ஒரு முடிவின் துவக்கம்…
அத்தியாயம் – 3
கடந்த பதினைந்து நாட்களாக நிவேதாவின் திருமணத்திற்க்காக தன் வேலைகளை ஒதுக்கி வைத்திருந்த இளமாறன்.. அவளின் திருமணம் முடிந்த இரண்டாம் நாள் ஒரு முக்கிய வேலையாக வெளியூருக்கு சென்றிருந்தான். வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று வீட்டிலும் சொல்லியே கிளம்பியிருந்தான்.
‘ராமப்பா..” என்று வெளியிலிருந்து ராஜன் வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்யும் குமார் அழைக்க.. வெளியில் வந்த ராமு..
‘என்ன குமாரு..?” என்றார்.
‘மாறண்ணனை ராஜய்யா பார்க்கனுமாம்.. கையோட அண்ணனை வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னார்..” என்றான்.
‘அவன் வீட்ல இல்ல குமாரு.. வெளியூர் போயிருக்கான்.. நீ வா.. ஐயாகிட்ட நேர்ல பார்த்து ஒரு வார்த்தை சொல்லிடறேன்.. இல்லன்னா தப்பாய்டும்..” என்று குமாரோடு இராமு கிளம்பினார்.
இளமாறன் வரவிற்க்காக ராஜன் பதட்டத்தோடு காத்திருக்க.. அங்கு வந்த ராமுவைப் பார்த்ததும்.. ‘மாறன் வரலையா இராமு.?” என்று கேட்டார் ராஜன்.
ராஜன் முகத்தில் இருந்த பதட்டம் ராமுவை கலங்கடிக்கவும்..
‘ஐயா.. என்ன விசயமுங்க..? ஏன் இவ்ளோ பதட்டமாயிருக்கிங்க.?” என்று ராமனும் பதட்டமாய் கேட்க..
‘மாறன் எங்க ராமு..? அவனை வரசொல்லு..” என்றார் மீண்டும்..
‘மாறன் ஒரு முக்கியமான வேலைன்னு சொல்லிட்டு வெளியூர் போயிருக்கான்யா.. போகும் போதே வரதுக்கு ஒரு வாரம் ஆகும்னு சொல்லிட்டுத்தான் போனான்.. இன்னும் இரண்டு நாள்ல வந்திடுவான்..”
‘எங்க போயிருக்கான்..?”
‘எந்த ஊர்ன்னு நான் கேக்கலைங்க.. ஆனா பக்கமா போகலை.. வெளியூர்ன்னு சொன்னான்.. நீங்க போன் போட்டு கேளுங்க..” என்று இராமு சொல்ல..
‘நான் போன் பண்ணி பார்த்திட்டேன் ராமு.. போன் சுட்ச்ஆப்னு வருது..”
‘அப்டிங்களா..?” என்று தளர்வாய் சொன்ன ராமு.. ‘நீங்க இவ்ளோ பதட்டமா இருக்கிறதால கேக்கிறேன்.. என்ன விசயம்ன்னு சொல்லுங்கைய்யா.. என்னால முடிஞ்சா நான் எதாவது பண்றேன்..“ என்றார் ராமு.
‘ஒன்னுமில்ல ராமு.. நீ போ. இளமாறன் வந்தான்னா.. உடனே என்னை வந்து பார்க்க சொல்லு.. ஒருவேளை போன் ஏது பண்ணினான்னா.. நான் அவனை கொஞ்சம் அவசரமா பார்க்கனும்னு சொன்னேன்னு சொல்லு..” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார் ராஜன்.
என்ன ஆச்சு இவருக்கு.? எப்பவும் இப்படி இருந்ததில்லையே..? ஊர்ல எந்த பிரச்சனைன்னாலும் ஒரு நிமிசத்தில யோசிச்சி தீர்ப்பு சொல்லிடுவார்.. இவர் பிரச்சனையை போக்குற அளவுக்கு மாறன் என்ன பெரிய ஆளா..? எதுக்கு மாறனையே அத்தனை முறை கேட்டார்..? என்ற யோசனையோடே வீடு வந்தார் ராமு.
அடுத்த நாள் காலை பத்து மணிக்குமேல் மாறன் தன் தந்தைக்கு அழைக்கவும்..
‘போன் பண்ணினா என்னடா பேசமாட்றியாம்..? நீ இன்னைக்கே கிளம்பி வா..” என்று அந்த கத்து கத்தினார் இராமு.
‘என்னப்பா ஆச்சு..? யாரு போன் பண்ணினாங்க..? ஏன் இவ்ளோ கோபப்படுறிங்க..?” என்று மாறன் பதறியபடி கேட்டான்.
‘என்னன்னு தெரியலை.. சின்னய்யா உன்னையே கேட்டுட்டிருக்கார்.. நீ முதல்ல அவருக்கு போன் பண்ணு.. அவருக்கு பண்ணிட்டு எனக்கு பண்ணு..” என்று கட் செய்தார்.
[the_ad id=”6605″]
உடனே ராஜாவிற்கு அழைத்தவன்.. அவர் அழைப்பை ஏற்றதும்..
‘ராஜய்யா..” என்றான் பதற்றமாக..
‘நீ எங்க இருக்க மாறா..? எப்ப வருவ..?” என்றார் தடுமாற்றத்தோடு.
‘நான் கேரளாவில இருக்கேன்யா.. இன்னைக்கு நைட் கிளம்பிடுவேன்..” என்றான்.
‘கொஞ்சம் இப்பவே கிளம்பி வர முடியாதா மாறா..?” என ஏக்கமாய் கேட்டார்.
‘அப்பாகிட்ட என்னை கேட்டுட்டே இருந்திங்களாம்.. என்ன ஆச்சு ராஜய்யா..? ரொம்ப முக்கியமான விசயங்களா..? ரொம்ப பதட்டமா இருக்கிங்கன்னு அப்பா சொன்னார்.. எதுவா இருந்தாலும் பதட்டப்படாதிங்க..“ என்றான் பதட்டத்தோடே..
‘ஆமாம் மாறா.. முக்கியமான விசயம்ங்கிறது மட்டுமில்ல.. இது என் உயிர் சம்மந்தப்பட்ட விசயமும்தான்..” என்று போனிலேயே ராஜன் குரல் கமறினார்.
‘என்ன சொல்றிங்க..? உங்களுக்கு என்ன ஆச்சு..? உடம்பேது சரியில்லையா..? எதுவாயிருந்தாலும் பார்த்துக்கலாம்.. நீங்க கவலைப்படாதிங்கைய்யா.. நான் அப்பாக்கு கால் பண்ணி உங்களை வந்து பார்க்கசொல்றேன்..”
‘எனக்கு உங்கப்பா வேணாம்.. நீதான் வேணும் மாறா.. ஒரு மாதிரியிருக்கு.. நீ கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வா மாறா..” என்று வைத்துவிட்டார்.
என்ன முயன்றும் இளமாறனால் அடுத்த நாள் காலைதான் ஊருக்கு வரமுடிந்தது. அதிகாலை தன் வீட்டிற்கு வந்ததும்..
‘அப்பா எங்கம்மா..?” என்றான்.
‘சின்னய்யாக்கு நேத்து சாங்காலம் நெஞ்சு வலி வந்திடுச்சி மாறா.. சேலத்தில எதோ ஒரு ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்களாம்.. உங்கப்பா அங்கதான் இருக்காரு..” என்றார் சுமதி.
‘நான் கிளம்பறேன்மா..” என்று அப்பொழுதே கிளம்பினான்.
‘எந்த ஆஸ்பத்திரின்னு கேட்டுட்டுப்போ மாறா..” என்றார்.
‘நான் அப்பாக்கு போன் பண்ணி கேட்டுக்கிறேன்மா..” என்று சொல்லிக்கொண்டே கிளம்பியிருந்தான்.
அடுத்த இரண்டு மணிநேரத்தில் மருத்துவமனையில் மாறன் இருக்க.. அங்கு யாரையும் உள்ளே விடவில்லை செவிலியர்கள்.
‘என்னப்பா ஆச்சி..?” என்று தன் அப்பாவிடம் கேட்டான்.
‘தெரியலை மாறா.. முந்தாநாள் சாய்ங்காலத்தில இருந்தே ரொம்ப பதட்டமாத்தான் இருந்தாராம்.. நேத்தெல்லாம் ரொம்ப பயந்திட்டோம்.. டாக்டர் காலைல நாலு மணிக்குத்தான் உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லன்னு சொல்லி எங்க நெஞ்சில பாலை வார்த்தார். அவர் செஞ்ச தர்மம்தான் அவர் உயிரை இப்ப காப்பாத்தியிருக்கு..” என்று கண்கலங்கினார் இராமு.
‘சரிப்பா நீங்க கிளம்புங்க.. நான் பக்கத்தில இருந்து பார்த்துக்கிறேன்..”
‘இல்ல மாறா.. சின்னய்யா கண்ணு முழிச்சதும் ஒரு முறை அவரை நேர்ல பார்த்திட்டு போய்டுறேன்..” என்று அருகில் இருந்த பென்ச்சில் உக்கார்ந்துகொண்டார் இராமு.
காலை பத்து மணிக்கு மேல் ராஜனை பார்க்க டாக்டர் அனுமதி தரவும்.. அவரின் மனைவி.. மக்கள்.. பார்த்தப்பின் இராமுவும்.. மாறனும் உள்ளே போனார்கள்.
மனைவியிடமும் தன் பிள்ளைகளிடமும் ‘எனக்கு ஒன்னுமில்ல.. நீங்க தைரியமா இருங்க..” என்று சிரித்த முகத்தோடு ஆறுதல் வார்த்தை சொன்னவர்.. மாறனைப் பார்த்ததும் கண்கலங்கினார்.
இவர்களிடம் சொல்லமுடியாத ஏதோ ஒரு விசயம்தான் இவரை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது என்று உணர்ந்தவன்.. அவர்கள் முன் எதுவும் கேட்காமல்..
‘தேவிம்மா.. நீங்க லாவன்யாவையும்.. மனோஜையும் கூட்டிட்டு வீட்டுக்கு போங்க.. ராஜய்யாவை நான் பார்த்துக்கிறேன்..” என்று ராஜனின் மனைவியிடம் மாறன் சொன்னான்.
‘இல்லப்பா.. நான் இங்கையே இருக்கேன்..” என்று மறுத்தார்.
‘தேவி.. லாவன்யாவை கூட்டிட்டு நீ வீட்டுக்கு போ.. குழந்தைங்க இங்க இருக்க வேண்டாம்..” என்றார் ராஜன்.
‘இவங்களை மாறனோட அனுப்பி வைங்க.. நான் இங்கையே இருக்கேன்..”
‘சொன்னா கேக்கனும் தேவி.. நீ கிளம்பு..” என்று ராஜன் ஒரு அதட்டல் போட்டார்.
‘வீட்டுக்கு போனாலும் என்னால நிம்மதியா இருக்க முடியாதுங்க..” என்று தேவி கெஞ்சவும்..
‘பசங்களை அனுப்பி வச்சிட்டு.. நீயும் இங்க இருந்தா.. அவங்களை யார் கவனிப்பா..? எப்படியும் நீ நைட்டெல்லாம் தூங்கியிருக்க மாட்ட.. முதல்ல குழந்தைகளை கூட்டிட்டு கிளம்பு.. வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு.. நான் சாயங்காலம் வந்திடுவேன்..” என்றார் கண்டிப்புடன்.
மீண்டும் தேவி மறுக்க.. ‘ப்ச்ச்.. சொல்றேன்ல..?” என்று முறைத்தார்.
‘இராமு.. நீயும் இவங்களோட கிளம்பு.. நான் மாறனோட சாயங்காலம் வந்திடறேன்.” என்றார்.
[the_ad id=”6605″]
இராமு.. ராஜனின் பேச்சிற்கு மறு பேச்சு பேசிவிடுவாரா.. என்ன..? உடனே..
‘சரிங்கைய்யா.. உடம்பை பார்த்துக்கோங்க..” என்று மாறனை தவிர்த்து அனைவரும் கிளம்பினர்.
பிறகு செவிலியர் வந்து ராஜனை பரிசித்து விட்டு சென்றபின்.. கதவை சாத்தியவன்.. ராஜன் அருகில் அமர்ந்து..
‘என்னாச்சி ராஜய்யா..?” என்றான்.
எதுவும் சொல்லாமல் கண்கலங்கினார் ராஜன். ‘என்னன்னு சொல்லுங்கய்யா.. இப்படி அழாதிங்க.. எனக்கு கஷ்டமா இருக்கு..” என்று வருந்தினான்.
சற்று நேரம் அமைதியாகவே இருந்தவர்.. ‘மாறா.. என்னோட பாரத்தை நான் உன்மேல சுமத்தலாம்னு இருக்கேன்..” என்றார் கண்ணீரோடு..
‘என்ன ராஜய்யா.. இது..? பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றிங்க..? நீங்க என் அப்பாமாதிரி.. நீங்க எது சொன்னாலும் நான் கேப்பேன்..” என்றான்.
‘என்னை மாதிரி ஒரு அயோக்கனோட.. எதுக்கு மாறா இராமுவை இணை வைக்கிற..? இராமு உத்தமன்..” என்று சொல்லி தலை குனிந்தார் ராஜா.
‘இந்த வார்த்தையை மட்டும் வேற யாராவது சொல்லியிருக்கனும்.. நீங்களே கூட உங்களைப் பத்தி தப்பா பேச நான் அனுமதிக்க மாட்டேன் ராஜய்யா.. எனக்கு இராமு அப்பாவும் ஒன்னுதான்.. ராஜய்யாவும் ஒன்னுதான்.. இனி இப்படி பேசாதிங்க..” என்று அன்போடு எச்சரித்தான்.
‘எனக்கு உன்கிட்ட அப்பா ஸ்தானமெல்லாம் வேணாம் மாறா.. நான் சொல்லப்போற விசயத்துக்கப்புறமும்.. என்னை நீ பழைய ராஜய்யாவா நினைச்சினா.. அதுவே போதும்..‚” என்றார்.
‘உங்களுக்கு என்ன பிரச்சனை..? உங்களை இந்த நிலைமைக்கு அப்படி எந்த விசயம் கொண்டு வந்திச்சின்னு.. முதல்ல அதை சொல்லுங்க..” என்றான் பதட்டமாகவே.
மாறனின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு.. ‘என் பொண்ணை கல்யாணம் செய்துக்கோ மாறா.. தயவு செய்து மறுத்திடாத..” என்றதுதான்..
‘ராஜய்யா… என்ன சொல்றிங்க..? லாவன்யா சின்ன பொண்ணு.. என்னால அது முடியவே முடியாது..” என்று பதறி மறுத்தான் இளமாறன்.
‘நான் சொல்றதை முழுசா கேளு மாறா.. நான் லாவன்யாவை சொல்லலை.. என் பெரிய பொண்ணை சொன்னேன்..” என்று மீண்டும் கண்கலங்கினார் ராஜன்.
‘என்னைய்யா சொல்றிங்க..? லாவன்யாக்கு அக்கா இருக்காளா..?” என்றான் குழப்பத்தோடு.
‘ஆமாம் மாறா.. எனக்கே இப்ப ரெண்டு நாள் முன்னாடிதான் தெரிஞ்சது.. அமுதா இப்படி பண்ணுவான்னு நான் நினைச்சே பார்க்கல…” என்று கண்ணீர் வடித்தார்.
‘அமுதான்னா…” என யோசித்தவன்.. ‘உங்க பங்காளி ஒருத்தர்.. ம்ம்.. வேலாயுதம் அவங்க வயலுக்கு முன்னாடி இருக்கிற வீட்டை இடிக்கப்போறேன்னு சொல்லிட்டிருந்தார்.. நீங்க விடவே மாட்டன்னு சொல்லிட்டிருந்திங்க.. அது கூட பெரிய சண்டையாய்டுச்சி.. அந்த சண்டையப்ப நீங்க இந்த பேரை அடிக்கடி சொல்லி நான் கேள்விபட்டிருக்கேன்.. அந்த அமுதாவா..?” என்றான் சந்தேகத்தோடு.
‘ம்ம்.. அவளேதான்.. அப்ப அவ பதினொன்னாவதுதான் படிச்சிட்டிருந்தா.. அவளை முதன்முதல்ல பார்த்ததுமே எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிடுச்சி.. என் காதலை அவகிட்ட சொன்னேன்.. ஒருவருசம் ஆகியும் அவ ஒத்துக்கவே மாட்டன்னுட்டா.. நீ இல்லன்னா நான் செத்துடுவேன்னு சொன்னதுக்கப்புறம்தான் என்கிட்ட பேசவே ஆரம்பிச்சா.. அதுக்கப்புறம்.. நாங்க ரெண்டுபேரும் ரெண்டு வருசமா காதலிச்சோம்.. அதுக்கப்புறம் காலேஜ் போக ஆரம்பிச்சா..
அப்பதான் எங்க விசயம் எங்கப்பாக்கு தெரிஞ்சிருக்கும் போல.. எனக்கு தெரியாம அவளை மிரட்டியிருக்கார்.. ஒரே ஒருமுறை என்கிட்ட சொல்லி ரொம்ப அழுதா.. யார் சொன்னாலும் நான் உன்னைதான் கல்யாணம் செய்துக்குவேன்.. நீ பயப்படாம இருன்னு நான் எவ்வளவோ தைரியம் சொன்னேன்.. அப்பவும் பயத்திலயேதான் இருந்தா.. அதுக்கப்புறம் பத்துநாளா அவளை ஆளையே காணோம்..
அவங்க பாட்டிகிட்ட போய் கேட்டேன்.. படிக்க நிறைய செலவாகுதுன்னு ஏதோ வேலைக்கு போறதா சொல்லிட்டு போனாளாம்.. எந்த ஊருக்குன்னு கேட்டேன்.. சேலத்துக்குன்னு சொன்னாங்க.. சரி.. மாசத்துக்கு ஒருமுறையாவது வீட்டுக்கு வராமலா போய்டுவான்னு நினைச்சேன்.. இரண்டு மாசம் பக்கம் அவளை ஆளையே காணல.. சேலத்துக்கு கிளம்பினேன்.. நானும் சேலத்தில தேடாத இடமில்ல.. ஒன்னு இரண்டு வருசமில்ல.. நாலு வருசமா தேடினேன்.. அவளை கண்டே பிடிக்க முடியலை.. இப்ப மாதிரி போன் வசதியெல்லாம் அப்ப இல்ல..
அவ ஊரைவிட்டு போனதுக்கப்புறம் நாலு மாசத்திலயே அவங்க பாட்டி இறந்திட்டாங்க.. அவங்க சாவுக்கு அம்மு வந்தாளாம்.. ஆனா நான் அப்பபார்த்து ஊர்ல இல்லாம போய்ட்டேன்..“ என்று தலையில் அடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தார் ராஜா.
பத்து நிமிட மௌனத்திற்கு பிறகு.. ‘அந்த சின்ன வயசில.. யார் துணையும் இல்லாம.. என்னை நெஞ்சில சுமந்துகிட்டு.. என் குழந்தையை வயித்தில சுமந்திருக்கா.. சாப்பாட்டுக்கு என்ன பண்ணினாளோ..? எங்க தங்கியிருந்தாளோ.. எப்படித்தான் வாழ்ந்தாளோ தெரியல மாறா..” என்று புலம்பியவருக்கு குரலே வரவில்லை.
‘இப்ப அவங்களை கண்டு பிடிச்சிட்டிங்களா..? எங்க இருக்காங்க..?” என்றான்.
‘இப்பவும் அமுதா எங்க இருக்கான்னு தெரியலை.. இரண்டு நாள் முன்னாடி அந்த வீடு திறந்திருந்துச்சி.. நான் கூட என் பங்காளிதான் பூட்டை உடச்சிட்டு.. ஏதோ பண்றான்னு நினைச்சி.. உள்ள போய் பார்த்தேன்.. அப்படியே உரிச்சி வச்சமாதிரி அமுதாவைப்போலவே தங்க சிலையாட்டம் என் பொண்ணு.. எனக்கு ஒரு நிமிசம் என்ன ஆச்சுன்னே தெரியலை.. அப்படியே உறைஞ்சி போய்ட்டேன்.. என்னை பார்த்ததும்.. யார் நீங்க..? முதல்ல வெளில போங்கன்னு.. என் பொண்ணு கத்துன கத்துலதான் எனக்கு போன உணர்வு திரும்ப வந்துச்சி..
‘நான் இந்த ஊருக்கு முக்கியஸ்த்தன்மா.. நீ யாரு..? இந்த வீட்டு சாவி உனக்கு எப்படி கிடைச்சதுன்னு பொறுமையாத்தான் கேட்டேன்..
நீங்க யாரா வேணா இருங்க.. இப்ப முதல்ல வெளில போங்க.. இது என் அம்மும்மா வீடுன்னு.. என்ன.. ஒரு மிரட்டல்ங்கிற..?” என அந்தநேரம்.. அமுதாவை மறந்து.. தன் மகளின் நினைவில்.. முகத்தில் பெருமை வந்தமர்ந்திருந்தது ராஜனுக்கு.
‘என் பொண்ணுகிட்ட நிறைய பேசனும்போல இருந்துச்சி.. அதனால.. நீ சொல்றது உண்மைன்னு நான் எப்படிம்மா நம்புறதுன்னு சும்மா வம்பிளுக்கத்தான் கேட்டேன்..
நீங்க நம்பனும்ங்கிற அவசியம் எனக்கில்லன்னு சொல்லி.. என்னை நாயை விரட்டுற மாதிரி விரட்டுறா மாறா..” என்றார் மீண்டும் அதே பெருமையோடு..
‘அம்மு எங்க இருக்கிறான்னு தெரிஞ்சிக்கிறதுக்காக.. இந்த வீடு வேற ஒருத்தரோடது.. இந்த வீட்டுக்கு சொந்தகாரம்மா.. சாகும்போது என் பொண்ணுக்குத்தான் இந்த வீடுன்னு என் அப்பாகிட்ட சொல்லியிருக்காங்க.. அவங்க நம்பிக்கையை நாங்க காப்பாத்தனுமில்ல..? அதனால உங்கம்மாவை முதல்ல வரசொல்லு.. இந்த வீடு உங்களுதுன்னு நிரூபிக்க சொல்லு.. அப்புறம் நான் உன்னை ஒன்னும் கேக்க மாட்டேன்னு கொஞ்சம் கண்டிப்போடதான் சொன்னேன்..
[the_ad id=”6605″]
அப்ப கூட அசராம.. இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் எங்கம்மா வரனும்ங்கிற அவசியமில்லன்னு சொல்லி.. அந்த வீட்டோட பத்திர ஜெராக்சை கொண்டு வந்து என் மூஞ்சியில விட்டெறியாத குறையா என் பக்கத்தில வச்சா பாரு..” என்றார் பெருமை கலந்த சிரிப்போடு..
‘சிரிக்காதிங்க ராஜய்யா.. எதுவாக்கூட இருக்கட்டும்.. நடந்து முடிஞ்சதை யாரால மாத்தமுடியும்..? அதை எப்படி சரி செய்யாலாம்னு யோசிக்கிறதை விட்டுட்டு.. இப்படியா உடம்பை கெடுத்துகிட்டு இங்க வந்து படுத்திருப்பிங்க..? எனக்கு உயிரே போன மாதிரி ஆய்டுச்சி..” என்று கடிந்தான்.
தன் மகளின் நினைவில் இருந்து.. அமுதாவின் நினைவிற்;கு வந்தவர்.. ‘மாறா.. நீ என்னை தப்பா..” எனும்போதே ராஜனின் வாயில் தன் கையை வைத்தவன்..
‘கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க அவங்களோட அந்த அளவுக்கு நெருங்கி பழகினது ரொம்ப தப்புதான்.. அதை என்னால ஏத்துக்கவே முடியாது..” என்று கண்மூடியபடி இறுகிய முகத்தோடு.. சொன்னவன்..
பிறகு ராஜனைப் பார்த்து.. ‘ஆனா.. அவங்களை கைவிடனும்னு நீங்க மனசார நினைக்கலயில்ல.. எனக்கு அதுபோதும்..‚ நான் உங்களை தப்பா நினைப்பேன்னு நீங்க யோசிக்கவே கூடாது.. நீங்க எப்பவும் என் ராஜய்யாத்தான்..‚” என்று ஆறுதலளித்தான்.
‘என் பொண்ணு.. முறையில்லாம பொறந்தவன்னு நினைச்சி..” என்று ராஜன் மீண்டும் கண்கலங்க..
‘எனக்கு பொண்டாட்டியா வரப்போறவளை.. யாராவது தப்பா பேச நான் விட்ருவேனா..?” என்று இதழோரப் புன்னகையோடு மாறன் ராஜனைப் பார்க்கவும்..
அனைத்து பாரங்களையும் இளமாறனிடம் ஒப்படைத்த நிம்மதியோடு அவனை கட்டித்தழுவினார் ராஜன்.