அத்தியாயம் – 22 –2
‘ஏங்க.. என்னாச்சி..?” என தேவி பதற..
தேவியின் ஒரு நொடி தாமதத்திற்க்கே.. ‘வரமாட்டியா..?” என ஏக்கத்தோடு கேட்ட ராஜனின் குரலோடு சேர்த்து தற்போது கண்களும் கலங்கியிருக்க.. அடுத்த நொடி தேவியின் அணைப்பில் ராஜன் இருந்தார்.
தன் கைகளை தளர கீழிறக்கியபடி பத்து நிமிடங்களுக்குமேல்.. மனைவியின் அணைப்பில் தன் தவிப்பை போக்கிக்கொண்டிருந்தார். தானாக விலகிய தேவி..
‘என்ன ஆச்சுங்க..?” என பதறியவாறு கேட்கவும்..
‘எனக்கு ஒன்னுமில்ல.. நீதான்..” என்றார் குரலிறங்கியவராய்.
‘நான் என்ன..?” என யோசித்து.. ‘ஒரே ஒரு மாத்திரைக்கா இப்படி பயப்படுறிங்க..? இந்த அழகனை விட்டுகொடுக்க.. ஒரு மனதிடம் வேணாமா..?” என கிண்டலாய் கேட்டு நிறைந்த பார்வை பார்த்தார் ராஜனை.
‘அதுவும்தான்.. இன்னொன்னும்..” என ராஜன் தடுமாற..
‘எங்கண்ணனுங்க பேசினதை யோசிச்சிட்டிருக்கிங்களா..?” என தேவி கேட்க.. அதற்கும் இல்லை என்பதை போல் ராஜன் தலையாட்ட..
‘வேற என்ன..? அமுதாக்கா எதாவது சொன்னாங்களா.?” என்றார் தவிப்பாய்.
‘நான் வராமயே தூங்கிட்ட..” என்றார் ஏமார்ந்த குரலில்..
[the_ad id=”6605″]
செல்லமாய் முறைத்த தேவி.. ‘தூக்க மாத்திரைக்கு கூட புருசன் வரலைன்னு தெரியுமா..? நான் பயந்தே போய்ட்டேன் போங்க..” என்றார் சிறு கோபத்தோடு.
பிறகு நியாபகம் வந்தவராய்.. ‘ஆமா.. நீங்க வந்ததுக்கப்புறம் உங்ககிட்ட பேசிட்டுதான தூங்கினேன்..? அப்போ வேற என்னவோ யோசிச்சிட்டிருக்கிங்க..” என சந்தேகமாய் ராஜனை பார்த்தார்.
அமைதியாகவே ராஜன் நிற்க.. ‘இங்க வாங்க..” என கட்டிலில் அமர்த்தி..
‘என்னதான் உங்க பிரச்சனை..? என்னை நம்பி எதையுமே சொல்லமாட்டிங்களா..?” என தேவி ஏமார்ந்த குரலில் கேட்க..
‘அமுதா விசயத்தை தவிர நான் உன்கிட்ட எதையுமே மறைச்சதில்ல தேவி.. அதுவுமே நீ வருத்தப்படுவன்னுதான்.. உன் நிம்மதிக்காகத்தான்..” என்றார் வருத்தத்தோடு.
‘நான் பக்கத்தில இருந்தும் என் அணைப்பில்லாமையே தூங்கிட்ட.” என்றும் தூக்கத்தில் தேவி செய்ததையும் வேதனையோடு ராஜன் சொல்ல..
‘நானா அப்படி செய்தேன்..?” என தேவி அதிர்ச்சியோடு பார்க்க..
‘தப்பெல்லாம் நான்தான்.. ஆனாலும் உன் ஒதுக்கத்தை என்னால தாங்கமுடியல..” என்றார் வேதனையாக.
‘எனக்கு தெரிஞ்சி நான் பண்ணல.. மனசுல இருக்கிற வேதனையை தூக்கத்தில என்னையறியாம காமிச்சிட்டேன் போல..” என்றார் முகம் திரும்பி.
தேவியின் முகத்தை தன்புறம் திருப்பி ஆழ்ந்து பார்த்த ராஜன்.. ‘அமுதாவை கைவிடுவேன்னும் நான் நினைச்சதில்ல.. உன்னை கல்யாணம் செய்ததுக்கப்புறம் உனக்கு இப்படி ஒரு தீராத வேதனையை கொடுப்பேன்னும் நான் நினைச்சதில்ல..” என்று கண்கலங்கி..
‘நிறைய வேதனை உனக்கு கொடுத்திட்டேன்தான்.. அதையும் தாண்டி ஏதோ ஒன்னு உன்னை அழுத்திட்டிருக்கு.. சொல்லமாட்டியா என்கிட்ட..?” என்றார் ஏக்கமாக.
சற்று நேரம் மௌனம் காத்த தேவி.. ‘நந்தினி இந்த ஊருக்கு வந்து கிட்டதட்ட இரண்டு வருசம் பக்கம் ஆகப்போகுது.. நந்தினியைப் பார்த்ததுமே உங்கபொண்ணுன்னு நீங்க கண்டுபிடிச்சிருக்கிங்க.. அதனாலதான் உங்களுக்கு நெஞ்சுவலியே வந்திருக்கு.. ஊரறிய நந்தினியை உங்க பொண்ணா ஏத்துக்கனும்னு அப்பவே முடிவு செய்திருப்பிங்கதான..? இவ்ளோ பெரிய விசயம்.. என்கிட்ட சொல்லனும்னு உங்களுக்கு தோணவே இல்லையா..?” என வலியோடு கேட்டு..
‘அமுதாக்கா மூனுமாசமா இங்கதான் இருந்திருக்காங்க.. மூனுமாசமாவே ஏன் ஒரு மாதிரியா இருக்கிங்கன்னு.. நான் கேட்டுட்டேதான இருந்தேன்.? சரியோ.. தப்போ.. அமுதாக்கா பத்தி என்கிட்ட சொல்லனும்னு உங்களுக்கு ஏன் தோணாம போச்சி..?” என்றார் கோபமாக.
‘என் அன்பைத்தவிர வேறு எதையும் எதிர்பார்க்காம என்கூட குடும்பம் நடத்துற உன்கிட்ட.. அமுதா விசயத்தை சொல்ல எனக்கு தைரியம் பத்தல தேவி.. “ என்றார் குற்ற உணர்வோடு.
‘ஊரே கூடியிருக்கும்போது சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கு.. ஆனா என்கிட்ட தனியா சொல்ல தைரியம் பத்தாது.. அப்போ உங்க கடந்த காலம் ஊரோட சேர்த்து.. எனக்கும் பத்தோட பதினொன்னா தெரிஞ்சா போதும்னு நினைச்சிருக்கிங்க.. அவ்வளவுதானா நான் உங்களுக்கு..?” என்றார் தளர்வாக.
‘அப்படியில்ல தேவி..” என பதறி தேவியை அணைக்க.. தன்மையாகவே விலகிவிட்டார் ராஜனிடமிருந்து.
மனைவியை கட்டாயப்படுத்தாமல் விலகி நின்ற ராஜன்.. ‘நந்தினி என் பொண்ணுன்னு தெரிஞ்சதுக்கப்புறம்.. அமுதா எப்படியெல்லாம் வாழ்க்கையோட தனியா போராடியிருப்பான்னு வேதனையடைஞ்சது.. எப்படியாவது அவளை இந்த ஊருக்கு வரவச்சி பொருளாதார அடிப்படையில அவளுக்கு உதவி செய்து.. ஒரு பாதுகாப்பா அவளுக்கு இருக்கலாம்னு நான் தவிச்சது.. இதெல்லாமும் உண்மைதான்..
அன்னைக்கு கல்யாணத்தில அவளுக்கு செயின் போட்டதுக்கு காரணமும்.. நந்தினி எனக்கு பிறந்தவன்னு ஊருக்கு தெரியவைக்கனும்னுதானே தவிர.. அப்போ வரைக்கும் அமுதாவை மறுபடியும் என் வாழ்க்கைக்குள்ள இழுக்கனும்னு நான் நினைக்கவேயில்ல தேவி..
ஆனா ஹாஸ்பிட்டல்ல உன்கிட்ட அமுதா சொன்ன வார்த்தைகள்.. என்னை ரொம்ப பாதிச்சிருச்சி.. பில் கட்டறதுக்காக வெளியே வந்தப்போ அமுதாகிட்ட பேசனும்னு மாறன்கிட்ட சொல்லி வெயிட் பண்ணசொன்னேன்..
குழந்தை பிறந்ததுக்கு அப்புறமாவது ஏண்டி வந்து என்னை பார்க்கலன்னு கேட்டேன்.. என்கிட்ட பேசறதுக்கென்ன.? என்னை பார்க்ககூட அவ தயாரா இல்ல.. ரொம்ப கெஞ்சி கேட்டதுக்கு அப்புறம்தான்.. பதில் சொல்லவே ஆரம்பிச்சா..” என ஆரம்பித்து..
அமுதா ஊரைவிட்டு போனபிறகு.. தான் ஊரில் இல்லாதது.. நளினி அப்பாவிடம் தொலைபேசி மூலமாக நான்கு வருடமாக தன்னை கண்காணித்து தனக்காக காத்திருந்தது.. பிறகு தான் ஊருக்கு வந்த இரண்டு மாத்திலேயே தனக்கு கல்யாணம் ஆனது.. தனது திருமணமான காரணத்தால் மனமுடைந்த அமுதா.. வேதனையோடு தன்னை விலகி வாழ முடிவெடுத்தது வரை.. வேதனையோடு சொல்லிமுடித்தவர்..
தன்னை மறக்க முடியாமல் உணவு.. உடை என அனைத்திலும் தன்னை மாற்றிக்கொண்டதை அன்று அமுதாவீட்டிற்கு சென்றபோது மாறன் மூலமாக தாம் அறிந்துகொண்டது.. என அனைத்தும் சொல்லி முடித்து..
‘இதெல்லாம் தெரிஞ்சதுக்கப்புறம் அவளை அப்படியே விட எனக்கு மனசுவரல..
அமுதா மேல எந்த தப்பும் இல்லங்கிறதுக்காக.. உனக்கும் எவ்வளவு வேதனையைத்தான் தரது..? அதனால கூட சில விசயங்களை உன்கிட்ட சொல்லாம விட்ருப்பேன்.. அதுக்காக நான் உனக்கு அவ்ளோதானான்னு கேப்பியா..? நீ எனக்கு எவ்ளோ முக்கியம்னு உனக்கு தெரியாதா..? இதுக்கு நீ என்னை கொன்னுருக்கலாம் தேவி..” என்றார் மிகுந்த வேதனையோடு.
‘உங்க நிம்மதிக்காக பார்த்து பார்த்து செஞ்சிட்டிருக்கேன்.. கொன்னுருக்கலாம்னு என்ன பேச்சிது..? நீங்க சாகறதுக்கா இத்தனையும்..? அப்போ போய் எதாவது விசம் வாங்கிட்டு வாங்க.. குடிச்சிட்டு எல்லாருமே செத்து தொலையலாம்..” என்று கோபத்தோடு கத்தினாலும் தேவியின் கண்கள் குளமானது.
[the_ad id=”6605″]
இத்தனை வருடமாய் எந்த சூழலிலும்.. தாம் பார்த்திராத மனைவியின் கோபத்தில் திகைத்து நின்றார் ராஜன்.
தேவியின் கோபக்குரல் கேட்டு கலங்கிய தண்டபானி.. ‘தேவிம்மா..” என பதற..
தன்னை ஆசுவாசப்படுத்தியவர்.. ‘தோ வரேன் மாமா..” என்றார் உள்ளிருந்தபடியே.
தன்னை சமன்படுத்தி சற்று நேரம் கழித்து தேவி வெளியே வரவும்.. ‘என்ன சொல்லாத்தா சொல்லிட்ட..? உன் வாய்லயிருந்து இப்படி ஒரு வார்த்தை வரலாமா..? இதைக் கேக்கத்தான் இந்த கிழவன் இன்னும் உசுரோட இருக்கேனா..?” என தன் தலையில் தன்னைத்தானே அடித்துக்கொண்டு கண்கலங்கினார் தண்டபானி.
தண்டபானியின் கையை தடுத்த தேவி.. ‘ஏதோ கோபத்தில கத்திட்டேன்.. உங்களை விட்டுட்டு எங்க போய்டப்போறேன்..? அழாதிங்க மாமா..” என தேற்றினார்.
மாடியில் துணிதுவைத்து முடித்து.. பாத்திரம் கழுவ வந்த சரசு.. ‘அம்மா.. மணி பத்தாகுது.. யாரும் இன்னும் சாப்பிடலங்களா..?” என்று கவலையாய் கேட்க..
‘அச்சோ..” என பதறி.. முதலில் தண்டபானிக்கு இட்லியை கொண்டுவந்த தேவி..
‘முதல்ல சாப்பிடுங்க மாமா..” என்று அக்கறையோடு சொல்ல..
தண்டபானிக்கு மனமே ஆறவில்லை.. ‘எல்லாத்துக்கும் நான்தான காரணம்.. முதல்ல என்னை கொன்னுடுங்காத்தா..” என கண்ணீர் வடித்தார்.
‘வீட்டுல பெரியவங்களை கவனிக்கிற கொடுப்பினை.. எல்லாருக்கும் கிடைச்சிடாதுன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க.. என்னை பெத்தபிள்ளையாட்டம் பார்த்துக்கிற உங்களுக்கு.. இதுவரைக்கும் நல்லமருமகளாத்தான் இருக்கேன்னு நினைக்கிறேன்.. என்கிட்ட நீங்க இப்படி பேசலாமா..?” என்றார் தேவி.
குற்றவுணர்வோடு அமைதியாக கண்ணீர் விட்டார் தண்டபானி.
‘எழெட்டு தலைமுறையா.. எல்லாரையும் வாழவச்ச குடும்பம் உன் புருசன் குடும்பம்.. அந்த குடும்பத்தில வாக்கப்படுறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கனும்னு எங்கம்மா என் கல்யாணத்துல சொன்னது.. எனக்கு இப்போ சொல்றமாதிரி இருக்கு..
இதுவரைக்கும் புன்னியத்தை மட்டுமே சம்பாதிச்ச நம்ம பரம்பரை.. புதுசா பாவத்தை சேர்த்துக்க கூடாதில்ல..? நம்ம குடும்பத்துக்கு களங்கம் வராம பார்த்துக்க வேண்டிய கடமையும் என்னோடதுதான..?
அதோட.. அமுதாக்கா என்னை விட எந்த விதத்திலயும் குறைஞ்சவங்க இல்ல.. முழுமனசோடதான் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன்.. நான் வருத்தத்தில இருக்கேன்னு நினைச்சிகிட்டு உங்க மகன்தான் அவரை வருத்திக்கிறார்.. அதுபத்தி பேசப்போய்தான் கொஞ்சம் டென்சனாய்ட்டேன்.. மத்தபடி என் புருசனோட நிம்மதியை திருப்பி தந்திருக்கோம்ங்கிற சந்தோசம் எனக்கிருக்கு.. நீங்க வருத்தப்படாதிங்க மாமா.. இனி எதுவும் தப்பா நடக்காது.. எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகிடும்..” என தேற்றினார்.
நிம்மதியடைந்த தண்டபானி… தேவியிடம் இட்லியை வாங்கிக்கொண்டு..
‘நான் சாப்டுக்கிறேன்.. முதல்ல நீயும் உன் புருசனும் போய் சாப்பிடுங்க.. அவன் மாத்திரை போடனுமில்ல..?” என்றார் அக்கறையாக.
‘சரிங்க மாமா..” என விடைபெற்று தனதறைக்குள் வரவும்.. கட்டிலில் கண்மூடி படுத்திருந்த கணவனைப் பார்க்க பாவமாக இருந்தது.. ச்ச.. முதல்ல இவரை சாப்பிட வச்சிட்டாவது பேசியிருக்கலாம்.. இன்னும் டீ கூட குடிக்கலயே.. என்ற வருத்தத்தோடே..
‘ஏங்க.. சாப்பிடலாம் வாங்க..” என்றழைக்க..
[the_ad id=”6605″]
கண்திறந்த ராஜன் வேண்டாம் என்பதுபோல் முகம்திருப்ப.. சிரிப்பு வந்தது தேவிக்கு.. ‘என்ன இது..? சின்ன பிள்ளையாட்டம்..? மாத்திரை போடனும்ல..? சாப்பிடவாங்க..” என்றார் கனிவாய்.
‘அதான் எல்லாரும் சாகலாம்னு முடிவெடுத்திட்டியே.. அப்புறம் எதுக்கு மாத்திரை..?” என்றார் கோபமாக..
‘இது நல்ல பேச்சாயிருக்கு.. நானா முடிவெடுத்தேன்..? நீங்கதான உங்களை கொன்னுருக்கலாம்னு சொன்னிங்க..? எனக்கிந்த கொலை பண்ற கலையெல்லாம் தெரியாது.. ஆனாலும் உங்க ஆசையை நிறைவேத்தனுமில்ல..? அதான் விசம் வாங்கிவர சொன்னேன்..” என்றார் கிண்டலோடு.
‘அப்புறம்.. நீங்க செத்தாகூட.. உங்களை விட்டு நான் பிரியறதா இல்ல.. அதுக்காத்தான் எல்லாரும் விசம் குடிச்சிட்டு சாகலாம்னு சொன்னேன்..” என்றார் காதல் கலந்த குரலில்.
அந்த நொடியே கோபம் போய்.. தேவியின் கணவன் என்ற கர்வம் ராஜனின் கண்களில் மிளிர்ந்தது.. ஆனாலும்.. ‘ஒன்னும் வேணாம் போடி..” என்றார் வீம்பாக.
‘உங்க சிலிர்ப்பெல்லாம் புதுசா தாலிகட்டினவங்ககிட்ட காட்டிக்கோங்க.. தாலிய அங்ககட்டிட்டு என்னவோ என்கிட்ட புது மாப்பிள்ளையாட்டமா..? ஆளைப்பாரு.. எனக்கு நீங்க பழைய மாப்பிள்ளைதான்.. சும்மா சிலுத்துக்காம வாங்க.. எனக்கு பசிக்குது..” என்று குரலில் கோபத்தோடும்.. கண்களில் காதலோடும் தேவி சொல்ல..
இளைஞனின் வேகத்தோடு எழுந்த ராஜன்.. தேவியை அணைத்துக்கொண்டு..
‘இரண்டு பேருக்குமே நான் பழைய மாப்பிள்ளைதான்.. ஆனாலும் என்னை பந்தாடுறிங்கடி.. முடியல என்னால..” என்று ராஜன் சலிப்போடு சொன்னாலும்.. குரல் பெருமையோடு வெளிவந்தது.
‘யாரு..? நாங்க உங்களை பந்தாடுறோமா..? அங்க ஒரு கோல்.. இங்க ஒரு கோல்ன்னு.. பாரபட்சம் பார்க்காம விளையாடுறது நீங்க.. புருசனை ஜெயிக்கவச்சி பாக்கனும்ங்கிறதுக்காக பந்தை திருப்பியடிக்காம இருக்கோம்.. இதுல எங்களை சொல்றிங்களா..? எல்லாம் எங்க நேரம்..” என்று தேவி செல்லமாக முறைக்க..
மனைவியின் உவமைப்பேச்சில் ஆச்சர்யமடைந்த ராஜன்.. பிரம்மிப்பாய் தேவியையே பார்த்திருக்க.. ‘முதல்ல சாப்பிட வாங்க.. மத்தது அப்புறம் பேசிக்கலாம்.. நான் நேத்து மதியம் சாப்பிட்டது.. ரொம்ப பசிக்குது..” என்றார்.
ராஜனுக்கு எடுத்து வைத்து.. பிறகு மாமனார் சாப்பிடுகிறாரா என பார்த்து.. தானும் அமர்ந்தார் சாப்பிட.. இருவரும் சாப்பிட்டு முடிக்கவும்..
குமார் வந்து நின்றான்.. ‘என்ன குமார் வாங்கிகிட்டாங்களா..?” என தேவி கேட்க..
‘அம்மா.. அவங்க முன்னாடி நிக்கவே எனக்கு பயமா இருக்கு.. இனிமே நான் அங்க போக மாட்டேன்..” என்றான் பதறியபடி.
சிரித்த தேவி.. ‘என்னாச்சி..?” என்றார்.
‘ஒழுங்கா இதெல்லாம் எடுத்திட்டு ஓடிடு.. உங்கய்யாவை பார்த்துக்கிறதுதான் என் வேலையா..? இனிமே அப்படி இப்படின்னுகிட்டு இந்த வீட்டுப்பக்கம் ஏது வந்த.. அவ்ளோதான் நீன்னு.. கெட்ட வார்த்தை மட்டும்தான் பேசல.. மத்த எல்லாமும் சொல்லி திட்டிட்டாங்க..
நல்லவேளை.. அந்தநேரம் பார்த்து நம்ம சின்னைய்யா மகள்.. ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி.. அவங்கம்மாவை பார்த்திட்டு போலாம்னு வந்திருப்பாங்க போல.. அவங்களால இன்னைக்கு தப்பிச்சேன்.. அவங்கதான் மாத்திரை டப்பாவையும் வாங்கி உள்ள வச்சாங்க..” என்றான் தப்பித்த பாவனையோடு.
‘அவங்க உனக்கு இன்னொரு அம்மா மாதிரி.. கொஞ்ச நாளைக்கு திட்டு வாங்கிக்கோ.. அப்புறம் எல்லாம் சரியாகிடும்..” என ஆறுதல் சொல்லி.. அன்று தேதி ஐந்தென்பதால்.. சம்பளப்பணத்தை கொடுத்தார் குமாரிடம்.
‘அம்மா பணம் அதிகமா இருக்கு..” என்று குமார் சொல்ல..
‘ம்ம்.. இனி உனக்கு இரண்டு வீட்லயும் வேலையிருக்குல்ல..? அதான் உன் சம்பளத்தை டபுளாக்கிட்டேன்..” என்றார் தேவி.
‘அம்மா எனக்கு சம்பளம் கூட அதிகம் வேணாம்.. அங்க போக எனக்கு பயமா இருக்கு..” என்றான் உண்மையான பயத்தோடு.
‘அங்க போகலன்னா.. உனக்கு இங்கயும் வேலையிருக்காது..” என்று தேவி சற்று குரலுயர்த்தி சொல்ல.. குமார் மேலும் பயந்து நிற்க..
‘தேவிம்மா..” என்ற வாஞ்சையான குரலில் தன் மனைவியை அமைதிப்படுத்தி..
‘குமார் நீ போ.. நான் என்னன்னு பார்க்கிறேன்..” என ராஜன் சொன்னதுதான்..- விட்டால் போதுமென ஓடிவிட்டான் குமார்.
‘குமார் அமுதாகிட்ட திட்டு வாங்கிட்டு வரான்னு மட்டும் தெரியுது.. ஏதோ மாத்திரை டப்பாங்கிறான்.. அவனை எதுக்கு அங்க அனுப்பி வச்ச..?” என்று ராஜன் புரியாமல் கேட்கவும்..
‘சரசு.. மீதி வேலையை சாயங்காலம் பார்த்துக்கலாம்.. நீ கிளம்பு..” என்று பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த சரசிற்கு கட்டளையிட.. சரசு சென்றபின்..
‘எமர்ஜன்சிக்கு ஆகட்டுமேன்னு உங்க மாத்திரை கொஞ்சம் கொடுத்தனுப்பினேன்..” என தடுமாற்றமாய் சொன்னார் தேவி.
‘ஏய்.. எதுக்குடா உன்னை இப்படி வருத்திக்கிற..?” என்று பதறியவர்..
‘என்ன வரம் வாங்கி வந்தாளோ தெரியல.. சின்னவயசில இருந்து இப்போ வரைக்கும்.. தனிமையும் வேதனையும் மட்டும்தான் அவளுக்கு சொந்தமா இருந்திருக்கு.. அப்போ இளரத்தம்.. யார் உதவியும் இல்லாம எல்லாத்தையும் கடந்திட்டா.. ஆனா இனிமேல்..” என வருந்தி தேவியின் முகம் பார்த்து..
‘எனக்கு முன்னாடி அவ செத்தான்னா.. என் பொண்டாட்டியாத்தான் சாகனும்.. அவளுக்கான சாங்கியத்தையாவது புருசன்ங்கிற உரிமையோட நான் செய்யனும்..
ஒரு வேளை அவளுக்கு முன்னாடி நான் போய்ட்டேன்னா.. என்னை காதலிச்ச பாவத்துக்கு.. ராஜனோட இரண்டாவது பொண்டாட்டிங்கிற பேராவது அவளுக்கு மிஞ்சும்..” என ராஜன் கண்கலங்கவும்..
ராஜனின் வாயை பொத்திய தேவி.. ‘இப்போதான இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு சொன்னேன்..?” என தானும் கலங்கியபடியே கடிந்தார்.
தேவியின் கையை விலக்கிய ராஜன்.. ‘பெத்த பிள்ளைகிட்ட கூட அவ வேதனையை காட்டிக்காம இருந்திருக்கா.. உள்ளுக்குள்ள அடக்கிவச்சிருக்கிற அவளோட துக்கத்தை பகிர்ந்துக்க நல்ல துணையா இருக்கனும்.. இனிவரும் காலங்களிலாவது சந்தோசமில்லன்னாலும் நிம்மதியாவாவது அவளை வாழவைக்கனும்..
இதுக்காக மட்டும்தான் நான் அவளை கல்யாணம் செய்திருக்கேன்.. ஆனா நீ.. மாத்திரையை கொடுத்தனுப்புற.. உன்னை நீயே வருத்திக்கிற.. ரொம்ப வேதனையா இருக்கு தேவி..” என்றார் வேதனையோடு கண்மூடியபடி.
ராஜன் முகம் வேதனையிலிருக்க.. தேவியின் முகம் சிரிப்பை தத்தெடுத்தது.. தன் கணவனையே பார்த்திருந்தார் ஐந்து நிமிடம் வரை.. பிறகுதான் மனைவியின் பார்வையை உணர்ந்த ராஜன்..
‘என்ன சிரிப்பு வேண்டியிருக்கு..?” என்றார் பொய்க்கோபமாக.
‘நான் மாத்திரை கொடுத்தனுப்புனது எவ்வளவு சரியான விசயம்ன்னு போகப்போக நீங்களே தெரிஞ்சுக்குவிங்க..” என்றார் மீண்டும் சிரிப்போடே.
ராஜன் புரியாமல் பார்க்க.. ‘இல்ல.. அமுதாக்காவை கரெக்ட் பண்றதுக்குள்ள நீங்க இன்னும் எத்தனை மயக்கம் போட வேண்டியிருக்குமோ..? அங்க மாத்திரை இருந்தா எமர்ஜன்சிக்கு ஆகும்ல..?” என்றார் கிண்டலாக.
ராஜன் தேவியை முறைக்க.. ‘உங்கமேல இருக்கிற அக்கறையிலதான பண்றேன்.. அதுக்கும் முறைக்கிறிங்க..” என கோபிப்பதாய் பாவனை செய்ய.
‘இதுமாதிரியெல்லாம் செய்து என்னை கஷ்ட்டப்படுத்தாத தேவி..” என்றார் தவிப்போடு..
ராஜனை ஆழ்ந்து பார்த்து.. ‘ஒருத்தருக்கு ஒன்னு தானமா கொடுத்தா.. அதை முழுமையா கொடுக்கனும்.. இல்ல கொடுக்காமலே இருந்திடனும்.. கொடுத்துக்கப்புறம் ஏன் கொடுத்தோம்னும் யோசிக்கவும் கூடாது.. கொடுத்ததை சொல்லிகாட்டவும் கூடாது. கொடுத்ததுக்கப்புறம் அந்த பொருள் மேல ஆசைப்படவும் கூடாது. இதெல்லாம் அமுதாக்கா செயல்ல காமிச்சிட்டிருக்காங்க..” என அமுதாவின் நினைவில் பெருமையாகவே சொன்னார்.
‘அவங்களை கல்யாணம் செய்துக்க சொல்லி சொன்னதே நான்தான்.. உங்க அன்புக்கு முழுத்தகுதியும் இருக்கிறவங்களோடதான் உங்களை பங்கு போட்டிருக்கேன்.. எல்லாமும் புத்திக்கு சரின்னு பட்டது செஞ்சேன்…
ஆனா.. மனசுன்னு ஒன்னு இருக்கே..” என கண்கலங்கினார்.
‘அதுகொஞ்சம் உங்களை விட்டுக்கொடுக்க முரண்டு பண்ணுது.. அமுதாக்கா உங்களை மொத்தமா தியாகம் செய்தமாதிரி என்னால முடியல.. எத்தனை திடப்படுத்தியும் பங்குதான் போட முடிஞ்சது..” என தாக்கத்தோடு சொல்லி..
சற்று நேரம் அமைதிகாத்து.. ‘இத்தனை வருசமா எனக்கு மட்டும்ன்னு இருந்திங்க.. இப்போ அப்படியில்லதான..? அதுக்கான வீம்பு உள்ளுக்குள்ள கொஞ்சமாவது இருக்கத்தான செய்யும்..? நீங்கதான் என்னை சரிசெய்யனும்.. அதைவிட்டுட்டு கையைப் போட்டேன் எடுத்துவிட்டுட்ட.. அப்படி.. இப்படின்னுகிட்டு..
ஏன்..? நான் எடுத்துவிட்டா.. அப்படித்தாண்டி போடுவேன்னு நீங்க போடவேண்டியதுதான..?” என முகம் சிவந்தவராய் எங்கோ பார்த்தபடி சொல்லிக்கொண்டிருந்தார்.
ராஜன் ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டிருக்க.. ‘நானும் இத்தனை வருசம் இருந்தமாதிரியெல்லாம் இருக்கமாட்டேன்.. அப்பப்போ கொஞ்சம் பொறாமை.. தேவையில்லாத செல்லகோபம் இப்படியெல்லாம் வெளிவரும்.. நான் எதையாவது நினைச்சி கண்கலங்கினா.. உடனே நீங்க ஒரு பக்கம்னு அழக்கூடாது.. புருசனுக்கு லட்சணமா என்னை சரிசெய்யனும்..” என அன்பு கட்டளையிட்டு..
‘அமுதாக்காக்கு மட்டும் வாழ்க்கை புதுசா ஆரம்பிக்கல.. இங்கயும்தான்..” என்றார் புதுப்பொலிவோடு.
‘தேவி.. தேவி.. தேவி..” என காதலோடு சொல்லிக்கொண்டே இறுக அணைத்திருந்தார் தன் மனைவியை.