூட மறந்து.. ஒருத்தருக்காக சாகறதுக்கே துணிஞ்சிட்டாங்கன்னா.. அப்படிப்பட்டவர் எனக்கும் முக்கியம்தான்.. சீக்கிரம் சாப்பிடுங்க.. நாம போலாம்..” என இயல்பாய் சொன்னதும்..
‘எனக்கு பசிக்கல நந்து.. நாம போலாம் வா..” என்று அமுதா அழைக்க..
‘ம்கூம்.. நீங்க சாப்பிட்டாத்தான் உங்களை கூட்டிட்டுபோவேன்..” என்று சிறுபிள்ளையை மிரட்டுவதுபோல் நந்தினி சொல்;ல.. அமுதா சாப்பிட ஆரம்பித்தார்.
நந்தினி தன் மாமனாருக்கு அழைத்தாள்..
‘நந்தினி.. சொல்லுடாம்மா…” என இராமன் வினவ..
நடந்தவற்றை சுருக்கமாக சொல்லி.. ‘மாமா.. அந்த கறியை எடுத்து பிரிட்ஜில வச்சிடுங்க.. நான் வர லேட்டாகும்..” என சொல்ல..
‘என்னம்மா நீ.. இவ்ளோ நடந்திருக்கு முன்னமே சொல்லமாட்டியா..? உன்னை காணோம்னதும் சுமதி குழம்பு வச்சிட்டா.. நீயும் பசியோடதான இருப்ப..? நான் சாப்பாடு எடுத்திட்டு அங்க வரேன்..” என இராமன் சொல்ல..
பிறகுதான்.. ‘இல்லமாமா நீங்க வரவேணாம்.. நானும் அம்மாவும் உங்க சின்னைய்யாவைப் பார்க்க இப்ப ஹாஸ்பிட்டலுக்கு போகப்போறோம்..” என நந்தினி சொல்ல..
‘சின்னைய்யா இப்போ எப்படி இருக்காராம்..?” என இராமு பதற..
‘உங்க மகன் அவரோடதான் இருக்கார்.. அவருக்கு ஒன்னும் ஆகாது.. நீங்க பயப்படாதிங்க..” என்று நந்தினி தைரியம் சொல்ல..
‘இல்லம்மா நான் அங்க வரேன்..” என சொல்லி கட் செய்த இராமன்.. அடுத்த பத்தாவது நிமிடத்தில் சாப்பாடோடு அமுதாவின் வீட்டிற்கு வந்தார்.
‘நீயும் சாப்பிடும்மா.. நாம எல்லாருமே ஆஸ்பத்திரிக்கு போலாம்..” என்று இராமன் சொல்ல.. சுமதி அமுதாவிடம் சென்றார்.
என்ன நினைப்பார்களோ நம்ம சம்மந்தி.. என்று அமுதா கண்கலங்க..
‘என் மருமகள் சின்னைய்யாவை புரிஞ்சிகிட்டாளேன்ற சந்தோசத்தில நான் இருக்கேன்.. நீ ஏன்மா அழற..?” என்று இராமன் அமுதாவிடம் இயல்பாய் சொல்ல..
அமுதா அமைதியாக தலைகுனிந்தார்.. ‘ஆனா.. சின்னைய்யாவை புரிஞ்சிக்காம.. நீ இப்படி அவசரப்பட்டதுதான்மா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.. ஒன்னுகிடக்க ஒன்னு ஆகியிருந்தா என்ன ஆகுறது..?” என்று இராமன் கண்கலங்க.. இப்படியாக ஒருவருக்கொருவர் அறுதலளித்து.. அனைவரும் ராஜனின் கவலையில் அமைதி காத்திருந்தனர்.
‘நந்தினி மணி நாலாகப்போகுது சின்னைய்யாக்கு பராவயில்லையான்னு.. மாறனுக்கு போன் பண்ணி கேளும்மா..” என இராமன் சொல்ல..
நந்தினி மாறனுக்கு அழைக்க சுட்ச்ஆப் என வந்தது. அதேநேரம் வேறொரு போனின் அழைப்பு மணிவர.. ‘இது சின்னைய்யாவோட போன் சத்தமாச்சே..” என இராமன் சொல்ல.. வெளியில் திண்ணையில் ராஜனின் போன் அடித்தது.
இராமன் எடுத்து பேச.. ‘அப்பா..” என்ற லாவன்யாவின் குரல் கேட்க.. ‘நான் இராமன் பேசுறேன்மா..” என்று ராஜனின் உடல்நிலையை லாவன்யாவிற்கு விளக்க..
‘நான் இங்க ஸ்கூல்ல இருக்கேன்.. ஆட்டோமேன் இன்னைக்கு வரமாட்டாங்க.. மாறன் இருந்தா அனுப்பிவிடுங்க..” என லாவன்யா சொல்ல..
‘மாறன் ஆஸ்பத்திரியில இருக்கான்மா.. நான் வரவா..?” என தயக்கமாய் இராமு கேட்டார்.
‘நீங்க வரவேணாம்.. நந்தினி அக்காவை வரசொல்லுங்க..” என சொல்லி கட்செய்தாள் லாவன்யா.
இராமன் தவிப்பாய் நந்தினியைப் பார்க்க.. ‘என்னமாமா..? யார் போன்ல..?”
[the_ad id=”6605″]
‘சின்னைய்யா மகள் லாவன்யா பேசுனுச்சிமா.. பள்ளிகூடத்தில இருந்து பேசுது.. சின்னைய்யா காணோம்னதும் போன் செய்திருக்கு.. இன்னைக்கு ஆட்டோமேன் வரமாட்டாங்களாம்.. சின்னைய்யாவையும்.. ஆட்டோமேனையும் தவிர.. வேற யார் வண்டியிலயும் பாப்பா உக்காராது. இன்னைக்கு என்ன நினைச்சிச்சோ.. மாறனை அனுப்பிவைங்கன்னு சொன்னுச்சி.. மாறன் ஆஸ்பத்திரியில இருக்கான்னு சொன்னதும்.. டக்குன்னு உன்னை வர சொல்லுதும்மா..” என தயக்கத்தோடு இராமன் சொல்ல..
‘அவ ஸ்கூல் எங்கயிருக்கு மாமா..?” என நந்தினி இராமுவிடம் கேட்க.. சந்தோசமாய் இராமு சொல்ல.. தனது ஆக்டிவாவை கிளப்பினாள் நந்தினி.
பள்ளிவாசலருகே நந்தினியைப் பார்த்ததும் வண்டியில் ஏறிய லாவன்யா.. நிறைய கேட்டுக்கொண்டே வந்தாள் நந்தினியிடம். ஆனால் நந்தினி அமைதியாகவே தனது வீட்டைநோக்கி வரவும்..
‘எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்கக்கா..” என லாவன்யா சொல்ல.. எதையும் காதில் வாங்காமல் தனது வீடுவந்து சேர்ந்தாள்.
‘அப்பாக்கு என்னாச்சி..?” என்று இராமுவிடம் கேட்க..
‘இப்போ நல்லா இருக்காராம்.. நீ சாப்பிடும்மா..” என இராமு சொல்ல..
‘ம்கூம் எனக்கு பசியில்ல.. அப்பா போன் கொடுங்க..” என கேட்டு வாங்கியவள்.. குமாருக்கு அழைத்து.. ‘நான் இங்க அமுதாம்மா வீட்ல இருக்கேன்.. நீ மனோவை கார்ல கூட்டிட்டு வா.. நான் அப்பாவை பார்க்க போகனும்..” என சொல்ல..
குமார் என்ன சொன்னானோ.. ‘இங்கதான அந்த ஹாஸ்பிட்டல் இருக்கு..? அங்க மாறன் பார்த்துக்குவான்.. ச்சே.. இல்ல சாரி.. மாறன் பார்த்துக்குவாங்க.. நீ இன்னும் பத்து நிமிசத்தில மனோவோட இங்க வரனும்..” என்று அதிகாரமாய் சொல்லி கட்செய்தாள்.
லாவன்யா சொன்னதுபோலவே குமார் வரவும்.. லாவன்யா காரில் ஏறப்போக..
‘லாவன்யா.. சாப்பிடாம இந்த இடத்தை விட்டு நீ நகரக்கூடாது..” என்று கட்டளையாய் சொல்லி.. குமாரிடம் கார்சாவியை வாங்கிகொண்டாள் நந்தினி.
இராமு நந்தினிக்காக எடுத்து வந்த சாதத்தை மறுபேச்சின்றி சாப்பிட்டாள் லாவன்யா. பிறகு மனோ லாவன்யாவோடு சுமதியும் காரில் செல்ல.. நந்தினியும் அமுதாவும் தனது வண்டியில் கிளம்ப.. இராமு அவர்களை பின்தொடர்ந்தார்.
மருத்துவமணையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு வெளியே கண்ணீரோடு தேவி நின்றிருக்க.. ‘என்னம்மா சொன்னாங்க டாக்டர்..?” என தேவியிடம் இராமு கேட்க..
‘ஹார்ட்அட்டாக்குன்னு சொன்னாங்க ண்ணா.. மாறன்தான் அவர் பக்கத்தில இருக்கான்.. இந்த நர்ஸ் பொண்ணுங்களும் விபரமா எதுவும் சொல்லமாட்றாங்க.. எப்படி இருக்கார்ன்னே தெரியல..” என்று தேவி அழவும்..
‘அப்பாக்கு ஒன்னும் ஆகாதும்மா..” என்று தன் அன்னையை தேற்றிய லாவன்யாவோடு சேர்த்து.. மனோவும் கண்கலங்க.. கனமான சூழல் அங்கே நிலவியது.