ஒரு முடிவின் துவக்கம்..
அத்தியாயம் — 22
வீட்டினுள் நுழைந்ததும்.. ‘ஐயா.. இப்போதான் அம்மா சாப்பிட்டு படுக்கப்போனாங்க.. உங்களுக்கு சாப்பாடு எடுத்து வரட்டுங்களா..?” என்று வீட்டின் வேலையாள் கேட்க.. அப்பெண்ணுக்கு பதிலளிக்காமல்.. பதட்டத்தோடு தனதறைக்கு சென்றார் ராஜன்.
ஓய்ந்த நிலையில் தேவி கண்மூடி படுத்திருக்க.. அவரருகில் அமர்ந்த ராஜன்..
‘தேவி..” என்று உள்ளார்ந்து உருகி அழைக்க..
லேசாய் கண்திறந்த தேவியைப் பார்த்ததும் ராஜன் பதறிஎழ.. அவரின் கையைப் பிடித்த தேவி.. ‘பயப்படாதிங்க.. எனக்கு ஒன்னும் இல்ல.. தூங்கினா நல்லா இருக்கும்னு தோணிச்சி.. படுத்துப்பார்த்தேன் தூக்கம் வரல.. அதனால ஒரே ஒரு தூக்கமாத்திரை சாப்பிட்டேன்..” என்று தேவி சொல்ல..
‘அச்சோ..” என தலையில் கைவைத்து.. ராஜன் தேவியை தூக்க.. ‘என்னை படுக்க வைங்க.. இன்னைக்குன்னு பார்த்து நீங்க இப்படி தூக்கிட்டு போனா.. ஊரே கூடிடும்..” என தூக்கத்தோடு சொன்னாலும் குரல் கட்டளையாய் வெளிவர.. தேவியை கட்டிலில் படுக்கவைத்து.. தன் குடும்ப டாக்டருக்கு அழைத்து தேவியின் நிலை சொல்லி..
‘கொஞ்சம் சீக்கிரம் வாங்க..” என்று இணைப்பை துண்டித்தபின்.. ராஜன் கண்ணீர் வடிக்க.. ராஜனின் கண்ணீரைத் துடைத்த தேவி..
‘வெறும் வயித்தில மாத்திரை போடக்கூடாதுன்னு சாப்பாடு சாப்டுட்டுதான் போட்டேன்.. எனக்கு ஒன்னும் ஆகாது.. உங்களை குழந்தைகளையெல்லாம் விட்டுட்டு நான் எங்கையும் போகமாட்டேன்.. இப்போ கொஞ்சம் அமைதி தேவையா இருந்துச்சி.. அதான்..” என்று சொன்ன தேவிக்கு தூக்கம் தழுவ.. கண்களை மூடினார்.
ராஜனின் போன் அடிக்க.. ‘ஹலோ…” என்றார்.
‘அப்பா.. நான்தான்ப்பா.. வயிறு ரொம்ப வலிக்குது.. நீங்க வந்து என்னை கூட்டிட்டுப்போங்க..” என்று பள்ளியில் இருந்து லாவண்யா சோர்வாய் சொன்னாள்.
‘லாவிம்மா.. அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல.. நான் அம்மாகிட்ட இருக்கனும்.. மாறனை அனுப்பி வைக்கட்டுமா…?” என ராஜன் கேட்டதும்..
‘அம்மாக்கு என்னாச்சிப்பா..?” என பதறியவள்.. ‘சரி மாமாவையே வரசொல்லுங்க..” என்றாள் பதட்டத்தோடே.
மாறனுக்கு அழைத்து சொன்ன ராஜன்.. தூங்கும் தேவியையே வேதனையோடு பார்த்திருந்தார்.
பள்ளி அலுவலக அறைக்கு முன் தன் வரவை எதிர்பார்த்தபடி சோர்ந்த முகத்தோடு நின்றிருந்த லாவண்யாவைப் பார்த்ததும்.. ராஜய்யா திருமணம் செய்தது ஏது இவளுக்கு தெரிந்திருக்குமோ.. எதுக்கு பர்மிசன் கேட்டுட்டு வரா.? ரொம்ப டல்லா தெரியிறாளே என்ற குழப்பத்தோடே அலுவலக அறையில் கையொப்பமிட்டு..
‘வா லாவி..” என்றான் கனிவாய்.
‘நீங்க முன்ன போங்க.. நான் வரேன்..” என்று மாறனிடம் சொன்னதும்..
‘சரி.. பேகை கொடு..” என்று அவளிடமிருந்து பேகை வாங்கியவன் முன்னே நடக்க.. தயங்கித்தயங்கி வந்தவள் மாறன் பின்னே உக்கார்ந்ததும்.. ‘ம்ம் போலாம்..” என்றாள்.
‘லாவி லன்ச்பேக் வெயிட்டாவே இருக்கு.. மதியம் சாப்பிடலயா..?” என்றான்.
அவனின் கேள்விக்கு பதிலளிக்காமல்.. ‘ப்ச்.. கொஞ்சம் வேகமா போங்க மாமா.. மாட்டுவண்டியாட்டம் போய்கிட்டு..” என்று கடிந்தாள்.
வேகத்தை அதிகப்படுத்தியவன் வீட்டிற்கு வந்ததும்.. லாவன்யா இறங்கி உள்ளே போக.. பிறகுதான் அவளின் உடையைப் பார்த்து அறிந்தான் அவளின் நிலையை.. ராஜய்யாவின் திருமணத்தினை ஏற்க முடியாமல் சண்டை போட ஏது வந்திருப்பாளோ என பதறிய மாறனுக்கு.. ஷப்பா இதுக்காகத்தான் வீட்டுக்கு வந்துட்டாளா..? என ஆசுவாசமானான்.
[the_ad id=”6605″]
லாவண்யா பாத்ரூமினுள் சென்றிருக்க.. அங்கு வந்த டாக்டரைப் பார்த்ததும் அதிர்ந்த மாறன்.. ‘டாக்டர்.. ராஜய்யா வர சொன்னாரா..?” என்றான்.
‘ஆமாம் மாறா..” என பதிலளித்தபடி நிற்காமல் டாக்டர் உள்ளே செல்ல.. அவர் பின்னோடே வந்தான். ராஜனின் படுக்கையறைக்குள் டாக்டர் போகவும்.. இதுவரை அவ்வறைக்குள் சென்றிராத மாறன்..
வெளியிலிருந்தபடி.. ’ராஜய்யா..“ என்றான் தயக்கத்தோடும்.. பதட்டத்தோடும்..
‘உள்ள வா மாறா..” என்ற ராஜனின் குரல் தளர்ந்திருக்க.. உள்ளே வந்தான்.
தேவியை பரிசோதித்த டாக்டர்.. என்ன மாத்திரை குடித்தார் என கேட்டு விபரம் அறிந்ததும்.. ‘பயப்படத் தேவையில்லை நார்மலாத்தான் இருக்காங்க.. ஆனா இதையே பழக்கப்படுத்திக்கக் கூடாது..” என்று சொல்ல..
அங்கு வந்த லாவண்யா.. டாக்டரைப் பார்த்ததும்.. ‘என்னாச்சிப்பா..?” என்றாள் பதறியவளாய்..
‘வீக்கா இருக்காங்க.. தூங்கி எழுந்தா சரியாய்டுவாங்க.. காலைல வரை தூங்குவாங்க பயப்படவேணாம்..” என சொல்லி டாக்டர் விடைபெறவும்.. லாவண்யா ராஜன் முகத்தில் நிம்மதி பிறந்தது..
தேவியின் நிலையறிய.. ‘லாவண்யா நீ போய் லன்ச் சாப்பிடு..” என்றான் மாறன்.
‘எனக்கு வயித்துவலின்னா அம்மாதான் சாப்பாடு ஊட்டுவாங்க..” என்றாள் தேவியைப் பார்த்து சோர்வாக.
‘நீ இருடா நான் ஊட்டிவிடறேன்..” என்று வேலையாட்களிடம் சாப்பாடு கொண்டுவரப் பணித்து.. லாவண்யாவிற்கு ஊட்டவும் நான்கு வாய் சாப்பிட்டவள்..
‘இன்னைக்கு நீங்க அமுதாம்மாவை கல்யாணம் செய்துகிட்டிங்களாப்பா..?” என்றாள் சன்னக்குரலில்.
குற்ற உணர்ச்சியோடு ராஜன் தன் மகளைப் பார்க்க.. ‘நீங்க பீல் பண்ணாதிங்கப்பா.. அம்மாமேல.. உங்கமேல.. அமுதாம்மா மேல.. இப்படி யார்மேலயும் தப்பில்லையாம்.. தாத்தாவாலதான் அமுதாம்மா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்களாம்.. அதை சரி செய்யிறதுக்காக நீங்க அவங்களை கல்யாணம் செய்துக்கப்போறிங்கன்னும்.. அதனால யாருக்கும் எந்த பாதிப்பும் வராதுன்னும்.. அம்மா என்கிட்ட நேத்தே சொல்லிட்டாங்க..” என்றாள் வயதை மீறிய பக்குவத்தோடு.
எழுந்த ராஜன் தன் மகளை ஆத்மார்த்தமாய் அணைத்துக்கொள்ள.. ‘நீங்க எல்லாரையும் நல்லாப் பார்த்துப்பிங்கன்னு.. அம்மா சொல்லலைன்னாலும் எனக்கே தெரியும்ப்பா..” என்று தானும் அணைத்துக்கொண்டாள் தகப்பனை.
லாவண்யாவின் பக்குவமா பேச்சில் பெருமைகொண்ட மாறன்.. ‘ராஜய்யா சாப்பாடு ஊட்டுங்க.. லாவி பசியோட இருப்பா..” என்று சொல்ல..
தன் தகப்பன் அணைப்பிலிருந்து விலகியவள்.. ‘சரசக்கா…” என்ற லாவண்யாவின் குரலுக்கு.. வந்து நின்ற சரசிடம்.. ‘மாமாக்கும் சாப்பாடு எடுத்திட்டு வாங்க..” என்றாள்.
‘ஏய் லாவி.. எனக்கு வேண்டாம் பசியில்ல..” என்று மாறன் தடுமாற..
‘ஏன் வேணாம்..? அப்புறம் உங்க வீட்டுக்கு வந்தா நான் சாப்பிடமாட்டேன்..” என கோபித்தாள்.
‘ப்ச்.. என்ன லாவி இது..? பெரிய மனுசியாட்டம்.. எனக்கு இந்த லாவண்யாவை பிடிக்கவேயில்ல.. மாறான்னு அதிகாரமா கூப்பிட்டு என்கிட்ட சண்டைபோடுற லாவண்யாதான் எனக்கு வேணும்..” என்று மாறன் வருத்தத்தோடே சொல்ல..
‘பேர் சொல்லமாட்டேன் மாமாதான் சொல்லுவேன்.. அதுக்காக சண்டை போடமாட்டேன்லாம் நினைச்சிக்காதிங்க.. அதெல்லாம் போட வேண்டிய சண்டை நிறைய பேலன்ஸ் இருக்கு.. ஆனா இப்போ நான் சண்டைபோடுற மூடுல இல்ல.. எல்லாம் ஒட்டுமொத்தமா சேர்த்து.. என் பரிச்சை முடிஞ்சதும்.. உங்களை வச்சி வச்சி செய்யப்போறேன்..” என்றாள் இலகுவாக.
[the_ad id=”6605″]
சிரித்த மாறன்.. ‘லாவி ஒரு ரிக்வெஸ்ட்.. வீட்டு பிரச்சனையெல்லாம் அப்பா பார்த்துப்பாங்க.. நீ இதெல்லாம் யோசிச்சிட்டு படிப்பை விட்டுடாத..” என்றான் அக்கறையாக.
‘அதெப்படி விடுவேன்..? உங்ககிட்ட போட்ட சவால்ல ஜெய்ச்சேத்தான் தீருவேன்..” என கெத்தாக சொன்னவள்.. ‘அதோட அப்பாதான் எல்லா பிரச்சனையும் சரிசெய்திட்டாரே..” என்றாள் பெருமையாக.
‘சரி.. நீ உன் ரூமுக்கு போறியா..? நான் ராஜய்யாகிட்ட கொஞ்சம் பேசனும்..” என்றான் கெஞ்சுதலாக.
‘நான் இங்கதான் இருப்பேன்.. வேண்ணா நீங்களும் அப்பாவும் வெளில போய் பேசிக்கோங்க..” என்று தன் அன்னையை அணைத்தபடி படுத்துக்கொண்டாள்.
‘லாவி.. நாலு வாய்தான் சாப்பிட்ட.. இன்னும் கொஞ்சம் சாப்பிடுடா..” என்று ராஜன் அழைக்க..
‘அப்பா வயிறு ரொம்ப வலிக்குது.. இப்படி அம்மாவை கட்டிப்பிடிச்சிட்டு கொஞ்சநேரம் படுத்தா எல்லா வலியும் போய்டும்.. அதுக்கப்புறம் நானே சாப்டுக்குவேன்.. நீங்க போய் உங்க மீட்டிங்கை கன்டினியூவ் பண்ணுங்க..” என்றாள்.
ராஜனும் மாறனும் எழவும்.. ‘அப்பா.. நீங்க இன்னும் சாப்பிடலன்னு உங்க முகமே சொல்லுது.. முதல்ல இரண்டுபேரும் சாப்பிடுங்க.. அப்புறம் மணிக்கணக்கா உங்க ராணுவ ரகசியத்தை பேசுங்க.. இல்லன்னா உங்களை பேசவிடாம தொல்லை பண்ணுவேன்..” என்றாள் சிரிப்போடு.
‘சரிங்க பெரிய மனுசி..” என்று சொன்ன மாறனோடு.. ராஜனும் வெளியே வந்தார்.
நந்தினிக்கு அழைத்தவன்.. ‘ராஜி.. நீ சாப்பிடு.. நான் வரதுக்கு கொஞ்சம் லேட்டாகும்..” என்றான்.
‘நீ எப்போவேண்ணா வா எனக்கு பசிக்கல.. நான் என் அம்மும்மாவை ரசிச்சிட்டிருக்கேன்.. என்னை டிஸ்டர்ப் பண்ணாத..” என்று உற்சாகத்தோடு சொல்லி கட் செய்தாள் நந்தினி.
‘என்ன சொன்னா என் பெரியபொண்ணு…?” என்றார் ஆவலாக.
நந்தினி சொன்னதை சொன்னதும் ராஜனின் முகமும் மலர்ந்தது.. ‘இப்ப நான் போனேன்னா எனக்கு சோறு கூட போடுவாளா தெரியாது.. இப்போதைக்கு என் கொழுந்தியா பேச்சை கேட்டுக்கிறதுதான் வயித்துக்கு நல்லதுன்னு நினைக்கிறேன்..” என்றான் சிரிப்போடு.
மாறன் சாப்பிட சம்மதித்ததில் ஆச்சர்யமடைந்த ராஜன்.. ‘எத்தனை முறை தேவி உன்னை சாப்பிட சொல்லியிருப்பா..? ஒருமுறையாவது இங்க சாப்டுருக்கியா..? இப்போ லாவண்யா சொன்னதும் சாப்பிடறங்கிறல்ல..? அந்த பயம் இருக்கட்டும்..” என்றார் தன் இளைய மகளின் பெருமையில்.
இன்றும் தாம் சென்றுவிட்டால்.. தேவியின் கவலையில் ராஜன் சாப்பிடாமல் இருந்துவிடுவார் என்பதற்காகவே சாப்பிட முடிவெடுத்தான். அதோடு லாவண்யா சாப்பிட சொன்னபின்பும் சாப்பிடாமல் சென்றால்.. தற்போதிருக்கும் மனநிலையில் மிகவும் வருந்துவாள்.. என அச்சிறுபிள்ளையின் மனதை அறிந்தவனாய் சாப்பிட அமர்ந்தான்.
இருவரும் சாப்பிட்டதும்.. ‘தேவிம்மாக்கு என்னாச்சி ராஜய்யா..?” என்றான்.
தேவியின் மனநிலையை வேதனையோடு சொன்ன ராஜன்.. ‘எத்தனை ஜென்ம புன்னியமோ தேவி எனக்கு மனைவியா கிடைச்சது..” என்றார் கலங்கிய கண்களோடு.
‘உண்மைதான் ராஜய்யா.. அத்தை இங்க வராங்கன்னதும் தேவிம்மாவை நினைச்சிதான் நான் ரொம்ப பயந்தேன்.. அவங்க இந்தளவுக்கு உங்களை புரிஞ்சி நடந்துப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்ல..” என்றான் மெச்சுதலாக.
அமுதாவை காதலித்தது.. பிரிவில் வாடியது.. தேவியோடு திருமணம்.. ராஜநந்தினியின் வருகை.. தன்னால் அமுதா அடைந்த துன்பங்கள்.. தற்போது அமுதாவோடு நடந்த கல்யாணம்.. அதனால் தேவிக்கு ஏற்பட்ட மனஅழுத்தம்.. என எண்ணங்கள் வலம்வர..
‘ம்ம்..” என பெருமூச்சிழுத்து.. ‘என்னனவோ நடந்திடுச்சி.. என்னை உயிருக்குயிரா நேசிக்கிற இரண்டு பேருக்குமே நிம்மதியில்லாம செய்திட்டேன்..” என்றார் வருந்திய குரலில்.
‘ராஜய்யா.. உங்க இடத்தில வேற யாராவது இருந்திருந்தா இப்படி எல்லார் முன்னாடியும் கடந்த காலத்தை ஒத்துக்குவாங்களா தெரியாது.. உண்மையாவே நீங்க கிரேட்தான்..” என்றான் பெருமையாக.
‘ஒத்துக்கிட்டா மட்டும் எல்லாம் சரியாகிடுமா மாறா..? லாவண்யா வயித்தில இருக்கும்போது.. தேவியை கைக்குள்ள வச்சி தாங்கறதுக்கு நான் இருந்தேன்.. தேவியோட வளைகாப்பு.. குழந்தை காதுகுத்து.. லாவி பிறந்தநாள்.. பெரிய பொண்ணானதுன்னு எல்லா விசேசமும் ஆடம்பரத்தோடவும்.. சொந்தபந்தங்களோடவும் எவ்ளோ அமர்க்களமா நடந்துச்சி..?
ஆனா.. அம்மு வயித்தில நந்தினி இருக்கும்போதுலயிருந்து.. உங்க கல்யாணம் வரைக்கும்.. என் அம்மு பக்கத்தில நான் எதுக்கும் நிக்கலயே.. எப்படியெல்லாம் தனியா கஷ்டப்பட்டிருப்பா..?” என கண்ணீர் வடித்து..
‘என் பாட்டிக்கப்புறம் எனக்கு யார் இருக்கான்னு ரொம்ப பயப்படுவா.. அமுதா பயந்த மாதிரியேதான அவ வாழ்க்கை ஆகிடுச்சி..?” என்றார் மிகுந்த வேதனையோடு.
கனத்த மனத்துடன் கேட்டுக்கொண்டிருந்த மாறன்.. ‘நடக்கக்கூடாதது நடந்திடுச்சிதான்.. அதையே நினைச்சி நீங்க வருத்தப்படக் கூடாதுன்னுதான யாருமே செய்யத் துணியாததை தேவிம்மா செய்திருக்காங்க..? தேவிம்மாக்காகவாவது நீங்க பழசை நினைச்சி இனிமே வருந்தக்கூடாது..“ என ஆறுதல் சொன்னவன்..
‘ஆனாலும் ராஜய்யா.. நீங்க சரியான காதல் மன்னன்தான் போங்க.. எப்படித்தான் இரண்டு பேரையும் ஒட்டுமொத்தமா இப்புடி கவுத்து வச்சிருக்கிங்களோ…?” என்றான் கிண்டல் கலந்த பெருமையோடு.
செல்லமாக முறைத்த ராஜன்.. ‘போடா டேய்..” என்று மாறனின் முதுகில் குத்தினார் சிறு வெக்கத்தோடு.
‘ம்ம்.. ராஜய்யாக்கு வெக்கமெல்லாம் வருது.. இனி செம பிசியாய்டுவிங்க..” என சொல்லி மீண்டும் ஒரு குத்துவாங்கினான் ராஜனிடம்.
மாறன்.. ‘எனக்கு கேக்க ஆளில்லைன்னு நினைச்சிட்டிங்களா.? இருங்க.. நீங்க என்னை அடிக்கிறிங்கன்னு என் பொண்டாட்டிகிட்டயே சொல்றேன்..” என்றான் சிறுவனாய்.
‘டேய் நீ முதல்ல கிளம்பு..” என்றார் சிரிப்போடு.
மேலும் சற்று நேரம்வரை வம்பிளுத்து ராஜனை இயல்பாக்கி.. பிறகு மாறன் கிளம்பியிருக்க.. அமைதியாகவே அமர்ந்திருந்தார் இரவு ஏழு மணிவரை. தன் அன்னையின் அறையிலிருந்து எழுந்து வந்த லாவன்யா.. ‘மனோஜ் எவ்ளோ நேரமா டி.வி. பார்த்திட்டிருக்க..?” என்றாள்.
மனோஜ் திருதிருவென விழிக்க.. ‘ஸ்கூல்ல இருந்து வந்ததிலிருந்தா..?” என முறைத்தாள். அவன் ஆம் என்பதுபோல் தலையாட்ட..
‘சரசக்கா.. டிபன் ரெடின்னா எடுத்திட்டு வாங்க..”என்று குரல்கொடுத்து..
‘மனோஜ்.. போய் யூனிபார்ம் சேன்ஜ் பண்ணிட்டு வா..” என மிரட்டினாள். அவள் சொன்னதுபோல செய்தான் மனோஜ். இவையனைத்தும் ராஜன் பார்த்துக் கொண்டிருந்தார் பெருமையோடு.
‘அப்பா எனக்கு பசிக்குது நான் சாப்பிடறேன்.. நீங்க இவனுக்கு ஊட்டுங்க.. இன்னும் கொஞ்ச நேரம் போனா படிக்கிறதுக்கு தூங்கறது பெட்டர்ன்னு சாப்பிடமையே தூங்கிடுவான்..” என தன் தந்தைக்கு கட்டளையிட்டு.. தானும் சாப்பிட்டாள்.
மனோஜ் சாப்பிட்டு முடித்திருக்க.. ‘டைரி எடுத்து வை.. ஹோம்வொர்க் என்னன்னு பார்க்கலாம்..” என்றபடி தானும் தனது புத்தகத்தை எடுத்துவந்து அமர்ந்தாள். பிறகு மனோஜிற்கு சொல்லி கொடுத்தபடியே.. அவளும் எதையோ எழுதி பார்த்துக்கொண்டிருந்தாள். இரவு எட்டு மணியாகியிருக்க..
சரசு பாலோடு வரவும்.. ‘மீதியை காலைல படிச்சிக்கலாம்.. பால் குடிச்சிட்டு போய் படு..” என்றாள் கனிவோடு.
பால் குடித்தவன்.. ‘அம்மா..” என்று கேட்க.. ‘அம்மாக்கு காய்ச்சல் நான் வரேன்..” என எழுந்தவள்.. மனோஜின் அறைக்கு சென்று அவனுக்கு படுக்கை சரிசெய்து.. அவன் தூங்கும் வரை தட்டிகொடுத்து மனோஜ் உறங்கிய பிறகு.. விடிவிளக்கை போட்டு வந்தவள் மீண்டும் படிக்க அமர்ந்தாள்.
சரியாக ஒன்பது மணியானதும்.. ‘அப்பா.. அம்மாவை எழுப்பலாமா..? நீங்க இரண்டுபேரும் இன்னும் சாப்பிடலயே..” என்றாள்.
‘இல்லடா.. அம்மா காலைலதான் எழுந்திரிப்பாங்க.. நான் அப்புறம் சாப்டுக்கிறேன்.. நீ போய் படுடா..” என்றார்.
‘படிக்கிற வேலையிருக்குப்பா..” என்று படிக்க அமர்ந்தாள். பத்து மணியாகியிருக்க..
‘லாவி டையர்டா தெரியற.. உடம்பு சரியானதும் படிச்சிக்கலாம்.. போய் படுடா..” என்றார் வாஞ்சையாக.
‘சரி நீங்க சாப்பிடுங்க.. நான் அதுவரைக்கும் படிக்கிறேன்..” என்று டைனிங் டேபிளில் ஹாட்பாக்சில் இருந்த இட்லியை எடுத்து வைக்கப்போனாள்.
‘நான் பார்த்துக்கிறேன்.. நீ படி..” என்று சாப்பிட்டவர்..
‘லாவி.. போய் படுடா..” என்றார் மீண்டும். எழுந்தவள்.. மனோஜின் அறைக்கு சென்று பார்வையிட்டு.. பிறகுதான் தனதறைக்குள் சென்றாள்.
மாந்தோப்பு பங்களாவில்தான் ராஜன் தன் கணக்கு வழக்குகளை சரிபார்ப்பது.. காலையில் ஒன்பதோ.. இல்லை பத்தோ என தனது பணிக்கு தோதான நேரத்தில் வீட்டைவிட்டு கிளம்புபவர்.. இரவு பத்து மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வருவார்.. அதற்குள் குழந்தைகள் தூங்கியிருப்பார்கள்..
எப்பொழுதும் லாவன்யா செருக்கோடுதான் இருப்பாள் என ராஜன் நினைத்திருக்க.. எங்கு செருக்கோடு இருக்கவேண்டும்.. எங்கு பாசத்தோடு இருக்கவேண்டும்.. எங்கு வளைந்து கொடுக்கவேண்டும்.. என அவளுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.. என தற்போதுதான் ராஜனுக்கு தெரிய..
[the_ad id=”6605″]
இச்சிறு வயதில் எத்தனை புரிதல் தன் மகளிடம்.. தன் குழந்தைகளை எப்படி செதுக்கி வளர்த்திருக்கிறாள் தன் மனையாள்.. என பிரம்மிப்பாய் உணர்ந்தார்.
சற்றுநேரம் கழித்து லாவண்யா அறைக்கு செல்ல.. கதவு சாத்தியிருந்தது ஆனால் தாழ்போடவில்லை.. லேசாய் திறந்துபார்க்கவும் நன்றாக உறங்கிகொண்டிருந்தாள். கதவை சாத்திவிட்டு தனதறைக்கு வந்தார்.
தேவியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க.. அருகில் படுத்த ராஜனின் ஒருகை.. தேவியின் இடையை மென்மையாய் வளைக்க.. சற்று நேரத்திலேயே ராஜனின் கையை விலக்கிவிட்டார் தேவி. வெகுவாய் அதிர்ந்த ராஜன் தேவியின் முகம்பார்க்க.. ஆழ்ந்த உறக்கத்தில்தான் இருந்தார். மீண்டும் ராஜன் அவ்வாறே செய்ய.. அதே சற்றுநேர இடைவெளியில்.. மீண்டும் ராஜனின் கை தூக்கத்தினூடே தேவியால் விலக்கப்பட்டது.
தாம் வெளியூர் சென்றிருக்கும் நாள்கள் தவிர.. இத்தனை வருடங்களில் இருவரும் இணையும் நாட்கள்தான் என்றில்லை.. தேவியின் மாதாந்திர நாட்களாக இருந்தாலும் சரி.. நல்லநாள்.. விரதம்.. என எந்த நாட்களாக இருந்தாலும் சரி.. ராஜனின் அன்பான அணைப்பின்றி தேவி தூங்கியதே இல்லை.. தூக்கத்தில் ராஜனின் கை விலகினாலும்.. தூக்கக்கலக்கத்தோடே ராஜனின் கையை துலாவி தானாக தன்மேல் போட்டுக்கொள்வார்.
இன்று தூக்கமாத்திரையின் உபயத்தோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோதும்.. மனைவியின் இந்த புறக்கணிப்பு கணவனால் தாளவே முடியவில்லை.. மொத்தமாய் மனமுடைந்து போனார் ராஜன். எவ்வளவு நேரம் விழித்திருந்தாரோ தெரியாது..
காலை ஆறு மணிக்கு தேவிக்கு விழிப்பு வரவும் அயர்ச்சியோடு எழுந்தமர.. தனது புடவை முந்தியின் நுனியை ராஜனின் கையில் சுற்றப்பட்டிருந்ததால்.. அதன் அசைவில் சட்டென விழித்து.. ‘தேவி..” என ஆழ்ந்து அழைத்தார்..
வழக்கமான புன்னகையோடு ராஜனை எதிர்கொண்ட தேவி.. ‘ஏங்க.. எனக்கு ஒன்னும் இல்ல.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. நைட்டெல்லாம் தூங்காம என்னையே பார்த்திட்டிருந்திங்களா..?” என தன் கணவன் குணமறிந்து கேட்க..
பதிலின்றி தேவியையே ஆழ்ந்து பார்த்திருந்தார்.. ‘ரொம்ப டையர்டா தெரியிறிங்க.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்க.. லாவி படிக்க எழுந்திரிச்சிருப்பா.. நான் போய் டீ வைக்கனும்..” என்றார். ராஜன் விடைகொடுக்காமல் நகரமாட்டேன் என்பதுபோல் அங்கேயே நின்றிருந்தார். இதுவும் தேவியின் பழக்கங்களில் ஒன்றுதான்.
‘பசங்ளை ஸ்கூல்க்கு அனுப்பிட்டு வா.. நான் கொஞ்சநேரம் படுக்குறேன்..” என்றார் தன்மையாக. பிறகுதான் குளிக்கப்போனார்.
மனோஜ் லாவண்யாவை பள்ளிக்கு அனுப்பிய பிறகு.. தனதறைக்குள் வந்த தேவி..
‘ஏங்க.. அதுக்குள்ள குளிச்சிட்டிங்களா..? தூங்கவே இல்லையா நீங்க..? பசங்க உங்ககிட்ட சொல்லிட்டு போறதுக்கு கேட்டாங்க.. நான்தான் நீங்க தூங்கிட்டிருக்கிங்கன்னு சொல்லிட்டேன்.. இருங்க டீ எடுத்திட்டு வரேன்..” என்று தேவி திரும்ப..
‘தேவி..” என ஆழ்ந்து அழைத்த ராஜனின் இருகரங்களும் என்னுள் வா.. என்பதுபோல் விரிந்திருக்க.. ராஜனின் முகம் அவ்வளவு வேதனையை காட்டியது.