ஒரு முடிவின் துவக்கம்..
அத்தியாயம் 28
வீட்டினுள் நுழையும்போதே.. ‘வாங்க மாப்பிள்ள..” என்று தேவியின் அம்மா வரவேற்க்க.. வழக்கம்போல் ‘ம்ம்.. வாங்க..” என்று ராஜன் சோபாவில் அமர..
சற்றுநேர அமைதிக்குப் பிறகு.. ‘உங்களையெல்லாம் பார்த்தே இரண்டுமாசம் பக்கம் ஆகுது.. என் பேரப்பிள்ளைங்களையும் லீவுக்குகூட விடாம வச்சிக்கிட்டிங்க..” என ராஜனின் மாமியார் ராஜனிடம் குறைபட..
‘அம்மா நான்தான் லாவியை போக வேணாம்னு நிறுத்தினேன்.. அவர் ஒன்னும் சொல்லல..” என்றார் தேவி.
‘ஏன் தேவி..?” என தேவியின் அம்மா கண்கலங்க..
‘நான் சொல்லி என் விருப்பத்தோடதான் இவரோட கல்யாணம் நடந்துச்சி.. சின்ன அண்ணனுங்க மூனுபேரும் லாவிக்கு போன்செய்து தேவையில்லாம அமுதாக்காவைப் பத்தி தப்பா பேசுறாங்க.. இந்த சூழல்ல லாவி அங்க வந்தாள்னா இன்னும்தான் பிரச்சனையாகும்.. அதனாலதான் அவளை அனுப்பல..”
‘நான் இருக்கேன்லடாம்மா..? யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க.. வந்து ஒருவாரம் இருந்திட்டு வாங்க.. நீ நம்ம வீட்டுக்கு வந்தே இரண்டுமாசம் பக்கம் ஆகுது..” என்றார் தேவியின் பெரியஅண்ணன் சேகர்.
‘நான் வரமாட்டேன்..” என்று பட்டென சொன்னார் தேவி.
‘தேவிம்மா…” என சேகர் கண்கலங்க..
‘எனக்கு உங்க மேலயும் வருத்தம் இருக்கு ண்ணா..” என்று தேவியும் கண்கலங்க.. சேகர் அதிர்ச்சியாய் விழிவிரிக்க..
‘உங்களுக்கு இவரைப் பத்தியும் தெரியும்.. நம்ம அப்பாவைப் பத்தியும் தெரியும்.. இந்த ஊரோட சேர்த்து சுத்துப்பட்டியில நாலஞ்சு கிராமத்திலயும் இவருக்கு எத்தனை மதிப்பிருக்குன்னு உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்ல..
இவரைவிட வயசில பெரியவங்ககூட இத்தனை வருசத்தில இவர் பேரைசொல்லி கூப்ட்டு நான் கேட்டதில்ல.. அத்தனைப்பேர் முன்னாடி அவ்ளோ பச்சையா என்புருசனை நம்ம அப்பா பேசுறார்.. அவரை பேசவிட்டு நீங்க வேடிக்கை பார்த்திட்டிருக்கிங்க..
நான் என்ன பச்சகுழந்தையா..? நம்ம தங்கச்சியே முன்னிருந்து நடத்துதுன்னா என்னவாயிருக்கும்னு கொஞ்சம் கூட நீங்க யாரும் யோசிக்கிலல்ல..? எல்லாரும் என்னை என்ன புரிஞ்சி வச்சிருக்கிங்க..? என்னை புரியாதவங்க வீட்டுக்கு நான் எதுக்கு வரனும்..?” என்றார் கோபமாக.
‘அப்பா அப்படி பேசுவார்ன்னு நான் நினைக்கலடா..” என தேவியின் அண்ணன் பதற..
‘இவருக்கு கல்யாணம்னு தெரிஞ்சதும் பிரச்சனை பண்ணத்தான வந்திங்க..? அதெப்படி நினைக்காம இருப்பிங்க..? என்மேல பாசமிருந்திருந்தா விசயம் தெரிஞ்சதும் என்ன ஏதுன்னு எனக்கு போன்செய்து கேட்டிருக்கனும்.. அதைவிட்டுட்டு இத்தனை வருசமா இவர் முன்னாடி நிக்கக்கூட பயப்படுற சின்ன அண்ணனுங்க அன்னைக்கு அவ்ளோ தைரியமா அசிங்கமா பார்க்கிறாங்கனா..
அப்போ இவர்மேல அவங்க வச்ச மதிப்பெல்லாம் வெறும் வேசம்தான்.. சரியான நேரம் பார்த்து பழி தீர்த்துட்டாங்க.. இப்படி பொய்யான உறவு எனக்கு வேணாம்..” என வேதனையோடு தேவி சொல்ல..
‘உங்கப்பா ஏதோ கோபத்தில பேசிட்டார்.. அதுக்காக கூடப்பிறந்த உறவை இப்படி அத்து விடலாமா தேவி..? கொஞ்சமாச்சம் என்னை யோசிச்சிப்பார்த்தியா..?” என்று தேவியின் அன்னை சத்தமாகவே அழவும்..
‘ஏம்மா..? நான் பெரிய பொண்ணானதுக்கப்புறம் அப்பா திருந்தினரே தவிர.. பொண்டாட்டிக்கு துரோகம் செய்திருக்கோம்னு ஒருநாளாவது இதுவரை வருந்தியிருக்கிறாரா..? உன்னை ஒரு மனுசியாவாச்சம் நினைச்சிருக்காரா..?
அப்பேர்பட்ட உன் புருசனுக்கே நீ இவ்ளோ பார்க்கறன்னா.. இத்தனை வருசம் என்னை கண்ணுக்குள்ள வச்சி தாங்கின என்புருசனுக்கு நான் எவ்ளோ பார்க்கனும்..? அன்னைக்கு அப்பா இவரை திட்டின வார்த்தை அத்தனையும் எனக்கும்தான்.. எனக்கு அவர் முகத்தில விழிக்க பிடிக்கல..” என்றார் கோபமாக.
‘தேவி..” என மனைவியை தடுத்தவர்.. தன் மாமியாரிடத்தில்..
‘இந்த விசயத்தில என்னை கேள்வி கேக்குற உரிமை.. என் பொண்டாட்டிக்கும்.. அவளை பெத்த தாய்க்கும்தவிர வேறயாருக்கும் கிடையாது. உங்க புருசனெல்லாம் என் முன்ன நிக்கறதுக்கு கூட தகுதியில்லாதவர்.. தேவிக்காகவும் உங்களுக்காகவும்தான் அமைதியா இருக்கேன்.. மாப்ளன்னு ஏது என்முன்னாடி வந்து நின்னுடப்போறாரு..” என எச்சரிக்கைவிடுத்து..
‘ஆனா நீங்க என் அம்மாபோல.. உங்களுக்கு இங்க எல்லா உரிமையும் இருக்கு.. தேவி எப்பவும்போல உங்களைப் பார்க்க வீட்டுக்கு வருவா.. கவலைப்படாதிங்க..” என்று மாமியாருக்கு ஆறுதலளித்து..
தேவியிடம்.. வா என்பதுபோல் ராஜன் தனதறைக்குள் போக.. பின்னோடு வந்த தேவியிடம்.. ‘தப்பு செய்ற புருசன்கிட்ட சத்தமா பேசக்கூட தைரியமில்லாதவங்க அத்தை.. அவங்க சுபாவம் அதுதான்னு உனக்கு தெரியாதா.. நீ அங்க போகாம வராம இருந்தினா ரொம்ப மனசொடைஞ்சிடுவாங்க தேவி.. உனக்கு பிடிக்கலன்னா அங்க தங்காம வந்திடு.. ஆனா பெத்த தாயை தள்ளிவைக்காத..” என்றார் கனிவோடு.
தேவி அமைதியாய் இருக்க.. ‘நாளைக்கு மாறனோ.. இல்ல லாவி புருசனோ என்னை மாதிரி செய்தான்னா.. எத்தனை நியாயம் அவன்பக்கம் இருந்தாலும் நாம அதை எப்படி எடுத்துக்குவமோ தெரியாது.. பொண்ணோட வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்னு அவங்களுக்கும் வருத்தம் இருக்கத்தான செய்யும்..?
இதெல்லாம் போக.. நீ எப்பவும்போல இருந்தாதான் எனக்கும் நிம்மதியாயிருக்கும்.. இந்த கல்யாணத்தாலதான் உன் அம்மாவீட்டு உறவு உனக்கு அத்து போய்டுச்சின்றதை என்னால தாங்கமுடியாது.. உன் சின்ன அண்ணனுங்ளை விடு.. உன் பெரியண்ணன் இன்னமும் உன்னை குழந்தையாத்தான் பார்க்கிறார்.. அவரோட பாசத்துக்கு நாம மரியாதை கொடுக்கவேணாமா..? உன் அண்ணன் பசங்களெல்லாம் அத்தை அத்தைன்னு உன்மேல உயிரையே வச்சிருக்காங்க.. மாமாவோட கல்யாணத்தாலதான் நம்ம அத்தை நம்மளை பார்க்க வரலன்னு யோசிப்பாங்க.. அதுவே பின்னால பகையா மாறும்.. எடுத்தோம் கவுத்தோம்னு உறவுகள்ல முடிவெடுக்கக்கூடாது..” என்று எடுத்துரைக்க..
‘ம்ம்..” என தேவி தலையாட்ட.. ‘இன்னொரு விசயம்.. உங்கப்பாமேல எத்தனை தப்பிருந்தாலும்.. இனி என்முன்னால உங்கம்மாகிட்ட அதை சொல்லிகாட்டாத.. உனக்கு பேசனும்னா தனியா பேசிக்கனும்..” என்று கட்டளையிட..
‘இனி பேசமாட்டேன்..” என பெருமையாய் ராஜனைப் பார்த்தவர்.. ‘லாவி மனோவை கூட்டிட்டுப்போய்ட்டு இரண்டுநாள் இருந்துட்டு வரட்டுமா..?” என்றார்.
‘இரண்டு நாளா..? அது நான் வெளியூர் போகும்போது போய் தங்கிக்கோ.. நாளைக்கு காலைல போய்ட்டு சாயங்காலம் வந்திடனும்.. லாவி மனோ வேண்ணா ஒருவாரத்துக்கு அங்க இருக்கட்டும்..” என்று இருபது வருடமாக சொல்லும் வார்த்தையையே தற்போதும் சொல்லி..
முதல்ல உங்கம்மாவை கவனிக்கலாம்.. அவங்க என்னவோ ஏதோன்னு நினைப்பாங்க.. வா..” என இருவரும் வெளியே வர..
அங்கு மனோஜ் அவன் பாட்டியின் மடியிலும்.. லாவண்யா அவளின் மாமாவின் பக்கத்திலும் அமர்ந்து கதைபேசிக்கொண்டிருக்க..
‘கேம்ஸ் விளையாண்டு முடிச்சாச்சா..?” என இருவரிடமும் ராஜன் கேட்க..
‘அப்பா.. மாமா ஊருக்கு கூப்பிடுறாங்க..” என்றான் மனோஜ்.
‘போய்ட்டு வாடா தங்கம்..” என ராஜன் சொல்ல..
‘அக்காவும் வேணும்..” என மனோஜ் லாவண்யாவின் முகம் காட்ட..
‘அக்காவும்தான் மனோ..” என ராஜன் சொல்ல.. லாவண்யா தேவியின் முகம் பார்க்க.. ‘நாளைக்கு எல்லாரும் போலாம் மனோஜ்..” என தேவி சொல்ல..
‘ம்ம்கூம்.. இப்போவே..” என மனோஜ் அடம்பிடிக்க..
‘ம்மா.. அவனுக்கு அங்க போய் கபடி கிரிக்கெட்டெல்லாம் விளையாடனும்.. அதான்..” என லாவண்யா தம்பிக்கு ஆதரவளிக்க..
‘அப்போ அவன் போகட்டும் நாம போகவேண்டாம்..” என தேவி சிரிக்க..
‘நானில்லாம என் தம்பி போகமாட்டானே..” என லாவண்யாவும் சிரிக்க.. தேவி ராஜனைப் பார்க்க.. ‘ம்கூம்..” என மனைவிக்கு மறுத்து.. மாமியாரிடத்தில் ‘பசங்களை இன்னைக்கு கூட்டிட்டு போங்க.. தேவி நாளைக்கு வருவா..” என்றார்.
தேவியின் அண்ணன் சோர்ந்த முகத்தோடு அமர்ந்திருக்க.. தாம் பேசாததால் என புரிந்த ராஜன்.. ‘சேகர்.. அத்தை.. இரண்டுபேரும் சாப்பிடுங்க..” என்று கனிவோடு சொல்ல..
‘ம்ம்..” என்ற சேகரின் முகம் மீண்டும் வாட்டத்தையே காட்ட.. ‘சேகர்.. உன் தங்கைக்கு இப்படி ஒரு மன உளைச்சலை கொடுப்பேன்னு நான் நினைச்சே பார்க்கல.. தவிர்க்க முடியாத சூழல்லதான் இப்படி ஒரு முடிவெடுக்க நேர்ந்திடுச்சி..” என வேண்டுதலாய் சொல்ல..
‘லாவிம்மா.. ரெண்டுபேரும் போய் ரெடியாகுங்க.. நான் கொஞ்சம் அப்பாட்ட பேசனும்..” என இருவரையும் அனுப்பி வைத்து..
‘என்கிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லியிருந்தா.. என் தங்கைக்கு பக்கபலமா அவளோட வந்து நின்னுருப்பேன்.. எத்தனைதான் அவளே முன்னிருந்து நடத்தியிருந்தாலும்.. தேவி மனசைப்பத்தி எனக்கு தெரியாததா..? பாவம் அந்த நேரம் எவ்ளோ துடிச்சிருப்பா..?” என சேகர் கண்ணீர் விட..
சேகரின் கைப்பிடித்த ராஜன்.. ‘தேவியைப் பத்தி எனக்கு மட்டும் தெரியாதா சேகர்..? இதை எப்படி விளக்கன்னு எனக்கு தெரியல.. உன்தங்கைக்கு பெரிய மனவேதனையை கொடுத்திட்டேன்தான்.. எப்படியாவது அவ மனவேதனையை நான் சரிசெய்வேன்..” என்று தானும் கண்கலங்க..
ராஜனை கட்டியணைத்த சேகர்.. ‘அந்த பொண்ணைப்பத்தி விசாரிச்சேன்.. யாரோட ஆதரவுமில்லன்னாலும்.. உங்க வாழ்க்கையை கெடுக்ககூடாதுன்னு தனியாளா இருந்து குழந்தையை காப்பாத்தியிருக்கு.. ஹாஸ்பிட்டல்க்கு வந்து சொத்துபத்து பத்தி பேசினதையும் பாப்பா சொன்னுச்சி.. இத்தனை வருசத்துக்கப்பபுறம் உங்களை பார்த்தும்.. நீங்க வேணாம்னு தற்கொலை செய்யக்கூட போய்டுச்சாமே.. நீங்க கொடுத்த சீர்வரிசையை உங்க மகளும் வேணாம்னுடுச்சாம்.. அந்த பொண்ணைக்கூட கடத்திட்டு வந்துதான் கல்யாணம் செய்துகிட்டிங்களாம்..?” என பெருமையாக சொல்ல..
‘பரிதாபத்துக்காக அவளை நான் கல்யாணம் செய்துக்கல சேகர்.. யாரும் பரிதாபப்படற நிலைமைலயும் அவ இல்ல.. என்னால ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.. இந்த நிலைமைலயும் அவ உயிர்போனாலும் பரவால்லன்னு என் சந்தோசத்தைப் பத்திதான் யோசிக்கிறா.. இதுக்குமேலயும் அவளை அப்டியே என்னால விடமுடியல.. அவளோட எதிர்பார்ப்பில்லாத அன்புக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கனும்னுதான்..” என்று ராஜன் வேதனையோடு தன்பக்க நியாயத்தை சொல்லி..