ஒரு முடிவின் துவக்கம்..
ராஜனின் புல்லட் சத்தத்தில் நந்தினியின் முகம் பிரகாசிக்க.. அமுதாவின் உடல் ஒருகனம் அதிர்ந்து அடங்கியது. திண்ணையில் அமர்ந்திருந்த மாறன்.. ராஜனின் கையில் ஒரு பார்சல் இருப்பதை பார்க்கவும்..
‘கொடுங்க ராஜய்யா..” என கேட்க..
மாறனுக்கு பதிலளிக்காமல்.. உள்ளே சென்று அமுதாவின் முன் நிற்க.. பார்சலின் மேலிருந்த பெயரைப் பார்த்த அமுதாவின் கண்கள் விரிந்து கண்ணீரை வெளியனுப்ப.. அதனை கண்டுகொள்ளாமல் பார்சலை பிரித்து வைத்து.. தானே உள்ளிருந்து ஒரு சொம்பில் தண்ணீரோடு ஒரு தட்டும் எடுத்துவந்து..
‘கை கழுவு..” என கட்டளையாய் சொல்ல..
‘அப்பா.. அம்மும்மாக்கு சின்னவயசில இருந்தே நான்வெஜ் ஸ்மெல்லே பிடிக்காதாம்.. உங்களுக்கு தெரியாதா…?” என நந்தினி கேளியாய் சிரிக்க..
தன் மகளை கண்டுகொள்ளாத ராஜன்.. அமுதாவையே அழுத்தமாய் பார்க்க..
‘எனக்கு இதெல்லாம் இப்போ ஒத்துக்கிறது இல்ல..” என்று சன்னக்குரலில் அமுதா சொல்ல.. மாறனுக்கு சட்டென விசயம் புரிய.. நந்தினி எதையோ சொல்ல வர..
‘ராஜி..” என்ற ஒற்றை சொல்லில் மாறன் நந்தினியை அடக்கினான்.
‘சரி விடு நான் ஒத்துக்க வைக்கிறேன்.. அப்போ மாதிரியே..” என சொல்லி ராஜன் தன் கையை கழுவ..
நந்தினியின் கையைப்பிடித்தபடி மாறன் வெளியேற எத்தணிக்க..
‘இங்கையே உக்காரு மாறா..” என்று கட்டளையாய் ராஜன் சொன்னார்.
‘ராஜய்யா..” என்ற மாறனின் குரல் தர்மசங்கடமாய் ஒலிக்க.. அதை கண்டுகொள்ளாதவராய்..
‘நீ உக்காருடா அம்மா பக்கத்தில..” என்று நந்தினியிடம் ராஜன் கனிவாய் சொல்ல.. நந்தினி அமுதாவின் அருகில் உக்கார்ந்ததும்..
‘உன் அம்மாக்கு இதெல்லாம் பிடிக்குமா..? பிடிக்காதான்னு.. உன்மேல சத்தியம் செய்து உண்மையை சொல்ல சொல்லு..” என்று ராஜன் சொல்ல.. அதிர்ச்சியில் நந்தினி விழிவிரிக்க.. அமுதா தடுமாற்றமாய் தன் மகளைப்பார்த்தார்.. பிறகுதான் தன் தந்தை சொல்வது உண்மை என புரிந்த நந்தினி..
‘அப்போ.. சின்னவயசில இருந்தே இதெல்லாம் எனக்கு பிடிக்காதுன்னு சொன்னதெல்லாம் பொய்.. அப்படித்தான..?” என்று குற்றம்சாட்டியவள்..
‘உங்களுக்கு பிடிச்சதைத்தான் இத்தனை வருசமா.. நீங்க பார்த்திருக்கவே நான் மட்டும் சாப்டுட்டிருந்தேனா..?” என்று நந்தினி உடைந்த குரலில் கேட்க..
‘ச்ச..ச்ச.. அப்படியில்ல நந்து.. எனக்கு இதெல்லாம் வெறுத்துபோச்சி.. உண்மையாவே எனக்கு சாப்பிட பிடிக்காமத்தான் நான் சாப்பிடாம இருந்தேன்..” என்று அவசரமாய் தன் மகளுக்கு ஆறுதல் அளித்து..
‘காலம் போன கடைசியில.. எதுக்கு இந்த கலாட்டா..?” என கண்ணில் நீரோடும்.. குரலில் வலியோடும் கேட்ட அமுதா.. இன்னும் ராஜனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
அமுதாவின் வலி நிறைந்த கண்ணீர் ராஜனை அசைக்க.. ‘போனது.. காலம் மட்டுமில்ல.. உன் ஒட்டு மொத்த வாழ்க்கையும்தான்.. உன் இழப்பை ஈடுகட்ட வேண்டிய என்கிட்ட.. உனக்கு கொடுக்கிறதுக்குன்னு ஒன்னுமே இல்ல.. ஆனா உன்னோட முடிஞ்சிப்போன வாழ்க்கைக்கு.. சின்னதா ஒரு துவக்கம் கொடுக்க.. எனக்கொரு வாய்ப்பு கொடு அம்மு..” என்றார் தானும் உடைந்த குரலில்.
[the_ad id=”6605″]
நந்தினியின் மடியில் தன் முகத்தை புதைத்து அமுதா அழ.. அதனை சகிக்க முடியாமல் ஒரு முடிவிற்கு வந்தவராய்.. ‘அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல சொன்னியே.. உன்கிட்ட உரிமையெடுத்துக்கிறதுக்கோ கோபப்படறதுக்கோ யாருக்கும் உரிமை கிடையாதுன்னு.. நான் அதை ஒத்துக்கிறேன்.. அதுக்கெல்லாம் தகுதியான ஆள் நான் இல்லதான்..
ஆனா இனிமே நீ என்ன சாப்பிடுறியோ அதேதான் நானும் சாப்பிடுவேன்.. நான் சாப்பிடாததை தேவியும் சாப்பிடமாட்டா.. மனோஜ்.. அவனுக்கு எதுவும் விபரம் தெரியாது.. ஆனா லாவன்யா என்னோட ஒரு சின்ன மாற்றத்தைகூட உடனே கண்டுபிடிச்சிடுவா..” என்று அழுத்தத்தோடு சொல்லி..
அங்கு தரையிலேயே அமர.. ‘ராஜய்யா.. ஏன் கீழ உக்கார்ந்திட்டிங்க..” என்று மாறன் தன்னிருக்கையில் இருந்து பதறி எழ..
‘மகாராணி சாப்பிடும்போது அடிமையெல்லாம் தரையிலதான் உக்காரனும் மாறா.. உனக்கு தெரியாதா…?” என்று அப்போது அமுதா சாப்பிடும்போது காதலாய் சொல்லும் வசனம்.. இன்று ஒடுங்கி அடங்கிய குரலாய் வெளிவர..
வியப்போடு ராஜனைப் பார்த்தவன்.. லவ்சுன்னா லவ்சு.. உம்மூட்டுது எம்மூட்டுது இல்லபோல.. இது வேறமாதிரி லைலா மஞ்சுனுவையே மிஞ்சின லவ்வாட்டங்குதுடா சாமி..” என்று நினைத்த மாறன்.. பெருமையோடு நிறைந்த பார்வை பார்த்தான் ராஜனை.
மாறனின் பார்வையை உணர்ந்த அமுதா.. இந்த அறிவுகெட்ட ஜென்மம் இன்னும் கொஞ்ச நேரம் இங்கயிருந்தா.. எப்படி பிள்ளை பெத்தோம்னு கூட நம்ம மருமகனுக்கு புரிய வச்சிருமாட்டங்குது.. என்று மனதினுள் திட்டித்தீர்த்து..
‘முதல்ல இங்கயிருந்து எல்லாரும் கிளம்புங்க.. நான் அப்புறம் சாப்ட்டுக்கிறேன்..” என்று அமுதா கடுப்போடு சொல்ல..
‘முடியாது.. நான் போகமாட்டேன்.. நீங்க சாப்பிடறதை நான் பார்க்கனும்.. உங்களுக்கு நான்வெஜ் எந்த அளவுக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியனும்…” என்று நந்தினி பிடிவாதம் செய்ய..
‘உங்கம்மா சாப்பிடாம இந்த இடத்தைவிட்டு நகர்ந்திடாதடா..” என்று நந்தினியை ராஜன் ஊக்கப்படுத்த..
இனியும் சாப்பிடலைன்னா நந்தினி விடமாட்டா.. என நினைத்து இலையைப் பார்த்த அமுதாவிற்கு முதலில் தென்பட்டது ரசகுல்லாதான்.. அதையே ஒருநிமிடம் பார்த்திருந்து.. பிறகு கொஞ்சம் பிரியாணியை கையிலெடுக்க.. இத்தனை வருடமாய் கட்டுக்குள் இருந்த அமுதாவின் மனம் தற்போது அடங்க மறுத்தது.. மனதை அடக்க வழியின்றி தவித்த அமுதாவின் கண்கள் ஏகத்திற்கும் தடுமாறியது.
‘ம்ம்.. சாப்பிடுங்க..” என்று நந்தினியின் குரல் ஆவலோடு வெளிவர.. அப்பொழுதுதான் ராஜனை சங்கடத்தோடு நேர்கொண்டு பார்த்தார் அமுதா.
‘நீ ஒரே ஒருவாய் சாப்பிடு.. நானும் மாறனும் வெளில போய்டுறோம்.. நீ சாப்பிடறதை பார்த்து ரசிக்க நம்ம மக மட்டும் உன்கூட இருப்பா..” என்று ராஜன் அனுசரனையாய் சொல்ல.. கையிலிருந்த பிரியாணியை வாய்க்குக்குள் வைக்க.. அமுதாவின் கண்கள் மளமளவென கொட்டியது கண்ணீரை.
அமுதா சாப்பிட்ட சந்தோசத்தில்.. ‘அம்மு… உனக்கு ஸ்வீட் பிடிக்காதில்ல..? இதைமட்டும் நான் எடுத்துக்கிறேன்..” என சொல்லி ரசகுல்லாவை எடுத்து நந்தினிவாயில் பாதி திணித்து.. மீதியை தன் வாய்க்குள் போட்டு.. அங்கிருந்த இரண்டு சேர்களையும் எடுத்துக்கொண்டு..
‘வா.. மாறா..” என வெளியே வந்து புங்கமரத்து நிழலில் மாறனுக்கொரு சேரைப்போட்டு.. பெருத்த நிம்மதியுடன் தானும் அமர்ந்தார்.
அருகில் வந்து அமர்ந்த மாறன்.. ‘ராஜய்யா… அநியாயத்துக்கு நீங்க அத்தையை சங்கடப்படுத்திறிங்க.. நானும் ராஜியும் இல்லாத நேரமா பார்த்து நீங்க இதை செய்திருக்கனும்..” என்று மாறன் வருந்த..
‘உனக்கு அவளைப் பத்தி தெரியாது மாறா.. என் பொண்ணு இல்லன்னா முதல்ல என்னால வீட்டுக்குள்ளயே நுழைஞ்சிருக்க முடியாது.. இதுல நான் எங்க அவளை சாப்பிட வைக்கிறது..? நந்தினிமேல சத்தியம் பண்ண சொல்லவும்தான் கொஞ்சம் பயந்தா..” என்றார் தளர்வாக.
ராஜனை இயல்பாக்க.. ‘நாங்க பக்கத்தில இல்லன்னா.. ரசகுல்லாவை அத்தை உங்களுக்கு ஊட்டித்தான விட்ருப்பாங்க..?” என்று மாறன் சிரிப்போடு கேட்க..
தானும் சிரித்த ராஜன்.. ‘ஏண்டா.. மருமகனாச்சேன்னு ஒரு மரியாதைக்கு வெளில போகவேணாம்னு சொன்னா.. கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம இப்படியா எங்க பக்கத்திலயே கரடிமாதிரி நிப்ப..?” என்று நக்கலோடு கேட்க..
ஆங்.. என விழித்த மாறன்.. ‘நான் என் பொண்டாட்டிக்காக நின்னேன்..” என்று வீராப்பாய் சொல்லி.. ‘ஆனாலும் ராஜய்யா… இந்த காலத்து யூத்தெல்லாம் உங்ககிட்ட பிச்சை வாங்கனும்..” என்றான் பெருமையாக.
‘என்னத்த செஞ்சி.. என்ன பிரியோஜனம்..? தன்னைத்தானே வருத்திகிட்டு.. ஆயுதமே இல்லாம அடுத்தவங்களை எப்படி சாகடிக்கிறதுன்னு.. உங்கத்தைகிட்டதான் கத்துக்கனும்..” என்ற ராஜனுக்கு மீண்டும் லேசாய் கண்கலங்கியது.
‘விடுங்க ராஜய்யா.. சும்மா போனதய்யே நினைச்சிகிட்டு..” என்றான் சமாதானமாக.
‘நான்வெஜ்ன்னா.. தினமும்ன்னா கூட அப்படி விரும்பி சாப்பிடுவா மாறா.. இத்தனை வருசமா எப்படித்தான் இப்படி வாயகட்டிட்டு இருந்தாளோ..?” என்றார் வேதனையாய்.
‘அதுவும் ராஜிக்கு கூட தெரியாம எவ்ளோ கவனமா இருந்திருக்காங்க பாருங்க..” என மாறனும் வருந்தினான்.
‘அழுத்தக்காரி.. இத்தனை அழுத்தம் இருக்கப்போய்தான.. அவளுக்கு என்னென்ன பிடிக்குமோ.. அத்தனையும் விட்டொழிச்சிருக்கா..?” என்றார் ஆற்றாமையாக.
‘பின்ன..? என்னோட ராஜய்யாவை மறந்து வாழறது.. அவ்ளோ சாதாரண விசயமா என்ன..?” என பெருமையாக சொன்ன மாறன்..
[the_ad id=”6605″]
‘ஆனானப்பட்ட ராஜாவா இருந்தாலும்.. எங்கத்தைக்கு நீங்க அடிமைதான் போல..?” என்றான் நக்கலாக.
மாறனின் முதுகில் செல்லமாய் ஒரு அடிவைத்து.. ‘உன்முன்னாடி இப்படி பண்ணப்போய்தான்.. மருமகன் முன்னாடி இன்னும் வேற எதாவது செய்திடுவனோன்னு பயந்து.. உங்கத்தை சாப்பாட்டில கையை வச்சா.. இல்லன்னா அவளை மலையிறக்கிறது சாதாரண விசயமா..?” என்று எதையோ பெரிதாய் சாதித்ததை போல் சொன்னார் ராஜன்.
சாப்பிட ஆரம்பித்த அமுதாவிற்கு பிரியாணியின் ருசி தெரியவில்லை.. மாறாக தாம் சாப்பிடும்போது ராஜன் தன்னை ரசித்துப்பார்ப்பதும்.. சாப்பிட்ட பிறகு ஏற்படும் நிகழ்வுகளும்.. நீண்ட வருடங்களுக்கு பிறகு அணிவகுத்து நிற்க.. உடல்சிலிர்த்து.. முகம் சிவந்து.. கண்களும் மலர்ந்திருக்க.. பாதிவரை ராஜனின் நினைவோடே சாப்பிட்டிருந்தார்..
இத்தனை வருடமாய் காணாத.. தன் அன்னையின் அழகை சிறிது நேரம்தான் ரசிக்க முடிந்தது நந்தினியால்.. தண்ணி குடிங்கம்மா என்று நந்தினி சொன்னதில்தான் தன் கவனம் கலைந்த அமுதா சாப்பிடுவதை நிறுத்தியிருக்க..
நந்தினியின் அழுகை சத்தம் கேட்கவும்.. இருவரும் பதறி உள்ளே செல்ல..
‘இல்ல நந்து.. நீ வயித்தில இருக்கும்போது.. உண்மையாவே இதெல்லாம் எனக்கு ஒத்துக்காது.. அப்போ விட்டதுதான்.. அப்படியே பழகிடுச்சி..” என்று அமுதா தன் மகளுக்கு ஆறுதல் அளிக்க.. நந்தினி அழுகை நின்றபாடில்லை.
இலையில் பாதிக்குமேல் மீதியிருக்க.. ‘இன்னும் என்னென்ன சித்ரவதையை எனக்கே தெரியாம.. உங்களுக்கு நீங்களே கொடுத்துகிட்டிங்க..?” என்று கதறி அழுதாள் நந்தினி.
நந்தினியின் தலைகோதிய ராஜன்.. ‘அழாதடா.. எல்லாத்துக்கும் காரணம் நான்.. அம்மாவை ஏன் கோவிச்சிக்கிற..?” என ஆறுதல் சொன்னார்.
‘ஹாஸ்பிட்டல்ல லாவன்யாவை அழவச்சிங்க.. இப்போ நந்தினியை.. யார் முன்னாடி என்ன செய்யகூடாதோ அதையே செய்திட்டு.. இப்போ நல்லவனாட்டம்..” என்று அமுதா கடிய..
[the_ad id=”6605″]
அமுதா திட்டுவதை ரசனையாய் வாங்கிக்கொண்ட ராஜன்.. அதை முகத்தினில் காட்டாமல்.. ‘நாளைக்கு ஒரு பிரிட்ஜும் வீட்டுக்குத் தேவையான மளிகை சாமானும் குமார் கொண்டு வருவான்.. ஒழுங்கா உனக்கு பிடிச்சதை சமைச்சி சாப்பிடனும்.. இனிமே இந்த கூழ்.. தயிர்சாதம்ன்னு நீ சாப்ட்டு நான் பார்த்தேன்.. அப்புறம் தேவி சமைக்கிறதைத்தான் நீ தினமும் சாப்பிடவேண்டி வரும்.. அதுவும் தேவியையே உனக்கு சாப்பாடு கொண்டுவர வைப்பேன்..” என சவாலாய் சொல்ல..
‘அதுக்கெல்லாம் முதல்ல நான் இங்க இருந்தாதான..?” என்று அமுதா கர்ஜிக்க..
‘எங்கபோனாலும்.. நந்துவை கூட பார்க்க வரமாட்டியா..?” என ராஜன் கேட்க..
‘என்ன..? பிளாக்மெயிலா..? என் பொண்ணை பார்த்துக்க என் மாப்பிள்ளை இருக்காப்ல.. அப்படியே அவளை பார்க்கனும்னாலும் நான் இருக்கிற இடத்துக்கு அவளை வரவச்சி பார்த்துப்பேன்..” என்றார் கடுப்பாக.
‘ஏன் நந்து..? உன் அம்மாவை பார்க்க போகும்போது.. கூடவே என்னையும் கூட்டிட்டுப்போக மாட்டியா..?” என நந்தினியிடம் ராஜன் கெஞ்சலாய் கேட்க.. நந்தினி தடுமாற..
‘சரி.. அப்படியே போனாலும்.. எங்க போய்டுவ..? சென்னைக்கா..? இல்ல அமெரிக்கா.. சிங்கப்பூர்.. அதுமாதிரியா..? போ.. இந்த உலகத்தில எந்த மூலைக்குன்னாலும் போ.. நீ எங்க இருக்கிறியோ.. அங்கயே நமக்கு ரிசப்சன் நடக்கும்..” என ராஜன் இலகுவாய் சொல்ல..
மாறன் நந்தினி அருகிலிருக்க.. ராஜனின் இந்த பேச்சு.. அமுதாவிற்கு எரிச்சலை கிளப்ப.. அவ்வளவு எரிச்சலோடு அமுதா ராஜனை முறைத்தார்.
பதிலுக்கு ஆழ்ந்த பார்வை பார்த்து.. ‘மணி இரண்டாகப்போகுது.. தேவி இன்னும் சாப்டிருக்கமாட்டா.. நான் கிளம்பறேன்..” என சொல்லி.. பைக்கில் அமர்ந்த ராஜனை தற்போது முழுதாய் தேவியே ஆக்ரமித்தார்.. ரொம்பவும் உடைஞ்சி போயிருப்பா என நினைத்தவரின் பாதையை கண்ணீர் மறைக்க.. தனது கண்களை துடைத்தபடியே வண்டியை செலுத்தினார்.