அத்தியாயம் — 2
‘’ப்ச்ச்.. என்ன அம்மும்மா நீங்க..? வேலை கிடைச்சிருச்சின்னு சந்தோசமும் படுறிங்க.. கூடவே அழவும் செய்றிங்க..” என்று சலித்துக்கொண்டாள் நந்தினி என்கிற ராஜநந்தினி.
‘என்னைக்கு ஜாயின் பண்ணனும்..?” என்றார் அமுதா.
‘மன்டேன்னு எத்தனை முறை சொல்லறது அம்மும்மா..” என சலித்தவள்..
‘ஆனா.. நாம இன்னைக்கே அங்க போகனும்.. அப்பதான வீடு பார்க்கிறது.. ஸ்கூல் எங்கயிருக்கு..? இதெல்லாம் தெரிஞ்சிக்க முடியும்..” என்றாள்.
‘நா.. நான்.. எதுக்கு நந்து..? நான் இங்கையே இருக்கேன்..” என்று அமுதா தடுமாறவும்.. தான் வேலை செய்யப்போகும் ஊரைக் கேட்டதும் அமுதாவின் முகம் மாறியதை கவனித்திருந்த.. நந்தினியின் சந்தேகம் இன்னும் வலுத்தது.
‘ஓ.. அப்ப நீங்க என்கூட வரப்போறதில்லையா..? இங்க தனியா இருந்து அப்படி என்ன பண்ண போறிங்க..?” என்று கோபத்தை உள்ளடக்கியபடி கேட்டாள்.
‘இல்ல நந்து.. ஹாஸ்பிட்டல்ல திடீருன்னு ரிலீவ் பண்ணமாட்டாங்க.. அதோட ரொம்ப வருசமா அந்த ஹாஸ்பிட்டல்லையே வேலை செய்துட்டேனா.. எல்லாரும் தாயா புள்ளையா பழகிட்டோம்.. அதான்..” என்று அமுதா இழுக்கவும்..
‘தெரியாத ஊருக்கு போய் நான் தனியா கஷ்டப்படுவாளேன்னு கூட இல்லாம என் கூட வரமா இருக்கிறதுக்காக.. சாக்கு போக்கு சொல்லிட்டிருக்கிங்க..? இந்த உலகத்தில என்னையை விட வேற எதுவும் உங்களுக்கு முக்கியமில்லைன்னு எனக்கு நல்லா தெரியும் அம்மும்மா.. இருந்தாலும் என்கூட வரதுக்கு யோசிக்கிறிங்கன்னா..” என்று தன் அம்மாவை சந்தேகக் கண்ணோடு பார்க்க.. அமுதாவின் முகம் கலவரத்தை பூச.. அதை தாங்கிகொள்ள முடியாமல்..
‘சரி விடுங்க.. எதோ முக்கியமான காரணமில்லாம நீங்க இப்படி சொல்லமாட்டிங்க.. இப்போதைக்கு நானே பார்த்துக்கிறேன்.. உங்களுக்கு தோணும்போது நீங்க அங்க வந்தா போதும்.. சரியா…?” என்றாள் சமாதானமாக.
‘ம்ம்..“ என்று சம்மதமாய் தலையசைத்த அமுதா.. ‘நந்து.. நான் ஒன்னு சொல்வேன்.. அதை கேட்டுட்டு என்னை மேற்கொண்டு எந்த கேள்வியும் கேக்காம இருப்பியா..?” என்று கலங்கிய கண்களோடும் கெஞ்சலோடும் கேட்டார் அமுதா.
‘கேக்கமாட்டேன் சொல்லுங்கமா..” என வாஞ்சையாக சொல்லி.. தன் அம்மாவை ஆழ்ந்து பார்த்தாள்.
ஒரு சாவியை எடுத்து வந்து நந்தினியின் கையில் கொடுத்த அமுதா.. ‘நீ ஜாயின் பண்ணப்போற ஸ்கூல்.. இந்த வீட்ல இருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலதான் இருக்கு.. நீ இந்த வீட்லயே தங்கிக்க.. அது நம்ம வீடுதான்..” என்று கண்கலங்க..
இதை சற்றும் எதிர்பார்க்காத நந்தினி.. ‘அம்மும்மா…” என அதிர்ச்சியாய் விழிவிரித்தாள்.. தன் அன்னை முன்னமே மேற்கொண்டு எந்த கேள்வியும் கேட்ககூடாதென்று சொன்னதால்.. உள்ளிருந்து துடித்து வந்த கேள்வியை கேட்க முடியாமல் திணற.. கண்களில் நீர் கோர்த்தது.
‘நீ இந்நேரத்துக்கு பாதி யோசிச்சிருப்பன்னு எனக்கு தெரியும் நந்து.. ஆனா.. அது என்னோட அம்மா ஊர்தானே தவிர.. நீ யோசிக்கிற மாதிரி.. அங்க யாரும் இல்ல.. நான் இங்க வந்து நாலு மாசத்திலயே எனக்குன்னு இருந்த என்னோட பாட்டியும் இறந்திட்டாங்க.. நான் கடைசியா.. அவங்க சாவுக்கு அங்க போனதோட சரி.. அதுக்கப்புறம் நான் அங்க போகலை..” என்றவர் தன் கண்களையும் துடைத்துக்கொண்டு..
[the_ad id=”6605″]
‘உனக்கும் இருபத்தி மூனு வயசாகுது.. உனக்கு தெரியாத நல்லது கெட்டது இல்ல.. நான் எப்பவும் சொல்றதுதான் இப்பவும் சொல்றேன்.. உனக்கு யாரையாவது மனசுக்கு பிடிச்சிருந்தா.. அவங்களோட ஊர் சுத்தறது.. கண்ட இடத்தில நின்னு பேசறது.. இதெல்லாம் கூடாது.. நீ தேர்ந்தெடுக்குற ஆள் உனக்கு ரைட் சாய்ஸ்ன்னு உன் மனசுக்கு தோணினா.. உடனே கல்யாணத்துக்குதான் யோசிக்கனும்.. அம்மா என்ன சொல்வாங்கன்னு யோசிக்காத.. உன் சந்தோசத்துக்கு நான் எப்பவும் தடையா இருக்க மாட்டேன்..
மத்தவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழக்கூடாது.. மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையைத்தான் வாழனும்..‚ அதுல எந்த மாற்றமும் இல்ல.. ஆனா.. இப்படி ஒரு வாழ்க்கை இவளுக்கு தேவையான்னு நம்மள சுத்தியிருக்கிறவங்க நினைக்கிற மாதிரி நாம வாழக்கூடாது.. நீ வாழ்ற வாழ்க்கையிலதான் என்னோட வளர்ப்பு சரியான்றதும் இருக்கு.. உன்னோட சந்தோசத்திலதான் என்னோட சந்தோசமும் இருக்கு..” என்று சொல்லி.. அமுதா தன் மகளைப் பார்க்கவும்..
கிளம்பும் நேரத்தில்.. தன் அம்மா மனதை கஷ்டப்படுத்த விரும்பாமல்..
‘அம்மும்மா.. நான் என்ன கல்யாணம் ஆகி புருசன் வீட்டுக்கா போறேன்..? இவ்ளோ அட்வைஸ் பண்றிங்க..? உருப்படியா ஒரு வேலைகிடைச்சிருக்கு.. அதை என்ஜாய் பண்ண விடாம என்னை டார்ச்சல் பண்றிங்க.. நீங்க.. போங்க…” என்று நந்தினி முகத்தை தூக்கிவைக்க..
வரவழைத்த சிரிப்போடு நந்தினியின் பக்கத்தில் வந்த அமுதா.. ‘அச்சோ நந்து குட்டி.. இன்னும் அட்வைஸ் முடியல.. அங்க போனதும்.. மாசு மருவில்லாத இந்த அழகான முகத்தில கண்ட க்ரீமை போட்டு கெடுத்திட கூடாது.. வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணை தேய்ச்சி குளிச்சே ஆகனும்.. ஏற்கனவே இடுப்புக்கு கீழ வளர விடாம வெட்டிட்டிருக்க முடியை.. தலைக்கு குளிக்க கஷ்டமா இருக்குன்னு.. இன்னும் கொஞ்சம் வெட்டிட கூடாது…” என்று அமுதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே..
நந்தினி ஆரம்பித்தாள்… ‘உன் உதடே சிவப்பாத்தான் இருக்கு.. அதனால லிப்ஸ்டிக் போடக்கூடாது.. உன் புருவம் இயற்கையாவே நல்லாத்தான் இருக்கு.. அதனால ஐபுரோவும் பண்ணகூடாது.. மொத்தத்தில பார்லர் பக்கமே போகக்கூடாது.. அதான அம்மும்மா.. ? ஷப்பா… என்னால முடியலடா சாமி…” என்று நந்தினி சலித்துக்கொள்ள…
‘சரி.. சரி.. இனி நான் எதுவும் சொல்லமாட்டேன்.. கடையில அதிகம் வாங்கி சாப்பிடக்கூடாது.. சமைச்சிதான் சாப்பிடனும்.. எல்லத்தையும் விட குழந்தைகளுக்கு ஒழுங்கா பாடம் நடத்தனும்…” என்று மீண்டும் ஆரம்பிக்க.. நந்தினி தன் அம்மாவை முறைத்து பார்க்க.. அமுதா அசடுவழிய தன் பேச்சை நிறுத்த…
வாய்விட்டு சத்தமாய் சிரித்த நந்தினி… ‘ஏன்மா போற இடத்தில பத்திரமா இருக்கனும்னு சொல்றதை விட்டுட்டு.. மத்ததெல்லாம் சொல்லிட்டிருக்கிங்க..” என்று பொய்யாய் கோபித்தவள்..
‘சரி.. உங்க அம்மாவீடு.. ரொம்ப பெருசா இருக்குமா..? எனக்கு க்ளீன் பண்ற வேலை வேற கஷ்டம்..” என்று கவலையாய் கேட்டாள்.
‘நிறைய ரூமெல்லாம் இல்ல.. இரண்டே ரூம்தான்.. ஆனா.. கொஞ்சம் பெருசா.. புழக்கத்துக்கு வாட்டமாத்தான் இருக்கும்.. உன் ஒருத்திக்கு அது தாராளமாத்தான் இருக்கும். டாய்லெட் வீட்டுக்கு வெளிலதான்.. வீட்டுக்கு முன்னாடியே ஒரு பொது பைப் இருக்கு.. அப்போவெல்லாம் காலைல டைம்லதான் தண்ணி வரும்.. வரும்போது பிடிச்சி வச்சிக்கனும்.. இப்ப எப்படின்னு தெரியலை..” என்று அமுதா சொல்ல..
‘அம்மும்மா.. நைட் டைம்ல டாய்லெட் போகனும்னா வெளில வர எனக்கு பயமா இருக்குமே.. பேசாம வீட்டுக்குள்ளவே பாத்ரூம் இருக்கிறமாதிரி ஒரு வீடு பார்த்துக்கிறனே…” என்று கெஞ்சினாள்.
‘இல்ல.. நந்து.. நீ நம்ம வீட்லயே இரு.. உனக்கு அங்க எந்த பயமும் வேண்டாம்.. சொல்லப்போனா.. நீ வேற வீட்ல தங்கினாத்தான் உனக்கு பாதுகாப்பு இருக்காது..” என்று அமுதா உறுதியாய் சொல்லவும்..
‘சரிங்கம்மா..” என்று உடனே ஒத்துக்கொண்டாள் நந்தினி.
‘அங்க என் பாட்டி இருந்தப்ப யூஸ் பண்ணிட்டிருந்த சாமானெல்லாம் இருக்கும்.. இப்போதைக்கு இந்த இன்டெக்சனும்.. அதுல சமைக்கிறதுக்கு தேவையான கொஞ்சம் பாத்திரமும் வாங்கி வச்சிருக்கேன்.. அதை மட்டும் எடுத்திட்டு போனா போதும்.. நீ அங்க போறதுக்குள்ள வீட்டை க்ளீன் பண்ண சொல்லி நான் என் சின்ன வயசு பிரண்டுகிட்ட போன் பண்ணி சொல்லியிருந்தேன்.. அவ ஆள் விட்டு க்ளீன் செய்திட்டேன்னு இன்னைக்கு காலைலதான் சொன்னா.. அதுக்காக நீ போய் அவகிட்ட என்னைப்பத்தி கேட்டிட்டு இருக்காத.. அவளுக்கும் உங்கப்பாவைப் பத்தி எதுவும் தெரியாது..” என்றார் அமுதா.
‘அம்மும்மா.. நீங்க சொன்னாலும் நான் யார்கிட்டயும் உங்க காதலனைப்பத்தி கேட்கமாட்டேன்.. உங்களுக்குன்னு யாருமே இல்லன்னு தெரிஞ்சும்.. உங்களை தனியா தவிக்கவிட்ட அவரைப்பத்தி.. தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. அதை நான் விரும்பவும் இல்ல..” என்று முகம் இறுகியபடி தீர்க்கமாக சொன்னாள் நந்தினி.
எப்பொழுதும் போல.. ‘அவர் என்னை தவிக்க விடலை.. நான்தான் விலகி வந்திட்டேன்..” எனும்போதே…
‘அம்மா.. ப்ளீஸ்.. எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்ல இருந்து இந்த வசனத்தை கேட்டு கேட்டு.. எனக்கு புளிச்சிபோச்சி. நாம வேற எதாவது பேசலாம்..” என்றாள் சோர்வாக.
‘சரி.. நீ பத்திரமா இருந்துக்கோ.. தினமும் எப்ப ‡ப்ரீயா இருப்பியோ அப்பபார்த்து நீயே கால் பண்ணு.. இப்ப வா சாப்பிடலாம்..” என்றார்.
‘அம்மும்மா.. சாவியை இப்பத்தான் என்கையில கொடுத்திருக்கிங்க.. அப்ப அங்க வீட்டை எப்படி க்ளீன் பண்ணியிருப்பாங்க..?”
‘எங்க பாட்டி வேலைக்கு போகும்போது.. என் பிரண்டோட அம்மாகிட்டதான் சாவியை கொடுத்திட்டு போவாங்க.. நான் ஸ்கூல்ல இருந்து வந்ததும் வாங்கிக்குவேன்.. ரொம்ப வருசம் கழிச்சி என் பாட்டி இறப்புக்கு போனப்ப.. சாவியை என்கிட்ட திருப்பி கொடுத்தாங்க.. நான்தான்.. என்கிட்ட இன்னொரு சாவி இருக்கு.. இது உங்ககிட்டயே இருக்கட்டும்னு சொன்னேன்.. யாராவது வீடு வாடகைக்கு கேட்ட விட சொன்னேன்.. ஆனா.. அந்த வேலாயுதத்துக்கு பயந்துகிட்டு.. யாரும் வாடகைக்கு கேக்கலயாம்..” என்றார்.
பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து.. அங்கு அக்கம் பக்கம் உள்ளவர்களிடம்.. தான் வேலை கிடைத்து ஊருக்கு போகிறேன்.. தன் அம்மாவை பார்த்துகொள்ளுங்கள் என்று சொல்லி.. காலை பதினோரு மணிபோல் கிளம்பினாள் ராஜநந்தினி.
[the_ad id=”6605″]
நந்தினி கிளம்பிய பிறகு.. ச்ச.. போயும் போயும் அந்த ஊர்லயேவா வேலைகிடைக்கனும்..? என விதியை நினைத்து மனம் நொந்த அமுதாவிற்கு மனம் நிலைகொள்ள வில்லை. தன் மகளை அவளின் அப்பா இனம் கண்டுகொண்டு அவளை பேணிக்காப்பார் என்ற நம்பிக்கை ஒருபுறம் இருக்க.. அவர்தான் தன் அப்பா என்று தெரிந்துவிட்டால் நந்தினி அவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள் என்ற பயம் ஒருபுறம்.. என்று கிடந்து தவித்துக்கொண்டிருந்தார்.
அமுதாவின் அம்மா அமுதாவின் சிறுவயதிலேயே நோய்வாய் பட்டு இறந்துவிட.. அமுதாவின் அப்பா.. மனைவி இறந்து ஐந்து வருடம் கழித்து.. வேறு கல்யாணம் செய்து கொண்டார்.
பிறகு எல்லா சினிமாக்களிலும் வருவதுபோலத்தான் அங்கும்.. பெற்ற மகளைப் பார்க்கவே அவர் இரண்டாம் மனைவிக்கு தெரியாமல் திருட்டுதனமாக வரவேண்டிய நிலையாயிற்று.
அமுதாவின் பாட்டிதான்.. ‘என் பேத்தியை நான் பார்த்துக்கிறேன்.. எதாவது தேவைன்னா சொல்லி அனுப்புறேன்.. நீங்க சிரமப்பட்டு இனிமே இங்க வரவேண்டாம்..” என்று தன் மருகனிடம் சொல்லிவிட்டார்.
பிறகு தன் பாட்டியிடம்தான் அமுதா வளர்ந்து.. அமுதா பெரிய பெண்ணாகிட்டாள் என்று அவரின் அப்பாவிற்கு தெரியப்படுத்தியும் அவர் வராமல் போகவே அதன்பிறகு அவரின் இணைப்பு மொத்தமாக துண்டிக்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கிறாரா..? இல்லையா.. எனக்கூட அமுதாவிற்க்கு தெரியாது.
அமுதா படித்ததெல்லாம் அரசு பள்ளியில்தான்.. பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே காதல் வயப்பட்டுவிட்டார். பனிரெண்டாம் வகுப்பை முடித்ததும் அரசு கல்லூரியில் பி.எ.ஆங்கிலம் முதல் வருடம் படித்துக்கொண்டிருக்கும்போது.. அமுதாவின் காதல்.. காதலனின் அப்பாவிற்கு தெரிய வர.. பிறகென்ன..? ஊரைவிட்டு போ.. என்று ஒரே மிரட்டல்தான்.. அதுவும் தன் மகனைப் பற்றி வெளியில் தெரியக்கூடாது என்று ரகசிய மிரட்டல்.. பாட்டியை கொன்னுடுவேன்.. நீ சரியில்லை.. என்று ஊரை நம்ப வச்சிடுவேன்.. என்பது போல பலப்பல மிரட்டல்கள்.
அமுதாவின் துயர்துடைக்க ஆளில்லை என்றாலும்.. இனி வேறு ஒருவனை நினைத்தும் பார்க்கமுடியாது என்று நிலையில்.. தன் பாட்டியிடம் படிக்கிறதுக்கு நிறைய செலவாகுது பாட்டி.. நம்ம கிட்ட அவ்வளவு பணம் இல்லை.. நான் படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு போகப்போறேன்.. என சொல்லி தன் கல்லூரித் தோழியை நம்பி சென்னை வந்துவிட்டார் அமுதா.
கம்ப்யூட்டர் ஆக்ரமிப்பு அதிகம் இல்லாத அந்த காலகட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியும்.. அமுதாவின் கன்னியமான பேச்சு திறமைக்கும்.. தனியார் மருத்துவமணையில் உடனே வேலைகிடைத்தது. அமுதா நல்ல அழகியென்பதால் ரிசப்சனில் வேலை.
வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்திலேயே மனதோடு சேர்ந்து.. உடலும் சோர்வடைய.. மருத்துவமணையிலேயே ஒரு நாள் மயங்கி கீழே விழ.. அப்பொழுதுதான் அமுதாவிற்க்கு தெரிந்தது தான் கர்பமாய் இருப்பது.
சக ஊழியர்களிடம் தனக்கு திருமணமாகி விட்டதென்றும்.. வரதட்சணை கொடுமையால் பிரிந்து விட்டதாகவும் சொல்லிவிட்டார். பிறகு தன்னை காப்பாற்றிக்கொள்வது.. வயிற்றில் இருக்கும் தன் குழந்தையை பாதுகாப்பது.. கிடைத்த வேலையை தக்கவைத்து கொள்வதென்று அனைத்திலும் போராட்டம்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் பேசிப் பழக ஆரம்பித்து.. விடுபட்ட தன் டிகிரி படிப்பையும் கரசில் முடித்து.. பிறகு சரளமாக ஆங்கிலம் கற்றுக்கொண்டு.. கிடைத்த வேலையை தக்கவைத்துகொண்டார். இருபத்தி நான்கு வருடங்களாக ஒரே மருத்துவமணையில் ரிசப்சனிஸ்டாக பணிபுரிந்துகொண்டிருக்கிறார்.
ராஜநந்தினிக்கு தன் அம்மாவின் அம்மா இறந்தது.. தன் அம்மாவின் அப்பா மறுமணம் செய்துகொண்டது.. பாட்டியோடு தன் அம்மா வளர்ந்தது.. தன் அம்மாவிற்கு திருமணம் ஆகாமலே தான் பிறந்தது.. போன்ற அனைத்து விசயங்களும் தெரியும்.. ஆனால் தன் அப்பா யார் என்பதைத் தவிர…
இதுவரை அமுதா தன் காதலனின் பெயரை தன் மகளிடம் கூட சொன்னதில்லை.. தன்னவனை தப்பாய் பேச நந்தினியை அனுமதித்ததும் இல்லை.
அப்பா இல்லையென்றாலும்.. நந்தினிக்கு தன் அப்பா இல்லை என்ற எண்ணம் இதுவரை வந்ததே இல்லை. அவளுக்கான அனைத்து நியாமான தேவைகளையும் அமுதா நிறைவேற்றிவிடுவார். தன்னுடைய சிறு வயதில் பல நாட்கள் தன் அம்மா இரவில் விழித்திருந்து அழுவதை பார்த்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் அமுதா அழுவதற்கான காரணத்தை பலமுறை கேட்டிருக்கிறாள் நந்தினி. வேலைப்பளு.. வயிற்று வலி போன்ற காரணங்கள் நந்தினிக்கு பதிலாக வரும். விபரம் தெரிந்த பிறகு தன் அம்மாவின் துயர்துடைக்க எண்ணி பலமுறை தன் அப்பாவை பற்றி கேட்டாலும் அமுதாவிடமிருந்து அவளுக்கான பதில் வந்ததே இல்லை.
தனக்கு இந்த வேலை கிடைத்த பிறகுதான் தன் தாயிடம் தடுமாற்றத்தை காண்கிறாள். அதுவும் கள்ளக்குறிச்சி என்ற ஊரைக்கேட்டதும் அமுதாவின் முகபாவங்கள் நந்தினிக்கு தன் அன்னையிடமிருந்த பல கேள்விகளில் ஒரு கேள்விக்கு விடையளித்தது. இன்று அமுதா தன் வீட்டின் சாவியை நந்தினியிடம் கொடுக்கவும்.. தன் அன்னையின் ஊருக்கு போனால்.. அவரின் பின்னனி தெரியவரும் என்று உறுதியாய் நம்பினாள். இல்லையேல்.. அனைத்தையும் தன்னிடம் பகிரும் தன் அம்மா… தனக்கு சொந்த வீடு இருக்கிறதென்று இத்தனை வருடமாக ஏன் தமக்கு சொல்லவில்லை..? என பல யோசைனைகளோடே பயணித்தாள்.
[the_ad id=”6605″]
இதோ அவர்கள் வாழ்ந்த வீட்டை காணப்போகிறாள். தன் அன்னையை ஏமாற்றியவனுக்கும் அந்த ஊருக்கும் தொடர்பிருக்குமா..? இல்லை அங்கும் ஏமாற்றமே மிஞ்சுமா..? என்று மனம் முழுக்க விடையில்லா கேள்வியோடு பயணித்தாள்.
ஆனாலும் இந்த ஊருக்கும் தன் அன்னையின் காதலுனுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றால்.. எதற்க்காக அவருள் அத்தனை தடுமாற்றம்.? இதுவரை தன்னை காணாமல் ஒரு நாள் இருந்திராதவர்.. இன்று தன்னோடு ஏன் இங்கு வரவில்லை..? எனில் உறுதியாக இந்த ஊரில்தான் தன் அம்மாவின் காதலன் இருக்கவேண்டும்.. அந்த எண்ணம்தான் அவரை பாதித்திருக்கவேண்டும்.. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படாமலா போய்விடுவான்.. என தன்னை தேற்றிக்கொண்டாள்.
இதோ இன்னும் அரைமணிநேரத்தில் கச்சிராப்பாளைத்தை அடைந்திடுவோம்.. அங்கு போனதும் இனி எப்படியும் பல திருப்பங்கள் வரத்தான் செய்யும் என அவளின் உள்ளுணர்வு சொல்ல.. இப்பொழுது விடைக்கான கேள்வியோடு பயணித்தாள் ராஜநந்தினி.
நந்தினிக்கு இது புதுப்பயணம்.. மற்றும் முதன்முதலாக அதிக நேர தனிப்பயணம் என்பதாலும்.. கள்ளக்குறிச்சியிலிருந்து கச்சிராப்பாளையத்திற்க்கு செல்ல அவள் திணறிப்போவாள் என்பதாலும் சென்னையிலிருந்தே காரில்தான் அனுப்பிவைத்தார் அமுதா. கச்சிராப் பாளையத்தை அடைந்ததும் அமுதாவின் இளவயது தோழிக்கு அமுதா நந்தினியின் வருகையை சொல்ல.. அமுதாவின் தோழி அவ்வூரின் பஸ் ஸ்டாப்பில் நந்தினிக்காக காத்திருக்க.. காரில் வந்திறங்கிய நந்தினியைப் பார்த்ததும் அப்படியே இளவயது அமுதாவைப்போல இருக்கும் நந்தினியை எளிதாய் இனம் கண்டு.. நந்தினியிடம் இனிமையாய் பேசியபடியே.. இனி நந்தினி தங்கப்போகும் அவளின் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் நளினி.
வீட்டிற்க்குள் வந்ததும்.. நந்தினிக்கு மிகவும் பிடித்துவிட்டது தனது தாய்வீடு. மிகவும் பழமையான வீடாக இருக்கும் என நினைத்திருந்தாள்.. ஆனால் அப்படியில்லை.. இரண்டு ரூம்தான் என்றாலும்.. மிக நேர்த்தியாக இருந்தது. ஆச்சர்யமாக பார்த்திருந்தாள்.
நந்தினியின் பார்வையை உணர்ந்த நளினி.. ‘அமுதாவோட பாட்டி சாகறதுக்கும் ஒரு வருசத்துக்கு முன்னதான் இந்த வீட்டை கட்டுனாங்க கண்ணு.. அதுக்கு முன்ன ஓட்டு வீடாத்தான் இருந்தது. அமுதாவோட பாட்டி.. ரொம்ப பொறுப்பானவங்க.. ஒருநாள் கூட வேலைக்கு போகாம இருக்க மாட்டாங்க.. இரண்டு மாடு வச்சிருந்தாங்க.. ஏழெட்டு வீட்டுக்கு பக்கமா.. வழக்கமா அமுதாவோட பாட்டிகிட்டதான் மாட்டுப்பால் வாங்குவாங்க.. அதுல வர பணத்தில.. சீட்டு போடறது.. போஸ்ட் ஆ‡பீஸ்ல பணம் போடறதுன்னு.. சேர்த்து வச்சிருந்தாங்களாம்.. வயசானதுனால.. மாட்டை மேய்ச்சலுக்கு கூட்டிட்டு போகமுடியலைன்னு மாட்டை வித்த காசோட.. எல்லா கையிருப்பும் சேர்த்து.. அப்பவே ஒரு லட்சத்துக்கும் மேல செலவு செய்து வீட்டை கட்டினாங்க.
ஆனா.. என்ன…? இந்த வீட்டை கட்டின நேரமோ.. என்னவோ.. ஒரு வருசத்துக்குள்ள.. உங்க அம்மாவும் இந்த ஊரைவிட்டு போய்ட்டா.. அமுதா போன நாலு மாசத்திலயே.. அவங்க பாட்டியும் போய் சேர்ந்துட்டாங்க..” என சோகமாக சொல்லவும்.. நந்தினியின் முகமும் வாடியது.
‘சரி கண்ணு.. பழசை ஏன் பேசிகிட்டு.. அமுதா பாட்டியோட உழைப்புக்கு பிரையோஜனமா நீயாவது இந்த வீட்ல வந்து தங்கிறியேன்னு.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.. இப்ப கொஞ்சம் வேலையிருக்கு.. நான் நாளைக்கு வரேன்..” என சொல்லி நளினி கிளம்பினார்.
நந்தினிக்கு.. உள்ளுக்குள்.. ரம்யமான ஒரு உணர்வு.. அங்கு செல்‡பில் இருந்த.. இரும்பு பெட்டியை திறந்து பார்க்க.. அதில் ஐந்தாறு நூல்சேலைகள்.. பாட்டியோடதா இருக்கும் என நினைத்தவள்.. பிறகு உள்ரூமை நோட்டமிட்டு.. வெளியே வந்து பார்த்தாள். மளிகை கடை தெரிந்தது..
அங்கு சென்று பால் வாங்கி வந்தாள்.. தான் கொண்டு வந்த அட்டைப் பெட்டியை பிரித்து.. பால் காய்ச்ச தேவையான பாத்திரத்தை எடுத்தவள்.. இன்டெக்சனை எடுத்து.. ஒயரை பிளக்கில் சொருகவும்.. வாசலில் யாரோ நிழலாடும் உணர்வு தோன்ற.. உள்ரூமிலிருந்து.. வெளியே எட்டிப் பார்த்தவள்.. கோபத்தோடு..
‘யார் நீங்க..? இப்படித்தான் கேக்காம கொள்ளாம உள்ளே வருவிங்களா..? எதுன்னாலும் முதல்ல வெளில போங்க..” என கர்ஜித்தாள்.