ஒரு முடிவின் துவக்கம்..
அத்தியாயம் 24
‘அவர்மேல கோபமா இருக்கேன்னு சொல்லுங்க.. நான் அதை ஒத்துக்கிறேன்.. ஆனா அன்பு அக்கறை இல்லன்னு அவர்மேல சத்தியம் செய்து சொல்லுங்க பார்க்கலாம்…” என தேவி சவாலாய் கேட்கவும்..
‘இவ்ளோ நேரம் உன் புருசன்.. இப்போ நீ ஆரம்பிக்கிறியா..?” என்றார் கடுப்போடு.
‘நான் எதையும் ஆரம்பிக்கல.. எல்லாம் ஏற்கனவே ஆரம்பமானதுதான்.. அவர் இப்படி உங்களை நினைச்சி தவிக்கிறது உங்களுக்கு பிடிக்கல.. ஏன்னா நம்ம வாழ்க்கைத்தான் இப்படி ஆகிடுச்சி.. அவராவது சந்தோசமா இருக்கனும்னு நினைக்கிறிங்க.. சந்தோசத்தை விடுங்க.. முதல்ல நிம்மதியா இருப்பாரா பாருங்க..” என்றார்.
‘நீயும் என்னை புரிஞ்சிக்கமாட்டியா தேவி..” என்றார் தளர்வாக.
‘உங்களையும் சரியா புரிஞ்சிக்கிட்டேன்.. அவரையும் புரிஞ்சி வச்சிருக்கேன்..” என்றார் ஆழ்ந்த பார்வையோடு.
அமுதாவிற்கு மட்டும் ராஜனின் நிலை தெரியாதா என்ன..? ஆனால் தன்னை மாற்றிக்கொள்ள முடியவில்லையே.. காதலிக்கும்போது பிராத்தல் கேசில் உள்ளே தள்ளிடுவேன்.. என்று தண்டபானி பேசிய கொடியவார்த்தைகள் கூட பயத்தைத்தான் கொடுத்தது..
ஆனால் ராஜன் இன்னொரு பெண்ணின் கணவன் என்ற நிலைவந்தபிறகு.. ராஜன் தன்னை மறந்து துறந்ததுதான் இத்தனை வருடங்களாக அமுதாவின் மனதை பிசைந்து கொண்டிருக்கிறது.. இன்று நம்மை நேரில் காணவும்தானே இத்தனை பரிதவிப்பு பரிதாபம்.. என நினைக்க கோபம்தான் வந்தது.
சற்றுநேர மௌனத்திற்கு பிறகு.. ‘என்னைப் பத்தி.. என்ன புரிஞ்சிருக்க..?” என எள்ளலாய் அமுதா கேட்க..
‘யாருமில்லா அநாதையா நிற்கும்போது துணைநிற்காத அன்பு.. இன்னொரு பெண்ணின் மனதை வருத்தி எதற்குன்னு நினைக்கிறிங்க..
அவர் என்னோட சந்தோசமா இருக்கிறது உங்களுக்கு வருத்தமில்ல.. ஆனா உங்க ராஜன் எப்படி உங்களை மறந்தார்ங்கிற வேதனை இருக்கு.. அந்த வேதனைதான் ஆசைநாயகிங்கிற வார்த்தைல வந்து நிக்குது..” என தேவி சொல்ல..
[the_ad id=”6605″]
அமுதா தன் முகத்தை மூடிக்கொண்டு அழவும்.. ‘உங்க வேதனை நியாமானது.. எத்தனை காரணங்களை சொன்னாலும்.. உங்க இழப்புக்கு அது ஈடாகாது..
உங்களுக்கு அவர்மேல நிறைய ஆத்திரம் வருத்தம் இருக்கு.. ஆனா அதை வெளிப்படுத்துற உரிமையைகூட அவர்கிட்ட எடுத்துக்க நீங்க விரும்பல..” என்று அமுதாவின் மனமறிந்து சொல்லவும்..
‘இவ்ளோ தெரிஞ்சிருந்தும்.. ஏன் தேவி ராஜன் இங்க வரதுக்கு அனுமதிக்கிற..?” என அமுதா கண்ணீரோடே கேக்க..
‘ஏன்னா… எனக்கு அவரோட நிம்மதி முக்கியம்.. அதை உங்ககிட்ட தொலைச்சிட்டு பரிதவிச்சி நிற்கிறார்.. தொலைச்ச இடத்தில தேடினாதான கிடைக்கும்..?” என தேவியும் கண்கலங்க..
அமுதா.. ‘காலம் எல்லாத்துக்கும் மருந்துன்னு சொல்லுவாங்க.. ஆனா இத்தனை வருசங்களாகியும் என் மனக்காயம் கொஞ்சமும் குறையலயே.. ராஜனைப் பார்த்தா அது இன்னமும்தான் இரணமாகுது.. நான் என்ன செய்யிறது..?” என வெம்பி..
‘சந்தோசம்.. வேதனைன்னு.. எதுவுமே உன்புருசனுக்கு என்னால கொடுக்கமுடியாது.. இங்க வந்தா ராஜனுக்கு வருத்தம்தான் மிஞ்சும்..
ராஜனைப் பார்த்தா எனக்கு சாகத்தோணுது.. இங்க வராமயே நான் செத்துருந்தேனா.. யாருக்கும் ஒன்னும் இல்ல..” என வேதனையோடு சொல்லி..
‘ஆனா இதுக்குமேல எனக்கெதாவது ஒன்னுன்னா.. அது ராஜனுக்குத்தான் அசிங்கம்.. உன் குடும்ப கௌரவம் முக்கியம்னா.. ராஜனை இங்க வரவேணாம்னு சொல்லு..” என்றார் எச்சரிப்பதுபோல்.
‘அப்போ காதலிச்சி கைவிட்டவர்.. இப்போ கல்யாணம் செய்து கைவிட்டுட்டார்ன்னு நந்தினிக்கு ஏமாற்றம் ஆகாதா…? அதுக்கப்புறம் நந்தினி அவ அப்பாவோட பேசுவாளா..? இத்தனை வருசம் கழிச்சி கிடைச்சிருக்கிற அவரோட பெரிய பொண்ணை.. மறுபடியும் அவர் இழந்தார்ன்னா அவரால நிம்மதியா இருக்க முடியுமா..?” என தேவி எடுத்துரைக்க.. இந்த கோணத்தில் யோசிக்காத அமுதாவும் கண்கலங்கினார்.
‘நீங்களும் நந்தினியும் தனிமையாவே இருந்திட்டிங்க.. நந்தினியோட குழந்தையாவது எல்லா உறவுகளோடவும் வளரட்டும்.. தாத்தா பாட்டியா மாறனோட அப்பாம்மா இருப்பாங்க.. அத்தை மாமாவா.. சோபி.. நிவி இருப்பாங்க.. ஆனா.. சித்தியா லாவண்யாவாலதான் இருக்கமுடியும்.. இந்த உறவுகள் கூட உரிமையை கொடுக்கிற உறவுகள்..
‘உரிமையை எடுத்துக்கிற உறவுன்னு ஒரே ஒரு உறவு மட்டும்தான் இருக்கு.. தாய்மாமான்ற உறவு.. நந்தினி அவரோட மகள்ங்கிறதால அவர் மகன் மனோஜிக்கு அது கிடைச்சே ஆகனும்..” என்று தேவி உரிமையோடு பேச..
அமுதா.. ‘நான் வேணாம்னு ராஜன் முடிவெடுத்தார்.. நான் விலகிட்டேன்.. ஆனா நீ.. உனக்கு உரிமையானவரை அவர் நிம்மதிக்காக மனசு வலிக்க வலிக்க என்கிட்ட கொடுக்கனும்னு நினைக்கிற.. என்னை விட உன் நிலைமைதான் ரொம்ப மோசம்..” என்றார் கிண்டலாக..
‘ஊர் தலைவனோட பொண்டாட்டியாச்சே.. பேசறதுக்கு உனக்கு சொல்லியாத்தரனும்…? நந்தினியை வச்சி அழகா பிளாக்மெயில் பண்ற..” என்று மெச்சுதலாக சொன்ன அமுதா..
‘எனக்கு உறவுன்னா அது நந்தினி மட்டும்தான்.. நான் ராஜனை ஏத்துக்கிறதுக்கும்.. நந்தினி குழந்தைக்கு மனோஜ் தாய்மாமாவா ஆகறதுக்கும் சம்மந்தமே இல்ல.. நந்தினியை மகளா நீயும் ராஜனும் ஏத்துகிட்டதுமே.. நீ சொல்ற சித்தி தாய்மாமா உறவெல்லாம் நந்தினி குழந்தைக்கு தானா வந்திடும்..
‘என்னால உன் புருசன் பாவத்தை சுமந்துடுவாரோங்கிற பயமெல்லாம் உனக்கு வேணாம்.. ராஜன் எனக்கு கிடைக்கலங்குறதுக்காக வேதனையடைஞ்சேனே ஒழிய.. ஒருநாளும் நான் அவரை சபிக்கவோ திட்டவோ செய்ததில்ல..
இப்பவுமே என் உணர்வுகளை புரிஞ்சிக்காம.. என்னை தொல்லை செய்யுறாறேன்ற கோபம்தானே ஒழிய.. மத்த எதுவும் எனக்கு ராஜனோட இல்ல..
ராஜன் இங்க வரலைன்னா யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.. முன்னமாதிரியே நீங்களும் சந்தோசமா இருக்கலாம்.. நானும் என் மகளோட நிம்மதியா இருப்பேன்..” என்று தெளிந்த மனதோடு தேவியை தேற்றும் விதத்தில் பொறுமையாக சொன்னார் அமுதா.
‘அவர் தெரியாம தப்பு செய்துட்டார்ன்னு நான் சொல்லமாட்டேன்.. ஆனா எதுவும் தப்பாகாதுன்னு நம்பியிருந்திருக்கார்.. அவரையே அறியாம அது பெரிய தப்பாகிடுச்சி.. இனிமேலாவது உங்க வாழ்க்கையை ஓரளவுக்காவது சரிசெய்யனும்னு முயற்ச்சி பண்றார்.. உங்க வேதனைக்கு மருந்தா இருக்கனும்னு நினைக்கிறார்.. நீங்க அவரை காதலனா பார்க்கவேணாம்.. புருசனாவும் நினைக்கவேணாம்.. உங்களுக்கு விருப்பமில்லன்னா அவர்கிட்ட பேசக்கூட வேணாம்.. அவர் நிம்மதிக்காகவும்.. நந்தினி சந்தோசத்துக்காகவும்.. உங்களோட நலன் விரும்பியா இருந்துட்டு போகட்டுமே..”
இவ்ளோ சொல்றோம்.. மறுபடியும் ஆரம்பிச்ச இடத்திலயே வந்து நிக்குறா.. என நினைத்து அமுதா தேவியை முறைக்கவும்..
‘குலதெய்வத்தை சாட்சியா வச்சி உங்களை கல்யாணம் செய்திருக்கார்.. அப்படியிருந்தும் ஏன்க்கா உங்களை நீங்களே இப்படி அசிங்கப்படுத்திக்கிறிங்க..?” என வருந்திய குரலில் கேட்டு.
‘உங்களோட கால்பங்கு வேதனைக்கு கூட அவரோட உயிர் தாங்காது.. உங்க வேதனைக்கு மருந்தா இருக்னும்னு நினைக்கிறார்.. வேற எந்த தப்பான எண்ணமும் அவருக்கு உங்ககூட இல்ல..“ என்று தேவி ராஜனை விளக்க..
‘போதும் நிறுத்து தேவி..” என்று கத்திய அமுதா..
‘என் வேதனையே ராஜன் என் வாழ்க்கையில நுழையறதுதான்.. தயவுசெய்து புரிஞ்சிக்கோ தேவி.. நான் தனியா இருக்கும்போது கம்பீரமாத்தான் இருக்கேன்.. ராஜனைப் பார்த்தாதான் எனக்கு நானே அசிங்கமா உணருறேன்..
[the_ad id=”6605″]
அன்னைக்கு என் பொண்ணு கல்யாணத்தில என் விசயம் உனக்கு தெரிய வரும்போது ஒரு பொண்ணுக்கு பொண்ணா உன் இடத்திலயிருந்து நான் யோசிச்சேன்.. என்னால உன் வாழ்க்கை வீணாய்டக்கூடாதுன்னுதான் உன்னை பார்க்க ஹாஸ்பிட்டல்க்கு வந்தேன்..
அன்னைக்கே என் மனசில இருக்கிறதெல்லாமும் உன்கிட்ட சொன்னேன்.. அப்படியிருந்தும் என் இடத்திலயிருந்து நீ யோசிக்கல..” என்று கண்கலங்கி..
‘இத்தனை வயசுக்கப்புறம் ஒரு பொம்பளைக்கு பெருசா என்ன தேவை இருந்திடப்போகுது..? பெத்தபிள்ளையோட சந்தோசம்.. இருக்க ஒரு இடம்.. வயித்துக்கு சாப்பாடு.. போட்டுக்க கொஞ்சம் துணிமணி.. இதெல்லாமும் எனக்கு இப்போ ரொம்ப ரொம்ப நிறைவா இருக்கு..” என்று பெருமையாய் சொல்லி..
என் பொண்ணு கல்யாணம் முடிஞ்சி கொஞ்சநாள் இங்கயிருந்துட்டு திரும்பவும் சென்னைக்கு போய்டலாம்னுதான் நான் நினைச்சிட்டிருந்தேன்.. கல்யாணத்துல வச்சி எல்லார் முன்னாடியும் என்கிட்ட ராஜன் அப்படி கேப்பார்ன்னு நான் நினைச்சே பார்க்கல.. நந்தினிக்கு அவ அப்பா யார்ன்னு தெரிஞ்சதுக்கப்புறம் நான் ஊரைவிட்டு போயிருந்தேனா.. என் பொண்ணும் என்னோடவே வந்திருப்பா.. அவ வாழ்க்கை வீணாகிடக்கூடாதுன்னுதான் இன்னும் கொஞ்சநாள் இங்கயிருந்து எல்லாம் சரியானதுக்கப்புறம் போய்டலாம்னு முடிவெடுத்தேன்.. அதுக்குள்ள..” என்று..
தன் கழுத்தில் கனக்கும் மாங்கல்யத்தை காண்பித்து.. ‘இந்த தாலி எனக்கு வேதனையைத்தான் கொடுக்குது.. உன் புருசனுக்காகன்னு உனக்கு வலிச்சாலும் எல்லாம் தாங்கிட்டு.. நீயும் என்னென்னவோ செய்திட்டிருக்க.. இதெல்லாம் எனக்கு எத்தனை வேதனையை கொடுக்குதுன்னு என் பொண்ணோட சேர்த்து யாருமே புரிஞ்சிக்கமாட்றிங்க..“ என்றார் வேதனையாக.
‘என் மாப்பிள்ளை அன்னைக்கு என்னை கோவிலுக்கு தெரிஞ்சி கூட்டிட்டு வந்தாரா தெரியாம கூட்டிட்டு வந்தாரான்னு எனக்கு தெரியாது.. ஆனா ராஜன் என்னை கல்யாணம் செய்துக்க ஏற்பாடு செய்திருந்தது உனக்கு தெரிஞ்சிருக்கும்தான..?
எனக்கு இதுல விருப்பமிருக்குமான்னு ஒரு நிமிசம் யோசிச்சிருக்கலாமில்ல..? ஒரு பொண்ணா இருந்தும் என் வேதனை உனக்கும் புரியலையா..? இத்தனை வயசுக்கப்புறம் இது தேவைதானா எனக்கு..?” என்று விரக்தியாய் சொல்லி..
அன்னைக்கு கல்யாணத்தில அவர் போட்ட செயினையும்.. கோவில்ல தாலியையும் அத்தனை பேர் முன்னாடி அப்பவே கழட்டி வீசியிருந்தா என்ன செய்திருப்பிங்க..?
செயினைப் போடும்போது என் பொண்ணு கல்யாணம் பாழாய்ட கூடாதுன்னு அமைதியா இருந்தேன்.. இந்த தாலியை போடும்போது.. என் பொண்ணு பிறப்பு தப்பாய்டக்கூடாதுன்னு அமைதியா இருந்துட்டேன்.. “ என்று வேதனையோடு சொன்னவர்..
‘இதை காரணமா வச்சி என்கிட்ட உரிமைகொண்டாடனும்னு நினைச்சா.. என் உயிர் உடம்பில தங்காது..” என்று கண்ணீர் வடிக்க.. வெகுவாய் அதிர்ந்தார் தேவி..
அன்று திருமணம் முடிந்த நாளன்று மகள் முன்பாக ராஜன் சாப்பிட வைத்ததை சொல்லி.. அன்று சாப்பிடும்போது சிலநிமிடம் தன் பழைய காதல் நினைவுகள் வலம் வந்ததை இன்று நினைத்தவர்.. ‘நிர்மலமா அமைதியா இருக்கிற என் மனசையும் உணர்வுகளையும் ராஜன் கலங்கடிக்கிறார்.. என்னையறியாமக்கூட என் மனசு கொஞ்சம் திசை திரும்பினாலும்.. என் பொண்ணைப்பத்திக்கூட யோசிக்காம என் உயிரை மாய்ச்சுக்குவேன்..” என்றார் தீர்க்கமாக.
‘அச்சோ.. ஏன் இப்படி பேசுறிங்க..?” என்று தேவி பதற..
‘பேசாம என்ன செய்ய..? அன்னைக்கு உன் அண்ணனுங்க உனக்காக கேட்ட மாதிரி.. எனக்காகன்னு அண்ணனோ அப்பாவோ கேட்க இருந்திருந்தா இப்படி செய்திருப்பிங்களா..? ஒரு மருமகன் எடுத்த பொம்பளையை கல்யாணம் செய்துக்க.. எங்கயிருந்து வந்தது இந்த துணிச்சல்..? கேக்க ஆளில்லைங்கிறதுக்காக ஒரு பொம்பளையை இப்படித்தான் அசிங்கப்படுத்துவிங்களா..? தனியா வாழும்போது கூட எனக்காக யாருமில்லையேன்னு நான் வருத்தப்பட்டதில்ல.. ஆனா இப்போ ராஜன் இதெல்லாம் யோசிக்க வைக்கிறார்..” என்றார் வேதனையாக.
தேவி பேரமைதியை கையிலெடுக்க.. ‘என் மருமகன் எனக்காக ஒரு தொழில் ஆரம்பிக்கிறாப்ல.. என்னை நிம்மதியா வேலை பார்க்க விடுவிங்களா..? இல்ல அன்னைக்கு உன் மாமனார் இந்த ஊரைவிட்டு துரத்தினமாதிரி.. இன்னைக்கு நீயும் உன் புருசனும் சேர்ந்து இந்த உலகத்தைவிட்டே விரட்டப்போறிங்களா..?“ என்று ஆத்திரத்தோடு கேட்டு
‘கொஞ்சநாள் பொறுத்துக்கோங்க.. என் பொண்ணுக்கு பிரசவம் பார்த்ததும் நானே கிளம்பிடறேன்..” என்று கண்ணீர் வடிக்க..
‘ஏன் இப்படி..?” என்று பதறிய தேவி அமுதாவின் கையை ஆதரவாய் பிடிக்க.. வெடுக்கென தன் கையை எடுத்தார் அமுதா.
தேவிக்கு அமுதா பேசிய வார்த்தையின் அர்த்தம் புரிய.. பேரதிர்ச்சியோடு.. ‘இப்போ நீங்க பேசினதை சாதாரணமா என்னால எடுக்கமுடியல.. கோபத்தில செத்துடுவேன்னு சொல்றது எல்லாரும் சொல்றதுதான்.. அதென்ன முன்னமே முடிவு செய்தமாதிரி பொண்ணுக்கு பிரசவம் பார்த்ததும் போய்டுறேங்கிறிங்க..? என்னதான் நினைச்சிட்டிருக்கிங்க…? ” என்று கலக்கத்தோடு கேட்க..
‘யார் சாவு யார்கையில இருக்கு..? நான் தனியா பிள்ளை பெத்துக்கிட்ட மாதிரி என் பொண்ணோட நிலைமை ஆகிடக்கூடாதுன்னும்.. அதுவரைக்குமாவது கடவுள் எனக்கு ஆயுளைக்கொடுக்கனும்னு நான் எப்பவும் நினைக்கிறதுதான்..” என்று சமாளித்து..
‘நந்தினிக்கு அவ அப்பா வேணும்னா.. ராஜனுக்கும் உனக்கும் அதுல விருப்பம் இருந்தா.. நந்தினியை மட்டும் பாருங்க.. என்னை சரிபடுத்திறதா நினைச்சி தயவுசெய்து அசிங்கப்படுத்தாதிங்க..“ என்றார் கோபமாக.
‘நானும் ஒன்னும் பெரிய தியாகி இல்லக்கா.. உங்க இடத்தில வேறயாராவது இருந்திருந்தா.. நான் இவ்ளோ தூரம் செய்திருப்பேனா தெரியாது.. அவர் நினைப்பாவே வாழ்ந்து.. யாரோட உதவியுமில்லாம அவரோட குழந்தையை தனிமனுசியா போராடி வளர்த்தும்.. இத்தனை வருசங்களுக்கு பிறகு அவரைப்பார்த்தும்.. அத்தனை பேருக்கு முன்னால பரம்பரை செயினைப் போட்டு அவர் உங்களை அங்கீகரிச்சும்.. எங்க சந்தோசத்துக்காக திரும்பவும் நீங்க சென்னைக்கே போய்டுறேன்னு சொன்னது.. அவரை ஏத்துக்காம சாகத்துணிஞ்சது.. இதெல்லாம்தான் என்னை உங்கபக்கம் இருந்து யோசிக்க வச்சது..
இதெல்லாம் போக நான் அவர்மேல உயிரையே வச்சிருக்கேன்.. இத்தனை வருசத்தில இப்படி அவர் தவிச்சி ஒருநாளும் நான் பார்த்ததில்ல.. அவரோட தவிப்பை போக்கத்தான் என் மனசை திடமாக்கிட்டு இத்தனையும் செய்தேன்.. அவருக்காக நான் பார்த்து செய்தது.. உங்களை எந்தளவுக்கு பாதிக்குதுன்னு இன்னைக்குத்தான் எனக்கு புரியுது..
இனி உங்ககிட்ட அவரைப் பத்தி பேசமாட்டேன்.. யாருக்காகவும் இந்த ஊரைவிட்டு நீங்க போகவேண்டாம்.. இங்கயிருந்து நீங்க போய்ட்டா நந்தினி ரொம்ப வருத்தப்படுவா.. அம்மாவையும் பொண்ணையும் பிரிச்ச பாவம் எங்களுக்கு வேண்டாம்.. இனி நீங்க எதை நினைச்சும் கவலைப்படாதிங்க.. எங்களால உங்களுக்கு எந்த தொல்லையும் வராது..” என்று தேவி உறுதியளிக்க.. அமுதாவின் முகம் பெரும் நிம்மதியைக் காட்டியது.
‘உங்களுக்கு எதாவது தேவைன்னாலோ.. இல்ல எனக்கெதாவது உங்ககிட்ட தேவைன்னாலோ.. நானாவது உங்களை பார்க்க வரலாமா..?” என்று கேட்க..
‘நீ எதுக்கு என்னை பார்க்கனும்..? என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்.. அப்படியே எனக்கு எதாவது தேவைன்னான்னாலும் என் பொண்ணும் மாப்பிள்ளையும் என்னை பார்த்துக்குவாங்க.. நீ உன் வேலையை மட்டும் பாரு..” என்று கடுகடுக்க..
[the_ad id=”6605″]
இதென்ன..? குரல்ல கோபமிருக்கு.. முகத்தை சின்ன பிள்ளையாட்டமா முறுக்கிக்கிறாங்க என நினைத்தவர்.. ‘அப்பா சாமி.. உங்கவீட்டுக்கு நான் வரல.. போதுமா..? நான் கிளம்பறேன்..” என்று தானும் முறுக்கியவராய் வெளியே வரவும்..
‘தேவி..” என அமுதா மென்மையாய் அழைக்க.. வாஞ்சையோடு பார்த்தார் தேவி.
‘ஒரே ஒரு விசயம்.. நந்துக்காக செய்யிறியா..?” என்றார்.
‘என்னன்னு சொல்லுங்க..” என்றார் ஆவலாக.
‘எனக்கு கொலுசு போட்டு பார்க்கனும்னு ஆசையில.. நந்து கொலுசு வாங்கி வந்தா.. எனக்கு வாங்கும்போதே உனக்கும் சேர்த்து வாங்கியிருக்கா.. அதை உன்கிட்ட கொடுக்கசொல்லி ராஜன்கிட்ட கொடுத்தா.. ராஜன் உங்கவீட்டுக்கு வந்து உன்கிட்டையே கொடுக்க சொல்லிட்டார்.. அவளும் வரேன்னு சொல்லிட்டா..” என சொல்லி மேற்கொண்டு பேச அமுதா தயங்கவும்..
‘உங்களுக்கு இணையா நந்து என்னை நினைக்கிறதே பெரிய விசயம்.. அதோட.. நந்து அவங்கப்பா வீட்டுக்கு வரா.. இதுல உங்களுக்கு என்ன தயக்கம்..?” என்றார்.
‘என் தயக்கமே ராஜனோட அப்பாதான்.. உன்மாமனார் என்னை திட்டினது மட்டும்தான் அவளுக்கு தெரியும்.. என்னை மோசமா பேசினதெல்லாம் தெரியாது.. தெரிஞ்சா ரொம்ப மனசு உடைஞ்சி போய்டுவா.. அதை கொஞ்சம் பார்த்துக்கோ தேவி..” என்றார் பதட்டமாக.
‘உண்மையாலுமே மாமா ரொம்ப நல்லவர்தான்.. உங்களை இப்படி மோசமா பேசினார்னு அவரே ஒத்துக்கவும்தான் நானே நம்பினேன்.. அப்போ பேசிட்டார்.. ஆனா இப்போ உங்களை நினைச்சி நினைச்சி ரொம்ப அழுவார்.. நந்தினி வீட்டுக்கு வந்தாள்னா அவர்தான் ரொம்ப சந்தோசப்படுவார்..” என்றார் தேவி.
‘செய்த தப்புக்கு மன்னிப்பு கேக்குறதா நினைச்சியேது.. எதாவது உளறிடுவாரோன்னு பயமா இருக்கு.. என்னை இப்படி பேசினார்ன்னு தெரிஞ்சா.. அவ ஆத்திரம் தீரும்வரை கத்திட்டுத்தான் விடுவா.. யாருக்கும் அடங்கமாட்டா..” என்றார் மீண்டும் பதட்டத்துடன்.
‘நீங்க பயப்படுறமாதிரி ஒன்னும் ஆகாது.. இருந்தாலும் பழசை பேசவேணாம்னு நான் மாமாகிட்ட சொல்லிவச்சிடுறேன்..” என்றார்.
நிம்மதி பெருமூச்செடுத்து.. ‘சரி.. உன் சாப்பாட்டு மூட்டையை எடுத்துகிட்டு நீ கிளம்பு.. மறுபடியும் வரவேணாம்..” என கடிந்து.. தன்போல் டீ வைக்க பாலை எடுக்கவும்..
‘அப்பா சாமி நான் வரல.. கிளம்பறேன் போதுமா..? ” என்று தானும் முறுக்கியவராய் வெளியே வரவும்..
இத்தனைநேரமும் இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த ராஜனும் தேவி சொன்னதுபோல் அவளின் கால்பங்கு வேதனைக்கு கூட நம்மால் ஆறுதலளிக்க முடியாதுதான்.. என மனதளவில் ஒப்புக்கொண்டிருந்தார். காதலில் தோல்வியடைந்த வலி என்பது மட்டுமல்ல.. ஏதோ ஒரு உறுதியான முடிவோடு இருக்கிறாள் எனத் தோன்றியது. நாம என்ன பேசினாலும்.. செய்தாலும்.. அமுதாவின் மனம் கரைவதாய் தோன்றவில்லை..
அமுதாவின் உணர்வைப் புரிந்தவராய்.. அவளுக்கு எப்படி விருப்பமோ அப்படியே இருக்கட்டும்.. இனி அமுதாவை தொல்லை செய்யக்கூடாதென்ற எண்ணத்தோடு திண்ணையிலிருந்து எழுந்தார்.