அத்தியாயம் — 21
‘தேவி..” என்று ராஜன் தடுமாற..
‘அவங்க வாழ்க்கையை சரி செய்யிற வரைக்கும்.. உங்களால நிம்மதியா இருக்கமுடியாதுன்னு எனக்கு தெரியும்.. உங்க பெரிய பொண்ணு அவங்கம்மா சந்தோசத்தை கேக்குறா..
உங்க சின்ன பொண்ணு அவங்கப்பா சந்தோசத்தை கேக்குறா..
உங்கப்பா.. உங்க அன்புக்காக ஏங்கிட்டிருக்கார்.. இத்தனை பிரச்சனைக்கும் உங்க கல்யாணம் ஒரு தீர்வா இருக்கும்னா.. அதையும்தான் செய்து பார்த்திடலாம்.. ஆகவேண்டியதை பாருங்க..” என்றார் அசால்ட்டாய்.
ராஜன் மீண்டும் திகைத்து நிற்க.. ‘உங்க கையால அவங்க கழுத்தில தாலி ஏறிட்டா.. வப்பாட்டிங்கிற வார்த்தையும் வராது.. இத்தனை வருசமா.. உங்கமேல அவங்க வச்சிருக்கிற எதிர்பார்ப்பில்லாத உண்மையான அன்புக்கு.. நீங்க செய்யிற மரியாதையாவும் இருக்கும்..” என்று ராஜனின் கண்களைப் பார்த்து தேவி பேச.. குரலில் உறுதி இருந்தாலும்.. கண்கள் கலங்கித்தான் போனது.
தண்டபானி பரிதாபமாய் தன் மருமகளைப் பார்க்க.. ‘நீங்க வருத்தப்படாதிங்க மாமா.. இருபது வருசமா இவர்கூட சந்தோசமா குடும்பம் நடத்தின எனக்கே.. அவங்க இடையில வந்தது இவ்ளோ கஷ்டமா இருக்குன்னா..
உயிருக்குயிரா தன்னை காதலிச்சவங்க.. வேற ஒருத்தியை ஊரறிய கல்யாணம் செய்து சந்தோசமா குடும்பம் நடத்திட்டிருக்காங்கன்னு தெரிஞ்சும்.. அதே இருபது வருசமா அந்த வேதனையை தாங்கிட்டிருக்க அவங்களுக்கு எப்படியிருக்கும்..?” என்று அமுதாவின் பக்கம் இருக்கும் நியாயத்தை தண்டபாணிக்கு உணர்த்தி..
‘என் வாழ்க்கையில இப்படியொரு சூழ்நிலை வரும்னு நான் நினைச்சே பார்த்ததில்ல.. ரொம்ப வேதனையாதான் இருக்கு.. மனசை திடப்படுத்திட்டுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்.. இதுல எனக்கு வருத்தமில்லன்னு சொல்லமாட்டேன்.. வருத்தமிருந்தாலும் இந்த கல்யாணம் நடந்தா.. அமுதாக்கா வாழ்க்கையை சரி செய்தோம்ங்கிற நிம்மதியாவது உங்க மகனுக்கு இருக்கும்.. அவர் நிம்மதியிலதான் என் நிம்மதியிருக்கு..” என்று கலங்கிய கண்களோடு உறுதியாகவே பேசினார் தேவி.
‘உங்கப்பாம்மாக்கும்.. உன்னோட அண்ணன்மார்க்கும் நான் என்ன பதில் சொல்லட்டும்..?” என்று தண்டபானி கண்கலங்க..
‘அவங்களுக்கு என்ன பதில் சொல்றது..? இவங்க என்ன நினைப்பாங்கனெல்லாம் யோசிச்சா.. அப்புறம் உங்க மகன் யாருக்கும் இல்லாம ஆகிடுவார் மாமா.. அவங்களை நான் பார்த்துக்கிறேன்..” என்று தண்டபானிக்கு தைரியமளித்து..
‘நீங்க ஆகவேண்டியதைப் பாருங்க..” என்று ராஜனிடம் மீண்டும் திடமாகவே சொன்னார் தேவி.
‘மாறா நீ கிளம்பு.. நான் போன் பண்றேன்..” என்று ராஜன் சொல்ல.. தேவியை நினைத்து பெருமிதமாகவும்.. அத்தை இதற்கு ஒத்துக்கொள்வார்களா..? என்ற குழப்பத்தோடும் கிளம்பினான் மாறன்.
[the_ad id=”6605″]
இருபது நாட்கள் ஓடியிருக்க.. மாறனுக்கு அழைத்தார் ராஜன்.
‘மாறா.. நிவேதா சோபனா இரண்டு பேர்கிட்டயும்.. ராஜய்யா ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறதாகவும்.. அதுக்கு வர சொன்னதாவும் சொல்லி நாளைக்கு இங்க வரசொல்லு.. நீங்களும் எல்லாரும் எங்க குலசாமி கோவிலுக்கு வந்திடுங்க.. வரும்போது அமுதாவை கூட்டிகிட்டு வந்திடு.” என்று கட்டளையாய் ராஜன் சொல்ல..
‘ராஜய்யா.. அத்தையை எப்படி கூட்டிட்டு வரது..? அவங்க எங்க கூப்பிட்டாலும் வரமாட்டாங்க..” என்று மாறன் மறுப்பு சொல்ல..
‘அதெல்லாம் எனக்கு தெரியாது.. எப்படியாவது அமுதாவை கூட்டிட்டு வந்திடு..” என்று மீண்டும் கட்டளையாய் சொல்லி இணைப்பை துண்டித்தார்.
அன்று தேவி பேசியதை நினைத்தவன்.. நாளை அத்தையை திருமணம் செய்துகொள்ளத்தான் ராஜய்யா ஏற்பாடு செய்திருப்பார் என்று மாறன் சரியாக யூகித்திருந்தான். ஆனால் தன் குடும்பத்தினர் யாரிடமும் அதை பகிர்ந்துகொள்ளவில்லை.
அடுத்தநாள் ராஜன் சொன்னதுபோலவே தன் குடும்பத்தோடு அமுதாவின் வீட்டிற்கு வந்து.. ‘அத்தை.. ஒரு எங்க குலசாமி கோவில்ல ஒரு பூஜை.. வாங்க..” என்றழைக்க..
‘நான் எதுக்கு தம்பி.. நீங்க போய்ட்டு வாங்க..” என்று அமுதா மறுப்பு சொல்ல..
‘அம்மும்மா.. இன்னைக்குத்தான் உன் மாப்பிள்ளை அத்தி பூத்தாப்போல குடும்பத்தோட கிளம்பியிருக்கார்.. வாங்க அம்மும்மா..” என்று அமுதாவை கெஞ்சி கொஞ்ச.. இரண்டு கார்களில் நிவேதா கிசோர்.. சோபனா முரளி.. சுமதி ராமு.. என்று மாறன் குடும்பத்தினர் அனைவரும் இருப்பதால்.. இதற்குமேல் மறுத்தால் தன் மருமகனுக்கு மரியாதையா இருக்காது என எண்ணி.. வேறு வழியின்றி காரில் ஏற்றினார் அமுதா.
காரில் போகும்போதுதான்.. இது ராஜனின் குலசாமி கோவிலுக்கு போகும் வழியாச்சே என்று கவனித்த அமுதா.. மாறனை சந்தேகத்தோடு பார்க்க.. மாறன் அமுதாவின் புறம் திரும்பவே இல்லை.
இடம் வந்ததும் காரை விட்டு இறங்க.. ஊரிலுள்ள மொத்த ஜனங்களும் அங்குதான் இருந்தனர். எதுவோ நடக்கப்போகிறது என்று யோசிப்பதற்குள்.. அமுதாவின் அருகில் வந்த ராஜன்.. அவரின் கைபிடித்து அழைத்துசென்றார் கோவிலுக்குள்.
‘ராஜன்.. என்ன இது..? கையை விடுங்க..” என்ற அமுதாவின் வார்த்தையெல்லாம் ராஜன் கண்டுகொள்ளவில்லை. மங்களத் தட்டோடு வந்த பூசாரி ராஜன் முன் அதை நீட்ட.. அதிலிருந்த தாலிக்கொடியை எடுத்து அமுதாவிற்கு அணிவித்து.. நெற்றிக்கு குங்குமமிட்டு.. அமுதாவின் முன் மண்டியிட்டு.. அவரின் காலையெடுத்து தன் தொடைமீது வைத்து.. தனது சர்ட் பாக்கட்டில் இருந்த மெட்டியை எடுத்து அமுதாவின் கால் விரல்களுக்கு அணிவித்து.. பிறகுதான் ஆழ்ந்து பார்த்தார் அமுதாவின் முகத்தை..
அருவியாய் கொட்டிக்கொண்டிருந்த கண்ணீரோடு அமுதா தேவியின் முகம்பார்த்திருக்க.. அங்கு தேவியும் அதே நிலையில் பார்த்திருந்தார் தன் கணவனை.
பூசாரி மாலையை நீட்ட.. அதை வாங்கிய ராஜன் மாலையை பிரித்து சரமாக்கி.. அதனை இரண்டாய் பிரித்து அருகிலிருந்த தேவியின் தலையில் சூடி.. மீதியை அமுதாவின் தலையில் சூடிவிட.. ‘அப்பா..” என்ற கதறலோடு ராஜனை கட்டியணைத்தாள் ராஜநந்தினி.
தன் மகளின் நெற்றியில் தன் முதல் முத்தத்தை பதித்து.. அந்த நேரம் தேவியின் நினைவையும் அமுதாவின் நினைவையும் பின்னுக்கு தள்ளியவராய்.. மகளின் முதல் அழைப்பிலும் அணைப்பிலும்.. கண்ணீரோடு கட்டுட்டுண்டு இருந்தார் ராஜன்.
செய்வதறியாது தன் முகத்தை கைகளால் மூடியபடி நின்ற இடத்திலேயே அமர்ந்து அமுதா கண்ணீர்வடிக்க..
அங்கு தேவியின் குடும்பத்தினர் ஆக்ரோசமாய் வந்திறங்கினர்.. தன் கணவனை யாரும் வார்த்தையால் சாடிவிடும் முன்.. ‘எதுக்கு வந்திங்க இங்க..?” என்று தன் தந்தையிடம் தேவி கேட்க..
‘இங்க என்ன நடக்குது..? அதை பார்த்திட்டு பொத்திட்டு போறதுக்கு நாங்க என்ன..” என்று ராஜனை தகாத வார்த்தையில் தேவியின் தந்தை பேச..
[the_ad id=”6605″]
அதற்குள் தேவியின் அண்ணன்களும் ஏதோ சொல்லவரவும்.. ‘அவசரப்பட்டு வார்த்தையை விடாதேண்ணா..” என்று எச்சரிக்கையாய் சொன்ன தேவி.. பிறகு தன் தந்தையைப் பார்த்தவாறே..
‘ஏண்ணா.. நம்ம அப்பா நாம அஞ்சுபேர் பிறந்ததுக்கு அப்புறமும்.. நான் பெரிய பொண்ணாகும் வரை.. மாசத்தில பாதி நாள் நம்ம வீட்லயே இருக்க மாட்டாராமே.. உங்களுக்கும் அது தெரியுமாமே..?” என்று எள்ளலாய் கேட்க..
விதிர்த்துப் போனார்கள் தேவியின் உடன்பிறந்தோர்.. ‘நம்ம அம்மாவை பெத்தவங்களும் இப்படித்தான துடிச்சி போயிருப்பாங்க..? அட அவங்களை விடுங்க.. நம்ம அம்மா எப்படி அப்பாகூட குடும்பம் நடத்தியிருப்பாங்கன்னு அன்னைக்கெல்லாம் தோணாத சிந்தனை.. உங்களுக்கு இன்னைக்கு தோணிடுச்சாக்கும்..?” என்று மிதப்பாய் கேட்க..
‘அம்மாடி.. எதை எதுக்குடா முடிச்சி போடுற..?” என்று தேவியின் பெரிய அண்ணன் கண்கலங்க..
பிறகுதான் ஆசுவாசப்பட்ட தேவி.. ‘என் புருசன்.. எனக்கு துரோகம் செய்யலண்ணா.. என் கல்யாணத்துக்கும் முன்னாடியே..” என்று சுருக்கமாக நடந்தவற்றை சொல்லி..
‘இத்தனை வருசமா அவரை பார்த்திட்டுதான இருக்கிங்க..? அவரோட கன்னியத்தைப் பத்தி உங்களுக்கு தெரியாதா..? இந்த கல்யாணம் என் முழு சம்மதத்தோட அவரோட நிம்மதிக்காக நான் சொல்லித்தான் நடக்குது..” என்று எங்கே தன் அண்ணன் மார்பில் தஞ்சமடைந்து கத்தி கதறிவிடுவோமோ.. என பயந்து தடுமாற்றத்தோடு தன் முகம் திருப்ப.. அப்பொழுதுதான் மற்ற இரு அண்ணன்கள் அமுதாவை கேவலமான பார்வை பார்த்திருந்ததை பார்த்த தேவி..
‘அமுதாக்காவை யாராவது ஒத்த வார்த்தை தப்பா பேசினா.. அது என்னை பேசினமாதிரி.. ஏன்னா எனக்கு முன்னாடியே என் புருசனோட குடும்பம் நடத்தினது அவங்கதான்.. அதுக்கு சாட்சியா இங்க நிக்கிறாப் பாருங்க ராஜநந்தினி.. அவரோட பெரிய பொண்ணு.. தண்டபானி பரம்பரையோட முதல் வாரிசு.. லாவன்யாவை விட ஏழுவயசு பெரியவ.. அப்படிப் பார்த்தா நான்தான அவர் வாழ்க்கையில இரண்டாவதா வந்தவ.. அதனால.. நீங்க தப்பா பேசுற ஒவ்வொரு வார்த்தையும் என்னை பேசுறமாதிரி..” என்று கூற வாயடைத்துப்போயினர் தேவியின் குடும்பத்தார்.
‘இது என் குடும்ப விசயம்.. என்னோட உறவு வேணும்னு நீங்க நினைச்சிங்கன்னா.. அமைதியா எல்லாரும் இங்கயிருந்து கிளம்பிடுங்க.. சின்ன வார்த்தை நீங்க அவரை தப்பா பேசினாலும்.. இல்ல மரியாதை குறைவா பார்த்தாலும் கூட.. அதுக்கப்புறம் எனக்கு பிறந்த வீடுன்னு ஒன்னு இருக்கிறதையே நான் மறந்திடுவேன்..” என்று சொல்ல.. அமைதியாக கிளம்பினர் தேவியின் குடும்பத்தினர்.
தேவியின் குடும்பத்தை தவிர.. வேறு யாரும் ராஜனையும் அமுதாவையும் தவறாக பேசவில்லை. ராஜன் பரம்பரையாக பரம்பரையாக ஊரின் பெரிய தனத்துக்காரர் என்றால்..
ஆண்டாடு காலமாக தவறை மட்டுமே செய்து வந்த வேலாயுதமே… மாறனிடம் அடங்கிப்போனது மட்டுமல்லாமல்.. மாறனால் திருந்திவிட்டதாகவும்.. நிறைய பொது விசயங்களும் அதனை செயல்படுத்தும் விபரங்கள் தெரிபவனுமாகவும்.. ஊர்மக்களால் மாறன் நம்பப்பட.. அதற்கு தகுந்தாற் போல் சிலசமயம் மாறனை நம்பி உதவி கேட்பவர்களுக்கும்.. உடனே அதை செய்து கொடுப்பவனாகவும் மாறன் மாறியிருக்க..
தன்சொந்த முயற்ச்சியால்.. புதிதாய் பெரிதாய்.. வேகமாய் வளர்ந்து வரும் பெரிய மனிதனானான் ஊராருக்கு. எனவே மாறனின் மாமனாரையும் மாமியாரையும் தவறாக பேச மனதினில் நினைப்பவர்களுக்கும் கூட அதனை வெளிப்படுத்தும் தைரியம் வரவில்லை.
நடந்தது திடீர் திருமணம் என்பதைத்தவிர.. ராஜன் தேவி.. திருமணத்தின் கல்யாண விருந்திற்கு.. கடுகளவிற்கும் குறைவில்லாத விருந்து.. இன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. அன்றுபோல் இன்றும் ஊரில் உள்ள அனைவரையும் வரவழைத்திருந்தார் ராஜன். அனைவரும் விருந்துண்டு கொண்டிருக்க..
இத்தனை நேரம் இருந்த மனதிடமெல்லாம் போய்.. எதையோ பெரிதாய் இழந்த ஒரு உணர்வு தேவியின் மனதை அழுத்த.. திருமணத்திற்கும் ஒத்துழைத்துவிட்டு.. தற்போது இத்தனை பேர் முன்னிலையில் தாம் கண்ணீர் விட்டால்.. அது தம் கணவரின் மனதை பெரிதாய் பாதிக்கும் என புரிந்திருந்தாலும்.. இனி இங்கிருக்கும் அளவிற்கு தம்மால் தம் மனதை திடப்படுத்த முடியாது என்ற எண்ணம் தோன்ற..
‘ஏங்க.. லாவன்யா பரிச்சை முடிஞ்சி வந்திடுவா.. நான் வீட்டுக்குப் போறேன்.. நீங்க இங்க பாருங்க..” என ராஜனிடம் சொன்னவர்.. ராஜனின் பதிலுக்கு காத்திராமல்..
‘குமார்..” என அதிகாரக் குரல்கொடுத்து.. காரில் கிளம்பினார் தேவி.
[the_ad id=”6605″]
நேரம் காலை பத்து மணியைத்தான் காட்டியது.. அதோடு.. இன்று லாவன்யாவிற்கு பள்ளி முழுநேரம் என்றும்.. தேவியால் இங்கிருக்க முடியாமல்தான் கிளம்புகிறாள் என்றும் ராஜனுக்கு தெரியும்தான்.. ஆனால் இன்னமும் அமுதாவிடம் தாம் ஆற்ற வேண்டிய கடமை ஒன்று பாக்கியிருக்கும் காரணத்தால்.. தனியே தேவி போவதை.. வேதனையோடு பார்த்திருந்தார் ராஜன்.
ராஜனின் போன் அழைக்கவும் பேசியவர்.. ‘மாறா.. அமுதாவை கூட்டிகிட்டு எல்லாரும் கிளம்புங்க.. நான் பத்து நிமிசத்தில வந்திடறேன்..” என சொல்ல..
‘எங்க வீட்டுக்கா ராஜய்யா…?” என மாறன் தடுமாற்றமாய கேட்க..
‘இல்ல அமுதா வீட்டுக்கு..” என்று சொல்ல.. அடுத்து என்னவோ..? என்ற கேள்வியோடு.. ராஜன் சொன்னதை செய்தான் மாறன்.
———————————————————
அமுதாவின் வீட்டிற்கு வந்ததும்.. ‘மாறன்.. பேங்குக்கு டைம் ஆகிடுச்சி நான் கிளம்பறேன்..” என கிசோர் சொல்ல.. நிவேதாவும்.. ‘நீ சொன்னதால மயிலுவை அத்தைகிட்ட விட்டுட்டு வந்திட்டேன் மாறா.. உன் மயிலம்மா அத்தையை போட்டு படுத்துவா.. நானும் இவரோடவே கிளம்புறேன்.. சின்னைய்யா வந்தா சொல்லிடு.” என இருவரும் கிளம்பவும்..
பிள்ளைத்தாச்சியான சோபனாவிற்கும் சோர்வாக இருக்கவும்.. ‘மாறா.. எனக்கும் ஒருமாதிரி இருக்கு.. நான் நம்ம வீட்ல இருக்கேன்..” என்று சொல்ல.. தன் மனையாளோடே முரளியும் கிளம்ப.. மகள் மருமகன் வீடு சென்றால் மாப்பிள்ளையை கவனிக்கவேண்டி.. இராமுவும் சுமதியுமே சோபனாவோடு கிளம்பியிருந்தனர்.
கட்டிலில் அமர்ந்திருந்த அமுதாவின் மனம்.. நிலையில்லாமல் தவித்துக்கொண்டிருந்தது. ராஜனின் இந்த செயலிற்க்கும்.. அதற்கு தேவி ஒத்துழைத்ததும்.. தமக்காக தேவி அவர்களின் அண்ணன்களிடம் பேசியதையும்.. நினைத்தவர்.. தன் கணவனின் சந்தோசத்திற்க்காக ஒரு பெண் இந்தளவிற்கு இறங்கி வருகிறாள் என்றால்.. எத்தனை காதல் கொண்டிருப்பாள் அவள் கணவன் மீது..
ராஜன் எப்படி தன்னை மறந்தார்..? என்ற இத்தனை வருட வேதனைக்கு.. தேவியின் காதலே ராஜனை உயிர்த்தெழ செய்திருக்கிறது என்ற உண்மைபுரிய..
யாருக்கும் தெரியாத ராஜனின் மீதான தம் காதல்.. கடைசிவரை யாருக்கும் தெரியாமலேயே இருந்திருக்கலாம். வேதனை நம் ஒருத்தியோடு போயிருக்கும்..
ராஜனின் திருமணம் இரண்டு மாதத்திற்கு முன்னால்தான் நடந்தது.. என தம்மிடம் அன்று நளினி சொல்லும்போது தமக்கு ஏற்பட்ட வேதனைத்தானே இன்று தேவிக்கு இருந்திருக்கும்..?
வாழவேண்டிய வயதில்.. அனைவரின் வாழ்த்துக்களோடும்.. பெரியவர்களின் ஆசியோடும்.. ஒரு பெண்ணின் கழுத்தை அலங்கரிக்க வேண்டிய மாங்கல்யம்.. இத்தனை வயதிற்கு பிறகு இன்னொரு பெண்ணின் மனதை வருத்தி.. தூற்றுவோர் தூற்ற.. தேவைதானா இதெல்லாம்..? என தோன்ற.. கண்களில் நீர் பெருகியது.
‘அழாதிங்க அம்மும்மா..” என அமுதாவை அணைத்த நந்தினியின் முகத்தினில் அவ்வளவு சந்தோசம்.. தன் அன்னையின் கழுத்தில் இருந்த தாலிக்கொடி.. அவரின் நெற்றியை நிறைத்திருந்த குங்குமம்.. சிகையை அலங்கரித்த மலர்ச்சரம்.. தன் அன்னையின் கால் விரலை உரிமையாய் வளைத்து அணைத்திருக்கும் மெட்டி.. என தாம் எப்பொழுதும் விழித்துக்கொண்டே காணும் நிறைவேறாத கனவு.. நிறைவேறிய திருப்தியில் நந்தினியின் முகம் பொலிவைக் காட்டியது.