ஒரு முடிவின் துவக்கம்..
அத்தியாயம் — 23
‘என்னம்மா.. ஸ்கூலுக்கு நேரமாகலயா..? இன்னும் ரெடியாகமா இருக்க..?” என்றார் இராமு.
‘இன்னைக்கு லீவ் போட்டுட்டேன் மாமா..” என்றவள்..
‘மாமா.. இந்தாங்க..” என்றாள் கைநிறைய பணத்தோடு.
‘இவ்ளோ பணத்தை எதுக்கும்மா என்கிட்ட கொடுக்கிற..?” என்றார் அதிர்வாய்.
‘இல்லமாமா.. என் கல்யாணத்துக்கப்புறம் நான் வாங்குற இரண்டாவது சம்பளப்பணம் இது.. போனமாச சம்பள டைம்க்கு ஐஞ்சிநாள் முன்னாடி என் கல்யாணம் நடந்துச்சி.. அப்போ நடந்த பிரச்சனையில நான் சம்பளத்தை எடுக்கவே இல்ல.. இது என்னோட இரண்டு மாச சம்பளம் பிடிங்க..” என இராமனின் கையில் திணித்தாள் நந்தினி.
‘என்னம்மா இது..? நானே எல்லா பொறுப்பையும் மாறன்கிட்ட ஒப்படைச்சிட்டு இப்போதான் நிம்மதியா இருக்கேன்..” என்றார் இராமு.
‘மாசத்தில பாதிநாள் அவர் வீட்லயே இருக்கிறதில்ல.. இடையில நமக்கு பணம் தேவைன்னா அவரை எதிர் பார்த்திட்டிருக்க முடியாதில்ல..?” என்றாள்.
மீண்டும் இராமன் ஏதோ சொல்ல வரவும்.. ‘உங்க மகன்கிட்ட மட்டும்தான் வாங்கிக்குவிங்களா..? நான் வேண்டாமா..?” என நந்தினி கோபிக்க..
மறுபேச்சின்றி பணத்தை வாங்கியவர்.. ‘சுமதி.. இதை உள்ள வை..” என்றார்.
சுமதி வாங்கவும்.. ‘மாமா.. எனக்கு கொஞ்சம் பணம் வேணும்..”
‘என்னம்மா நீ..? உனக்கு எவ்ளோ வேணுமோ எடுத்துகிட்டு கொடு..”
‘அத்தை.. ஒரு கொலுசு வாங்கனும்னா.. எவ்ளோ பணம் தேவைப்படும்.?”
‘அது.. கொலுசு சைஸ் பொருத்துதான் நந்தினி சொல்லமுடியும்..” என்றார் சுமதி.
‘அம்மும்மா கொலுசே போட்டதில்ல.. அவங்களுக்கு கொலுசு போட்டு பார்க்கனும்னு ஆசையா இருக்கு.. வரிங்களா..? நாம போய் வாங்கிட்டு வரலாம்..? எனக்கு அதெல்லாம் வாங்க தெரியாது..” என்றாள்.
சிரித்த இராமு.. ‘நந்தினிம்மா.. உன் அத்தைக்கு கடைவீதிக்கு போகறதுன்னா அவ்ளோ இஷ்ட்டம்..” என்றார்.
‘அப்போ வாங்க நாம நல்லா ஊர் சுத்தலாம்.. உங்க மகன் சாங்காலம் ஆறுமணிக்கு மேலதான் வருவாரு..” என்று சந்தோசித்து தன் மாமியாரோடு கிளம்பினாள்.
கடையில் ஒரு செட் கொலுசு எடுத்து முடிந்ததும்.. ‘நந்தினி.. நான் ஒன்னு சொல்லுவேன் கோபிச்சிக்காம கேப்பியா..?” என்றார் சுமதி.
சரி என்பதாய் நந்தினியின் தலையாட.. ‘சின்னைய்யா சம்சாரம் உன்னை பெத்த பொண்ணாட்டமா நினைக்கிறாங்க.. நீயும் அவங்களை உங்கம்மாபோல நினைக்கனும்.. அவங்களுக்கும் சேர்த்து எடுத்து கொடுக்கிறியா..?” என சுமதி கேட்கவும்.. நந்தினி தடுமாறினாள்.
[the_ad id=”6605″]
‘அவங்ககிட்ட இல்லாத பணமில்ல.. நீ எடுத்துகொடுத்தா தேவியக்காவோட சேர்த்து.. சின்னைய்யாவும் சந்தோசப்படுவார்..” என்றார்.
‘சரிங்கத்தை இன்னொன்னு எடுங்க.. உங்களுக்கும் எடுத்துக்கோங்க..” என்றாள்.
சந்தோசமடைந்த சுமதி.. ‘எனக்கு வேணாம்.. மாறன் எடுத்து கொடுத்ததே நிறைய இருக்கு..” என மறுத்து.. ‘இதே டிசைன்ல இன்னொன்னு கொடுப்பா..” என கேட்டு வாங்கிகொண்டு கிளம்பினார்கள்.
வீட்டிற்க்கு வந்ததும்.. ‘அத்தை.. காலைல செய்த சாம்பார் இருக்கு.. சாதம் மட்டும் வைக்கிறிங்களா..? நான் போய் அம்மாக்கு இதை கொடுத்துட்டு வந்திடறேன்..” என கேட்டதும் சுமதி சம்மதம் தெரிவிக்கவும்.. கூடவே தன்னிடம் இருக்கும் நைல்பாளிஷ் ஒன்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
‘அம்மும்மா..” என அழைத்தபடி நந்தினி உள்ளே செல்ல..
‘நந்துகுட்டி.. ஸ்கூல் போகலயா இன்னைக்கு..?” என்றார் சந்தோசத்துடனே..
‘கட்டடிச்சிட்டனே..” என சிறுபிள்ளையாய் சந்தோசித்தவள்.. தன் அன்னையை கட்டிக்கொண்டு.. ‘அம்மும்மா.. நான் ஒன்னு கொடுத்தா வேணாம் சொல்லாம வாங்கிக்கிறிங்களா..? எனக்கு வேலை கிடைச்சதுக்கப்புறம்.. இன்னும் உங்களுக்கு ஒன்னுமே வாங்கிதரலயில்ல..?” என கொஞ்சினாள்.
இவர்களின் உரையாடலை கேட்டபடி வெளியில் நின்றிருந்தார் ராஜன்.
‘அம்மாக்கு கிப்ட் வாங்கி தர அளவுக்கு நந்தினி பெரியவளாய்ட்டியா..?” என்றார்.
‘போங்க.. எப்ப கேட்டாலும் இதேதான் சொல்றிங்க..? ப்ளீஸ் அம்மும்மா.. இதுமட்டும் போட்டுக்கோங்களேன்..” என்றாள்.
‘என்னது..? போட்டுக்கிறதா..? என்ன வாங்கிட்டு வந்த..?” என அமுதா முறைக்க..
வரவழைத்த தைரியத்தோடு கொலுசை எடுத்து காண்பித்தாள். ‘இப்போ போட்டுட்டிருக்க வேசம் பத்தாதா..?” என அமுதா நந்தினியை முறைக்க..
‘நந்தினிம்மா…” என வெளியிலிருந்து ராஜன் அழைத்தார்.
ஆர்வத்தோடு கதவைத்திறந்த நந்தினி.. ‘வாங்கப்பா..” என்றாள் குஷியாக. நந்தினியின் இயல்பான அப்பா என்ற அழைப்பில் அசந்துபோனார் அமுதா.
அமுதாவின் ஆச்சரியத்தை கவனித்த ராஜன்.. இவளே கண்ணு வச்சிடுவாளாட்டங்குது.. என மனதினில் கடிந்து.. ‘அம்மா எதுக்கு உன்னை முறைக்கிறா..? என்னடா வாங்கி வந்த அம்மாக்கு..?” என்றார் ஆவலாக.
‘அது..ங்கப்பா.. கொலுசு..” என காண்பித்தாள்.
‘ஏன்..? போட்டுக்கமாட்டியா..?” என முறைத்தார் அமுதாவை. ராஜன் முறைத்து என்ன பயன்..? அமுதா ராஜனை பார்த்தால்தானே..?
அமுதா கட்டிலின் ஒருபுறம் அமர்ந்திருக்க.. இரண்டு பேர் அமரும் அளவிற்கு இடைவெளிவிட்டு ராஜன் அமர்ந்தார் கட்டிலில். நந்தினி நின்றுகொண்டிருக்க..
‘நீ போட்டுவிடு நந்து..” என அன்போடு சொன்னவர்..
‘போட்டுவிட்டுட்டு உங்கம்மா கழுத்தில இருக்கிற அந்த வெள்ளிச்சங்கிலியை கழட்டிடு..” என்று அழுத்தமாய் ராஜன் சொல்ல..
‘அப்பா.. அது அம்மும்மாக்கு அவங்க பாட்டி போட்டுவிட்ட மந்திர செயினாம்.. அது கழுத்தில இருந்தா நிறைய தன்னம்பிக்கை வருமாம்.. நான் பிறக்கும்போது வயிறு வலிச்சப்பக்கூட.. அம்மும்மா அந்த செயினைத்தான் அழுத்தமா பிடிச்சிக்கிட்டாங்களாம்.. அவங்களுக்கு கஷ்டமே இல்லாம நான் பிறந்திட்டேனாம்.. அம்மும்மா அந்த செயினை எப்பவுமே கழட்டமாட்டாங்க..” என்று வளர்ந்த குழந்தை சிறுகுழந்தையாய் மாறி.. தகப்பனிடம் அவளையறியாமல் அழகாக போட்டுக்கொடுத்தாள் தன் அன்னையின் எண்ணங்களை. அமுதா வெகுவாய் தடுமாறிப்போக..
[the_ad id=”6605″]
ராஜனும் வேதனையாய் கண்மூடி சற்று நேரம் அமைதிகாத்து.. பிறகு.. ‘அதை கழட்டிடு நந்துமா..” என்றார் பிடிவாதமாக. அப்பொழுதும் நந்தினி தயங்க..
‘அந்த செயின்..” என ராஜன் ஆரம்பிக்கும்போதே.. எங்கே நந்தினியிடம் அது தாம் போட்ட கொலுசு என சொல்லிவிடுவாரோ என பயந்து.. அமுதாவே அதனை கழட்டினார். அமுதாவின் செயலில் ராஜனின் பேச்சு நிற்க.. நந்தினி ஆச்சரியமாய் பார்த்தாள் அமுதாவை.
ராஜன்.. ‘கொலுசை போட்டுவிடு நந்துமா..” என்றார்.
நந்தினி அமுதாவை பார்க்க.. அமுதா சம்மதம் தெரிவிக்கவும்.. கொலுசை போட்டு முடித்ததும்.. இந்த நேரத்திலயே இதையும் போட்டுவிட்ரலாம் என யோசித்து.. தனது ஹேன்பேகிலிருந்து நைல்பாளிசை எடுத்து அமுதாவிற்கு போடவும்.. சில்லென்ற ஸ்பரிசத்தில்..
‘என்ன பண்ற நந்து..?” என அமுதா கடிய..
‘ப்ளீஸ் அம்மும்மா.. இது மட்டும் போட்டுட்டா.. என் கனவு புல்பீலாகிடும்..” என்றபடியே தன் அன்னையின் கால்விரல்களை அலங்கரித்துக்கொண்டே.. ஆசைதீர அமுதாவை மேலிருந்து கீழ்வரை ரசிக்க..
‘நந்தும்மா.. கொஞ்சநேரம் என் மடியில உக்காருறியா..?” என தன் கைகளை கொஞ்சமாய் விரிக்கவும்.. இதை எதிர்பார்க்காத நந்தினி தயங்கி..
‘அப்பா.. நான் என்ன குழந்தையா..?” என தடுமாறினாள்.
‘எனக்கு நீ குழந்தைதாண்டா.. உன்கிட்ட நான் எதையுமே அனுபவிக்கலயே..” என்றவரின் குரல் ஏக்கத்தோடு வெளிவர..
தந்தையின் ஏக்கத்தை போக்க ராஜன் அருகில் நெருங்கினாள்தான்.. ஆனாலும் தயக்கமாய் இருக்கவும்.. ‘உங்களுக்கு வலிக்குமே…” என்றாள் சன்னக்குரலில்.
‘அதெல்லாம் வலிக்காது..” என்ற ராஜன்.. தானாக நந்தினியை இழுத்து தன்மடிமீது அமரச்செய்தார். அப்பொழுதும் நந்தினி சங்கடமாய் அமர்ந்திருக்க..
அந்தநேரம் மாறனின் வண்டி சத்தம்.. வீட்டருகே கேட்டு பிறகு திரும்புவதுபோல் தோன்ற.. ‘மாறா..” என உரக்கக் குரல்கொடுத்தார் ராஜன்.
போச்சுடா கண்டுபிடிச்சிட்டார் என நினைத்த மாறன் வீட்டிற்குள் வரவும்.. ராஜன் மடியில் நந்தினி அமர்ந்திருப்பதை பார்த்து பிரம்மித்தான்.
தன் மகளை இன்னும் இழுத்து வசதியாக அமரவைத்த ராஜன்.. ‘என்ன பார்க்குற..?” என்றார் குஷியாக.
‘ம்ம்.. என் பொண்டாட்டியை வீட்ல காணோமே.. இங்கயேது இருக்கறாளான்னு பார்த்தேன்.. ஆனா இங்கையும் காணோம் எங்க போயிருப்பா..?” என்றான் யோசனையாக.
சிரிப்போடே.. ‘அதான் காணோம்ல..? கிளம்பு.. கிளம்பு..” என்றாள் நந்தினி.
‘நந்து.. என்ன பேச்சிது..?” என அதட்டி.. ‘இந்தாங்க தம்பி..” என்று தண்ணி கொடுத்து.. ‘உக்காருங்க..” என தான் அமர்ந்திருந்த இடத்தை காண்பித்து.. அருகிலிருந்த சேரில் அமர்ந்தார்.
‘இல்லங்கத்தை நாம கிளம்பலாம்..” என்றான் மாறன்.
‘நாமளா..?” என முகம் சுருக்கி அமுதா கேட்க..
‘ஆமாங்கத்தை.. கார் புக் பண்ணியிருந்தேன்.. ஷோ ரூம்லயிருந்து கால் பண்ணியிருந்தாங்க.. சரி பொண்டாட்டியோட போய் காரை எடுத்திட்டு வரலாம்னு பார்த்தா அவளை காணோம்.. அங்க வீட்ல அம்மாவும் அப்பாவும் ரெடியா இருக்காங்க.. அவ இல்லன்னா என்ன..? நீங்க வாங்க நாம போலாம்..” என்றான்.
இன்னும் வசதியாக தன் தந்தை மீதமர்ந்தவள்.. ‘சரி.. போறதுன்னா.. போ..” என்றாள் உல்லாசமாக.
மாறன் முறைக்க.. ‘உன் பொண்டாட்டி இல்லாம.. நீ காரெடுத்திட்டு வரதுக்கு என் மாமா விடமாட்டார்..” என்றாள் பெருமையாக.
ராஜன்.. ‘என்ன கார் மாறா வாங்கியிருக்க..?” என்றார் ஆவலாக.
‘ஆடி கார் ராஜய்யா.. நான் வேறதான் சொன்னேன்.. அவ்ளோ பணம் காருக்காக செலவுபண்ண வேணாம்னு.. உங்க பொண்ணுதான் இதை செலக்ட் பண்ணுனா..” என்றான்.
நியாபகம் வந்தவளாக.. ராஜன் மடியிலிருந்து இறங்கி தனது ஹேன்பாகிலிருந்த கொலுசை எடுத்து.. ‘அப்பா.. இது தேவிம்மாக்கு..” என்றாள்.
மாறனும் அமுதாவும் ஆச்சர்யமாய் பார்க்க.. ‘அம்மும்மா இது எனக்கா தோணல.. அத்தையோடதான் கொலுசெடுக்க போனேன்.. தேவியக்காவும் உனக்கு அம்மாமாதிரிதான்.. பெரியவங்க எப்படியோ இருக்கட்டும்.. நீ பாரபட்ச்சம் பார்க்கக்கூடாதுன்னு சொன்னாங்க.. எனக்கும் சரின்னு தோணுச்சி அதான் எடுத்தேன்..” என்றாள்.
‘அப்பா.. தேவிம்மாகிட்ட கொடுத்திடுங்க..” என நீட்டினாள்.
‘நான் வாங்கிட்டு போனா தேவி வாங்கிக்கமாட்டா நந்து.. நீயே கொடுத்திடு..”
‘அப்போ வீட்டுக்கு கூட்டிட்டு வரிங்களா..?” என்றாள் ஆவலாக.
‘ம்கூம்.. நீதான் அங்க வந்து கொடுக்கனும்..” என்றார் ஆழ்ந்த பார்வையோடு.
நந்தினி மிரட்சியோடு ராஜனைப் பார்க்க.. ‘பதட்டப்படாதடா.. உனக்கு பிடிக்கலன்னா இந்த அப்பா வீட்டுக்கு நீ வரவேணாம்.. உன்னை உரிமையா கூப்பிடற தகுதி எனக்கில்ல..” என தன்மையாகவே ராஜன் சொன்னாலும்.. கண்கள் கலங்கியது.
‘ப்ப்பா.. என்ன இது..?” என நந்தினியும் கலங்கித் தடுமாற..
நந்தினி.. ‘சரி வாங்க போலாம்..” என்றாள்.
[the_ad id=”6605″]
‘உனக்கா தோணும்போது வா.. ஒன்னும் அவசரமில்ல நான் காத்திருக்கேன்.. என் உயிர் இருக்கும்வரை..” என்றார் கமறிய குரலில்.
‘அப்பா.. நானாதான் எனக்கு பிடிச்சி வரேன்.. வாங்க போலாம்..” என்றாள் கண்ணில் நீரோடும்.. உதட்டில் புன்னகையோடும்.
நந்தினியின் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு.. ‘இப்போ வேணாம்.. சோபி.. நிவியையும் வரசொல்லி.. உன் மாமனார் மாமியாரோட.. எல்லாருமா வாங்க..” என்றார் நிறைந்த மனதோடு.
‘ராஜய்யா.. நானு…” என மாறன் பாவமாய் கேட்க..
‘என்ன பண்றது..? கருவாயனா இருந்தாலும் எனக்கு மருமகனாய்ட்டியே.. போனா போகுது நீயும் வா..” என்றார் சின்ன சிரிப்போடு.
‘கருப்பா இருந்தாலும்.. கலைய்ய்யா.. வாட்டசாட்டமா இருக்கிற.. இந்த ஆணழகனைத்தான உங்க பொண்ணுக்கு பிடிச்சிருந்தது..?” என மாறன் சிரிக்க..
நந்தினி முறைத்தாள்.. ‘முறைக்காதடி செல்லம் உண்மையைத்தான சொன்னேன்.. சரி..சரி.. அங்க அப்பாம்மா உனக்காக காத்திட்டிருக்காங்க.. வா..” என்றவன்..
அமுதாவிடமும்.. ‘அத்தை.. நானும் என் பொண்டாட்டியும் புதுக்காரோட வந்து உங்களை பார்க்கிறோம்..” என சொல்லி நந்தினியை அழைத்துப்போனான்.
நந்தினி போனதும்.. ராஜனை பாராமல்.. ‘முதல்ல கிளம்புங்க..” என்றார் காட்டமாய்.
அமுதாவின் புறக்கணிப்பை தாங்கமுடியாத ராஜனும்.. ‘எனக்கு பசிக்குது.. சாப்பாடு போடு..” என்றார் உரிமையோடு குரலுயர்த்தி.
‘அதைப் போய் உங்க பொண்டாட்டிகிட்ட கேளுங்க..” என்றார் எரிச்சலாக.
‘அப்போ நீ யாருடி எனக்கு..?” என்றார் காட்டமாக.
‘இருபத்தி ஐஞ்சி வருசத்துக்கு முன்னாடி.. யாருக்கும் தெரியாத ஆசைநாயகி.. இப்போ ஊரறிஞ்ச வப்பாட்டி..” என்றார் அழுத்தமாக.
அடுத்த நொடி அமுதாவின் கன்னத்தில்.. இடியென பதிந்தது ராஜனின் கை.. தன்னை நிலைப்படுத்த முடியாமல் அருகிலிருந்த பெட்டில் சுருண்டார் அமுதா. நெருப்பை வாரி வீசியதுபோல் கன்னம் எரிந்தது..
அமுதாவின் வார்த்தைகள்தான் ராஜனுக்கு மனதில் உழன்றதே அன்றி.. தாம் அடித்தோம் என்ற உணர்வே இல்லை. அசைவின்றி அமுதா பெட்டில் கவிழ்ந்திருக்க..
‘நீ எனக்கு வப்பாட்டியா..? நான் உன்னை ஆசை நாயகியாத்தான் நினைச்சேனா..? எதுக்குடி உன்னை நீயே அசிங்கப்படுத்திக்கிற..?” என்றார் குறையாத கோபத்தோடு.
அமுதாவிடம் பதிலில்லாமல் போகவும்.. கோபத்தோடு அமுதாவின் முகத்தை திருப்பவும் வெகுவார் அதிர்ந்த ராஜன்.. ‘அச்சோ.. என்ன காரியம் செய்துட்டேன்..” என புலம்பி.. தண்ணீர் கொண்டு கன்னம் துடைக்க.. கண்ணே விழிக்கவில்லை அமுதா.
அச்சில் வார்த்ததுபோல் ராஜனின் கைத்தடம்.. அப்பளம்போல் உப்பிச் சிவந்திருந்தது.. கடந்த இருபத்தைந்து வருடங்களாக தன்னை தொட்டுபேசும் உரிமையைகூட நந்தினியன்றி வேறு எவருக்கும் கொடுத்ததில்லை அமுதா.
விபரம் அறிந்த நாளிலிருந்து இப்படி யாரிடமும் அடி வாங்கியதில்லை.. வலி பொருக்கமுடியவில்லை. அசைவற்று படுத்திருக்கவும் மயக்கமாகி விட்டாளோ என பயந்த ராஜன்..
தன் மடிமீது படுக்கவைத்து.. ‘அம்மு..” என பதறியழைக்க.. ராஜனின் மூச்சுக்காற்று வெகுஅருகில் உணரவும்.. பட்டென விலகினார் ராஜனின் மடியிலிருந்து.
‘என்னை மன்னிச்சிருடா..” என ராஜன் கண்ணீர்விட..
ராஜனையே இரண்டு நிமிடமாக பார்த்திருந்தார்.. அமுதாவின் உயிரோட்டமில்லாத பார்வையில் திணறிய ராஜன்.. ‘என்ன பண்ணுது அம்மு..” எனப் பதற..
‘ஊர்தலைவர் நீங்க.. ஏன் இப்படி செய்தன்னு உங்களை எதிர்த்து கேக்குறதுக்கு யார் இருக்கா..? என்கிட்டல்லாம் எதுக்கு மன்னிப்பு கேக்குறிங்க..?” என்றார் எங்கோ பார்த்து.
அமுதாவின் வார்த்தைகள் நெஞ்சினை வாள்கொண்டு அறுப்பதுபோல் தோன்ற..
‘நான் இருக்கேன்டி உனக்கு..” என்றார் மன்றாடலாக.
‘என்னவா..?” என்றார் எள்ளலாக.
‘உன் புருசனா..” என குரலுயர்த்தி சொல்ல..
‘உங்க பொண்டாட்டியை இப்படிதான் அடிப்பிங்களா..?” என அழுத்தமாக கேட்க..
தேவியை நினைத்து சொல்கிறாள் என புரிய.. ஒரு கனம் தடுமாறிப்போனார்.